பூலான் தேவி அரசியலில்

இன்றைய அரசியல் நிலையை பார்க்கும்போது பூலான் தேவி அரசியலில் கலந்து கொண்டது தப்பே இல்லை என்று தெரிகிறது.அவர் தான் கொள்ளைக்காரி என்று உலகம் முழுக்க அறிவித்து கொள்ளையடித்து அதற்கு தண்டனையும் பெற்றே திருந்தி அல்லது திருந்தினாரா என்று தெரியாமலேயே இந்திய அரசியல் களத்தில் குதித்து மக்களவை உறுப்பினராக மக்களால் தேர்ந்தும் எடுக்கப்பட்டார்.
பூலான் தேவி 
ஆனால் இன்று சேவை செய்ய வாக்குகளை மக்களிடம் வாங்கிக்கொண்டு பதவி வந்ததும் மக்கள்  பணத்தை கொள்ளையடிக்கின்றனர் .அதில் மாட்டிக்கொண்ட பின்னரும் நாற்காலியை விட்டு இறங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் அசிங்க அரசியல் நிறைவே றிக்கொண்டிருக்கிறது.
அதில் காங்கிரசுதான் முதலிடம் வகிக்கிறது.
முறைகேடுகள்-ஊழல்கள் செய்யாமலேயே தங்கள் மீது சந்தேகம் வந்து விட்ட காரணத்தினால் பதவி விலகியவர்கள்,ரெயில் விபத்து,குண்டு வெடிப்பு போன்ற தனக்கு சம்பந்தமே இல்லாவிட்டாலும் தனது துறை சார்ந்தது என்று பதவி விலகிய லால் பகதூர் சாஸ்திரி போன்றோர் இருந்த காங்கிரசின் இன்றைய நிலைபாடு மிக கேவலமான தரத்தை அக்கட்சி எட்டியுள்ளது என்பதைத்தான் தெரிவிக்கிறது.

சரி.
இதோ கொள்ளைக் காரியாக இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பூலான் தேவி  பற்றி  கொஞ்சம்:
"நான் பூலான்தேவி" என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாறு பற்றிய சுய சரிதையை பூலான்தேவி எழுதினார்.

"பாண்டிட் குயின்" சினிமா படம் வெளிவந்தபிறகு சர்வதேச அளவில் பேசப்பட்டார். 2001-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந்தேதி பூலான்தேவி தனது "மலரும் நினைவுகள்" குறித்து சிறப்பு பேட்டி அளித்தார்.

அதில் சில பகுதிகள்:-

கேள்வி:- நீங்கள் "பாண்டிட் குயின்" ("கொள்ளையர் அரசி") என்ற பட்டம் பெற்றது எப்படி?

பதில்:- நான் பூலான்தேவியாகத் தான் இருந்தேன். பத்திரிகைகள் தான் அந்த அடைமொழியை தந்தன.

கேள்வி:- "பாண்டிட் குயின்' சினிமா படம் உங்கள் வாழ்க்கையை கண்ணியமாக சித்தரித்ததா?

பதில்:- கண்ணியமான படம். இருந்தாலும் அதில் என்னை நிர்வாணமாக சித்தரித்ததை விரும்பவில்லை.

கேள்வி:- உங்கள் இளம் வயது திருமணம் பற்றி...?

பதில்:- எனக்கு 11 வயது இருக்கும். அந்த அறியாப் பருவத்தில் 40 வயதுக்காரருக்கு எனது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தார்கள். அவர் ஏற்கனவே 2 திருமணம் செய்தவர்.

எனக்குப் பிறகும் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார். அந்த இளம் வயதில் எனது திருமணம் நடைபெறாமல் இருந்தால் எனது வாழ்க்கைப் பாதை வேறு வழியில் பயணித்து இருக்கும்.

கேள்வி:- அரசியல்வாதிகள் பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்கள் என்று கருதுகிறீர்களா?

பதில்:- அப்படி நினைக்கவில்லை. அரசியல்வாதிகள் பெண்கள் உயர்வுக்காகவே பாடுபடுகிறார்கள். சில பெண்கள் தங்களது சுய நலத்துக்காக அரசியல் வாதிகளை சீரழித்து விடுகிறார்கள்.

கேள்வி:- உங்களை 40 பேர் கும்பல் கற்பழித்ததா?

பதில்:- கிராமப்புற வாழ்க்கையில் இது எல்லாம் ஒரு பெண்ணுக்கு சாதாரணமானது.

கேள்வி:- சாம்பல் பள்ளத்தாக்கில் இன்னும் கொள்ளை நடைபெறுகிறது உண்மையா?

பதில்:- ஆமாம். அது உண்மை. வறுமையால் இந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன. அவர்களின் முன்னேற்றத்துக்கு அரசு பாடு படவேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே இந்த குற்றங்கள் குறையும். இவ்வாறு பூலான்தேவி கூறியிருந்தார். "எம்.பி"யாக இருந்ததால் பூலான்தேவி டெல்லியில் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் குடியிருந்து வந்தார்.
பூலான்தேவி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 2 முறை "எம்.பி" ஆனார். 1991-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த சமயத்தில் பூலான்தேவி சிறையில் இருந்தார். என்றாலும் சிறையில் இருந்தபடியே டெல்லி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.

