அராஜக ஆயுதம்!

'அவதூறு வழக்கு'  

காவல்துறை... கண்ணீர்ப் புகை... லத்தி சார்ஜ்... துப்பாக்கிச் சூடு... இவைதான்  ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் மிரட்டல் ஆயுதங்களாக  பெரும்பாலும் அறியப்படுகின்றன. இந்த ஆயுதங்களின் வரிசைப் பட்டியலில் ‘அவதூறு வழக்கு’ என்றொரு நூதன ஆயுதத்தையும் இன்றைய ஆட்சியாளர்கள் சேர்த்துள்ளனர்.
ஜனநாயகத்தின் ‘வாட்ச் டாக்’ என்று வர்ணிக்கப்படும், எதிர்க்கட்சிகளையும் ஊடகங்களையும் அச்சுறுத்த தமிழக ஆட்சியாளர்களின் முதல் ஆயுதமாக, ‘அவதூறு வழக்கு’ மாறிவிட்டது. கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பாரம்பரியம் இங்கு வழக்கத்தில் இருந்தாலும், ஜெயலலிதா ஆட்சியில் தீவிரம் பெற்றதுபோல், வேறு எந்த ஆட்சியிலும் அவதூறு வழக்குத் தாக்குதல் தீவிரமாக இருந்ததில்லை. 2011 - 2016 வரையிலான 5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் 213 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. இதை உச்சநீதிமன்றத்தில் பெருமையாகச் சொல்லி இருக்கிறது தமிழக அரசு.
யார் மீது எத்தனை வழக்குகள்?

தி.மு.க தலைவர் கருணாநிதி உட்பட தி.மு.க-வினர் மீது 85 வழக்குகள்; விஜயகாந்த் உள்ளிட்ட தே.மு.தி.க-வினர் மீது 48 வழக்குகள்; 'ஆனந்த விகடன்' உள்ளிட்ட பத்திரிகைகள் மீது 55 வழக்குகள்; பா.ம.க மீது 9 வழக்குகள்; ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது 7 வழக்குகள்; பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது 5 வழக்குகள்; ம.தி.மு.க., சி.பி.எம்., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர்கள் மீது 4 வழக்குகள் என மொத்தம் 213 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
 ஜனநாயகமல்ல... சர்வாதிகாரம்!

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த அவதூறு வழக்குகள், ஜெயலலிதா என்ற தனிநபர் குறித்துப் பேசியதற்கோ - எழுதியதற்கோ அல்ல; ஜெயலலிதா என்ற தனிநபர் வாழ்க்கை குறித்து விமர்சித்ததற்காகப் போடப்பட்ட வழக்குகளும் அல்ல; மாறாக, தமிழக முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருக்கும் ஜெயலலிதாவின் செயல்பாடு, அவரது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் செயல்பாடு, இவர்கள் நடத்திய ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள், அந்தத் திட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து, மக்கள் மன்றத்தில் பேசியதற்காகவும், பத்திரிகைகளில் எழுதியதற்காகவும் போடப்பட்ட வழக்குகள்.
இந்த வழக்குகளின் உண்மையான நோக்கம், மறைமுக அச்சுறுத்தலே. ஆட்சியாளர்கள் சொல்வதுதான் திட்டம்; ஆட்சியாளர்கள் செய்வதுதான் சட்டம்; அதைக் குறை சொல்லவோ, எதிர்க்கவோ யாருக்கும் உரிமை இல்லை; அதைச் செய்ய யாரும் துணியக் கூடாது என்பதை உணர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம். சுற்றிவளைக்காமல் சொன்னால், ‘சர்வாதிகார ஆட்சி’ என்பதே பொருள்.
உச்சக்கட்ட அராஜகம்!

ஒரு பத்திரிகை, செய்திக் கட்டுரையாக அல்லது தலையங்கம் வெளியிட்டு சுயமாக அரசாங்கத்தை விமர்சனம் செய்வதற்கு, அவதூறு வழக்குத் தாக்கல் செய்வதைக்கூடப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், எதிர்க் கட்சித் தலைவர் ஒருவர் அரசாங்கத்தை விமர்சனம் செய்து பேசியதை, செய்தியாக பத்திரிகைகள் வெளியிடும்போது, அதற்கும் அவதூறு வழக்குத் தாக்கல் செய்யும் சர்வாதிகாரம் தமிழகத்தில் மட்டுமே இருக்கிறது. அ.தி.மு.க தலைமையில் அமைந்த, முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசாங்கம்தான், இந்தப் புதிய அச்சுறுத்தல் கலாசாரத்தைக் கண்டுபிடித்துள்ளது.  
இந்தப் புதிய அச்சுறுத்தலுக்கு முதல் பலியானது, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ். 2011-ம் ஆண்டு, 'நக்கீரன்' பத்திரிகை, ஜெயலலிதாவின் உணவுப்பழக்கம் குறித்து ஒரு செய்தி வெளியிட்டது. அதற்காக, 'நக்கீரன்' மீது அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டது. அத்துடன், சென்னை, ஜானி ஜான்கான் சாலையில் இருந்த அதன் அலுவலகமும், அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க-வினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டது. இந்தச் சம்பவங்களைத் தொகுத்து, மறுநாள் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது. அப்படிச் செய்தி வெளியிட்டதற்காக, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் மீது அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டது.

