மது விலக்கு? அதிமுக ஆட்சி இருக்கும்வரை முடியாது!



இந்தியா முழுவதும் மத்திய அரசு மது விலக்கை அமல்படுத்தினால் தமிழகத்திலும் மதுக்கடைகளை மூடுவோம் என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியுள்ளார். 
இது ஒரு காலும் நடக்காது என்பதை அறிந்தே இவ்வாறு கூறியுள்ளார்.
ஆட்சிப் பீடத்தில் அதிமுக இருக்கும்வரை மது விலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை இதைவிட உறுதியாகவும் தெளிவாகவும் யாரும் சொல்லமுடியாது.  கலால் துறையை கையில் வைத்திருக்கும் விசுவநாதன்  முதல்வரின் வலது கரம் போன்றவர். வசூல் மன்னர்.    ஓ.பன்னீர்செல்வத்தை விட செல்வாக்கு மிக்கவர்.  
 ஜெயலலிதாவின் மனம் தெரியாமல் எதையும் பேசமாட்டார்.
மொத்த மாநிலமே மதுக்கடைகளை மூடச்சொல்லி போராடும்போது இவ்வளவு வெளிப்படையாக ஒரு அமைச்சர் பேசுகிறார் என்றால், அதற்கு நிறைய துணிச்சல் வேண்டும் என்பது மட்டுமல்லாமல், மேலிடத்தின் ஆதரவும் உண்டு என்பதே.
ஒரு புறம் போராட்டம் நடந்துகொண்டிருந்தாலும், மறுபுறம் மது விற்பனை சக்கை போடு போடுகிறது. மது ஆலைகளின் உரிமை யாளர்கள் கல்லாவில் கனமாக காசு பார்க்கிறார்கள்.   வசூல் குவிகிறது.
டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது சப்ளை செய்வதில் முன்னணியில் உள்ள கம்பெனிகள் மிடாஸ், கோல்டன் வாட்ஸ், எம்பீ குழுமம், எஸ்என்ஜே டிஸ்டிலரீஸ், எலைட் டிஸ்டிலரீஸ் ஆகியவை.
இதில் எலைட் டிஸ்டிலரீஸ் ஜெகத்ரட்சகன் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது.   கோல்டன் வாட்ஸ் டி.ஆர்.பாலுவின் உறவினர்களால் நடத்தப்படுகிறது. எம்பீ குழுமம் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் உறவினர்களால் நடத்தப்படுகிறது. எஸ்என்ஜே டிஸ்டிலரீஸை நடத்துவது கருணாநிதி கதை வசனத்தில் பெண் சிங்கம் திரைப்படத்தை தயாரித்த ஜெயமுருகன்.
சில்லரை மது விற்பனையை கையகப்படுத்த அதிமுக அரசு எடுத்தமுடிவே மிடாஸ் நிறுவனத்தை வளம் கொழிக்கச் செய்வதற்குதான் என்கிறார் ஒரு தொழிலதிபர்.  2002 அக்டோபரில் மிடாஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.  அடுத்த ஒரு வருடத்தில் மது விற்பனையை அரசுடமை ஆக்கினார் ஜெயலலிதா.
மிடாஸ் நிறுவனத்தில் 48 சதவீத பங்குகளை வைத்திருப்பது ஹாட்வீல்ஸ் இன்ஜினியரிங் கம்பெனி.   இந்த கம்பெனியில் பங்குதாரர்களாக இருப்பவர்கள் சசிகலாவும் இளவரசியும்.    இந்த ஹாட்வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனம்தான் ஜாஸ் சினிமாஸ் என்று பெயர் மாற்றம் அடைந்தது என்பதை சவுக்கு வாசகர்கள் அறிவீர்கள்.
மிடாஸ் கம்பெனியில் 38 சதவீத பங்குகளை வைத்திருப்பது ஸ்ரீ ஜெயா ஃபினான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனம்.  அந்த ஜெயா ஃபினான்ஸ் நிறுவனத்தில் ஜெயலலிதா 1.90 கோடி கடன் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஜெயலலிதா மட்டுமல்ல.  சொத்துக்குவிப்பு வழக்கில் பினாமி நிறுவனங்கள் என்று சொல்லப்பட்ட லெக்ஸ் ப்ராப்பர்டீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கடன் பெற்றுள்ளன.    இந்த ஃபினான்ஸ் நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருப்பது, இளவரசி என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி மொத்தமாக சசிகலாவும் அவரது உறவினர்களும் நடத்துவது தான் மிடாஸ் நிறுவனம்.
Accounts - Sri Jaya Finance - 2011-12_Page_8
