சின்ன மோடி! பெரிய மோடி!!

"ஊழலை ஒழிக்க வந்த உத்தமர் என்று பீற்றிக் கொள்ளும் மோடியின் ஆட்சி, கருப்புப் பண கிரிமினல் லலித் மோடியைக் காப்பாற்றினால்தான் கட்சி, ஆட்சி இரண்டின் மானத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நகைக்கத்தக்க நிலையில் தடுமாறுகிறது."
லித் மோடி – சுஷ்மா சுவராஜ், லலித் மோடி – வசுந்தரா ராஜே உறவு விவகாரங்களில் அம்பலத்துக்கு வந்திருக்கும் திரைமறைவு இரகசியங்கள் பா.ஜ.க.வோடு, ஊழலுக்கு எதிரானவராகவும், வலிமையான தலைவராகவும் முன்நிறுத்தப்பட்ட நரேந்திர மோடியின் டவுசரையும் உருவிவிட்டன. லலித் மோடி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே – இந்த மூவரில் யார் மீது நடவடிக்கை எடுத்தாலும், அது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொரிந்து கொண்டது போன்ற நிலையை உருவாக்கிவிடும் என்ற நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுவிட்ட மோடி, வழக்கமாக காது வரை கிழியும் தன் வாய்க்குப் பூட்டுப்போட்டு “மன்மோகன் சிங்” ஆகிவிட்டார். அவரது அமைச்சர்களெல்லாம் ஊடகங்களின் கண்ணில் படாமல் தப்பித்து ஓடுகின்றனர்.
லலித் மோடி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே.
அப்பாடக்கராக முன்நிறுத்தப்பட்ட மோடியின் டவுசரை உருவிய மும்மூர்த்திகள் : லலித் மோடி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே.
“பொதுப் பணத்தை நானும் தின்னமாட்டேன், மற்றவர்களையும் தின்னவிட மாட்டேன்” என்று ஊழலுக்கு எதிராக உதார்விட்டு ஆட்சிக்கு வந்தவர் மோடி. ஆனால், அவரது அமைச்சரே – சுஷ்மா சுவராஜ் – பல்லாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு, மோசடிகளில் ஈடுபட்ட குற்றவாளிக்கு நெருக்கமாக இருந்து உதவி புரிந்திருக்கிறார். “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை நூறு நாட்களில் மீட்டுக் கொண்டு வருவோம்” எனச் சவடால் அடித்த மோடி, கருப்புப்பணக் குற்றவாளியான மோடியைக் காப்பாற்றுவதா, தனது அமைச்சர்களைக் காப்பாற்றுவதா, காற்றுப் போன பலூனாகிவிட்ட தனது இமேஜைக் காப்பாற்றுவதா என்று தெரியாத நகைக்கத்தக்க கேவலமான நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.
***
லித் மோடியின் மீது 16 பொருளாதாரக் குற்றங்கள் நிலுவையில் இருப்பதால், அவரது கடவுச்சீட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் (காங்கிரசு ஆட்சியின் போது) முடக்கிவைத்திருப்பதை எதிர்த்து லலித் மோடி தொடுத்த வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கின்ற அதே நேரத்தில், தனது அமைச்சகத்தின் நிலைக்கு எதிராகவும், வெளியுறவுத் துறை செயலர் சுஜாதா சிங்கிற்குத் தெரியாமலும், லலித் மோடிக்கு ஆதரவாக பிரிட்டிஷ் அரசிடம் பரிந்துரை செய்திருக்கிறார். மேலும், இந்தியாவிற்கான பிரிட்டன் தூதரைத் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து லலித் மோடிக்கு உதவும்படிக் கோரியிருக்கிறார். இது குறித்து நிதியமைச்சருக்கும் சுஷ்மா தெரிவிக்கவில்லை. காரணம், சுஷ்மாவுக்கும் அருண் ஜெட்லிக்குமிடையிலான கோஷ்டி தகராறு மட்டுமல்ல, ஐ.பி.எல். இலிருந்து லலித் மோடியை விரட்டிய முக்கிய எதிரி அருண் ஜெட்லி என்பதும்தான்.