சென்னையில் பரவிவந்த காலரா நோய், அதைத் தடுக்கத் தவறிய சென்னை மாநகராட்சியைக் கண்டித்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் கலந்துகொண்டு பேசிய அவர், ''மாநிலத்தின் தலைநகரில் காலரா பரவிவரும்போது, ஒரு முதலமைச்சரால் எப்படி நிம்மதியாகக் கொடநாட்டில் ஓய்வெடுக்க முடிகிறது?'' எனக் கேள்வி எழுப்பினார். அதற்காக, தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் மீது ஓர் அவதூறு வழக்குப் போடப்பட்டது. அத்துடன், மு.க.ஸ்டாலினின் பேச்சை வெளியிட்ட, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, 'தினகரன்’ நாளிதழ்கள் மீதும் அவதூறு வழக்குகள் போடப்பட்டன.
'ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்’ எனச் சொன்னதற்காக கருணாநிதி மீதும், அதைச் செய்தியாக வெளியிட்ட, 'முரசொலி' நாளேட்டின் மீதும் அவதூறு வழக்குகள் பாய்ந்தன. இதுபோன்ற ஓர் உச்சகட்ட அராஜகம், தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் கிடையாது.  
விகடன் மீது வரிசையாய் பாய்ந்த வழக்குகள்!

தமிழகத்தில் அ.தி.மு.க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து, 'ஆனந்த விகடன்' இதழில், 'மந்திரி தந்திரி’ என்ற கட்டுரைத் தொடர் வெளியானது.( முந்தைய தி.மு.க. ஆட்சியின் போதும் 2006-2011 இதேபோன்று அன்றைய அமைச்சர்கள் குறித்து ஆனந்தவிகடன் தொடர்ந்து எழுதியது) இந்தக் கட்டுரைகள் தமிழக மக்களிடையே பரபரப்பாக வாசிக்கப்பட்டன. ஒட்டுமொத்த அமைச்சரவைக்கும் தலைமை நிர்வாகியாக இருக்கும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் குறித்து, 'என்ன செய்தார் ஜெயலலிதா?’ என்ற தலைப்பில், 2015 நவம்பர் 25-ம் தேதியிட்ட 'ஆனந்த விகடன்' இதழில் கட்டுரை வெளியானது. ‘மந்திரி - தந்திரி’ தொடராக 30 வாரங்கள் வெளியாகின.

ஒவ்வொரு வாரமும் வெளியான கட்டுரைக்கும், ஒரு வழக்கு என்ற அடிப்படையில் வரிசையாக 30 வழக்குகளைத் தமிழக அரசு தாக்கல் செய்தது. அத்துடன், 'ஜூனியர் விகடனி'ல் வந்த பல அட்டைப்பட கட்டுரைகளுக்கும் அவதூறு வழக்குகள் பாய்ந்துள்ளன. இவற்றோடு, 'ஆனந்த விகடன்', அரசாங்கத்தை விமர்சித்துக் கட்டுரை வெளியிடும் போதெல்லாம், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான 'நமது எம்.ஜி.ஆர்’, 'ஆனந்த விகடனை' மிகக் கடுமையாகவும் கொச்சையாகவும் விமர்சித்துக் கட்டுரை வெளியிடுவதையும் வழக்கமாக்கிக்கொண்டது.
தமிழக அரசு வழக்கறிஞர்கள் தபால்காரர்களா?

தமிழக அரசு, 'அரசு வழக்கறிஞர்களைத் தபால்காரர்களைப்போல் பயன்படுத்துகிறதா' என்று உச்ச நீதிமன்றம் எந்த அடிப்படையில் கேள்வி எழுப்பியதோ?

ஆனால், உண்மையில் இங்கு நிலவரம் அதுதான். தமிழகத்தில், அரசு வழக்கறிஞர்கள், தபால்காரர் களைப்போலத்தான் பயன்படுத்தப்படுகின்றனர். அதனால்தான், அவதூறு வழக்குப் போடுவதற்கும் அதைக் கண்காணிப்பதற்கும் தனியாக வழக்கறிஞர்களை நியமித்துள்ளது தமிழக அரசு. இவர்கள் எப்படிச் செயல்படுகின்றனர் என்றால்... எதிர்க் கட்சித் தலைவர்களின் அறிக்கைகள், அவர்களுடைய பத்திரிகை - தொலைக்காட்சிப் பேட்டிகள், பத்திரிகைகளில் வரும் விமர்சனக் கட்டுரைகள், தலையங்கங்களைத் தமிழக அரசின் சட்டத் துறை பிரித்தெடுக்கிறது.
 
