அறிவுத்திறன் வீழ்ச்சி



டிமென்ஷியா  என்னும்  அறிவுத்திறன் வீழ்ச்சி.

வயதாக வயதாக ஞாபக சக்தி குறைந்துகொண்டே போகுமோ?

கட்டாயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தகவல்களைக் கூட மறந்து தொலைத்து விடுவோமோ?

என்று  ஒரு பயம்நடுத்தரவயதை எட்டிய அனைவருக்குமே மனதுக்குள் படபடத்துக் கொண்டிருக்கும்.
ஒருவேளை அதுதான்  அறிவுத் திறன் வீழ்ச்சியோ?

முதலில் பொதுவான ஞாபக மறதிக்கும், அறிவுத் திறன் வீழ்ச்சிக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

ஞாபக மறதி அதிகமாக ஏற்பட்டுள்ள ஒருவர்  அறிவுத் திறன் வீழ்ச்சியால்  பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில்லை.

அதேசமயம், அறிவுத்திறன் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நிச்சயம் ஞாபக மறதி இருக்கும். ஒருவருக்கு அதிக அளவில் ஞாபக மறதி உண்டானால் அவர் அறிவு திறன் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

மூளை சோதனைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
  அறிவுத்திறன் வீழ்ச்சியாக இருந்தால் மூளையில் உள்ள ரசாயனப் பொருள்கள் குறைந்து, திசுக்கள் அழிந்திருக்கும்.

 ஞாபக மறதி என்றால் திசுக்கள் அழிவதில்லை. 
மூளையில் உள்நரம்பு செல்கள் மெதுவாகச் செயல்படுகின்றன. 
அவ்வளவு தான்.

அறிவுத் திறன் வீழ்ச்சி யால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நினைவாற்றல் இழப்பை உணராதவர்களாக இருப்பார்கள். அவர்கள் நடவடிக்கையில் சில மாறுதல்களும் ஏற்படலாம். அதுவரை சாந்த சொரூ பியாக இருந்தவர், திடீரென்று காச் மூச் என்று தகாத வார்த் தைகளால் யாரையாவது திட்டத்தொடங்கலாம். 

இப்படி செயல்பட்டால் அது  அறிவுத்திறன் வீழ்ச்சியாக இருக்க வாய்ப்பு உண்டு.

அறிவுத்திறன் வீழ்ச்சி  ஏன் ஏற்படுகிறது?

வயதோடு தொடர்புடைய ஒரு சிக்கல்தான் அறிவுத்திறன் வீழ்ச்சி நோய். அதாவது அதிக ஆண்டுகள் ஒருவர் உயிரோடு இருந்தால் அவர் அறிவுத்திறன் வீழ்ச்சி நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.

65 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுகொண்டவர்களில் 5 சதவீதத்தினரும், 
80 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுகொண்டவர்களில் 20 சதவீதத்தினரும், 100 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயது கொண்டவர்களில் 50 சதவீதத்தினரும் அறிவுத்திறன் வீழ்ச்சி நோயின் ஏதோ ஒரு வடிவத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வாழ்க்கைமுறையின் காரணமாக உண்டாகக்கூடிய நோய்களான மாரடைப்பு, நீரிழிவு நோய், உடல்பருமன், அதிக ரத்த அழுத்தம் போன்றவற்றின் காரணமாகவும் அறிவுத்திறன் வீழ்ச்சி நோய் உருவாகும் வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. 

அறிவுத்திறன் வீழ்ச்சி நோயின் மிக சகஜமான, தொடக்ககால அறிகுறி என்பது நினைவாற்றல் குறைவதுதான்.
முக்கியமாக சமீபத்திய குறுகியகால நினைவுகளை மறந்துவிடுதல் பொதுவான மறதியை கொண்டவர்கள், தாங்கள் மறந்தது தொடர்பான பிற தகவல்களை நினைவு வைத்திருப்பார்கள்.

எதை செய்கிறோம் என்று யோசிக்காமலேயே தினமும் பல செயல்களை நாம் வெகு இயல்பாகச் செய்கிறோம். 