லலித் மோடி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே.லலித் மோடிக்கு உதவியது குறித்து கடந்த ஒரு வருடமாக வாய் திறக்காமலிருந்த சுஷ்மா, பூனைக்குட்டி வெளியே வந்தவுடன், “லலித் மோடி மனைவிக்கு போர்ச்சுகல் மருத்துவமனையில் புற்றுநோ அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததாகவும், அதற்கு லலித் மோடி மருத்துவமனைக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டியிருந்ததால், மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவியைச் செய்ததாகவும்” விளக்கம் அளித்திருக்கிறார். ஆனால், இந்த விளக்கம் வெளிவந்தவுடனேயே இது பொய் என்பது அம்பலமாகிவிட்டது.  மனைவியின் அறுவை சிகிச்சைக்கு கணவனின் கையெழுத்து தேவை என்று போர்ச்சுகல் நாட்டு சட்டங்கள் கூறவில்லை. கையெழுத்துப் போடுபவர்கள் அதனை இணையத்தின் வழியாக அனுப்பலாம் என்றும் அந்நாட்டின் விதிகள் அனுமதிக்கின்றன என்ற விவரங்களை ஊடகங்கள் அம்பலப்படுத்தி விட்டன. மேலும் லலித் மோடிக்கு சுஷ்மா செய்திருக்கும் ‘மனிதாபிமான’ உதவியின் விளைவாக, போர்ச்சுகலுக்கு சென்று வருவதற்கு மட்டுமல்ல, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உலகின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று வருவதற்கான பயண ஆவணம் பிரிட்டிஷ் அரசால் லலித் மோடிக்கு வழங்கப்பட்டிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது.
மனைவியின் அறுவை சிகிச்சை நடந்ததாகக் கூறப்பட்ட மூன்றாவது நாளே, போர்ச்சுகலுக்கு அருகிலுள்ள இபிஸா என்ற உல்லாசத் தீவில் தனது குடும்பத்தாரோடு கேளிக்கை விருந்தைக் கொண்டாடியிருக்கிறார் லலித் மோடி. இதுமட்டுமல்ல, இங்கிலாந்திலிருந்து வெளியேற அனுமதி கிடைத்த இந்த ஓராண்டுக்குள் லலித் மோடி உலகெங்குமுள்ள 25-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களுக்கும் தீவுகளுக்கும் சென்றிருக்கிறார். அங்கெல்லாம் கேளிக்கை விருந்துகளில் கும்மாளமடித்திருக்கிறார்; வியாபார பேரங்களை நடத்தி முடித்திருக்கிறார். மேற்கண்ட காரியங்களுக்காக இங்கிலாந்திலிருந்து வெளியேறுவதற்கு லலித் மோடிக்கு அனுமதி வாங்கிக் கொடுப்பதுதான் சுஷ்மா சுவராஜின் நோக்கமென்பதும், புற்றுநோய் என்பதெல்லாம் மட்டரகமான செண்டிமெண்ட் நாடகம் என்பதும் அம்பலமாகியிருக்கின்றன.
விசயம் இத்தோடு முடியவில்லை. மேற்கண்ட மனிதாபிமான உதவியின் பின்புலமும் அம்பலமாகியிருக்கிறது. சுஷ்மாவின் உறவினர் ஒருவருக்கு இலண்டனில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் கல்லூரியில் இடம் வாங்கித் தந்திருக்கிறார் லலித் மோடி. சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கௌசல் கடந்த 22 ஆண்டுகளாக லலித் மோடியின் வழக்குரைஞர். சுஷ்மாவின் கணவரும் மகள் பான்சுரி சுவராஜும் லலித் மோடிக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் கடவுச்சீட்டு முடக்கப்பட்ட வழக்கில் டில்லி உயர்நீதிமன்றத்தில் வாதாடியவர்கள். இன்டோபில் என்ற தனது நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி ஏற்குமாறு ஏப்ரல்-15, 2015 அன்று சுஷ்மாவின் கணவருக்கு லலித் மோடி கடிதம் அனுப்பியிருக்கிறார். தான் அந்தப் பதவியை வேண்டாமென்று மறுத்துவிட்டதாக தற்போது சுவராஜ் கவுசல் விளக்கமளித்த போதிலும், லலித் மோடிக்கும் சுஷ்மாவுக்கும் இடையிலான கொடுக்கல் – வாங்கல் உறவுகளை இவை அம்பலமாக்குகின்றன.
