எங்கே போனது மோடி அலை?




‘மோடி அலை’ என்ற பிரச்சாரத்தை தில்லி வாக்காளர்கள் தூள் தூளாக்கிவிட்டார்கள்.

அவர்கள் அதை மிகவும் மகத்தானமுறையில் செய்திருக்கிறார்கள்.

மக்களவைத் தேர்தலின்போது காங்கிரசுக்கு என்ன கதி ஏற்பட்டதோ அதே கதி, இப்போது பாஜகவிற்கு ஏற்பட்டிருக்கிறது.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் வெறும் மூன்று இடங்கள்தான் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கிறது.
உண்மையிலேயே மிகவும் மோசமான ஒன்று.
பாஜக, தில்லி சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கேட்கக்கூடிய தகுதியைக்கூட இழந்து நிற்கிறது.
மோடி ஓ மோடி
ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரம் தில்லியில் விளம்பரங்களுக்கு மட்டும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து பிரச்சாரம்மேற்கொண்டது. அந்த விளம்பரங்கள் எல்லாம் தில்லி மக்கள் `மோடி அரசாங்கம்’ மீதான தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துவார்கள் என்கிற ரீதியில் அமைந்திருந்தன. மோடி, பிரதமராக இருக்கக்கூடிய அதே சமயத்தில் தில்லி மாநில முதல்வராகவும் இருப்பார் என்று தில்லி மக்களால் கூறப்படுவதாக அவர்களின் ஊதுகுழல் ஊடகங்களும் செய்திகளைக் கொட்டிக்கொண்டிருந்தன.
பிரதமர் மோடியும் தன்னுடைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், ‘நாடு என்ன உணர்கிறதோ அதனை தில்லி மக்கள் எதிரொலிப்பார்கள்’ என்று கூறினார். ஆனால், தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, தற்போது பாஜக தலைவர்கள் தில்லி தேர்தல்முடிவு மத்தியில் உள்ள மோடி அரசாங்கத்தின் மீதான கருத்துக்கணிப்பு அல்ல என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
ஆம் ஆத்மி சாதிக்குமா?
இத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் சுத்தமாகத் துடைத்தெறிந்து இருப்பதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி மீது மிகப்பெரும் அளவில் பொறுப்பு ஏற்றப்பட்டிருக்கிறது. தில்லி சட்டமன்றத்திற்கு வரையறுக்கப்பட்ட அளவில்தான் அதிகாரங்கள் உண்டு.
 எனவே,ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ள உறுதிமொழிகள் பலவற்றை நிறைவேற்றுவதில் அதிக அளவில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
தற்போதுள்ள நிலையில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை, நிலங்களைப் பயன்படுத்துதல், மின் விநியோகம் போன்று பல அம்சங்களில், தில்லி சட்டப் பேரவைக்கு வரையறுக்கப்பட்ட அளவிலேயே அதிகாரங்கள் உண்டு. இந்நிலைமையை மாற்றுவதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம் எந்தஅளவிற்கு உதவிடும் என்று சொல்வதற்கில்லை.
 இந்த அம்சங்களில் மத்திய அரசின்ஒத்துழைப்பை ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் எப்படிப் பெறப்போகிறது என்பதை வரவிருக்கும் காலம்தான் கூறும்.
இருப்பினும், தில்லி வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சி உதாசீனம் செய்ய முடியாத ஒரு விஷயத்தை முன் வைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிடில் அது அதிருப்தியை அதிகரித்திடவும், மயக்கத்தைப் போக்கிடவுமே இட்டுச்செல்லும்.
 இதனை பாஜகவும் பிரதமர் மோடியும் ஏற்கனவே மிகவும் கசப்பான முறையில் கண்டுவிட்டார்கள்.
`ஓவர் டைம்’ வேலை பார்த்த மோடி
ஆர்எஸ்எஸ்-பாஜக இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட கங்கணம் கட்டிக்கொண்டிருந்தன.
பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் அதிகநேரம் வேலை செய்தார்கள்.
தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகளைச் சரிசெய்திட கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார்கள். இது, ஆரம்பத்தில் மிகவும் நல்ல விஷயமாகவே அவர்களுக்குத் தோன்றியது.
