கடனில் மூழ்கும் அமெரிக்கா,,,

அமெரிக்கா தனது கடன் உச்சவரம்பை எட்டிவிட்ட நிலையில், அந்த உச்சவரம்பை மேலும் அதிகரிப்பது குறித்து, அந்நாட்டு காங்கிரஸ் சபையில் இன்று ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. இந்த உச்சவரம்பு அதிகரிக்கப்படாவிட்டால், அமெரிக்கா தனது கடன்களைத் திருப்பியளிக்க முடியாமல் போய்விடும். அதனால், இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. அமெரிக்கா, வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் வாங்கிய கடன் தொகை, கடந்த மே மாதம் 14.3 டிரில்லியன் டாலரைத் தொட்டது. இது தான் அமெரிக்காவின் கடன் உச்சவரம்புத் தொகை. இதையடுத்து, அந்நாட்டு நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் கடன் உச்சவரம்பு மாற்றியமைக்கப்படா விட்டால், நாடு நிதி நெருக்கடியைச் சந்திக்கும் என்று எச்சரித்திருந்தது. (1 டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி. 1 டிரில்லியன் டாலர் என்பது ஒரு லட்சம் கோடி டாலர்.)

ஒபாமா ஆலோசனை: கடந்த ஒரு வார காலமாக, வெள்ளை மாளிகையில், அதிபர் பராக் ஒபாமா தலைமையில், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த எம்.பி.,க்களுடன் ஐந்து முறை ஆலோசனைகள் நடந்தன. அதில், கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்பட வேண்டும், நாட்டின் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட வளமான அமெரிக்கர்களின் வரி அதிகரிக்கப்பட வேண்டும், என அதிபர் ஒபாமா கூறினார். ஆனால், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி எம்.பி.,க்கள், "கடன் உச்சவரம்பை அதிகரிக்க வேண்டுமானால், வரியை அதிகரிக்கக் கூடாது. அரசின் செலவினங்களைப் ஆண்டுக்கு 111 பில்லியன் டாலர் வீதம் குறைக்க வேண்டும்' என நிபந்தனை விதித்தனர்.இதனால், ஐந்து கட்ட ஆலோசனையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இறுதி நாள்: கடன் உச்சவரம்புத் தொகையை அதிகரிக்க வேண்டுமானால், அமெரிக்க அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இதற்கான தீர்மானத்தை, இம்மாதம் 22ம் தேதிக்குள் எடுக்க வேண்டும்; அதையடுத்து, சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்; மொத்தத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் முடித்து விட வேண்டும் என்று ஒபாமா தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று, அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், செலவினங்களைக் குறைத்து, கடன் உச்சவரம்பை அதிகரிப்பதற்காக சட்டத் திருத்தத்திற்கு வழி செய்யும், "கட், கேப் அண்டு பேலன்ஸ்' என்ற மசோதாவை எதிர்க்கட்சியின் மூத்த தலைவரும், பிரதிநிதிகள் சபை சபாநாயகருமான ஜான் பாய்னர், கொண்டு வர உள்ளார். இம்மசோதா, நிறைவேறுமா னால் ஒபாமா அரசு குடியரசு கட்சிகளின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டதாகும். மேலும், செனட் சபையில் அரசு சார்பில் மசோதா கொண்டு வர முடியாது. இதனால் அவருக்கு பெரும் அரசியல் நெருக்கடி ஏற்படும். இந்த மசோதாவை நிறைவேற விடாமல், அரசின் மசோதாவை வெற்றி பெற செய்யும் முயற்சியில் ஒபாமா உள்ளார். இது நடக்கையில் அரசு மசோதா நிறைவேறாதவாறு அபாய நிலை ஏற்படும் குழப்பமான சூழ்நிலை உள்ளது.

இந்தியா, சீனா பாதிக்கப்படுமா? : கடந்தாண்டு அமெரிக்க வங்கிகள் தொடர் மூடல் நிகழ்ந்த போது, இந்தியா உட்பட பல நாடுகள் அதன் பாதிப்பை சமாளிக்க வேண்டியதாயிற்று. அமெரிக்கா கடனில் மூழ்கினால், கடன் மதிப்பீட்டு நிறுவனங்களான "மூடிஸ்' உள்ளிட்டவை, அமெரிக்காவின் கடன் நம்பகத் தன்மை குறியீட்டைக் குறைக்க நேரிடும். இதையடுத்து, அந்நாட்டில் உள்ள வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறும். அதனால், டாலரின் மதிப்பு சரியும். இந்தத் தொடர் சரிவுச் சங்கிலியின் இறுதியில், அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொண்டுள்ள சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் சிக்கலுக்குள்ளாகும். அமெரிக்காவுக்கு 1 டிரில்லியன் டாலர் கடன் பத்திரங்கள் வடிவில், சீனா கடன் அளித்துள்ளது. "இப்பிரச்னையை, முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவில் தீர்க்க வேண்டும்' என, அமெரிக்காவை சீனா கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவை பொருத்தவரை, "தகவல் தொழில்நுட்பத் துறையில், "அவுட் சோர்சிங்' எனப்படும் வெளியிடப் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்காவுடனான வெளியிடப் பணி, இந்திய அன்னியச் செலாவணியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால், தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியும் பிற ஏற்றுமதிகளும் பெருமளவில் பாதிக்கப்படும்' என நிபுணர்கள் கூறியுள்ளனர்

அமெரிக்கா தற்போது தனது பெரும் கடன் சுமையில் இருந்து மீள வழி தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது. தற்போதைய சூழலில், சீனா தன்னைக் காத்துக் கொள்வதற்கு மிகச் சில வழிகளே இருப்பதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மொத்தக் கடன், தற்போது 14.3 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, கடன் பத்திரங்களாக, அமெரிக்காவிடம் இருந்து 1.16 டிரில்லியன் டாலர் அளவுக்கு வாங்கியுள்ளது. 2010 அக்டோபரில், இது 906 பில்லியன் டாலராக இருந்தது. சீனாவுக்கு அடுத்தபடியாக, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகியவை அமெரிக்காவிடம் இருந்து கடன் பத்திரங்கள் வாங்கியுள்ளன. பெரும் கடன் சுமையில் அமெரிக்கா மூழ்குவதை இரண்டாண்டுகளுக்கு முன்பே சீனா உணர்ந்திருந்தது.