ஜெயா ஃபினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆண்டறிக்கை
2006ம் ஆண்டில் திமுக அரசு எங்களுக்கு சரிவர ஆர்டர்கள் வழங்கவில்லை என்று மிடாஸ் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடுத்தது.  மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. அந்த வழக்கில் மிடாஸ் சார்பில் ஆஜரானவர் அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக ஆட்சியில் மிடாஸ் கம்பெனிக்கு கணிசமான ஆர்டர்கள் கொடுப்பதற்காக ஏனைய பிரபலமான கம்பெனிகள் ஓரங்கட்டப்பட்டன.  திமுக காலத்தில் 17 சதவீத மது பானங்களை டாஸ்மாக்குக்கு சப்ளை செய்த விஜய் மல்லய்யாவின் யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனம் அப்படி ஓரங்கட்டப்பட்ட பிரபல நிறுவனங்களில் ஒன்று. அதை தனது  ஆண்டறிக்கையில் வெளிப்படையாக விமர்சனம் செய்தது யுனைடெட் ப்ரூவரீஸ். “தேசிய அளவில் பிரபலமான நிறுவனங்களை ஓரங்கட்டி விட்டு, உள்ளுரிலேயே இருக்கும் நிறுவனங்களுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது” என்று குறிப்பிட்டது.
எனினும், 2011 டிசம்பரில் சசிகலா வெளியேற்றப்பட்ட பிறகு யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனத்துக்கு மீண்டும் யோகம் அடித்தது. இந்த காலகட்டத்தில் மிடாஸ் நிறுவனத்தில் சசிகலா நியமித்த நபர்கள் வெளியேற்றப்பட்டு, துக்ளக் சோ ராமசாமி, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோர் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர்.  சசிகலாவின் உறவினர் பிரபாவதியின் கணவரான டாக்டர் கே.எஸ்.சிவக்குமார்தான் இப்போதும் மிடாஸ் இயக்குநராக உள்ளார்.
Reference-4_Midas-Golden_Annual-Return-2013_Page_3
 இந்திய அளவில் பிரபலமாக உள்ள பிராண்டுகள் எதுவும்  டாஸ்மாக் கடைகளில் அறவே கிடைப்பதில்லை. மிடாஸ் போன்ற வேண்டிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக பிரபல பிராண்டுகள் முடக்கப்பட்டன. இதனால் 2011ல் 360 கோடி ரூபாயாக இருந்த மிடாஸ் வருமானம் 2013ல் 1077 கோடிகளாக எகிறியது.
மதுவால் சாக்கடையில் வீழ்ந்து கிடப்பது தமிழக எதிர்காலமும்தான்.
மிடாஸ் நிறுவனத்துக்கு எல்லையற்ற தாராளம் காட்டப்படுவதாக கோல்டன் வாட்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி தனபாலன் “சரக்கு கொள்முதல் செய்வதற்கு எந்தவிதமான அடிப்படை நியதிகளையும் டாஸ்மாக் பின்பற்றுவதில்லை என்று தெரிகிறது. கோல்டன் வாட்ஸ் நிறுவனத்திடமிருந்து 28,300 பெட்டிகள் வாங்கிய அதே ஆறு மாதத்தில் மற்ற நிறுவனங்களிடம் 10 லட்சம் பெட்டிகள் வாங்கியுள்ளது. இது சரியல்ல. அனைத்து நிறுவனங்களுக்கும் உரிய வாய்ப்பை  டாஸ்மாக் அளிக்கவேண்டும்” என்று உத்தரவிட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பினாமி நிறுவனங்கள் என்று சுட்டிக்காட்டப்பட்ட பல நிறுவனங்களில் இன்று இயக்குநர்களாக உள்ள கார்த்திகேயன், கலியபெருமாள் மற்றும் கே.எஸ்.சிவக்குமார் ஆகியோர்தான் மிடாஸ் நிர்வாகத்தை இன்று கவனித்துவருகின்றனர்.   இந்த நிறுவனத்தின் வருமானம் நின்று விடப்போகிறது என்ற ஒரே காரணத்தாலேயே, மதுவிலக்கு கோரிக்கைக்கு பாராமுகம் காட்டி வருகிறது அதிமுக அரசு.
இதனால்தான் ஜெயலலிதா சொல்கிறார், மதுவாவது விலக்காவது…
                                                                                                                                       -சவுக்கு சங்கர்.