ஆயினும், தேர்தல் நெருங்க நெருங்க பாஜகவை பீதி கவ்விப் பிடித்துக் கொண்டது.
தன்னுடைய 120 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 20க்கும் மேற்பட்ட கேபினட் அமைச்சர்களையும் பிரதமரையும் களத்தில் இறக்கியது. கடைசி நான்கு நாட்களில் மூன்று பேரணி-பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
கருப்புப் பணம் எங்கே?
ஆனால் அவரது உரையை மக்கள் நம்பவில்லை.
வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் `கருப்புப் பணம்’ முழுவதும் உடனடியாகத் திரும்பவும் நம் நாட்டிற்கே கொண்டுவரப்படும் என்றும், நாட்டிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் ரூபாய் வீதம் அவை பிரித்துக் கொடுக்கப்படும் என்றும் ஒன்பது மாதம் முன்பு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால் இந்தத் திசைவழியில் எதுவும் நகரவில்லை.
கருப்புப் பணத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதை அவர்கள் மறந்துவிட்டதுமட்டுமல்ல, வெளிநாடுகளில் உள்ள பணம் எவ்வளவு என்கிற ஒரு நியாயமான மதிப்பீட்டைக்கூட மோடி நிர்வாகத்தால் செய்ய முடியவில்லை.
அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர்ந்து கொண்டிருப்பது, தினசரி வாழ்க்கையில் இடைவிடாமல் எதிரொலிக்கிறது.
பிரதமரால் மிகவும் தம்பட்டம் அடித்துத் துவங்கப்பட்ட `ஜன்தன் யோஜனா திட்டம்‘ போன்ற திட்டங்களால் நாட்டு மக்கள் பலருக்கும் புதிய வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டன, உண்மைதான்.
ஆனால், அதற்குமேல் எவருக்காவது எந்தவிதமான உருப்படியான பிரயோசனமும் இருந்ததா?
பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை,
மன்மோகன் சிங் அரசாங்கம் கடைப்பிடித்த நாசகரச் செயல்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடக்கூடிய அளவிற்கு காங்கிரசைவிட வேகமாக, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பெரும் முதலாளிகள் கொள்ளைலாபம் ஈட்டக்கூடிய அளவிற்கு நாட்டின் கதவுகளை அகலத் திறந்துவிட்டிருக்கிறார்கள். நாட்டுமக்களின் சொத்துக்களான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்திட வெறித்தனமானமுறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வேகமாய் மறையும் மாயவித்தை
`மோடியின் மாயவித்தைகள்’ எல்லாம்மிகவும் வேகமாக மறைந்து கொண்டிருக்கின்றன.
 நாட்டை வளமாக்குவோம் என்று அவர்கள் கூறிய கோஷங்களும், அதே சமயத்தில் மக்கள் மத்தியில் பின்பற்றிய மதவெறி வன்முறைகளும் என இரண்டும் சேர்ந்து அவர்களுக்கு தேர்தல் வெற்றிகளை ஈட்டித்தந்தன.
ஆனால் நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பின்னர், அவர்கள் கூறிய வளர்ச்சி என்பது வெறும் மாயை என்பதும் மக்களுக்குப்புரியத் தொடங்கி விட்டது. இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுதுதல், புராணங்களை வரலாறாக பாவித்தல்,மறு மதமாற்ற நிகழ்வுகள் போன்றவை அவர்களின் உண்மையான நிகழ்ச்சிநிரலை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டன.
தில்லி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர், ஒரு பாஜக எம்பி, மதவெறித் தீயைவிசிறிவிடுவதில் பேர்போனவர், மகாத்மா காந்தியை தேசத்தின் தந்தை என்று கூறுவதுதவறு என்று பிரகடனம் செய்தார்.
இந்து மத வெறியன் நாதுராம் கோட்சேயை, தேசத்தின் ஹீரோவாக சித்தரித்து சிலை வைக்க வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ் பிரச்சாரத்தின் தொடர்ச்சிதான் இது.