***
சுஷ்மா – லலித் மோடிக்கு இடையேயான உறவைவிட, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கும் லலித் மோடிக்கும் இடையேயான உறவு அசாதாரணமானது. பனியா தரகு முதலாளியான கே.கே.மோடியின் மகனும், படிப்புக்காக அமெரிக்கா அனுப்பப்பட்டு அங்கே போதை மருந்து வழக்கில் சிக்கி, தந்தையின் செல்வாக்கினால் இந்தியாவுக்குத் தப்பித்து வந்தவனுமான, பணக்கார வீட்டு உருப்படாத பிள்ளைதான் லலித் மோடி. அடையாளம் தெரியாமல் கிடந்த லலித் மோடி இந்திய கிரிக்கெட் அரங்கையே ஆட்டிப்படைக்கும் அளவிற்கு வளர்ந்ததற்கு அடித்தளமிட்டுக் கொடுத்ததே வசுந்தரா ராஜேதான். பத்தாண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநில முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே, ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் அம்மாநில கிரிக்கெட் சங்கத்தின் தேர்தல் விதிகளை மாற்றி, 2005-ல் லலித் மோடியை அதன் தலைவராக்கினார். சூப்பர் சீஃப் மினிஸ்டர் என்று ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் கூறும் அளவுக்கு அரசு நிர்வாகத்தில் மட்டுமின்றி, ராஜஸ்தான் பா.ஜ.க. விலும் மோடியின் அதிகாரம் கொடி கட்டிப் பறந்தது.
இதனைத் தொடர்ந்து லலித் மோடி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் பதவியைப் பெற்றதும், அதற்கு இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், காங்கிரசின் ராஜீவ் சுக்லா, பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி மற்றும் சரத் பவார் உதவியதும், இந்த கோஷ்டி இந்திய கிரிக்கெட் வாரியத்தில் தமக்கு எதிரான டால்மியா கோஷ்டியைத் தோற்கடித்ததும், 2008-ல் லலித் மோடி ஐ.பி.எல். என்ற பெயரில் மாபெரும் சூதாட்டத்தை அறிமுகப்படுத்தியதும், ஒரு கட்டத்தில் சீனிவாசன்-லலித் மோடி கோஷ்டிகளுக்குள் தகராறு ஏற்பட்டு, லலித் மோடி ஓரங்கட்டப்பட்டு, அவரது தில்லுமுல்லுகளும் மோசடிகளும் அம்பலப்படுத்தப்பட்டதும், காங்கிரசு ஆட்சியில் மோடியின் மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள் பாய்ந்ததும், மோடி நாட்டைவிட்டுத் தப்பியோடியதும், அருண் ஜெட்லி அங்கம் வகித்த கமிட்டியே லலித் மோடிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஆயுட்காலத் தடை விதித்ததும் இந்திய கிரிக்கெட் சூதாட்ட வரலாற்றில் கல்வெட்டுகளாகப் பதிவாகியிருக்கின்றன.

ஊழல் –
மோடியின் ஸ்டைல்!


த்தனை குறைகள் இருந்த போதிலும், மோடியின் ஓராண்டு ஆட்சி ஊழலற்ற ஆட்சி என்று கார்ப்பரேட் முதலாளிகள் கொண்டாடுகின்றனர். அவர்கள் கொண்டாடக் காரணம் இருக்கிறது. இறக்குமதிப் பொருட்களின் மதிப்பைக் கூட்டி பல ஆயிரம் கோடி மோசடி செய்ததாக அதானி மீது தொடரப்பட்ட வழக்கு நிதியமைச்சகத்தில் தூங்குகிறது. சில ஆயிரம் கோடி மதிப்புள்ள வர்த்தக சாம்ராச்சியத்தை நடத்தும் பாபா ராம்தேவ் மீது 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கத்தக்க கருப்புப்பண வழக்கு இருந்தது. அதனை மோடி அரசு ரத்து செய்து விட்டது. அலைக்கற்றை வழக்கில் ராசா மீதான வழக்கு தீவிரமாக நடத்தப்படுகின்ற அதே நேரத்தில், அலைக்கற்றை விற்பனையிலும், பின்னர் நிலக்கரி வயல் ஏலத்திலும் ஆதாயமடைந்த தரகு முதலாளிகள் பலர் மீதான கருப்புப் பண வழக்குகள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. பொதுத்துறை வங்கிகளுடைய வாராக்கடன் 5 இலட்சம் கோடியில் பெரும்பகுதியைத் தரவேண்டிய 12 தரகு முதலாளிகளின் பிடியில்தான் சாலை, மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட கேந்திரமான பல துறைகள் இருக்கின்றன. இந்த ஊழல்களுக்குப் பொறுப்பான குற்றவாளி சின்ன மோடி அல்ல, பெரிய மோடி.