========================================================================

வெந்தயம் 


ணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். 
உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்த யத்தை சாப்பிடுங்கள். 
பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். 
தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது. 
தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். 
ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ / மோரிலோ கலந்து பயன்படுத்தலாம். 
வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். 
வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும். வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும். மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். 
சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும். 
எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும். 
இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும். 
மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும். 
வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. 
கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. 
பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.


========================================================================
இன்று,
ஆகஸ்ட்-23.
  • ருமேனியா விடுதலை தினம்(1944)
  • உக்ரேன் கொடி நாள்
  • மெக்சிகோ, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது(1821)
  • உலக தேவாலயங்களின் தலைமை கழகம் ஏற்படுத்தப்பட்டது(1948)
  • முகனூல்.அதிரடிகள்.


நீதியரசர் அய்யா குமாரசாமி பெயரில் கணித விருதுகள் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கைகள் குவிகின்றன.


========================================================================
தேர்தல் வரும் பின்னே !
வழக்கு வரும் முன்னே?

2G வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி அடித்த கமெண்ட் தான் உலகத்தின் கவனத்தையே ஈர்த்தது. சி.ஏ.ஜியின் குற்றச்சாட்டான "1,76,000 கோடி நட்டம்" என்பதை அவர் எப்படி புரிந்துக் கொண்டார் என்பது இது வரை விளங்கவில்லை.
"Mind boggling", என்றார். அதிமுகவின் நாலாந்தர பேச்சாளர் சந்துமுனையில் நின்று "நட்டம்" என்று முழங்கியது போலவே. சிபிஐ சூராதிசூரனாய் ஊடகங்கள் முன் குதித்தது. 
கோர்ட்டில் கதகளி ஆடியது.
குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை கொடுத்தது போலவே பத்திரிக்கைகள், ஊடகங்கள் பொங்கி தீர்த்தனர். இன்று நாடாளுமன்றம் முடங்குவதற்கு நீலிக் கண்ணீர் வடிக்கும் பா.ஜ.க அன்று எதிர்கட்சியாய் நின்று, நாடாளுமன்றத்தை முடக்கி நேர்மைக்கு மொத்தக் காவலனாய் காட்டிக் கொண்டது.
கீழ் கோர்ட் விசாரிக்கும் வழக்கு தன் கண்காணிப்பில் நடக்க வேண்டும் என உத்தரவிட்டு, உச்சநீதிமன்றம் இந்தியாவின் உயர்ந்த அமைப்பாக தன்னைக் காட்டிக் கொண்டது. 
இவர்கள் அத்தனை பேரும் ஆளுக்கொரு கோணத்தில் நின்று, "ஒற்றை மனிதரை" பிடுங்கித் தின்று, நீதியை நிலைநாட்டுவதாய் காட்டிக் கொள்ள துடியாய் துடித்தனர்.

