சிறு நீரகக் கற்களால்



உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகம் முக்கிய இடம் வகிக்கிறது.

 ரத்தத்தில் உள்ள கழிவுகள், சிறுநீராக வெளியேறவும், உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை சம அளவில் வைக்கவும், சிறுநீரகம் உதவுகிறது.

 இதோடு, உடலில் உள்ள அமிலம், காரம் மற்றும் சர்க்கரையின் அளவையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.


நமது குடிநீரிலும், உணவிலும், பல தாது உப்புகள் உள்ளன. 

உணவு செரிமானத்திற்குப் பின், இவை சிறுநீர் வழியாக வெளியேறுகின்றன. 

சிலசமயம், ரத்தத்தில் 'தாது உப்புக்கள்' அதிகமாகும் போது, இவை வெளியேற சிரமப்படும்.
 இதனால், சிறுநீரகம் மற்றும் சிறுநீர்க்குழாய்களில் இந்த தாது உப்புகள் படிந்து, கல்லாக மாறும். 

மேலும், தவறான உணவு பழக்கம்; கால்சியம், குளோரைடு, பாஸ்பேட், யூரியா உள்ளிட்ட தாது உப்புகள் நிறைந்த தண்ணீர் பருகுதல்;
 சிறுநீர் அடக்குதல் இவற்றாலும் சிறுநீரக கற்கள் உருவாகும்!

இந்த சிறு நீரகக் கற்களால் சிறுநீர் ஓட்டம் தடைபடும்; 


சிறுநீரகத்தில், சிறுநீர் குழாய்களில் சிறுநீர் தேங்கும்;
 சிறுநீரகம் வீங்கி, சிறுநீரக அழற்சி உண்டாகும்;
 முறையான சிகிச்சை இல்லாவிடில், உயிருக்கும் ஆபத்தாகும்.
கற்கள் உருவான ஆரம்பத்தில் அறிகுறி ஏதும் தெரியாது.
 ஆனால், சிறுநீரக கற்கள் நகரும் போதும், சிறுநீர் குழாயில் அடைப்பு ஏற்படுத்தும் போதுதான், வலி உண்டாகும்! 
முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ், கடுமையான வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும்! 
சில சமயங்களில், சிறுநீர் வெளியேறும் புறவழித் துவாரம் வரை கூட, வலி இருக்கும்!


தினசரி உணவில், 2.5 கிராம் 'சோடியம் குளோரைடு' இருப்பது போதுமானது. இது  அதிகமானால், அதிக அளவில், 'கால்சியம்' வெளியேறிவிடும். இதனால், 
ஆக்சலேட், பாஸ்பேட் போன்ற தாது உப்புக்களோடு, சோடியம் 
குளோரைடு சேர்ந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கும்!


 சிறு நீரகக் கற்களை உருவாகாமல் தடுக்க ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பேரீச்சை, சீத்தாப்பழம், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்ட பழங்கள்;

 சிட்ரஸ் பழச்சாறுகள்; வாழைத்தண்டு சாறு; பார்லி தண்ணீர்; நீர்மோர்; இளநீர்; 
கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை உள்ளிட்ட நார்ச்சத்துள்ள தானிய வகைகளை, 
அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது!


'பாஸ்பேட்' தாது உப்பு மிகுந்த காபி, தேநீர், பிளாக் டீ, கோலி சோடா, குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லெட் உள்ளிட்டவை சிறுநீரக கற்களை உருவாக்கும். 


இவைதவிர, ஆட்டிறைச்சியில் உள்ள புரதம், ரத்தத்தில் உள்ள 'யூரிக்' அமிலத்தை அதிகப்படுத்தி, 'சிட்ரேட்' அளவை குறைத்து, சிறுநீரக கற்கள் உருவாக்கும் .


'சிறிய கற்கள்' என்றால் மருந்து மாத்திரைகளிலேயே  கரைத்து விடலாம். 

அளவில் பெரிய  கற்கள் என்றால், 'லேப்ராஸ்கோப்பி' எனும், 'நுண்துளை அறுவை சிகிச்சை' மூலம், குணம் பெறலாம்.
சிறுநீரக கற்களால், உடனடியாக சிறுநீரகத்திற்கு பாதிப்பு உண்டா காது. 

ஆனால், நாள் கணக்கில் சிறுநீரக கற்கள், சிறுநீர் பையில் தங்கும்போது, சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படும். 

இதனால் ரத்தத்திலுள்ள கழிவுகளை வெளியேற்ற முடியாமல், சிறுநீரகத்தில் நோய்த்தொற்று ஏற்படும். 

நாளடைவில், கொஞ்சம், கொஞ்சமாக சிறுநீரகம் செயலிழந்து போகும்!


உடலில் சிவப்பணுக்கள் உற்பத்தியாக காரணமாக இருக்கும், 'எத்தோபாய்ட்டின்' எனும் ஹார்மோன் சுரக்க சிறுநீரகம் உதவுகிறது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், இந்த ஹார்மோன் சுரப்பில் குறை ஏற்பட்டு, ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும். 