லலித் மோடியுடனான இத்தகைய நீண்டகால உறவின் அடிப்படையில்தான் மோடி இலண்டனில் தங்குவதற்கு அனுமதி கேட்டு பிரட்டிஷ் அரசுக்கு விண்ணப்பம் செய்தபொழுது, அவருக்குச் சாட்சியம் அளித்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார், வசுந்தரா ராஜே. இந்தப் பிரமாண பத்திரத்தை அவர் ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பிரிட்டிஷ் அரசிடம் தாக்கல் செய்ததோடு, இது இந்திய அரசுக்குத் தெரியக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். லலித் மோடி இலண்டனை விட்டு வெளியேற முடியாத நிலையில் இருந்தபொழுது, ராஜே அவரது மனைவியைப் புற்றுநோய் சிகிச்சைக்காக போர்ச்சுகலுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார். அடுத்த இரண்டு மாதங்களுக்குள், ராஜஸ்தான் மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை வழங்குவதற்காக என்று கூறிக்கொண்டு, மோடிக்கு சிகிச்சை அளித்த போர்ச்சுகல் மருத்துவமனை ஜெய்ப்பூரில் ஒரு கிளையைத் தொடங்குவதற்கு 96,000 சதுரமீட்டர் நிலத்தை ஒதுக்கியிருக்கிறார் ராஜே. அதே சமயத்தில் சிகரெட் மீது முந்தைய காங்கிரசு அரசு விதித்திருந்த வரியை 20% குறைத்து, மோடியின் சிகரெட் கம்பெனிக்கு கோடிக்கணக்கில் ஆதாயத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.
வசுந்தரா ராஜேயின் மகனும் பா.ஜ.க.வின் எம்.பி.யுமான துஷ்யந்த், தனது மனைவியைப் பங்குதாரராகக் கொண்டு நிகந்த் ஹெரிடேஜ் என்ற ஆடம்பர விடுதியை நடத்தி வருகிறார். இது ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் காட்டப்பட்ட உப்புமா நிறுவனங்களைப் போன்றது. இந்த நிறுவனத்தில் வரவு-செலவு எதுவுமே நடந்ததில்லை எனக் கூறப்படுகிறது. இப்படிபட்ட உப்புமா நிறுவனத்தின் 10 ரூபாய் பெறுமான பங்கை 96,160 ரூபாய் கொடுத்து வாங்கி, அந்நிறுவனத்தில் 11 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருக்கிறார், லலித் மோடி. இந்த முதலீட்டிற்கான பணம் கருப்புப் பண சோர்க்கமான மொரிஷியஸிலிருந்து வந்திருக்கிறது. இது மட்டுமல்ல, அரசுக்குச் சொந்தமான தோல்பூர் அரண்மனை கட்டிடத்தை வசுந்தராவின் மகனும் லலித் மோடியும் தங்களுடையதாக்கிக் கொண்டு விட்டனர். ராஜஸ்தானில் இவர்கள் நடத்தியிருக்கும் கூட்டுக்கொள்ளையின் ஒரு சிறிய பகுதிதான் இது என்று தெரிகிறது.
சுவராஜ் கவுசல், பான்சுரி சுவராஜ், துஷ்யந்த்
சுஷ்மா சுவராஜின் கணவரும் லலித் மோடியின் வழக்குரைஞருமான சுவராஜ் கௌசல்; லலித் மோடியின் கடவுச்சீட்டு வழக்கில் அவருக்காக வாதாடிய சுஷ்மாவின் மகள் பான்சுரி சுவராஜ்; லலித் மோடியின் வியாபாரக் கூட்டாளியும் வசுரந்தரா ராஜேயின் மகனும் பா.ஜ.க எம்.பி.யுமான துஷ்யந்த்.