ஆனால் அவர் துவளவில்லை, அசரவில்லை, அயர்ந்து வீழ்ந்து விடவில்லை. கைது செய்து அடைத்த போதும் பயந்து விடவில்லை. நெஞ்சுரத்தோடு விசாரணையை எதிர்கொண்டார். 
எப்.ஐ.ஆர் போடப்பட்ட போது தான் , 1.76,000 கோடி நட்டம் காணாமல் போய், 4,000 கோடி நட்டம் பதிவு செய்யப்பட்டது.
அது தவறு என சி.ஏ.ஜி வாதிடவில்லை. தனது வேடத்தை திறம்பட கட்டியதில் திருப்திப்பட்டு உறங்கிப் போனார். மூளை ஸ்தம்பித்தவர் , கோமா நிலையிலேயே இருந்து விட்டார். குறைந்தத் தொகை தான் நட்டம் என காதில் போய் சொல்லி இருந்தால், மீண்டிருப்பார் பாவம். அந்த பழி சி.பி ஐயையே சேரும்.
சி.பி.ஐ வழக்கமான பூச்சாண்டி எல்லாம் காட்டியது. இந்தியா முழுதும் ரெய்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என செய்திகளை கூவியது. ஊழல் எதிர்ப்பு புண்ணியாத்மாக்கள் வெதும்பி வெடித்தார்கள்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 
1.76 லட்சம் போய், 4000 போய், 200 கோடி பரிவர்த்தனை தான் குற்றம் என இறுதி செய்யப்பட்டது. இந்த வித்தியாசமும் "பரமாத்மாக்களின்" கண்களில் படவில்லை.
வழக்கு நீதிமன்றத்தில் துவங்கியது. அவர் ஓடி ஒளியவில்லை. வாய்தா வாங்கவில்லை. வழக்கறிஞர்களின் கருப்பு கவுனுக்கு பின் போய் பதுங்கவில்லை.
நாள் தவறாமல் கோர்ட்டுக்கு வந்தார். குற்றம் சாட்டப்பட்டவராய் பதிலளித்தார். சாட்சியாய் கூண்டில் ஏறி சாட்சியளித்தார். வழக்கறிஞர்களுக்கு குறிப்பெடுத்துக் கொடுத்தார். 
ஒரு கட்டத்தில், அவரே வழக்கறிஞராய் நின்று வாதாடினார். டில்லி வக்கீல்கள் அவரது வாதத் திறமை கண்டு, மனதிடம் கண்டு பிரமித்துப் போயினர்.
சி.பி.ஐ தடுமாறியது, வழக்கின் போக்குக்கு தாக்கு பிடிக்க முடியாமல். அடுத்த வழியை தேடியது. அமலாக்கத் துறை களமிறங்கியது. அதே ரெய்டு, அதே விசாரணை. ஆனால் அடுத்த வழக்கு. பிரிவுகள் அதே, குற்றச்சாட்டு அதே.
அனுமதி வழங்கப்பட்டதில் தவறு என்றும், பணம் கைமாறியது என்றும் நிரூபிக்க தலையால் தண்ணீர் குடித்தார்கள். திடீரென விசாரணை முடியவில்லை என்றார்கள், 
வாய்தா கேட்டார்கள்.
கடுப்பான நீதிபதி நேரடியாகவே கேட்டார்,"குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் வழக்கமாக வழக்கை இழுத்தடிப்பார்கள். அவர் ஒத்துழைக்கிறார், நீங்கள் இழுத்தடிக்கிறீர்களே. உங்கள் நோக்கம் என்ன?"
பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தி போட்டார்கள், வெளிநாட்டுக்கு பணம் சென்றதை கண்டு பிடித்து விட்டார்கள். பரபரத்தனர்.
பிரதமர் முதல்வர் சந்திப்பு நடந்தது.
மீண்டும் ரெய்டு, மீண்டும் விசாரணை. ஊடகங்கள் பரபரப்பு. புதிய வழக்கு. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததை கண்டுபிடித்துள்ளதாக அறிவிப்பு. ஆவணங்கள் சிக்கின என்று ஆரவாரம்.
மூன்று முறை ரெய்டு செய்ததும் அதே இடம். மூன்று முறை ஆய்வு செய்ததும் அதே ஆவணங்கள். மூன்று முறை விசாரணை செய்யப்பட்டதும் அதே நபர்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் புது பரபரப்பு. ஆண்டுகள் தான் அய்ந்து உருண்டோடி விட்டன.
இன்னும் எத்தனை நாட்கள் இந்த நாடகமோ? விசாரணையின் போதே தீர்ப்பு கொடுத்து, அதற்கு இப்போது வழக்கு புனைய முடியாமல் தவிக்கிறார்கள்.
அன்று துடித்தெழுந்த நீதிவான்களை காணவில்லை. மீண்டும், மீண்டும் தலைப்பு செய்தி போடும் பத்திரிக்கைகள் அத்தோடு சரி, வழக்கு ஏன் அரசு தரப்பில் இழுத்தடிக்கப் படுகிறது எனக் கேட்க மனமில்லை.
கழுகுக் கண் கொண்டு நோக்கிய உச்ச நீதி கனவான்களுக்கு, கண் அவிந்தே போனது.
நேர்மை திறம் அற்றவர்கள், நெஞ்சில் வஞ்சம் நிறைந்தவர்கள்.
ஆ. ராசா இதையும் எதிர் கொள்வார். வென்று வருவார்.
உண்மையை மறைத்து, வீண் பழி போட்டு வெற்றியை மீண்டும் களவாடத் துடிக்கிறார்கள்.
                                                                                                                               எஸ்_எஸ்_சிவசங்கர்‬,
இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?

