கறுப்புப் பணம்-அரசு தயக்கம் ஏன்?

சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணம் எவ்வளவு என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

கறுப்புப்பணம் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் அதை பொதுமக் களுக்குத் தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். வங்கிகளில் சில ஆயிரம் கடன் வைத்திருந்தால்கூட அவர்களது பெயர்களை வங்கிகள் நாளேடுகளில் வெளியிடுகின்றன. அவர் களது சொத்துகளை முடக்குகின்றன. ஆனால் இந்திய மக்களின் உழைப்பைச்சுரண்டி சேர்க்கப்பட்ட கறுப்புப்பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைத்துள்ள கனதன வான்களின் பெயர்களை வெளியிடுவது கூட பெரிய பாவம் என்று மன்மோகன் சிங் அரசு கருதுகிறது.

இத்தனைக்கும் கறுப்புப்பண விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் மத்திய அரசை உச்சநீதிமன்றம் மிகக்கடுமையான வார்த்தைகளால் கண்டித்து வருகிறது. ஆனால் ஆட்சியாளர்களுக்கு அது கொஞ்சம் கூட உறைக்கவில்லை
.

கறுப்புப்பணப் பிரச்சனையில் ஹசன் அலி என்ற ஒரே ஒரு நபரை மட்டும் குறிவைத்து விசாரணை நடைபெறுவது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப்பணம் வைத் துள்ள மற்றவர்களின் பெயர் ஏன் வெளியே வர வில்லை; இந்த ஒரு நபர் மட்டும்தான் கறுப்புப் பணம் வைத்துள்ளாரா என்றெல்லாம் உச்சநீதி மன்ற நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய அடுத்த நாள், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை என்று சர்வ அலட்சியமாகப் பதிலளிக்கிறார்.

உண்மையில் கறுப்புப்பண முதலைகளை பாதுகாக்க மத்திய அரசு அனைத்து வகையி லும் முயல்கிறது என்பதுதான் விஷயம். அமெ ரிக்காவுடன் அணுசக்தி உடன்பாடு செய்து கொள்ள ஆட்சியை பணயம் வைக்கக்கூட துணிகிற ஆட்சியாளர்களுக்கு தேசத்தின் சொத்தை மீட்பதில் ஏன் இவ்வளவு அலட்சியம்
.

கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் யாரும் ஏழை, எளிய மக்கள் அல்ல. ஆட்சி அதிகாரத் தைப் பயன்படுத்தி கொள்ளையடித்த அரசியல் வாதிகள், தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிய பெருமுதலாளித்துவ நிறுவனங்கள், லஞ்ச ஊழலில் திளைக்கும் உயர் அதிகார வர்க் கத்தினர்தான் கறுப்புப்பணத்தின் ஊற்றுக்கண் ணாக விளங்குகின்றனர்.

தேசத்தையே அதிரவைத்த ஸ்பெக்ட்ரம் ஊழலின் மூலமாக பெறப்பட்ட பணம் கூட வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட் டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு ஊழல் மூலமாகக் கிடைத்த பணமும் வரிஏய்ப்பு மூலமாகச் சுருட்டப்பட்ட பணமும் தான் கறுப்புப்பணமாக மாறி வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்கு அளிக்கும் உணவு மானியத்தை வெட்டுகிறது மத்திய அரசு. உர மானியத்தை குறைக்கிறது. பெட்ரோல் - டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி அதிர்ச்சி கொடுக்கிறது. வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை வெளிக்கொணர்ந்தால் கோடிக்கணக்கான இந்திய மக்கள் பலன் பெறுவார்கள்.
ஆனால், கறுப்புப்பணத்தை வெளிக்கொணரும் அரசியல் உறுதி அரசுக்கு இல்லை என்பதே உண்மை. இந்த விஷயத்தில் அவர்களுக்கு இருப்பது கறுப்பு மனமே.
                                                                        நன்றி:தீக்கதிர்,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?