கிரிக்கெட் தொடர்பான விவகாரங்களில் மட்டும், லலித் மோடி மீது அந்நியச் செலாவணி மோசடி உள்ளிட்டு 16 பொருளாதாரக் குற்றங்கள் விசாரணையில் உள்ளன; 1,680 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கிறது. மோசடிக் குற்றத்துக்காக சென்னையில் ஒரு கிரிமினல் வழக்கு 2010-இல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எல்லாக் கட்சிகளிலும் மோடிக்கு கூட்டாளிகள் இருப்பதாலும், இந்த கொள்ளைக்கூட்ட வலைப்பின்னலில் அங்கம் வகிக்கும் காங்கிரசு, பா.ஜ.க. தலைவர்கள் முதல் பவார் உள்ளிட்ட அரசியல்வாதிகள், பாலிவுட் நடிகர்கள், தரகு முதலாளிகள், கிரிக்கெட் பிரபலங்கள் போன்ற பலரும் இந்த விவகாரம் கிளறப்படுவதை விரும்பவில்லை என்பதாலும்தான் மோடிக்கு எதிரான குற்றங்கள் எதுவும் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.
இப்படிபட்ட குற்றவாளிக்குத்தான் சுஷ்மா சுவராஜும், வசுந்தரா ராஜேயும் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி உதவியிருக்கிறார்கள். இந்த அதிகார துஷ்பிரயோகம்தான் 2 ஜி ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொண்டுவரும் ஆ.ராசாவின் மீது உள்ள குற்றச்சாட்டு, ராசா கையூட்டு வாங்கினார் என்பதல்ல. ஆ. ராசா தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் அலைக்கற்றையை ஏலம் எடுக்க உதவினார் என்பதுதான். ஆனால் சுஷ்மா, வசுந்தரா ராஜேவுக்கு எதிரான குற்றங்களோ மிகக்கடுமையானவை. ஒவ்வொரு வழக்கிலும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கத்தக்க கருப்புப்பணத்தை வெள்ளையாக்கும் குற்றங்கள் பலவற்றை செய்து விட்டு, எல்லா கட்சிகளிலும் அதிகார வர்க்கத்திலும் தனக்கு இருக்கும் செல்வாக்கினால் தண்டிக்கப்படாமல் தப்பி வரும் ஒரு கிரிமினலுக்கு இவர்கள் உதவியிருக்கிறார்கள். இந்த உதவிக்காக, சுஷ்மாவும் ராஜேவும் மோடியின் மூலம் பெற்றிருக்கும் ஆதாயங்களும் நாள்தோறும் அம்பலமாகி வருகின்றன.
ஆனாலும், ஆ.ராசாவுக்கு எதிராகப் பெருங்கூச்சல் போட்ட பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல் இவர்களுக்கு வக்கீலாக நின்று வாதாடுகிறது. ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், சுஷ்மா சுவராஜின் ‘மனிதாபிமான உதவி’யை நியாயப்படுத்துகிறார். லலித் மோடி மீதான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதை சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டு, மோடி மீது நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டிருக்கிறதா, அவர் தேடப்படும் குற்றவாளியா என்று லலித் மோடியின் வக்கீலாகவே கேள்வி எழுப்புகிறார்கள் பா.ஜ.க. வின் பிரதிநிதிகள்.
***
அருண் ஜெட்லி, சீனிவாசன், ராஜீவ் சுக்லா, சரத் பவார்.
ஐ.பி.எல் போட்டிகளைத் தொடங்கியதில் லலித் மோடிக்கு ஆதரவாக நின்ற பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி, இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ராஜீவ் சுக்லா மற்றும் தேசியவாத காங்கிரசு கட்சியின் நிறுவனத் தலைவர் சரத் பவார்.
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடி அரசு – இம்மூன்றும் ஒரே குரலில் சுஷ்மாவையும் ராஜேவையும் ஆதரிப்பதாகக் காட்டிக் கொண்டாலும், நாளுக்கொன்றாக வெளிவரும் ரகசியங்களும் சங்க பரிவாரத்தை பீதிக்குள்ளாக்குகின்றன. பிள்ளையைக் கிள்ளிவிட்டது யார் என்ற கேள்வி பா.ஜ.க.விற்குள்ளேயே எழுப்பப்படுகிறது. டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க விவகாரத்தில் அருண் ஜெட்லியிடம் மண்ணைக் கவ்விய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ.க.வின் தர்பங்கா தொகுதி எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத், “இவை போன்ற பிரச்சினைகளைக் கட்சிக்குள் ஏற்படுத்தி, மோடி அரசுக்குத் தலைவலி ஏற்படுத்தி வருவது அருண் ஜெட்லிதான். அவர் தன்னை மிஞ்சி யாராவது கட்சியிலும் ஆட்சியிலும் வளர்ந்துவிட்டால், அவர்களைக் காலி செய்ய தந்திரமான காரியங்களைச் செய்யத் தொடங்கி விடுவார்” என வெளிப்படையாகக் குற்றஞ்சுமத்தியிருப்பதோடு, அருண் ஜெட்லியைப் புல்தரையில் மறைந்திருக்கும் பாம்பு எனச் சாடியிருக்கிறார்.
