ஊழலின் தலைமைச் செயலகம் !

போயசுத் தோட்டம்:

ட்டுச்சீட்டு ஜனநாயகம் கிரிமினல்மயமாவதும் பணத்தால் தீர்மானிக்கப்படுவதும் தீவிரமடைந்து, மக்கள் மத்தியில் அதன் மீதான மதிப்பும் பிரமைகளும் சல்லிக்காசு போலத் தேய்ந்துவிட்ட நிலையில், “வாக்குச்சீட்டுதான் மக்களின் கையில் உள்ள வலிமையான ஆயுதம்” என சகாயம் போன்ற நல்லவர்களும், முதலாளித்துவ அறிவுத்துறை யினரும் பலமாக உபதேசித்து வருகின்றனர். “நல்ல வேட்பாளர்களைக் கண்டுபிடித்து வாக்களிக்க வேண்டும்” என்ற வழக்கமான போதனை முதல் “வாக்குச்சாவடிக்குச் செல்லுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்” என்ற தேசபக்தி “டச்” கொண்ட அறைகூவல் ஈறாகத் தேர்தல், வாக்கு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து இவர்கள் நடத்தும் பிரச்சார இம்சை தாங்கமுடியாத அளவிற்குச் சென்று கொண்டிருக்கிறது.
வேளச்சேரி பீனிக்ஸ் மால்
சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் உள்ள லக்ஸ் திரையரங்கு : ஜெயா-சசி கும்பல் இந்த ஐந்தாண்டுகளில் அடித்து வரும் கொள்ளையின் சாட்சி.
தமிழகத்தில் ஏறத்தாழ 1.08 கோடி பேர் புதிய வாக்காளர்கள் – அதாவது, 19 வயதிலிருந்து 23 வயதுக்குட்ட இளைஞர்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். பதிவு பெற்ற மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 22.92 சதவீதமுள்ள இந்த விடலைகளோடு, முப்பது வயதுக்கு உட்பட்டவர்களையும் சேர்த்தால் வாக்குரிமை பெற்ற இளைஞர்களின் சதவீதம் கணிசமாக இருக்கிறது என்பதால், வாக்குச்சீட்டின் மூலம் மாற்றத்தைக் கொண்டுவந்து விட முடியும் என்ற ஜெபக்கூட்டம் இந்த முறை பரவலாகவும் விரிவாகவும் நடந்துவருகிறது.
வாக்குச்சீட்டின் மூலம் மாற்றத்தைக் கொண்டுவந்து விடுவது சாத்தியமென்றால், இத்தனை தேர்தல்கள் நடந்தபிறகும்கூட, ஏன் நல்ல மாற்றங்கள் எதுவும் வரவில்லை என்ற கேள்விக்கு நாம் விடை தேட வேண்டும். முக்கியமாக, இந்த அரசியல் அமைப்பு முறையில் உள்ள பிரச்சினைகள் குறித்துப் பேச வேண்டும். ஆனால், டி.வி.யிலும், மேடையிலும் வாக்குச்சீட்டின் முக்கியத்துவம் குறித்து முழங்கும் அறிஞர் பெருமக்களோ, நுனிப்புல் மேய்வதைத் தாண்டி இந்த அடிப்படையான கேள்விக்குள் செல்ல மறுக்கின்றனர்.
அதானி சூரிய ஒளி மின்சார ஒப்பந்தம்
தமிழக முதல்வர் ஜெயா முன்னிலையில் அதானி குழுமத்திடமிருந்து அதிக விலை கொடுத்து சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தான வைபவம் (கோப்புப் படம்)
கடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலின்பொழுது அப்பொழுது ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க. மீது ஊழல், குடும்ப ஆட்சி, நிர்வாகத் திறமையின்மை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அதற்கு மாற்றாக அ.தி.மு.க.விடம் ஆட்சியதிகாரம் தரப்பட்டது. ஆட்சி மாற்றத்தின் பிறகான இந்த ஐந்தாண்டுகளில் தமிழகம் காணும் நிலைமை என்ன? அம்மா ஆட்சி 40 பர்சென்ட் கமிசன் ஆட்சி எனப் பெயரெடுத்து, ஊழலில், இலஞ்சப் பணத்தில் சொத்துக்களை வாங்கி குவிப்பதில் தி.மு.க.வின் ஊழல்களைச் சுண்டைக்காய் ஆக்கிவிட்டது.