நடிகர் ராஜேஷ் கன்னாவை (காங்.) எதிர்த்து நின்றார். ஆனால் பூலான் தேவிக்கு வெற்றிக்கனி கிட்டவில்லை. தோல்வி அடைந்தார். இருப்பினும் அரசியல் மீது அவருக்கு ஒரு கண் இருந்தது. 1994-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

1994-ம் ஆண்டு ஜுலை மாதம் 5-ந்தேதி உமத்சிங் என்பவரை பூலான்தேவி திருமணம் செய்து இல்லற வாழ்வில் நுழைந்தார். சமூக சேவையில் அவருக்கு அதிக ஆர்வம் உண்டாகியது. இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக ஒரு சேவை அமைப்பை தொடங்கினார்.

பின்னர் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார்.
 1996-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சா பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.

பழைய வழக்குகள் பூலான் தேவிக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தன.
நீதிமன்றம்  ஏறி இறங்க வேண்டியது இருந்தது. இதற்காக பாராளுமன்றம் முன்பு தர்ணா நடத்தினார்.
 1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே மிர்சாபூர் தொகுதியில் 2-வது முறையாக நின்று அபார வெற்றி பெற்றார்.

பூலான்தேவி 2,90,849 ஓட்டுகளும், அவரை எதிர்த்த பா.ஜனதா வேட்பாளருக்கு 84,476 ஓட்டுகளும் கிடைத்தன.
 பூலான்தேவி சுமார் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார்.
======================================================
பூலான் தேவி
----------------------
                                                                                                                           -சின்ன வரலாறு,
பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. இவர்கள் மிகவும் ஏழைகள். படகோட்டி பிழைத்து வந்தார்கள். 4 சகோதரிகள். ஒரு தம்பி உண்டு.

பாலிய விவாகம் (சிறு வயதில் திருமணம்) என்பது அங்கு சர்வசாதாரணமான விஷயம். வயதுக்கு வரும் முன்பே (அதாவது 11 வயதில்) பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன்.

திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான். அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள்.

முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான். சிறிது காலம் பெற்றோர் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த பூலான்தேவிக்கு அங்கும் நிம்மதி பறிபோனது. பூலான்தேவியின் உறவினரான (மாமா) மையாதீன் என்பவன் பல வழிகளிலும் தொல்லை கொடுத்து வந்தான்.

ஒருநாள் அந்த கிராமத்தின் பணக்கார வகுப்பினர் பூலான் தேவியின் கற்பை அவளது பெற்றோர்கள் எதிரிலேயே சூறையாடினார்கள். வாழ்க்கையில் வெறுப்படைந்த பூலான் தேவி தனது சகோதரிகளுடன் ஊரைவிட்டே ஓடினாள். அவளுடைய பெற்றோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் மாமன், பழி தீர்க்கும் படலத்தை கைவிடவில்லை.

கொள்ளைக்காரர்களுடன் பூலான்தேவிக்கு தொடர்பு இருப்பதாக கிராம மக்களை தூண்டிவிட்டு புகார் செய்தான். இதனால் போலீஸ் பிடியில் பூலான்தேவி சிக்கினாள். சட்டம் - நீதியை பாதுகாக்க வேண்டிய போலீசார் அங்கும் பூலான்தேவியிடம் நெறிமுறை தவறி நடந்தனர். கற்புக்கு மீண்டும் களங்கம் விளைவித்தனர்.

இப்படி பூலான்தேவியின் இளம் வயதில் வறுமை, பசி, பட்டினி, பலாத்காரம், போலீஸ் அடக்கு முறை போன்றவை மீண்டும் மீண்டும் தலைதூக்கின. எனவே இவற்றையெல்லாம் எதிர்த்து போராடவேண்டும் என்ற துணிச்சலை உள்ளத்தில் சவாலாக ஏற்றாள். பூலான்தேவி மீதான வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
15 வயதில் கொடூர தாக்குதல்களுக்கு அவள் ஆளாகி இருப்பதை உணர்ந்த நீதிபதி கருணை காட்டி அவளை விடுவிக்க உத்தரவிட்டார். ஓராண்டு உருண்டோடியது. திடீரென்று ஒருநாள் பாபு குஜார்சிங் என்ற கொள்ளைக்காரன் பூலான்தேவியை கடத்திச்சென்றான். அந்த கொள்ளைக் கும்பலில் இருந்தபோதுதான் பூலான்தேவி குதிரை ஏற்றம் மற்றும் துப்பாக்கியால் குறி தவறாமல் சுடும் பயிற்சியை பெற்றாள்.