இது மட்டுமின்றி, “ஐ.பி.எல். போட்டிகளை ஆப்பிரிக்காவுக்குக் கொண்டுபோனதில் நடந்துள்ள முறைகேடுகளுக்காக லலித் மோடியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ள அமைப்புகள், ஐ.பி.எல். போட்டிகளை ஆப்பிரிக்காவில் நடத்த அனுமதி கொடுத்த இந்திய கிரிக்கெட் வாரிய கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்த அருண் ஜெட்லியை, சரத் பவாரை, ராஜீவ் சுக்லாவை ஏன் விசாரணைக்கு உட்படுத்தவில்லை?” எனக் கேட்டு, இந்த விவகாரத்தின் இன்னொரு பக்கத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
ஸ்மிருதி இரானி, பங்கஜா முண்டே
கல்வித் தகுதி மோசடி வழக்கில் சிக்கிக் கொண்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் 200 கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிக் கொண்டுள்ள மகாராஷ்டிரா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் பங்கஜா முண்டே
சுஷ்மா, வசுந்தரா ராஜே தொடர்பான செய்தியை வெளியிட்ட இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் பத்திரிகை ரூபர்ட் முர்டோக்கிற்கு சொந்தமானது என்றும், ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமையைத் தனக்குத் தரவில்லை என்பதற்குப் பழிவாங்கத்தான் முர்டோக் இந்த விவகாரத்தை வேண்டுமென்றே கிளறியிருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார் லலித் மோடி.
“காங்கிரசு ஆட்சியில் அமைச்சராக இருந்த சசிதரூர் தனது மனைவி சுனந்தா பெயரில் ஐ.பி.எல். கொச்சி அணியை ஏலம் எடுத்ததை அன்று நான் அம்பலப்படுத்தியதனால்தான், அன்று நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி அடுக்கடுக்காக என்மீது வழக்கு போட்டார். தற்பொழுது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் தனிச் செயலர் ஓமிதா பாலுக்கு சர்வதேச ஹவாலா கடத்தல் பேர்வழி நாக்பாலுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்தியாவிலிருந்து கருப்புப் பணம் வெளியேறி, அது சுவிஸ் வங்கிகளில் போடப்படுவதற்கு நிதியமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளே உடந்தையாக உள்ளனர். மறுக்க முடியுமா?” என்று இன்னொரு குண்டையும் வீசியிருக்கிறார் லலித் மோடி.
சுஷ்மா-லலித் மோடி உறவு அம்பலமான அடுத்த நாளிலேயே, லலித் மோடிக்கும் வசுந்தரா ராஜேக்கும் இடையேயான முப்பது ஆண்டு கால நட்பும், வர்த்தக உறவுகளும் வெளிச்சத்திற்கு வந்தன. இதனைத் தொடர்ந்து லலித் மோடியைத் தேசியவாத காங்கிரசு கட்சித் தலைவர் சரத் பவார், இந்தி திரைப்பட நடிகர் ஷாருக் கான், மும்ப போலீசு கமிஷனர் ராகேஷ் மிஷ்ரா உள்ளிட்டுப் பலரும் இலண்டனில் சந்தித்திருப்பது வெளியானது. லலித் மோடிக்கு ஆதரவாக பத்திரிகையாளர் பிரபு சாவ்லா, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போன்றோர் பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்திருப்பதும் அம்பலமாகியிருக்கிறது.
ஒருவகையில் லலித் மோடியை ஜெயலலிதாவுடன் ஒப்பிடலாம். கட்சிகள், ஊடகங்கள், அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகிய அனைத்திலும் உள்ள பிரமுகர்களைத் தனக்காக அணிவகுத்து நிற்க வைத்திருக்கிறார். தன் மீது தாக்குதல் வரும் பட்சத்தில் யாருடைய இடுப்புத் துணியை உருவுவதற்கும் அவர் தயங்கமாட்டார்.