அறிவுத்திறன் வீழ்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுபோன்ற செயல்களில் கூட தடுமாற்றம் ஏற்படும். அறிவுத்திறன் வீழ்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு எந்த உடைக்கு பிறகு எதை அணியவேண்டும் என்பதிலோ, ஒரு உணவை எப்படி தயாரிப்பது என்பதிலோ கூட மறதி ஏற்படும்.

சரியான வார்த்தைகள் நினைவுக்கு வராமல் நாம் எல்லோருமே எப்போதாவது திண்டாடியிருப்போம். ஆனால் அறிவுத்திறன் வீழ்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவர் மிக எளிமையான வார்த்தைகளை கூட அடிக்கடி மறந்துவிடுவார்.

அதற்குப் பதிலாக பழக்கமில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தி தனது பேச்சையும் எழுத்தையும் பிறரால் அறிந்துகொள்ள முடியாதபடி செய்வார். 

இன்றைக்கு என்ன கிழமை என்பதையோ தான் எங்கே சென்றுகொண்டி ருக்கிறோம் என்பதையோ நாம் சில சமயம் மறந்துவிடுவது உண்டு.
ஆனால் தனக்கு மிக பழக்கமான சூழலைக்கூட அறிவுத்திறன் வீழ்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவர் மறந்துவிடுவார். 
ஓர் உரையாடலில் பங்குகொள்வது, செலுத்து வேண்டிய கடன்களை உரிய நாள்களில் செலுத்துவது போன்றவற்றை நினைவுகொள்வதும், அறிவுத்திறன் வீழ்ச்சி நோயாளிகளுக்கு கடினமானதாகவே இருக்கும்.

அவ்வப் போது எதற்காகவாவது நாம் வருத்தப்படுவோம் அல்லது உம்மென்று இருப்போம். ஆனால் அறிவுத்திறன் வீழ்ச்சி நோய்க்காரர் தன் வழக்கத்துக்கு மாறாக மிக அதிகமான அளவில் அல்லது மிகவும் குறைவான அளவில் உணர்ச்சி வசப்படுவார். 
தான் இதற்குமுன் வழக்கமாக நடந்து கொள்ளும் விதத்திலிருந்து அறிவுத்திறன் வீழ்ச்சி நோயால் பாதிக்கப்பட்டவர் மிகவும் மாறுபட்டு நடந்து கொள்ளக்கூடும்.

நினைவாற்றல் மிகக்குறையும் சந்தர்ப்பங்களில் சந்தேகம், கோபம், மனச்சோர்வு, கவலை, பதற்றம் போன்ற உணர்வு களால் பரிதவிப்பார்.

 அது தொடர்பாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். மூளையில் ஏன் இந்த ரசாயனப் பொருள்கள் குறைய வேண்டும். 
இதற்கு பல காரணங்கள் உண்டு.

  அறிவுத் திறன் வீழ்ச்சிக்கு மூளையில் சில ரசாயனங்கள் குறைந்துவிடுவதும் ஒரு காரணம் என்றபோது, அத்தகைய ரசாயனப் பொருள்களை மருந்து மாத்திரைகள் மூலம் அதிகப்படுத்தி பிரச்சினையை தீர்க்கலாம்.

===========================================================================

மாமாங்க குள அற்புதம்

புராண மரியாதைக்காரன் கேள்வி: அய்யா, சுயமரியாதைக்காரரே கும்பகோண மாமாங்க குளத்தில் ஒரு அற்புதம் நடக்கின்றதே அதற்கு சமாதானம் சொல்லும் பார்ப்போம். சுயமரியாதைக்காரன்

சுயமரியாதைக்காரன் பதில்: என்ன அற்புதமய்யா?