இதனைத்தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் தலைவர், இந்தியா எப்போதும் ‘இந்து ராஷ்ட்ரமாகவே’ இருந்து வந்திருக்கிறது என்றும், நாட்டின் தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு அரசமைப்புச் சட்டத்தை மறுதலித்து, இந்து ராஷ்ட்ரத்தை நிறுவுவதற்கு இதுவே சரியான தருணம் என்றும் மீண்டும் கூறினார்.பாஜகவின் பிரச்சாரத்தில் சமீபத்தில் பிரச்சனையை ஏற்படுத்திய ஒன்று,
 இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உள்ள ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, அதிகாரப்பூர்வ அரசாங்க விளம்பரம்ஒன்றை வெளியிட்டது தொடர்பானதாகும்.
அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலிருந்து ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தை நீக்கப்பட்டதை, மதவெறியர்களின் ஓர் இழிவான நடவடிக்கையாகவே மக்கள் பார்க்கிறார்கள்.
மக்களின் சந்தேகத்தை உறுதி செய்யும் விதத்தில் பாஜகவினரும் “மதச்சார் பின்மை’’ குறித்து ஒரு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும், ஏனெனில் இந்த வார்த்தை 1975-77இல் அவசரநிலைக் காலத்தின்போது இந்திரா காந்தியால் அரசமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம் என்றும் கூறி, எனவேதான் அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்கிறோம் என்றும் பூசி மெழுக முயற்சித்தனர்.
இவற்றையெல்லாம் கவனித்த தில்லி மக்கள், தங்களது கோபக்கனலை வெளிப் படுத்தியிருக்கின்றனர்.
வீழ்ச்சிப் பாதையில் பாஜக
நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பின் நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜகவின் செல்வாக்கு படிப்படியாகக் குறையத் தொடங்கிவிட்டது.
எடுத்துக்காட்டாக, உத்தரப்பிரதேசம், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 50 சட்டமன்ற இடங்களுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெறும் 18 இடங்கள்தான் கிடைத்தன.
 இதே தொகுதிகளில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த மக்களவைத் தேர்தலின்போது பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 35.
இதை ஒப்பிட்டால், பாஜகவின் சரிவினை நன்கு தெரிந்து கொள்ள முடியும். அதேபோன்று உத்தரப்பிரதேசத்தில், மக்களவைத் தேர்தலின்போது பாஜகமாபெரும் வெற்றி பெற்ற ஏழு இடங்களை இடைத்தேர்தலில் அது இழந்துவிட்டது.
மக்களவைத் தேர்தலின்போதேகூட பாஜக 31 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது .
மகாராஷ்டிர மாநிலத்தில் 29 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று, ஆனால்123 இடங்களை வென்றும், ஹரியானாவில் வெறும் 33 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று ஆனால் பெரும்பான்மை இடங்களை வென்றும் ஆட்சி அமைத்தது.
ஜார்கண்டில் பாஜக மக்களவைத் தேர்தலின்போது பெற்ற வாக்குகளை விட 10 சதவீதம் குறைவாகவே பெற்றது.
பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களில் ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு இருந்த கோபமும், பலமுனைப் போட்டியும் நடைபெற்ற காரணங்களால்தான் குறைந்தவாக்கு சதவீதத்தைப் பெற்றபோதிலும்கூட பாஜகவால் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க முடிந்தது.
இவ்விரு காரணிகளும், தில்லி தேர்தலின்போது இல்லை. தில்லி மாநிலம் 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பிருந்தே மத்தியஅரசின் நேரடி ஆட்சியின் கீழ்தான் இருந்தது.
கூடுதலாக, மோடி அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் கோபாவேசம் அதிகரித்துக் கொண்டிருந்ததையும் வலுவானமுறையில் காண முடிந்தது. தேர்தல் பிரச்சாரக் காலங்களில் பாஜக அறிவித்த படாடோபமான வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை என்கிற உண்மை மக்களை பாஜக ,மோடியின் சுய உருவத்தைகாண வைத்து விட்டது
                                                          0பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்           .         (பிப்ரவரி 15, 2015)
=========================================================================

மோடி அரசாங்கம் “மதச்சார்பின்மை” என்ற வார்த்தையை உள்ளடக்கியுள்ள அரசமைப்புச் சட்டத்தின் கீழ்தான் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டது. இப்போது அந்த வார்த்தையை நீக்க வேண்டும் என்று சொல்வது, இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்துகொண்டதையே மறுதலிப்பதற்கு நிகரான செயலாகும்.
