தீர்ப்புகள் திருத்தப்படலாம்?

 'ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின், மேல் முறையீட்டு மனு விசாரணையில், அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது செல்லாது; அவரின் வாதங்களை கர்நாடக ஐகோர்ட் ஏற்கக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 
மேலும், அன்பழகன் தரப்பு எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. அதனால், ஜெ., வழக்கில், கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு வழங்கும் தேதி நெருங்கியுள்ளது. 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட, நான்கு பேருக்கு எதிரான, சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானார். இவ்வழக்கில், ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அவருடன் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்கு, நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், தலா, 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
 இந்த தீர்ப்பை எதிர்த்து, ஜெயலலிதா உட்பட, நால்வரும், கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்தது. 
அப்போதும்,தன்னிச்சையாக  பவானி சிங்கே, அரசு வழக்கறிஞராக ஆஜரானார்.தன்னை தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்புத்துறையினர் நியமித்துள்ளதாக சொல்லிக்கொண்டார்.ஆனால் இதை கர்நாடக அரசும்,திமுக செயலளார் அன்பழகனும் கடுமையாக எதிர்த்த போதும் நீதிபதி குமாரசாமி ஏற்றுக்கொள்ளாததால் பவானிசிங்கே வாதாடி முடித்தார்.ஆனால் அன்பழகன் இதை எதிர்த்து சிறப்பு நீதிமன்றம்,கர்நாடக உயர் நீதிமன்றம்,உச்ச நீதிமன்றம் என்று சென்று பவானியின் நியமனத்தை எதிர்த்தார்.
இந்த வழக்கில், விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. 
இதற்கிடையில், 'ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இருந்து, பவானி சிங்கை நீக்க வேண்டும்' எனக் கோரி, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் மதன் லோகூர், பானுமதி அடங்கிய அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. 'அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது செல்லாது' என, நீதிபதி மதன் லோகூரும், 'செல்லும்' என, நீதிபதி பானுமதியும், உத்தரவு பிறப்பித்ததால், வழக்கு, மூன்று நீதிபதிகள் அமர்வின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. 
இந்த நீதிபதி பானுமதி ஜெயலலிதாவுக்கு மிகவும் வேண்டியவர் ,அவரை புரட்சித்தலைவி என்று சென்னை விழாவில் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதன்படி, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்லா சந்திர பந்த் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய, சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், அன்பழகன் வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. இரு நாட்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பின், நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, மூன்று நீதிபதிகள் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்ததாவது: 
ஜெயலலிதா உட்பட, நான்கு பேருக்கு எதிரான, சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு, அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது தவறானது; அவரின் நியமனம் செல்லாது. மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு, அரசு வழக்கறிஞரை நியமிக்க, தமிழக அரசுக்கு அதிகாரமில்லை; கர்நாடக அரசுக்கே அதிகாரம் உள்ளது. பவானி சிங்கை, அரசு சிறப்பு வழக்கறிஞராக, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை நியமித்தது சரியானதல்ல. கர்நாடக அரசு தான், வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். எனினும், இந்த வழக்கின் விசாரணை, கர்நாடக ஐகோர்ட்டில் முடிவடைந்து விட்டதால், மறுவிசாரணை நடத்த வேண்டிய தேவையில்லை. அதேநேரத்தில், பவானி சிங்கின் வாதங்களை, கர்நாடக ஐகோர்ட் ஏற்கக் கூடாது. பவானி சிங் நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அன்பழகன், தன் தரப்பு வாதத்தை, 90 பக்கங்களுக்கு மிகாமலும், கர்நாடக அரசு தன் தரப்பு வாதத்தை, 50 பக்கங்களுக்கு மிகாமலும், எழுத்து மூலமாக இன்றைக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கும் முன், இரு தரப்பினரும், எழுத்து மூலமாக சமர்ப்பிக்கும் வாதங்களை, கர்நாடகஐகோர்ட் பரிசீலிக்க வேண்டும். அதன் பின், தீர்ப்பு வழங்க வேண்டும். அதேநேரத்தில், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க, கர்நாடக ஐகோர்ட்டிற்கு, மே, 12ம் தேதி வரை விதிக்கப்பட்ட தடையும் விலக்கிக் கொள்ளப்படுகிறது.


மேலும், ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில், கர்நாடக ஐகோர்ட் நீதிபதி தீர்ப்பு வழங்கும் முன், ஊழல் என்ற அழிவு சக்தியின் பாதிப்புகள், குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் புரிந்துள்ள குற்றங்களின் தன்மை போன்றவற்றை, விரிவாக மதிப்பீடு செய்தும், ஆதாரங்களை தீவிரமாகப் பரிசீலித்தும், தீர்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

