இங்கேயும் ஒரு தேர்தல்.

மியான்மர்[பர்மா] நாட்டு "ஜனநாயகத்துக்கான தேசிய லீக்' (என்.எல்.டி.) கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி 66 வயதான இவர்தன்னுடைய பொதுவாழ்வில் 22 ஆண்டுகளை சிறையிலேயே கழித்தவர். பலஇடையூறுகள் வந்தாலும் மியான்மரில் ஜனநாயகத்தை உருவாக்கசெயல்படுகிறார்.
 மியான்மர் நாடாளுமன்றத்தின் 45 தொகுதிகளுக்கு மட்டும் ஞாயிற்றுக்கிழமை இடைத் தேர்தல் நடக்கிறது.
 இந்தத் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எல்லோரும் ராணுவத்தால் அமைச்சர்களாக்கப்பட்டுவிட்டதால் இத் தொகுதிகளுக்கு மீண்டும் தேர்தல் நடக்கிறது. 
 அவருடைய கட்சி 44 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அவரே கவ்மு தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.



 மியான்மரில் ஜனநாயக உரிமைகளை மக்களுக்கு வழங்காவிட்டால் பொருளாதாரத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளைப் பரிசீலிக்க நேரும் என்று மேற்கத்திய நாடுகள் எச்சரித்ததை அடுத்த ""அரசியல் சீர்திருத்தங்களை'' அமல் செய்வதாக அந்த நாட்டு அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாகத்தான் 45 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
 இந்த 44 தொகுதிகளிலும் ஆங் சான் கட்சி வெற்றி பெற்றாலும் அங்கு ஆட்சி செய்துவரும் ராணுவத்தின் ""கைப்பாவைகளின் ஆட்சி''க்கு ஒரு ஆபத்தும் வராது. ஆனால் தேர்தல் ஜனநாயகப் பூர்வமாக நடந்தது என்று சொல்லி தடை நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க முடியும். இதற்காகவே மியான்மர் அரசு, ஆங் சான் சூச்சியையும் போட்டியிட இந்த முறை ""பெருந்தன்மை''யோடு அனுமதித்துவிட்டது.


உண்மையான ஜனநாயகவாதிகள் தங்களுடைய கட்சியின் வெற்றிக்காகப் பாடுபடாமல் ஜனநாயகத்தின் வெற்றிக்காகவே தொடர்ந்து போட்டி போடுவர். அந்த வகையில் ஆங் சானும் மனம் தளராமல் போட்டியிடுகிறார்.
பிரசாரத்தின்போது மேற்கொண்ட பயணத்தால் உடல் நலிவு ஏற்பட்டு குளூகோஸ் ஏற்றினார்கள். அதையும் பொருள்படுத்தாமல் மருத்துவமனையிலிருந்து வாக்குச் சாவடிக்குக் காரில் சென்றிருக்கிறார்.
 தேர்தல் என்றால் தில்லுமுல்லுகள் சகஜம். ஜனநாயக நாட்டிலேயே இதுதான் கதி .அதுவும் ராணுவத்தின் மேற்பார்வையில் நடைபெறும் தேர்தலில் கேட்க வேண்டுமா?
வாக்குச் சீட்டில் பெயர் காணாமல் போவது, இறந்து போனவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் ""உயிரோடு'' இருப்பது, வாக்குச் சீட்டில் ஆங் சான் கட்சியின் பெயர் உள்ள கட்டத்துக்கு மேலே மெழுகு பூசுவது, ராணுவ ஆதரவுக் கட்சியைத் தவிர ஆங் சான் கட்சிக்கு வாக்களித்தால் ""தேர்தல் முடிந்த பிறகு பலனை அனுபவிப்பாய்'' என்று வீட்டுக்கே வந்து எச்சரிப்பது என்று எல்லாமும் நடக்கிறது. ஆங்சான் கட்சியின் பெயர், சின்னத்துக்கு எதிரே மெழுகு பூசியிருப்பதால் வாக்கு முத்திரையை வெகு எளிதாக தேய்த்து மறைத்துவிடலாம்.
இத்தனை முறைகேடுகள், தில்லுமுல்லுகளையும் பட்டியலிடும் ஆங்சான், அதற்காக தேர்தலைப் புறக்கணிப்பதாகவோ முடிவை ஏற்க முடியாது என்றோ கூறாமல் போட்டியில் இருக்கிறார்.
ஆங்சான் எங்களுக்காகவே பாடுபட்டு 20 ஆண்டுகளைச் சிறையில் கழித்துவிட்டார், அவருக்குத்தான் எங்கள் வாக்கு என்று கிராம மக்கள் துணிச்சலாக, பகிரங்கமாகக் கூறுகின்றனர். ஏராளமானோர் தங்களுடைய பாரம்பரிய உடையில் வந்து தேசியத் திருவிழா போல தேர்தலைக் கொண்டாடுகின்றனர்.
ஒரு வாரத்துக்குள் தேர்தல் முடிவு தெரிந்துவிடும். ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்றாலும் மக்களுடைய எண்ணத்தை ஓரளவுக்கு அறிய ஆட்சியாளர்களுக்கு இது வாய்ப்பாக இருக்கிறது.
1990 பொதுத் தேர்தலில் ஆங்சான் கட்சிக்கு பெருத்த வெற்றி கிடைத்தது. ஆனால் ராணுவ ஆட்சியாளர்கள் அதை அங்கீகரிக்க மறுத்து ஆங்சானைச் சிறையில் தள்ளினார்கள்.


எனவே ஜனநாயகம் மீண்டும் தலைதூக்குமா என்ற கேள்விக்குப் பதிலாகத்தான் இந்தத் தேர்தலைப் பார்க்க முடியுமே தவிர ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கக்கூடாது என்தான் இன்றைய மியான்மரின் நிலை.

மியான்மரில் நடந்துமுடிந்த இடைத் தேர்தலில் ஆங் சான் சூ சீயின் கட்சி போட்டியிட்ட 44 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளதாக பிபிசியின் பர்மிய மொழி வானொலி அறிவித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?