2 ஜி வழக்கில் கோர்ட் உத்தரவின் படி வருவாய் அமலாக்க துறை, வருமான வரி துறை, சி.பி.ஐ., என 3 துறைகளும் பரிமாறி எடுத்த முடிவின்படி , 2004 முதல் 2010 வரை எனது மற்றும் எனது குடும்ப உறுப்பினர்கள் வருமான ஆவணத்தை கேட்டு பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது. 
2013 ல் விசாரணை அதிகாரி விவேக் பிரியதர்ஷி , கோர்ட் உத்தரவின் படி நாங்கள் நடத்திய சோதனையில் ராஜாவிடம் வருமானத்திற்கு அதிகமான சொத்து இல்லை என கோர்ட்டில் ஒப்பு கொண்டுள்ளார்.
 தொலைக்காட்சிகள் ஒப்புக்கொண்டதை இதனை நான் விளக்கி இருக்கிறேன். 
இத்தனையும் மீறி, டில்லி சி.பி.ஐ.,க்கு தெரியாமல் சென்னை சி.பி.ஐ., சோதனையும் செய்துள்ளனர். 
சி.பி.ஐ., ஒரு வழக்கு பதிவு செய்து இருப்பது எனக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்படுகிறது. சி.பி.ஐ,.,க்குள் மோதல் உள்ளதையே இது காட்டுகிறது. 

பிரிவினை உள்ளது என்றே தோன்றுகிறது. 
சுப்ரீம் கோர்ட் நெறிமுறைகளுக்கு எதிரானது. 
இது குறித்து சி.பி.ஐ., புலன் அதிகாரிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். அனைத்து உண்மைகளையும் சொல்லியிருக்கிறேன். 
மறைந்த சாதிக்பாட்சாவின் சொத்து கிரீன் ஹவுஸ், என்னுடையது என்று சொல்லியிருக் கிறார்கள். 
ஆனால் கோர்ட் குற்றப்பத்திரிகையில் இல்லை. 

இதற்கு அரசியல் காரணம் உள்ளது. 2014ல் நான் நீலகிரியில் போட்டியிடும் போது வெளியிட்ட சொத்துக்கள் இணையதளத்தில் அப்பேட் செய்துள்ளேன். 
இதனை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். ராஜா தங்கம் வைத்து கொள்ளக்கடாது என்று சட்டம் சொல்லவில்லை. 
இதற்கு மேல் என்னிடம் இல்லை. 
என்மீது சொத்துக்குவிப்பும் இல்லை. 
தங்களிடம் உள்ள ஆவணங்களை ஆராயாமல், இவ்வாறு வழக்கு பதிவு செய்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி. இது கோர்ட்டுக்கு எதிரானது. 
தேர்தல் நேரத்தில் வேண்டும் என்றே வழக்கு பதியப்பட்டுள்ளது. 
சென்னை வந்த மோடி-ஜெயலலிதா சந்திப்புக்குப் பின்னர் பழைய குப்பையை சி.பி.ஐ.கிளறுவது தேர்தல் கால பழி வாங்கல், திமுகவுக்கு ஆதரவாக குவிந்து வரும் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் அசிங்கமான அரசியல் தந்திரம் தான்.இதற்கு பொது நிறுவனமான சி.பி.ஐ துணை போவது மிக ஆபத்தானது.
இவ்வாறு ராஜா கூறியுள்ளார். 

=================================================================================













இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?