ஊழல்களின் பிரம்மாண்டம் ஒருபுறமிருக்க, மந்திரி தொடங்கி கவுன்சிலர் வரை நடத்தும் ஊழல்களெல்லாம் கண்காணிக்கப்பட்டு, கப்பம் வசூலிக்கும் மையமாக போயசு தோட்டம் விளங்குகிறது. அதாவது, அ.தி.மு.க. ஆட்சியில் அதிகாரம் மட்டும் மையப்படுத்தப்படவில்லை, ஊழலும் மையப்படுத்தப்பட்டு, போயசு தோட்டத்தின் உத்தரவின்படியே அவை நடந்தன, நடந்து வருகின்றன.corrupt-poes-jaya
முட்டை தொடங்கி மின்சாரம் கொள்முதல் செய்வது வரை, பல்கலைக்கழகத் துணைவேந்தர் தொடங்கி கோவில் செருப்புக் கடைக்கு டெண்டர் விடுவது வரையில் அ.தி.மு.க. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும், ஒவ்வொரு திட்டமும் இலஞ்சம் இல்லாமல் நகர்ந்ததில்லை. ஜெயா-சசி கும்பல் கோரும் கமிசன் கிடைக்கவில்லையென்றால், திட்டத்தையே ரத்து செய்யும் அடாவடித்தனத்தை உடன்குடி மின் திட்டம் நமக்கு எடுத்துக் காட்டியது. கமிசன் கிடைக்கும் என்றால், அதற்காகச் சட்ட திட்டங்களை வளைக்கும் சதித்தனத்தை அதானி குழுமத்தோடு போடப்பட்ட சூரிய ஒளி மின்கொள்முதல் ஒப்பந்தம் எடுத்துக் காட்டியது.
சூரிய ஒளி பூங்கா திட்டத்தின் மூலம் 3,000 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யப் போவதாக அறிவித்திருந்த அ.தி.மு.க. அரசு, இதற்காக ஏலம் நடத்தி, 52 நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றிடமிருந்து ரூ.6.48-க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை வாங்குவது என முடிவெடுத்திருந்தது. இந்நிலையில் அதானி குழுமத்தை உள்ளே நுழைப்பதற்காக இந்த டெண்டரே ரத்து செய்யப்பட்டு, ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.7.01 என நிர்ணயிக்கப்பட்டு, அதானி குழுமத்திடமிருந்து 648 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. இவையெல்லாம் கமிசன் இல்லாமல், மாநிலத்தின் நலன் கருதித்தான் நடந்ததாகச் சொல்ல முடியுமா?
அதானி குழுமத்தோடு போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தால் தமிழக மின்வாரியத்திற்கு 25,000 கோடி ரூபாய் நட்டம் ஏற்படும்; இந்த ஒப்பந்தத்தைப் போடுவதற்கு ஒரு மெகாவாட்டிற்கு 40 இலட்ச ரூபாய் என்ற அளவில் 600 கோடி ரூபாய் கமிசன் கைமாறியிருக்கிறது எனக் குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதோடு, இது குறித்து விசாரிக்குமாறு தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
corrupt-poes-caption-1
மாநிலத்தின் அவசரத் தேவைகளுக்காக அதிக விலை கொடுத்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்ற விதியை வளைத்து, இந்தச் சதியும் மோசடியும் நடந்திருப்பதாக கிசுகிசு பத்திரிகைகள் குறிப் பிடுகின்றன. இதை மறுப்பதற்கில்லை என்றாலும், கமிசன் அடிப்பதற்காகவே இப்படிபட்ட விதிகள் சந்து பொந்துகளோடு உருவாக்கி வைக்கப்பட்டிருப்பதை ஜெயா எடுத்துக்காட்டியிருப்பதையும் இங்கே நாம் மறவாமல் குறிப்பிட வேண்டும்.
தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதைக் கொள்கையாகவே கடைப்பிடித்துவரும் அ.தி.மு.க. அரசு, இதற்காகவே தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட அரசு மின்திட்டங்களை உரிய காலத்தில் முடிக்காமல் முடக்கியது; தனது ஆட்சிக்காலத்தில் புதிய மின் திட்டங்கள் எதையும் வகுக்காமல் அலட்சியமாக நடந்துகொண்டது. தனியாரிடம் நடத்தப்பட்ட மின்சாரக் கொள்முதல் ஜெயா- கும்பலுக்கு கமிசனை வாரிக் கொடுக்க, மின்வாரியமோ பெரும் நட்டத்தில் மூழ்கியது.
தி.மு.க. பதவி விலகிய சமயத்தில் மின்வாரியத்தின் நட்டம் 45,000 கோடி ரூபாயாக இருந்தது. இந்தத் தொகை அதற்கு முந்தைய அ.தி.மு.க. அரசு (2001-2006) விட்டுச் சென்ற நட்டத்தையும் உள்ளடக்கியது. மின்வாரியத்தை மீட்கப் போவதாகச் சவடால் அடித்து ஆட்சியைப் பிடித்த ஜெயாவோ, இந்த ஐந்தாண்டில் மட்டும் வாரியத்தின் நட்டத்தை முந்தையதைப் போல இன்னொரு மடங்கு அதிகரித்து, ஒரு இலட்சம் கோடி ரூபாய் நட்டத்தில் வாரியத்தை மூழ்கடித்துவிட்டார். மின் கட்டண சுமை, வாரியத்தின் நட்டம் மட்டுமின்றி, மீண்டும் மின்வெட்டு என்ற இடிகளைத்தான் தமிழக மக்களின் மீது இறக்கியிருக்கிறது, அ.தி.மு.க. ஆட்சி.