மேலும், அக்கட்சியின் தலைவர்களான வாஜ்பாயும், அத்வானியும், இந்திராகாந்தியால் அரசமைப்புச் சட்டத்தின் 42வது திருத்தத்தின்கீழ் கொண்டுவரப்பட்ட, அவசரகால எதேச்சதிகாரக் கட்டமைப்பை நீக்குவதற்காக, தாங்கள் மத்திய கேபினட் அமைச்சர்களாக இருந்த சமயத்தில், அரசமைப்புச் சட்டத்தின் 44வது திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள்.

அவ்வாறு அவர்கள் திருத்தம் கொண்டுவருகையில் ஒரேயொரு விதிவிலக்கை அவர்கள் செய்தார்கள்.
அதுதான் “மதச்சார்பின்மை” என்கிற வார்த்தையை நீடிக்கச் செய்ததாகும். ஏனெனில், அன்றைய ஜனதா அரசாங்கம் அந்த வார்த்தை நீடிக்க வேண்டும் என்றும் அது மிகச்சரியாகவே கூறப்பட்டிருக்கிறது என்றும் பார்த்தது. அப்போது கேபினட் அமைச்சர்களாக இருந்த இன்றைய மூத்த பாஜக தலைவர்கள் இதனை எதிர்க்கவும் இல்லை, ஆட்சேபிக்கவும் இல்லை. ஆனால் இன்று, ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரங்கள் தங்களுடைய முந்தைய நிலைப்பாட்டிலிருந்து வெளிப்படையாகவே விலகிச் சென்றுவிட்டன.

நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் 25 முதல் 28 பிரிவுகளின் கீழான `அடிப்படை உரிமைகள்’, நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் `மதச் சுதந்திரத்தை’ வழங்குகிறது.
அரசமைப்புச் சட்டத்தின் 25வது பிரிவு, “ஒருவர் தன்னுடைய மனச்சான்றின்படி எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளவோ, நடைமுறைப்படுத்தவோ மற்றும் பிரச்சாரம் செய்யவோ உரிமையையும் சுதந்திரத்தையும்” வழங்கியிருப்பதன் மூலம் இந்தியக் குடியரசின் மதச்சார்பின்மை என்பதன் சாரத்தை முழுமையாக உள்ளடக்கி இருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தின் திருத்தப்பட்ட முகப்புரையில் “மதச்சார்பின்மை” என்கிற பதம், இதனை மீண்டும் உறுதிப்படுத்தி மட்டுமே இருக்கிறது. ஆயினும், இப்போது பாஜக இதனை மதவெறியைக் கிளப்பிட மற்றொரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

அரசியல் நிர்ணயசபை விவாதங்களின்போது, எச்.வி. காமத், முகப்புரையில் “கடவுளின் பெயரால்” என்ற சொற்றொடர் சேர்க்கப்பட வேண்டும் என்று திருத்தத்தைக் கொண்டுவந்தபோது,
அரசியல்நிர்ணயசபை உறுப்பினர்கள் கிட்டத்தட்ட இருகூறுகளாகப் பிளவுபட்டு நின்றார்கள். இவர் கொண்டுவந்த திருத்தம் 68-41 என்ற விதத்தில் தோற்கடிக்கப்பட்டது. “கடவுளின் பெயரால்” என்ற சொற்றொடரை இணைப்பது என்பது ஒருவரது மதச்சுதந்திரத்திற்கு ஒவ்வாதது என்றும், அடிப்படை உரிமைகளில் வழங்கப்பட்டுள்ள உத்தரவாதத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் இதனை எதிர்த்தவர்கள் தரப்பில் வலுவாக வாதிடப்பட்டது.
மதச் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வரைவு அரசமைப்புச் சட்டத்திற்கு வந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், “அரசியல் நிர்ணசபை இத்தகைய பாதுகாப்பு அம்சங்களை மிகவும் புத்திசாலித்தனமாக செய்திருக்கிறது” என்று கூறினார்.
வரலாறு என்ன?