***
03-modi-captionலித் மோடி மலத்தொட்டிக்குள் கிடக்கும் குண்டு. அவர் மீதான விசாரணையை மன்மோகன் சிங் ஆட்சியும், மோடி ஆட்சியும் கிடப்பில் போட்டிருப்பதற்கு தனிப்பட்ட காரணங்கள் பல இருக்கக் கூடும். எனினும், அந்த குண்டு வெடித்தால் அத்தனை பேரும் மக்கள் மத்தியில் நாறி விடுவோம் என்ற காரணத்தினால், ‘பொது நன்மை கருதியே’ யாரும் அவரை சீண்டத் தயங்குகிறார்கள். கெடு வாய்ப்பாக சின்ன மோடி என்ற இந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பொறுப்பு பெரிய மோடியின் தலையில் விடிந்துவிட்டது.
பிரதமர் பதவியையும் கட்சித்தலைவர் பதவியையும் சதித்தனமாக கைப்பற்றியிருக்கும் மோடி – அமித் ஷா கும்பல், ஒரே ஆண்டில் இப்படி சிக்கித் தவிப்பது குறித்து காங்கிரசை விடவும் மகிழ்ச்சியில் திளைப்பவர்கள் பா.ஜ.க. தலைவர்களாகத்தான் இருப்பர் என்பதில் ஐயமில்லை. அத்வானி, ராஜ்நாத்சிங், சுஷ்மா, சவுகான், ராஜே போன்ற பலரும் தங்களது எதிரிகள் என்று மோடி-ஷா கும்பலுக்கு தெரியும். ராஜஸ்தான் மாநில பா.ஜ.க.வைத் தன் செல்வாக்கின் கீழ் வைத்துக் கொண்டுள்ள வசுந்தரா ராஜே, “நானாகப் பதவி விலக மாட்டேன்” என்று மோடிக்கு தண்ணி காட்டுகிறார். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ராஜேவை நீக்கலாம். ஆனால் அவர் மோடிக்கு வெளிப்படையான சவாலாகி விடுவார். கட்சியும் கலகலத்து விடும்.
ராஜேவை நீக்கினால் சுஷ்மாவை நீக்காமலிருக்க முடியாது. இரண்டு பேரை மட்டும் நீக்கினால், பிறகு வியாபம் ஊழல் சவுகான், மகாராஷ்டிராவில் பங்கஜா முண்டே என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி, மகாராஷ்டிரா கல்வியமைச்சர் வினோத் டாவ்டே, கோவா பொதுப்பணித்துறை அமைச்சர் சுவின் தவாலிகர் ஆகிய மூவரும் தமது கல்வித் தகுதி குறித்து பொய்த்தகவல்களையும், போலிச்சான்றிதழ்களையும் தந்திருப்பது அம்பலமான பிறகும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காங்கிரசு கூட்டணி ஆட்சியிலாவது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆ.ராசா, பவன் குமார் பன்சால், அஸ்வின் குமார் ஆகியோரை நீக்க முடிந்தது. மோடியின் தனிப்பெரும்பான்மை ஆட்சியோ தடுமாறுகிறது. ஏற்கெனவே மோடியைப் பயந்தாங்கொள்ளி என்று காங்கிரசு கேலி பேசுகிறது. கட்சிக்குள்ளேயும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்புகின்றன.

ல. மோடியை இலண்டனுக்குத் துரத்திய ந.மோடி!

ன்று லண்டனில் இருக்கும் சின்ன மோடியைப் பிடித்துக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு பெரிய மோடியின் தலையில் விழுந்திருக்கிறது. ஆனால், லலித் மோடி இலண்டனுக்கு ஓட நேர்ந்ததற்கு காரணமே நரேந்திர மோடிதான் என்ற விவகாரம் எத்தனை பேருக்குத் தெரியும்?
2008-ல் ஐ.பி.எல். சூதாட்டம் லலித் மோடியால் தொடங்கப்பட்டு, ஷாருக்கான், பிரீத்தி ஜிந்தா போன்றோரெல்லாம் ஆளுக்கு ஒரு டீமை விலைக்கு வாங்கி கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்த நிலையில், தானும் ஒரு டீமை விலைக்கு வாங்கவேண்டுமென அதானி ஆசைப்பட்டார். எனவே, நரேந்திர மோடியும் அவ்வண்ணமே ஆசைப்பட்டார். ந.மோடிக்கு ஒரு அணியை வாங்கித்தருவதாக ல.மோடி வாக்களித்திருந்த நிலையில், அதனை கொச்சி அணி என்ற பெயரில் லவுட்டிக் கொண்டு போய் விட்டார் சுனந்தா புஷ்கர். ஆத்திரமடைந்த ல.மோடி, ஐ.பி.எல். நிர்வாகக் குழுவின் விதிகளை மீறி, ஏலம் தொடர்பான உள் விவகாரங்களைப் போட்டு உடைத்ததுடன், புஷ்கருக்குப் பின்னால் இருந்தது அன்றைய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசிதரூர் என்றும் குற்றம் சாட்டினார். சசி தரூர் பதவி இழந்தார். அதன் தொடர் விளைவாக லலித் மோடி ஐ.பி.எல் இலிருந்து வெளியேற்றப்பட்டார். அதானி விவகாரத்துக்காக அன்று ல.மோடி மீது நடவடிக்கை எடுத்தவர்களில் முக்கியமானவர் அருண் ஜெட்லி.