அம்மா ஆட்சியின் மிகப்பெரிய சாதனை 24 முறை அமைச்சரவை மாற்றப்பட்டதுதான். போயசு தோட்டத்திற்கு ஒழுங்காக கமிசன் வந்து சேரவில்லை என்ற காரணத்திற்காகத்தான் அமைச்சர்கள் தூக்கியடிக்கப்பட்டார்கள் என்பது ஒவ்வொரு முறையும் அம்பலமானலும், இந்த நடவடிக்கைகளை ஜெயாவின் துணிச்சலுக்கு உதாரணமாகக் காட்டி மக்களை ஏய்த்து வந்தது, துக்ளக் சோ, தினமணி வைத்தியநாத அய்யர் உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல்.
ஊழல் அமைச்சர்கள்
சட்டவிரோதமான முறையில் 30,000 கோடி ரூபாய் அளவிற்குச் சொத்து குவித்திருப்பதாக எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ள அ.தி.மு.க அமைச்சர்கள் (இடமிருந்து) ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்தியநாதன் மற்றும் பழனியப்பன்.
ஆனால், இம்முறை அப்படி ஏய்க்க முடியாதபடி ஐவரணி விவகாரம் சந்தி சிரிக்கிறது. போலீசையும் உளவுத்துறையும் ஏவிவிட்டு, ஓ.பி.எஸ். உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் பாயும் நடவடிக்கைகள் இந்த ஆட்சியின் உண்மை சொரூபத்தைப் புட்டு வைக்கின்றன.
ஒரு வேட்டைக்காரன் நாயைப் பழக்கி வைத்திருப்பது முயலை அடித்துக்கொண்டு வந்து தன் காலில் போடத்தான். நாயே முயலை அடித்துச் சாப்பிட்டுவிடுமானால், வேட்டைக்காரன் நாயை வளர்ப்பதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும் என ஜெயா ஆட்சியில் அமைச்சர்களின் இடத்தை அம்பலப்படுத்துகிறார், பழ.கருப்பையா.
கமிசனையும் இலஞ்சத்தையும் வாங்கி, அதனை போயசு தோட்டத்தில் கொண்டு சேர்ப்பதுதான் அமைச்சர்களின் வேலை; அதனை எண்ணிப் பார்த்து பதுக்குவதுதான் போயசு தோட்டத்தில் நடக்கும் வேலை என்பதை பழ.கருப்பையாவின் இந்த பொழிப்புரையும், உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமியின் தற்கொலையும், அம்மாவுக்குத் தெரியாமல் எதுவுமே நான் செய்யவில்லை என அக்ரி கிருஷ்ண மூர்த்தி அளித்த ஒப்புதல் வாக்குமூலமும் நிறுவுகின்றன.
ரப்பர் தோட்டங்கள், எஸ்டேட்டுகள், வீட்டு மனைகள், பங்குச் சந்தை முதலீடுகள் – என விரிந்திருக்கும் இந்த ஐந்து அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு 30,000 கோடி ரூபாயைத் தொடும் எனக் கூறுகிறார், பா.ம.க. ராமதாசு. இலண்டனைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ஓக்லி பிராப்பர்டி, கட்டுமான கார்ப்பரேட் நிறுவனமான காஸா கிராண்ட், நியூயார்க் நகரில் விலையுயர்ந்த ஓட்டல் ஆகியவற்றில் இந்த அமைச்சர்களுள் ஒருவர் முதலீடு செய்திருப்பதாகக் கூறுகிறார், கருணாநிதி.
அந்த ஐந்து அமைச்சர்களும் சட்டவிரோதமாக சொத்துக்களைக் குவித்திருக்கிறார்கள் என்பதற்காக நடவடிக்கைகள் பாயவில்லை. தனக்குத் தெரியாமலும் தனக்குரிய கப்பத்தைக் கட்டா மலும் சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார்கள் என்பதைத்தான் கோமளவல்லியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
நாற்பது திருடர்களுள் ஒருவராக வலம் வந்த ஐவரிடமே கடந்த ஐந்து வருடங்களில் இவ்வளவு சொத்துக்கள் என்றால், இந்தக் கொள்ளையர்களின் தலைவியாக இருக்கும் ஜெயா- கும்பலிடம் எத்தனை ஆயிரம் கோடி சொத்து குவிந்திருக்கும்? கற்பனை செய்யும்போதே தலை கிறுகிறுத்துப் போகிறது.
                                                                                                                                                – குப்பன்
_____________________________
நன்றி:புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2016
_____________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?