பவானி சிங் நியமனம் செல்லாது என, சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு, ஜெயலலிதாவுக்கு, ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதேநேரத்தில், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீது, கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு வழங்கும் தேதியும் நெருங்கி உள்ளது. 
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தரப்பினர், தங்களின் எழுத்து பூர்வமான வாதத்தை, கர்நாடகா ஐகோர்ட்டில் சமர்ப்பித்தனர்.ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு விசாரணை, கர்நாடகா ஐகோர்ட்டில், நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்த போது, தங்களையும், மூன்றாவது பிரதிவாதியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து, 'தங்களை, மூன்றாவது பிரதிவாதியாகச் சேர்க்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் அன்பழகன் தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த, சுப்ரீம் கோர்ட்டின் மூன்று நீதிபதிகள் அமர்வு, 'அன்பழகன் தரப்பினர், தங்களின் எழுத்து பூர்வமான வாதத்தை, கர்நாடக ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கலாம்' என, உத்தரவிட்டது,இதையடுத்து, 81 பக்க எழுத்து பூர்வ வாதத்தை அன்பழகன் வழக்கறிஞர்கள் தாமரை செல்வன், குமரேசன், சரவணன், பாலாஜி சிங், நடேசன் ஆகியோர், கர்நாடக ஐகோர்ட் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று சமர்ப்பித்தனர்.தங்களின் வாதங்களை ஏற்றுக்கொண்டு, சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்து, நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.இந்த நகலை, ஜெயலலிதா வழக்கறிஞர்கள் கருப்பையா, பன்னீர்செல்வம், முத்துகுமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அன்பழகனின் எழுத்து பூர்வ வாதம், நீதிபதி குமாரசாமிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, அரசு தரப்பில், 48 மணி நேரத்துக்குள், தன் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அரசு தரப்பில், பவானி சிங் வாதத்தை, எடுத்துக் கொள்ளக்கூடாது என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால், கர்நாடக அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் ரவி வர்ம குமார், தன் எழுத்து பூர்வ வாதத்தை, இன்று, ஐகோர்ட்டில் சமர்ப்பிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
:கர்நாடக உயர் நீதிமன்றத்தில், அன்பழகன் தரப்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப்பூர்வ வாதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் (1991 - 96), வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான வருமான வரி கணக்கு, அப்போது தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, அந்த காலகட்டத்தில் குவிக்கப்பட்ட சொத்துகள், சட்டப்படியாக வந்தது அல்ல. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின், வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். சட்ட விரோதமாக குவித்த சொத்துகளை கணக்கில் கொண்டு வருவதற்காக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். வருமான வரி கணக்கை, வருமான வரி மேல்முறையீட்டு ஆணையம் ஏற்றுக் கொண்டாலும், குற்றப் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது.சொத்துகள் வாங்குவதற்காக பயன்படுத்தப்பட்ட நிதி, நேரடியாக ஜெயலலிதாவிடம் இருந்தோ அல்லது ஜெயலலிதா, சசிகலாவின் கூட்டுக் கணக்கில் இருந்தோ வந்துள்ளது. சொத்துகளை வாங்க, இவர்கள் துவங்கிய நிறுவனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான சொத்துகள், 'ரிவர்வே அக்ரோ, மிடோ அக்ரோ, லெக்ஸ் பிராப்பர்ட்டி, ராம்ராஜ் அக்ரோ மில், இந்தோ டோஹா கெமிக்கல்ஸ், சைனோரா என்டர்பிரைசஸ்' ஆகிய நிறுவனங்களின் பெயர்களில் வாங்கப்பட்டுள்ளன.இந்த நிறுவனங்கள் எதுவும், கம்பெனி பதிவாளர் முன், வருமான வரி அதிகாரிகள் முன், கணக்கு தாக்கல் செய்யவில்லை. நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தியது, அந்த நிறுவனங்களுக்கு சொத்துகள் இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல.சொத்துகள் முடக்கப்பட்ட பின், அந்த சொத்துகள் எல்லாம், நிறுவனங்களின் பெயர்களின் பதிவு செய்யப்பட்டது என்றும், அவற்றுக்கு தான் சொந்தம் என்றும், இந்த சொத்துகளை, ஜெயலலிதாவின் பினாமி சொத்துகள் எனக் கூற முடியாது என்றும் கூறுகின்றனர்.பணம் எப்படி வந்தது என்பதை பார்க்கும் போது, அதற்கு ஆதாரம் ஜெயலலிதா தான் என்பதை வெளிப்படுத்தும். 'நமது எம்.ஜி.ஆர்.,' பத்திரிகை கணக்கில் இருந்து வந்த பணத்தைக் கொண்டு, சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. சொத்துகளை வாங்க, பல்வேறு கணக்குகள் மூலம் வந்த நிதியை பார்க்கும் போது, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு உள்ள நெருங்கிய தொடர்பு, சதி வெளிப்படும்.இந்த எழுத்துப்பூர்வ வாதத்தை பரிசீலித்து, நான்கு பேருக்கும், தனி நீதிபதி வழங்கிய தண்டனை மற்றும் அபராதத்தை, உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அந்த எழுத்துப்பூர்வ வாதத்தில் கூறப்பட்டுள்ளது.
பார்க்கலாம் நீதிபதி குமாரசாமி ஏற்கனவே எழுதி தயார் செய்த தீர்ப்பை வாசிக்கிறாரா?அல்லது உச்ச நீதிமன்ற மூவர் அமர்வு அறிவுரைப்படி புதிதாக தீர்ப்பை தயார் செய்கிறாரா ?என்று.

=================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?