தோல்வியைச் சீரணிக்க முடியாதவரான அன்றைய குஜராத் முதல்வர் ந.மோடி, சசி தரூரின் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள கேர்ல் பிரண்டு என்று சுனந்தா புஷ்கரை கீழ்த்தரமான முறையில் ஏசினார். இன்று சுனந்தா புஷ்கரின் சந்தேக மரணத்துக்காக சசிதரூர் விசாரிக்கப்படுகிறார்.
பெரிய மோடியின் ஆசையை நிறைவேற்ற முனைந்து, அதன் விளைவாக பதவி இழந்து இலண்டனுக்கு ஓட நேர்ந்த சின்ன மோடியின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய துர்ப்பாக்கியமான சூழலில் இருக்கிறார் பெரிய மோடி.
அலட்சியப்படுத்தப்பட்டு குமுறிக் கொண்டிருந்த அத்வானி அதனை தொடங்கிவைக்கிறார். தன் மீது ஹவாலா குற்றச்சாட்டு வந்தபோது, தான் உடனே ராஜினாமா செய்ததை நினைவு கூர்ந்து, “பொதுவாழ்வில் நேர்மையைக் கடைப்பிடிப்பது அவசியம்” என்று கூறி, மோடிக்கும் தன்னைக் கைவிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கும் சேர்த்து அல்லையில் ஒரு குத்து குத்துகிறார். மோடியை பேசச்சொல், அமித் ஷாவைப் பேசச்சொல் என்று ஆளாளுக்கு தொலைக்காட்சிகளில் சவால் விடுகிறார்கள்.
இதற்கு மேலும் பேசாமலிருக்க முடியாது, பேசவும் முடியாது என்ற நிலையில் இருக்கும் சங்க பரிவாரத்தின் தலைமை, கோவிந்தாச்சார்யாவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறது. “சுஷ்மாவும் ராஜேவும் ராஜினாமா செய்யவேண்டும். இந்த அரசு மதிப்பீடுகளை இழந்து விட்டது. தன்னுடைய கவுரவம் போக்கொண்டிருக்கிறது என்பதை நரேந்திர மோடி உணரவேண்டும்” என்று பேட்டி கொடுக்கிறார் கோவிந்தாச்சார்யா.
ஊழல் இல்லை என்பதுதான் ஒரு ஆண்டு ஆட்சியின் முக்கிய சாதனை என்று சொல்லி வாய் மூடுவதற்குள் கிளம்பி விட்டது சின்ன மோடி விவகாரம். பதினைந்து நாட்களுக்கும் மேலாக எல்லாத் திசைகளிலிருந்தும் அன்றாடம் அடி விழுந்து கொண்டே இருக்கிறது. யார் மீது யார் கல்வீசினாலும் அந்தக்கல் கடைசியில் பிரதமரின் மண்டையைத்தான் பதம் பார்க்கிறது. சர்வதேச யோகா தினம், பெண் குழந்தைகள் தினம், மன் கி பாத், “டிஜிட்டல் இந்தியா” என்று எத்தனை நாட்கள்தான் வடிவேலு கணக்காக வலிக்காதது போல நடிக்க முடியும்?
தன்னுடைய இமேஜைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில், உறுதியான நடவடிக்கையாக எதையாவது செய்ய வேண்டும். இறுதியில் பார்த்தால், எதுவும் செய்திருக்கக்கூடாது. இதை எப்படிச் செய்வது என்பதுதான் நரேந்திர மோடியின் முன் உள்ள கேள்வி.
                                                                                                                                              -திப்பு
_____________________________----
புதிய ஜனநாயகம், ஜூலை 2015

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?