பு.ம:- மாமாங்கக்குளம் எவ்வளவு சேறாய் இருந்த போதிலும்,  கூழாய் இருந்தபோதிலும் அதில் அவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே அந்த குளத்துத் தண்ணீர் ஏன் குறைவதில்லை? இதற்கு பதில் சொல் பார்ப்போம்.
சு.ம:- இது ஒரு நல்ல புத்திசாலித்தனமான கேள்விதான், இதன் காரணம் சொல்லுகிறேன், சற்று தயவு செய்து கேட்க வேண்டும். அதாவது மாமாங்க குளத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் முனிசிபாலிட்டியார் இரைத்து விடுவார்கள். பிறகு ஒரு இரண்டு அடி உயரத்  தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும் அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள்.
ஜனங்கள் தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேறு, ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்புமாதிரி அழுக்கு நிறமாக ஆகிவிடும். குளிக்கிற ஜனங்களுடைய உடம்பு, துணிகள் எல்லாம் சேற்று வேஷக்காரன் போல் கருப்பாக ஆகிவிடும்.
இந்த நிலையில் குளிக்கும் ஒவ்வொரு நபரும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீரை தனது வேஷ்டி நனையும் அளவுக்கு குளத்தைவிட்டு வெளியில் எடுத்துக் கொண்டு போகிறான் என்பது வாஸ்த்தவம் தான். ஆனால் அதற்கு பதிலாக ஒவ்வொரு நபரும் ஆண் பெண் அடங்கலும் அக்குளத்தில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் விட்டு விட்டுத்தான் போகிறார்கள்.

பு-ம:- அதெப்படி தண்ணீர் விட்டு விட்டுப் போகிறார்கள்? நமக்கு அது புரியவில்லையே அவர்களிடம் தண்ணீர் ஏது?

சு.ம: - இதுவும் நல்ல கேள்வி தான், பதில் சொல்லுகிறேன், மாமாங்க காலத்தில் கூட்டம் அதிகம். தெருக்களில் எங்கும் பக்கத்தில்மறைவே
இடம் இருக்காது. ஒரு மனிதன் வீட்டை விட்டுப் புறப்பட்டால் மாமாங்க குளத்துக்கு போவதற்குள் நசுங்கி பஜ்ஜியாய் விடுவான். இதன் மத்தியில் அவன் மூத்திரம் பேய வேண்டுமானால் வழியில் காலோடு பேய்ந்துகொள்ள வேண்டும் அல்லது குளத்துக்கே போய் ஆக வேண்டும். ஆகவே யாரும் காலோடு பேய்ந்து கொள்ள சம்மதிக்க மாட்டார்கள்.
எப்படியாவது அடக்கி, அடக்கி அவசரமாய் குளத்துக்குப் போகும்வரை அடக்கிக் கொண்டுதான் போவார்கள். குளத்தில் இறங்கி துணியை நனைத்துக் கொண்டவுடன் இவர்களை அறியாமலே மூத்திரம் வந்துவிடும்.

அந்த மூத்திரம் மாமாங்க தீர்த்தத்துடன் தீர்த்தமாய் இரண்டறக் கலந்துவிடும்.

 அப்போது அவர்களால் செலவாகும் தண்ணீர் கிட்டத்தட்ட சரிசமமாகவே பூர்த்தியாகிவிடும். 

ஆகவே வரவும், செலவும் சரியாகிவிடும்.

பு.ம;- அந்தப்படி அந்தக்குளத்தில் மூத்திரம் சேருமானால் தண்ணீரில் ஒருவித நாற்றமிருக்காதா?

சு.ம:- நாற்றமிருக்கத்தான் செய்யும். தீர்த்தத் தண்ணீரை முகந்து பார்ப்பது மகா பாவம் என்று அவர்களுக்குச் சொல்லி வைக்கப்பட்டிருக்கின்றதல்லவா? ஆதலால் யாரும் முகந்து பார்க்கமாட்டார்கள். ருசியும் பார்க்க மாட்டார்கள்.
ஏனென்றால் அது அவ்வளவு அழுக்காகவும், குழம்பாகவும் இருக்கும். அன்றியும் இன்னொரு விஷயம் என்னவென் னறால் முனிசிபாலிட்டியார் குளத்துத் தண்ணீரில் கெந்தகப் பொடிபோட்டு வைத்திருக்கிறார்கள்.
ஆதலால் மூத்திர நாற்றம் எது? கந்தக நாற்றம் எது? என்று சுலபத்தில் கண்டு பிடிக்கவும் முடியாது. ஆகவே சிலவுக்கும், வரவுக்கும் தானாகவே சரியாய் போய்விடும். இதற்குக் கடவுள் அற்புதம் ஒன்றும் தேவையில்லை.

"குடியரசு" இதழ் :26.02.1933
=========================================================================
=



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?