உடையும் அணை,


டேம் 999 [அணை 999] என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படம், ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு ,ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில், திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் கடற்படை மாலுமியான சோஹன் ராய் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பழமையான ஓர் அணை உடைந்தால் எவ்வளவு பெரிய அழிவு ஏற்படும் என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கருத்து.
                
"இந்தப் படம், முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் கேரள அரசின் பிரசாரம் என்றும், அதை வெளியிட அனுமதிக்கக் கூடாது" என்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
 சென்னையில் அந்தத் திரைப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்புக்கு இயக்குநர் சோஹன் ராய் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அதற்கு முன்னதாகவே, மதிமுக உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவாளர்கள் அந்த இடத்துக்குச் சென்று வன்முறையில் ஈடுபட்டதால், பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறவில்லை.
இந்தப் பிரச்சினை குறித்து, சென்னையில் உள்ள இயக்குநர் சோஹன் ராய் ``இந்த சர்ச்சை முட்டாள்தனமானது. கேரள அரசு இந்தப் படத்தைத் தயாரிக்க உதவுகிறது என்றும், வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை. இந்தப் படத்தை, சர்வதேச கண்ணோட்டத்தில் தயாரித்திருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகள் அதன் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன. படத்தைப் பார்க்காமல் இவ்வாறு புகார் கூறுவது உண்மையல்ல,’’ நாங்கள் படத்தைத் திரையிடுவதை நிறுத்திக் கொள்ளத் தயார். அதற்கு முன்னதாக, தமிழக மக்கள், இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். அது தமிழக நலனுக்கு எதிராக உள்ளது என்று அவர்கள் முடிவு செய்தால், படத்தைத் திரையிடுவதை நிறுத்திக் கொள்கிறேன். ஆனால், பார்த்த முடிவு செய்ய வேண்டும்,’’ என்கிறார்.
இப்படி கூறிவிட்டு பின்னாலேயே கீழ்வரும் ஒப்புதல் வாக்கு மூலத்தையும் வாய்தவறி கூறிவிட்டார்.
`அந்தப் படத்தைப் பார்த்தால், தமிழர்கள் கூட பழைய அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்வார்கள். தமிழ்நாட்டுக்கு அதிக நீர் தேவை. கேரளத்தில் அதிக தண்ணீர் இருக்கிறது. அதை புதிய அணை, பெரிய அணையாகக் கட்டி அதிலிருந்து தண்ணீர் எடுக்கலாமே. பழைய அணையை ஏன் வைத்திருக்க வேண்டும். கடந்த 9 மாதங்களில் 22 முறை அந்தப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. எந்த நேரத்திலும் அந்த அணை உடைந்துவிடலாம். அந்த அணைக்கு அருகில்தான் எனது வீடும் கூட உள்ளது. அணை உடைந்தால் 25 லட்சம் மக்கள் உயிரிழந்துவிடுவார்கள். பழைய அணை, நிலநடுக்கத்தை தாங்கக்கூடிய தொழில்நுட்பத்துடன் கட்டப்படவில்லை. புதிய அணையை அத்தகைய தொழில்நுட்பத்துடன் கட்ட வேண்டும்.ஆனால், அந்தப் படத்தில், முல்லைப் பெரியாறு அணையின் பெயரை நேரடியாகச் சொல்லவில்லை,’’இந்தப் படத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டாலும், நாட்டின் பிற பகுதிகளில் திரையிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
முல்லை பெரியாரை எடுக்கவில்லை என்று கூறிவிட்டு பின் முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என்கிறார்.இது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றது போல் இருக்கிறதல்லவா?