அந்த கொள்ளை கும்பலில் இருந்த விக்ரம்மல்லா என்பவன் அவளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தான். அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.     கொள்ளை கும்பல் தலைவன் பாபு குஜர்சிங் கொல்லப்பட்டான். விக்ரம் கொள்ளைக்கூட்டத்துக்கு தலைவனாகி பூலான்தேவியை திருமணம் செய்தான்.

இந்த சந்தர்ப்பத்தில் பூலான்தேவி தன்னுடைய முதல் கணவன் புட்டிலாலை சந்தித்து பிரம்பால் அவனை அடித்து தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டாள். இதன் பிறகே பூலான்தேவி முழு அளவில் கொள்ளைக்காரியாக மாறினாள். விக்ரம் மல்லா உதவியோடு தனக்கு தீங்கு செய்தவர்களை ஒருவர் பின் ஒருவராக தீர்த்து கட்டினாள்.
ஆனாலும் அவளுடைய ஆத்திரம் தணியவில்லை. இந்த நிலையில் 1980-ம் ஆண்டு ஆகஸ்டு 13-ந்தேதி கொள்ளை கோஷ்டிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் விக்ரம் மல்லா கொல்லப்பட்டான். இதனால் பூலான்தேவி மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டாள்.

தாகூர் வகுப்பைச் சேர்ந்த சிலர் பூலான்தேவியை சிறை பிடித்து சென்றனர். அவளது கற்பை சூறையாடினார்கள். பிறகு கிராமவாசிகள் உதவியுடன் காட்டுக்குள் தப்பித்துச் சென்றாள், பூலான்தேவி. விக்ரம் மல்லாவை கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்க துடித்த பூலான்தேவி, மான்சிங் என்ற கொள்ளைக்காரனுடன் இணைந்து ஒரு புதிய கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கினாள்.

1981-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி வடக்கு டெல்லி அருகேயுள்ள பிக்மாய் என்ற கிராமத்துக்கு தனது கொள்ளை கோஷ்டியுடன் சென்றாள். விக்ரம் மல்லாவை கொன்றவர்களுக்கு அந்த கிராமவாசிகள் தஞ்சம் அளித்தனர் என்று குற்றம் சாட்டினாள். அந்த கிராம மக்கள் "எங்களுக்கு எதுவுமே தெரியாது" என்று எவ்வளவோ கெஞ்சியும் பூலான்தேவி அந்த கிராமவாசிகளை வரிசையில் நிற்க வைத்தாள்.

குருவியை சுடுவதுபோல் சுட்டாள். அதில் 22 பேர் துடிதுடித்து செத்தார்கள். 8 பேர் கை-கால்களை இழந்தார்கள். இந்த கொலை சம்பவம் இந்தியா முழுவதையும் உலுக்கியது. பூலான்தேவியை பற்றிய செய்தி நாடு முழுவதும் பரவியது. அது மட்டுமல்ல உத்தரபிரதேச அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இருந்த வி.பி.சிங் 1982-ல் பதவியை ராஜினாமா செய்தார். உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநில போலீஸ் படைகளும் உஷார்படுத்தப்பட்டன. காடுகளில் புகுந்து பூலான்தேவியை வேட்டையாடினார்கள். ஆனாலும் அவள் சிக்கவில்லை.  

பூலான்தேவியை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. போலீஸ் கண்ணில் படாமல் திரிந்த பூலான்தேவி அப்போதும் தனது எதிரிகளை தீர்த்துக்கட்டியபடியே இருந்தாள். நேபாளத்துக்கு அவள் தப்பி ஓடிவிட்டதாக பேசப்பட்டது.

ஆனாலும் கொஞ்ச நாளிலேயே அவள் உ.பி.க்குள் திரும்பினாள். 1982-ம் ஆண்டு டிசம்பரில் ஜலான் மாவட்டத்தை சேர்ந்த 3 மிராசுதாரர்களை கடத்திச்சென்றாள். இதுவே அவள் கடைசியாக அரங்கேற்றிய தாக்குதலாகும். பூலான்தேவி மீது கொலை, கடத்தல், கொள்ளை, சூறையாடல் என்று 48 பெரிய குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தன.
வடமாநிலங்களையே குலைநடுங்க வைத்த பூலான் தேவி குள்ளமான பெண் ஆவாள். அவளது உயரம் 4 அடி 10 அங்குலம் மட்டுமே. ஆனால் அவளது தோற்றம் கம்பீரமாக இருந்து வந்திருக்கிறது. குதிரை மீது ஏறி அவள் வலம் வந்தால் அந்த சுற்று வட்டாரமே நடுங்கும். கிராமவாசிகள் மண்டியிட்டு வணக்கம் செலுத்துவார்கள்.

காக்கி நிற உடையில் நெற்றியை சுற்றி சிவப்பு நிற ரிப்பனை கட்டியிருப்பது அவளுடைய தனி முத்திரையாகும். எப்போதும் தோளில் துப்பாக்கி தொங்கிக் கொண்டிருக்கும். துப்பாக்கி தோட்டா (குண்டுகள்) "பெல்ட்" உடம்பை சுற்றி காட்சி தரும்.



----------------------------------------------------------------------------------------------------------------------------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?