2009, மார்ச் 12ம் தேதி உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் வென் ஜியாபோ,"அமெரிக்காவுக்கு பெரிய அளவில் கடன் அளித்துள்ளோம். அதுபற்றி எங்களுக்குக் கவலை ஏற்பட்டுள்ளது. வெளிப்படையாகச் சொல்வதானால் நான் கவலையில் ஆழ்ந்துள்ளேன். அமெரிக்காவின் வார்த்தைகளில் சொல்வதானால், நம்பகத் தன்மையை நிலைநிறுத்துங்கள். சீனச் சொத்துக்களின் பாதுகாப்புக்கு உறுதியளியுங்கள்' என்று, வெளிப்படையாக தெரிவித்திருந்தார். கடந்த வாரம் இதுகுறித்துப் பேசிய சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ,"முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், பொறுப்பான கொள்கை முடிவுகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என நம்புகிறோம்' என்றார். சீனாவிடம் தற்போது அன்னிய செலாவணி இருப்பு, 3 டிரில்லியன் டாலர். பிற நாடுகள் எதுவும் இந்தளவுக்கு அன்னிய செலாவணி இருப்பை மேற்கொள்ளவில்லை. இந்த இருப்பில் பெரும்பான்மை டாலர் வடிவில் தான் உள்ளன. இவை மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில், கடன் பத்திரங்கள் மற்றும் டாலர் தொடர்பான பல்வேறு வடிவங்களில் பங்குச் சந்தை உட்பட அமெரிக்காவிலேயே முதலீடு செய்யப்படுகின்றன. உள்நாட்டுச் சேமிப்பை ஊக்குவித்தல், சீனக் கரன்சியான ரென்மின்பியின் மதிப்பை டாலரை விடக் குறைத்து வைத்துக் கொள்ளல் போன்றவை அக்கொள்கைகளில் குறிப்பிடத் தக்கவை. ஆனாலும், அமெரிக்க பொருளாதார இறங்குமுகம், சீனாவின் வளர்ச்சிக்கு சிக்கலைத் தரும்.சீனத் தயாரிப்புகளை அமெரிக்கா வாங்குவதைக் குறைத்தால் கூட, வேலைவாய்ப்பு அளவு சீனாவில் குறையும். அதே சமயம், டாலர் பரிமாற்ற வர்த்தகம் என்பது உலகில் முன்னணியில் இருப்பதால், சீனா தன் நிலையை சாதகமாக்கிக் கொள்ள அமெரிக்காவிடம் சில புதிய ஏற்றுமதிக் கொள்கை அணுகுமுறையைக் கூட பின்பற்றலாம். தற்போது அமெரிக்காவின் சிக்கலான நிலை, சீனாவையும் பெரும் சிக்கலுக்குள் தள்ளியுள்ளது. இதனால், சீனா தன்னை காத்து கொள்வதற்கு மிகக் குறைந்த வாய்ப்புகளே இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து சீன பொருளாதார நிபுணர் யாவோ வெய் கூறியதாவது: இது அமெரிக்கா, சீனாவுக்கு ஒரு எச்சரிக்கை. சீனாவுக்கு குழப்பமான சூழல். அமெரிக்க டாலரில் கடன் பத்திரங்களை வாங்குவது குறித்து சீனா மறுபரிசீலனை செய்ய வேண்டும். எதிர்காலத்தில் டாலர் பாதுகாப்பானதா என்பது பற்றி யோசிக்க வேண்டும். தனது அன்னிய செலாவணி இருப்பைக் குறைப்பது, ரென்மின்பியை உலகளவிலான கரன்சியாக்குவது, அன்னிய செலாவணி இருப்பை வேறு கரன்சிகளில் முதலீடு செய்வதன் மூலம் பொருளாதார தடுமாற்றத்தை சீனா தடுத்து நிறுத்த முடியும். ஆனால், அதிக தாமதம் சீனாவுக்கு அபாயமானது. இவ்வாறு யாவோ வெய் தெரிவித்தார். அமெரிக்காவின் கடன் சுமை மட்டுமல்லாமல், ஐரோப்பிய நாடுகளின் கடன்சுமை, தங்கம் விலை உயர்வு ஆகிய பிரச்னைகளும் சீனாவுக்கு சவால் விடும் அளவில் உள்ளன. ஏனெனில், உலக நாடுகள் முழுவதும் தங்கள் முதலீடுகளின் மதிப்பைக் குறையவிடாமல் தடுக்க ஆரம்பித்துள்ளன. இதற்கான அறிகுறிதான் தங்கம், வெள்ளி விலை ஏற்றம். கச்சா எண்ணெய் விலை அதிகரிக்காத நிலை ஆகும். மிகவும் வளர்ந்த பொருளாதார நாடாக கருதப்படும் சீனாவுக்கு இந்தச் சிக்கல் எதிர்பாராதது. அதே சமயம், அதிக அபாயங்களைக் கொண்டது.

சீனாவுக்கு மட்டுமல்ல அமெரிக்கா கூறியபடியெல்லாம் ஆடும் நாடுகளுக்கும் இந்தியா உட்பட 

ஒரு இக்கட்டான காலம்தான்,,,

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?