இதனால், 'ரத்தசோகை' உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.
------------------------------------------------------------------------------------
எண்ணெய் விலை வீழ்ச்சியும் ,

அரசின் மோ[ச]டி வேலையும்! 


சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு பேரல் ஒன்று 47.20 அமெரிக்க டாலர் ( ரூ.2,985 ) என்ற அளவில் குறைந்திருக்கிறது.
 சர்வதேசச் சந்தை விலைக்கு இந்தியாவில் டீசல், பெட்ரோலின் விலையை உயர்த்தாவிட்டால் இந்தியப் பொருளாதாரமே மூழ்கி விடும் என மத்திய அரசு தரப்பில் ஓயாமல் பிரச்சாரம் செய்யப்படுகிறது. 
மறுபுறம் மக்களிடம் உண்மையை மறைத்து மோசடி வேலையிலும் ஈடுபடுகிறது. அதாவது எண்ணெய் நிறுவனங்கள் எதிர்பார்த்த “லாபத்தின்’’ இலக்கை அடையமுடியவில்லை என்பதையே, ’’நஷ்டம்’’ எனக் கூறுகின்றனர்.
 ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் சமர்ப்பித்த ஆண்டு நிதிநிலை அறிக்கை அதனை அம்பலப்படுத்தியது.
ஒவ்வொரு நிறுவனமும் பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியது தெரிய வந்தது.
 தற்போது விலையை முழுமையாக எண்ணெய் நிறுவனங்களே சர்வதேசச் சந்தை நிலவரத்திற்கேற்ப நிர்ணயித்துக் கொள்ளலாம் என அரசு தனது பொறுப்பை கைகழுவி இருக்கிறது.
 அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் 15 தினங்களுக்கு ஒரு முறை எண்ணெய் விலையை இஷ்டத்திற்கு நிர்ணயித்துக் கொள்கின்றன. ஆனால் சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை 15 தினங்களுக்கு ஒரு முறை மாறுவதில்லை. 
ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது. 
குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. ஆனால்அதன் உண்மையான பயன் இந்திய மக்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. எண்ணெய் நிறுவனங்கள் மீதியை கொள்ளையடித்தால், மோடி அரசு அதன் பங்கிற்கு பாதியை கொள்ளையடித்து வருகிறது.
அதாவது கடந்த மூன்று மாதத்தில் மட்டும் மூன்று முறை மத்திய அரசு டீசல், பெட்ரோல் மீதானகலால் வரியை உயர்த்தியிருக்கிறது. 
அதன்படி பெட்ரோலுக்கு ரூ.5.75ம், டீசலுக்கு ரூ.4.50 என்ற உயர்வு ஏற்பட்டிருக்கிறது. 
இதன் மூலம் கச்சா எண்ணெய் விலை குறைவால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பயனை அப்படியே முழுமை யாக மோடி அரசு களவாடியிருக்கிறது. பெட்ரோல், டீசல் மீது பாதி அளவுக்கு மத்திய அரசு வரி போட்டு கஜானாவை நிரப்பி வருகிறது.
 தற்போது இறக்குமதியாகும் எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும் அது மக்கள் கைக்கு கிடைக்காமல் தட்டிப் பறிக்கிறது.
உதாரணமாக கடந்த (2014 ) ஜூன் மாதம் சர்வதேசச் சந்தையில் ஒரு பேரல் கச்சா எண் ணெய்யின் விலை 114.25 டாலராக( ரூ. 7,198) இருந்தது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.75 க்கு விற்கப்பட்டது.
ஆனால், இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 47.20 டாலர் ( ரூ. 2,985 ) என்ற அளவில் குறைந்திருக்கிறது.
 தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.64 க்கு விற்கப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் சுமார் 60 சதவிகிதம் வரை கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் நிலையில் வெறும் ரூ.11 மட்டுமே பெட்ரோலின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. 
ஆனால் ரூ.45 வரை குறைத்திருக்க வேண்டும். அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் வரியோடு சேர்த்து ரூ.30க்கு விற்க வேண்டும்.

