சோதனைக்கூடங்கள் மூலம் குழந்தைகள் உண்டாக்கலாம்.



குருத்தணுவில் இருந்து சோதனைக்கூடத்தில் விந்தணுவை உருவாக்கி அதன் மூலம் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க முடியும் என்பதற்கான சாத்தியத்தை தாங்கள் நிரூபித்திருப்பதாக சீன விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
விலங்குகளின் உடலுக்கு வெளியே விந்தணுக்களை உருவாக்கியிருப்பதும் அதன்மூலம் கருவூட்டப்பட்டு பிறந்த எலிக் குட்டிகள் ஆரோக்கியமாக இருப்பதும் விஞ்ஞான உலகில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
சுண்டெலிகளில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவில் ஆரோக்கியமான சுண்டெலிக்குட்டிகள் பிறந்திருப்பதாகவும் இதனை மனிதர்களுக்கும் விரிவுபடுத்த முடியும் என்றும், அதன் மூலம் குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகளுக்கான சிகிச்சை முறையில் மிகப்பெரிய புரட்சிகரமான மாற்றங்கள் சாத்தியமாகலாம் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்ட சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சீன ஆய்வாளர்கள் குருத்தணுக்களை எடுத்து அதில் இருந்து ஆரம்பகட்ட விந்தணுவை உருவாக்கி, அதைக்கொண்டு சுண்டெலிகளின் கருமுட்டையை செயற்கை முறையில் கருவூட்டினார்கள். அப்படி கருவூட்டப்பட்ட எலியின் கருமுட்டைகளில் இருந்து ஆரோக்கியமான எலிக்குட்டிகள் பிறந்திருப்பதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
செல் ஸ்டெம் செல் என்கிற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வறிக்கையின்படி அப்படி பிறந்த எலிக்குட்டிகள் அனைத்தும் ஆரோக்கியமாக வளர்ந்ததாகவும், அவை அனைத்தும் இயற்கையான முறையில் குட்டிகளை ஈன்றதாகவும், அந்த குட்டிகளும் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வின் முடிவுகள், இந்த நடைமுறை மனிதர்களில் கூட சாத்தியப்படலாம் என்பதை குறிப்புணர்த்துவதாக நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
விபத்து அல்லது காயங்கள் காரணமாக விதைப்பைகள் அகற்றப்பட்டவர்கள், புற்றுநோய் சிகிச்சை காரணமாகவோ, அல்லது நோய்த் தொற்றுகாரணமாகவோ, அல்லது வேறு வகையான குறைபாடுகள் காரணமாகவோ விந்தணுக்களை உற்பத்தி செய்யமுடியாமல் போன ஆண்களுக்கு இந்த சிகிச்சைமுறை எதிர்காலத்தில் பயன்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விலங்குகள் மற்றும் மனிதர்களின் விதைப்பைகளில் விந்தணுக்கள் உற்பத்தி செய்யப்படுவது என்பது இயல்பான நிகழ்வாக தோன்றினாலும் அது அடிப்படையில் மிகவும் சிக்கலான, நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் ஒரு இயற்கை நிகழ்வு. பல பாலூட்டிகளுக்கு அவற்றின் விதைப்பைகளில் ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாகி அவை கருமுட்டையை கருவுறச் செய்வதற்கு குறைந்தது ஒரு மாத காலம் பிடிக்கும்.
ஆனால் தற்போது விந்தணுக்களை பரிசோதனைக்கூடங்களில் செயற்கையாக உற்பத்தி செய்ய முடியும் என்பதை சீன விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள்.
கருவூட்டப்பட்ட முட்டையின் ஆரம்பகட்டத்தில் உருவாகும் குருத்தணுக்கள், உடலின் எந்த உறுப்பாகவும், தசையாகவும் வளரும் தன்மை கொண்டவை. அப்படிப்பட்ட குருத்தணுக்களை சரியான காலகட்டத்தில் தனியாக பரிசோதனைக்கூடத்தில் பிரித்தெடுத்து, அந்த குருத்தணுக்களுடன் சில வேதிநொதிமங்கள், ஹார்மோன்கள் மற்றும் விதைப்பைகளின் திசுக்களையும் சேர்த்ததன் மூலம் இந்த குருத்தணுக்களை ஆரம்பகட்ட விந்தணுக்களாக ஆய்வாளர்கள் வளர்த் தெடுத்தனர்.
இப்படி வளர்க்கப்பட்ட விந்தணுக்கள் இயற்கையான விந்தணுக்களைப்போலவே அனைத்து தன்மைகளையும் கொண்டிருந்தாலும் இத்தகைய விந்தணுக்கள் தாமே நீந்திச் சென்று கருமுட்டையை சினையுறச் செய்யத் தேவையான வால்பகுதி இருக்காது. எனவே இந்த விந்தணுக்களை செயற்கை கருவூட்டல் முறையில் மட்டுமே கருமுட்டைக்குள் செலுத்தி அதை கருவூட்ட முடியும். அப்படியே இந்த சோதனைகளிலும் செய்யப்பட்டது.
அதன் இறுதி முடிவுகள் நம்பிக்கையளிப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்களும் இந்த துறை சார் மற்ற நிபுணர்களும் தெரிவித்தாலும் இது மனிதர்கள் மத்தியில் செய்வதற்கு பலவித தடைகளை கடக்கவேண்டியுள்ளது.
இந்த நடைமுறையை மனிதர்களுக்கு செய்வதற்கான விஞ்ஞான சாத்தியங்கள் உருவாக்கப்படவேண்டும். அதற்கான அனுமதிகளை அரசுகளிடம் பெறவேண்டும்.
காரணம் இப்படியான செயற்கை முறை விந்தணுக்களை உருவாக்கத் தேவைப்படும் மூலப்பொருளான குறிப்பிட்ட ரக குருத்தணுக்கள் கருவூட்டப்பட்ட முட்டையின் ஆரம்பகட்டத்தில் இருந்தே பிரித்தெடுக்க முடியும்.
அந்த கட்டத்தில் அது புத்தம் புதிய தனி உயிரா அல்லது அல்லது வெறும் கருவூட்டப்பட்ட கருமுட்டை மட்டுமேவா என்று நிர்ணயிப்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. எனவே கருவூட்டப்பட்ட முட்டையில் இருந்து புதிய உயிர் உருவாகும் நிலையில் அதன் குருத்தணுக்களைப் பிரித்தெடுப்பது சரியா தவறா என்கிற தார்மீக கேள்விக்கு விஞ்ஞானத்துறையிலும் அரசுகள் மட்டத்திலும்  ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?