சுதந்திர இந்தியாவில், பாபர் மசூதி இடிக்கப்பட்டபின்னர், அப்போது உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாசலப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சியிலிருந்த பாஜக அரசாங்கங்கள், நாட்டில் ஆர்எஸ்எஸ், விசுவ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் விதித்திருந்த தடையை அமல்படுத்த மறுத்தன.
இதன் காரணமாக இம்மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்தது. அதனைத் தொடர்ந்து இம்மாநில அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு இம்மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. இவற்றிற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. உச்சநீதிமன்றம் இவ்வழக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைத்ததுடன், அரசமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவு துஷ்பிரயோகம் செய்யப்படுவது சம்பந்தமான புகழ்பெற்ற எஸ்.ஆர்.பொம்மை வழக்கையும் சேர்த்துக்கொண்டு,
கூட்டாக விசாரணையை மேற்கொண்டது.
ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வாயம் வழக்கு விசாரணையை மேற்கொண்டது. இந்த அமர்வாயமானது, எந்தவொரு மாநில அரசாங்கமும் எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் பின்பற்ற முடியாது என்று தீர்ப்பளித்ததுடன், “மதச்சார்பின்மை” என்றால் என்ன பொருள் என்பதையும் விளக்கமாகத் தெரிவித்தது.
அரசியலும், மதமும்கலக்ககே கூடா தவை.
மதச்சார்பின்மை என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்று என்று மீண்டும் வலியுறுத்திக் கூறியதுடன், மாநில அரசின் விவகாரங்களில் மதத்திற்கு எந்த இடமும் கிடையாது என்றும்,
அரசமைப்புச் சட்டம் மதத்தை அரசு அதிகாரத்துடன் கலப்பதை அங்கீகரிக்கவும் இல்லை, அனுமதிக்கவும் இல்லை என்றும் இரண்டையும் தனித்தனியேதான் வைத்திருக்க வேண்டும் என்றும், அரசியலும் மதமும் கலக்கப்பட முடியாதவை என்றும் திட்டவட்டமான வார்த்தைகளில் தெரிவித்தும் இருந்தது.
எந்தவொரு மாநில அரசாங்கமாவது அரசமைப்புச் சட்டம் வகுத்தளிக்கப்பட்டுள்ள கட்டளைகளுக்கு எதிராக செயல்படுமானால்- மதச்சார்பற்றக் கொள்கைகளைப் பின்பற்றாவிட்டால் அல்லது மதச்சார்பின்மை அல்லாத நடவடிக்கைகளை (அதாவது மதவெறி நடவடிக்கைகளை) மேற்கொண்டால்,
அந்த மாநில அரசு, அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகவே கருதவேண்டும் என்றும் கூறியிருந்தது. எனவே, உச்சநீதிமன்றமானது அப்போது ஆட்சியிலிருந்த உத்தரப்பிரதேச மாநில அரசு உட்பட பாஜகவின் அனைத்து மாநில அரசுகளையும் டிஸ்மிஸ் செய்தது சரியென்றே தன்னுடைய தீர்ப்பின்மூலம் உறுதி செய்தது.
========================================================================
Sathya Moorthy KDream Achievers...!
13 மணிகள் ·
ஏன் இந்தியா எப்போதும் பிரச்சனையிலே இருக்கு.
மக்கள் தொகை: 110 கோடி
இதில் 9 கோடி பேர் ஓய்வு பெற்றவர்கள்
30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(ரென்டுபேருமே வேலை செய்றதில்லை)
1 கோடி IT ஆளுங்க
(அவங்க என்னைக்கு இந்தியாக்கு உழைச்சாங்க?)
25 கோடி பேர் பள்ளியில படிப்பவர்கள்
1 கோடிபேர் 5வயசுக்கும் கீழானவர்கள்
15 கோடி பேர் வேலை தேடுவோர்
1.2 கோடி பேர் நோயால் மருத்துவமனையில் இருப்போர்
குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு (ஒரு புள்ளி விபரத்தின்படி) 79,99,998 பேர் ஜெயிலில் கம்பி எண்ணுகின்றனர்
மிச்சம் இருப்பது நீங்களும் நானும்
நீங்க எப்ப பார்த்தாலும் what's app, Facebookல பிஸி
அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்..!!
பிடிக்கவில்லை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?