 ஆனால் ரூ.64 க்கு விற்கின்றனர். இதுதான் மோடி அரசு காட்டும் மோ[ச]டி வளர்ச்சிப் பாதை.
-----------------------------------------------------------------------------------------
ஸ்டீபன் ஹாகிங் 
ஜனவரி எட்டு.
இன்றுதான் ஸ்டீபன் ஹாகிங் பிறந்த தினம். 
இதே தினத்தில் எழுபத்தி ஒரு வருடங்களுக்கு முன் பிறந்தார் .
 ;பள்ளியில் சுட்டியாக இருந்த அவர் இளம் வயதிலேயே வீட்டில் கிடந்த சாமான்கள்,கடிகார பாகங்கள் அட்டைகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு கணினியை உருவாக்கினார் . 
அப்பா மருத்துவம் படிக்க சொல்ல இவர் இயற்பியலை ஆக்ஸ்போர்டில் படித்தார் ; 
வகுப்புகள் அவருக்கு போர் அடித்தன . 
மூன்று வருட காலத்தில் மொத்தமே ஆயிரம் மணிநேரம் தான் படித்திருப்பார் ;
 முதல் கிரேடில் தேர்வு பெறாவிட்டால் காஸ்மாலஜி துறையில் மேற்படிப்பை படிக்க இயலாது ;எனினும் தன் திறனை கல்லூரியின் நேர்முகத்தில் காட்டி கேம்ப்ரிட்ஜில் சேர்ந்தார் ...
எதோ தடுமாற்றம் உண்டானது ;மாடிப்படியில் நடக்கும் பொழுது தடுமாறினார் ;மங்கலாக உணர ஆரம்பித்தார் .
பேச்சு குழற ஆரம்பித்தது 
;செயல்பாடுகள் முடங்கின -மோட்டார் நியூரான் நோய் என அழைக்கப்பட்ட அரிய நோய் தாக்கி இருந்தது .
 இரண்டு வருடம் வாழ்ந்தால் கடினம் என்றார்கள் ;
முதலில் நொறுங்கிப்போனவர் பின் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு பணிகளை தொடர்ந்தார் .
காலம் மற்றும் அண்டவெளி பற்றிய அவரின் முனைவர் கட்டுரை ஆடம்ஸ் பரிசை பெற்றது -இந்த காலத்தில் கரங்கள் செயலற்று போயின ;
 சுத்தமாக பேச முடியாத நிலை உண்டானது. 
எனினும் பேச்சு உருவாக்கும் கருவி மூலம் பேசி வருகிறார் .
1979 இல் கேம்ப்ரிட்ஜில் நியூட்டன் உட்பட பதினான்கு பேர் மட்டுமே வகித்த லுகாஸியன் கணித பேராசிரியர் ஆனார் .
கருந்துளைகளில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சை பற்றிய அவரது அறிவிப்பு ஹாகிங் கதிர்வீச்சு என அழைக்கபடுகிறது .
 காஸ்மாலஜி துறையை சார்பியல் மற்றும் குவாண்டம் இயற்பியல் எனும் இரண்டு பிரிவுகளின் ஊடாக கண்ட முதல் அறிஞர் இவரே ;
 இவரின் "A Brief History of Time" நூல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது .

ஐன்ஸ்டீனுக்கு பின் உலகின் தலைசிறந்த கோட்பாட்டு இயற்பியலாளர் இவர் 
;சோதனைகளை கடந்து சாதிக்க தூண்டும் அவரிடம் ,"உங்களுக்கு வாழ்க்கை வெறுப்பாக இல்லையா ?
 எப்படி இத்தனை துன்பங்களுக்கு நடுவிலும் தீவிரமாக உங்களால் செயலாற்ற முடிகிறது ?"
 என்று கேட்கப்பட்டது ,
"என்னுடைய இருபத்தி ஒரு வயதிலேயே என்னுடைய எதிர்பார்ப்புகள் மருத்துவர்களால் பூஜ்யமாக ஆக்கப்பட்டுவிட்டது. அதற்கு மேல் நான் பெற்றது எல்லாமே போனஸ் தான். எதை இழந்தோம் என்பது அல்ல விஷயம் ? எது மிச்சமிருக்கிறது என்பதே முக்கியம் ! வாழ்க்கை சுகமானது !" 
-------------------------------------------------------------------------------------
பூமியை போன்று மனிதர்கள் வசிப்பதற்கு ஏதுவாக இரண்டு புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பூமியை போன்ற புதிய கிரகங்களை கண்டுபிடிப்பதற்காக கெப்ளர் மிஷன் என்னும் தொலைநோக்கியை கடந்த 2009ம் ஆண்டு நாசா விண்வெளிக்கு அனுப்பியது.
இதுவரையிலும் 1,50,000க்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை கண்காணித்துள்ள கெப்ளர், 4175 பூமியை போன்ற கிரகங்களை அடையாளம் கண்டுள்ளது.
இந்நிலையில் புதிதாக எட்டு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இவற்றில் இரண்டு கிரகங்கள் பெருமளவில் பூமியை போலவே இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு கிரகங்களில் ஒன்றுக்கு கெப்ளர்- 438பி என்றும், இன்னொன்றுக்கு கெப்ளர்- 442பி என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளன.
இந்த கிரகங்களில் பாறைகள் உள்ளன என்றும், அதிகளவில் வெப்பமாகவும் இல்லாமல் அதே சமயம் குளிராகவும் இல்லாமல் தண்ணீர் இருப்பதற்கான‌ மிதமான தட்பவெப்பம் நிலவுவதாலும் இங்கு உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் பூமியில் இருந்து பல நூறு ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருப்பதால், இவற்றை பற்றி தெரிந்து கொள்வது பெரிய சவாலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?