இதே சோகன் ராய்ஏற்கெனவே, முல்லைப் பெரியாறு அணையை மையமாகக் கொண்டு, டேம்ஸ் என்ற பெயரில் குறும்படம் தயாரித்துள்ளார். அதை அமெரிக்க திரைப்பட் விழாவில் வெளியிட்டு பரிசும் பெற்றுள்ளார்.
                                                       படத்தில் ஒரு காட்சி,
சாதாரண முன்னாள் மாலுமிக்கு 5 மொழிகளில் இப்படி அணையைப்பற்றிமட்டுமே படம் எடுத்து உலகமெங்கும் வெளியிட பணம் எங்கிருந்து கிடைத்தது.? என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
இது கேரள அரசின் ஒத்துழைப்பில் மட்டுமல்ல கட்டாயத்தில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.
பின்னணியில் முல்லை பெரியாறு அணையைப்பற்றி தவறான-அது பலவீனமான அழிவை தரக்கூடிய அணை என்ற கருத்தை மக்கள் மனதில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உள்ளது.
தமிழக அரசு இத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்.அது மட்டுமின்றி இரு மாநிலங்களுக்கிடையில் மோதலைத்தூண்டும் நோக்கில் உள்ள இப்படத்தை இந்தியா முழுக்க திரையிடவும் மத்திய அரசு தடை விதிக்கவும் வைத்திட வேண்டும்
_________________________________________________________________________________________________________
ஏழைகளின் உணவையும் விடாத வைரஸ்,
மக்களுக்கு தேவையான மூன்றில் ஒரு கலோரி சத்தை வழங்குகின்ற உலகின் முக்கியமான தாவரங்களில் மரவள்ளிக்கிழங்கு முக்கிய இடத்தில் உள்ளது.
மிகவும் குறைந்த மழை வீழ்ச்சி உள்ள இடங்களிலும், செழிப்பற்ற மண்ணிலும் வளரக்கூடிய மரவள்ளிக் கிழங்கு ஏழ்மை தலை விரித்தாடும் ஆப்பிரிக்க நாடுகளில் முக்கிய உணவாக உள்ளது.
தற்போது கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியில் இந்த வைரசு மரவள்ளிசெடியை வெகுவாகத் தாக்கி வருவதாக ஐநாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
''மரவள்ளி பளுப்புக் கீற்றுநோய்'' என்று கூறப்படுகின்ற இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், அது ஒரு கொள்ளை நோய் என்ற நிலையை அடைந்து கொண்டிருப்பதாகவும் ஐ.நா.அமைப்பினர் எச்சரிக்கிறார்கள்.
2006-ம் ஆண்டில் உகண்டாவில் இது கண்டுபிடிக்கப்பட்டது. பின் காணாமல் இருந்த இந்நோய்கடந்த சில மாதங்களில் மற்ற நாடுகளிலும் பரவியுள்ளது.புரூண்டி மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய இடங்களில் முதல் தடவையாக காணப்பட்டுள்ளது.

இந்த வைரஸின் முக்கியமான பிரச்சினை என்னவென்றால், இந்த நோயின் அடையாளம் வேரில் காணப்படும். அறுவடைக்கு செல்லும் வரை தமது தாவரம் செழிப்பாக வளர்கிறது என்றே விவசாயிகளுக்கு தென்படும்.தற்போது பயிரிடப்படும் எந்த விதமான மரவள்ளி வகையும் இந்த நோயில் இருந்து தப்பிக்கும் எதிர்ப்பு சக்தி உடையதாக இல்லை.
இந்த நோயை மட்டுப்படுத்துவதற்கு மாத்திரம் தற்போதைக்கு முடியும்.இவ்வைரஸை கட்டுப்படுத்துவதற்காக போராடிக்கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும்,நோய்தாக்காத புதிய வகை மரவள்ளி இனத்தை  கண்டுபிடிப்பதற்கும் நிறையப் பணம் தேவைப்படும்.
அப்பணத்தை ஐ.நா.ஒதுக்க தயக்கம் காட்டுகிறது.இந்தியாவிலும் பலருக்கு மரவள்ளிக்கிழங்குதானே அடிப்படை உணவாக உள்ளது.
___________________________________________________________________________________________________________
2-ஜி யில் பிணை ,

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ஐந்து நிறுவன அதிகாரிகளுக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து இவர்கள் சார்ந்த டிபி ரியால்டி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், யுனிடெக் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலையில் இன்று கிடுகிடு உயர்வு காணப்பட்டது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்வழக்கில், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் கூட்டு சேர்ந்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாக இந்த ஐந்து பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஹரி நாயர், கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகியோர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. இருப்பினும் இந்த ஐந்து பேருக்கும் இன்று ஜாமீன் கிடைத்து விட்டது.
இதையடுத்து இவர்கள் சார்ந்த நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு இன்று கிடுகிடுவென உயர்ந்தது.
தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து 10.30 மணியளவில் டிபி ரியால்டி நிறுவனத்தின் பங்கு 20 சதவீதம் உயர்ந்தது. கடந்த 6 மாதங்களில் இந்த நிறுவனத்தின் பங்குகள் 15 சதவீத சரிவைக் கண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநராக உள்ள வினோத் கோயங்காதான் டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல யுனிடெக் நிறுவனத்தின் வர்த்தகமும் 6 சதவீத உயர்வைக் கண்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் இது 25 சதவீதத்திற்கும் மேலான சரிவைக் கண்டிருந்தது.
மேலும் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் பங்கு விலையும் மும்பை பங்குச் சந்தையில் இன்று 4 சதவீத உயர்வைக் கண்டது. இந்த நிறுவனத்தின் கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் விடுதலையாகியுள்ளனர்.
அடுத்து கனிமொழி பிணை மனு உச்சநீதிமன்றத்தில் உள்ளது.அதற்கும் பிணை கிடைக்கும் வாய்ப்புள்ளது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?