அதில், தமிழக அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றி எதிர்மறை யான விமர்சனம் என எதை எல்லாம் கருதுகிறார்களோ, அதை எல்லாம், அரசுக் குற்றவியல் தலைமை வழக்குரைஞருக்கு அனுப்பிவைக்கின்றனர்.

அவர், எதில் அவதூறு வழக்குத் தொடுக்க முகாந்திரம் உள்ளது என ‘நோட்’ போட்டு சட்டத் துறைக்கு அனுப்புகிறார். அது தலைமைச் செயலாளருக்குப் போகிறது. அதன் பிறகு, அவதூறு வழக்குத் தொடுக்க அரசாணை பிறப்பிக்கப்படுகிறது.

அந்த அரசாணையை அடிப்படையாகவைத்து, கடந்த ஆட்சியில் சென்னை மாநகரக் குற்றவியல் அரசு வழக்குரைஞராக இருந்த ஜெகன், நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்கிறார். அதன்பிறகு, அந்த வழக்குகளைத் தொடர்ந்து நடத்தவும் கண்காணிக்கவும் என, அதற்கும் தனியாக அசோகன் என்கிற ஒரு வழக்குரைஞர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
கருணாநிதியும் ஜெயலலிதாவும்!

 கருணாநிதி ஆட்சியிலும் இது நடந்துள்ளது.

கடந்த முறை தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, எதிர்க் கட்சித் தலைவர்கள், பத்திரிகைகள் மீது 50 அவதூறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. குறிப்பாக, இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையில் போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில், கருணாநிதியின் அரசாங்கத்தைத் தமிழ் உணர்வாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

அந்த நேரத்தில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, இயக்குநர் பாரதிராஜா, சீமான், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் மீதும், 'ஜூனியர் விகடன்' பத்திரிகை மீதும் அவதூறு வழக்குகள் போடப்பட்டன.

2011-ம் ஆண்டில் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததுமே, அவதூறு வழக்குகள் போடும் வேலை தொடங்கிவிட்டது.

இதுவரை 213 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தி.மு.க தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீதும், 'ஆனந்த விகடன்', 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்', 'தி இந்து', 'டைம்ஸ் ஆஃப் இந்தியா', 'இந்தியா டுடே' உள்ளிட்ட பத்திரிகைகள் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
’’இது மிகமிக மோசமான சர்வாதிகார ஆவணம்!”

தமிழகத்தில் நிலவும் இந்த அசாதாரணச் சூழல்பற்றி அவதூறு வழக்குகளைச் சந்தித்துவரும் மூத்த பத்திரிகையாளர் மணியிடம் கருத்துக் கேட்டபோது, ‘‘ஓர் அரசாங்கம் தன் கொள்கைகளை விமர்சித்த பத்திரிகைகள் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர்கள் மீது, 5 ஆண்டுகளில் 213 வழக்குகளைப் போட்டுள்ள சர்வாதிகாரம், தமிழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடந்திருக்க முடியாது. இது சாதாரண சர்வாதிகாரப்போக்கு இல்லை. 
மிகமிக மோசமான சர்வாதிகார ஆணவம் என்று சொல்லலாம். 

ஜனநாயக நாட்டில் அரசாங்கத்தை ஆக்கபூர்வமாக விமர்சனம் செய்வதும், அதை ஆட்சியாளர்கள் பரிசீலனைக்கு உட்படுத்துவதும், அதற்குப் பதில் சொல்வதும் அவர்கள் கடமை. உலகம் ஏற்றுக்கொண்ட நடைமுறை அது. 
ஆனால், இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் மட்டும்தான், அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்க எடுக்கக்கோரி அவதூறு வழக்குகள் போடப்படுகின்றன. 
இத்தனை வழக்குகள் பாய்ந்தும்கூட அவற்றுக்கு எதிராக இங்கு ஊடகங்கள் ஒன்று திரளாததுதான் இந்த ஆட்சியாளர்களின் வெற்றி; அதைத்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்'' என்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் கண்டனங்களும் அறிவுரைகளும்!

தமிழக அரசின் அவதூறு வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை பிரபலம். ஒவ்வொருமுறையும் இந்தப் பிரச்னை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குச் சென்றபோது, அது கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளது.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், 'தன் மீது தமிழக அரசு போட்டுள்ள அவதூறு வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத்தை நாடினார். 
அதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சி.பன்ட் ஆகியோர், ''ஆட்சி, அரசின் நிர்வாகம், அரசின் கொள்கைகள் பற்றிய விமர்சனங்களை தனிநபர் மீதான அவதூறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அந்தப் போக்கை தமிழக அரசு முதலில் கைவிட வேண்டும். 
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 499 மற்றும் 500-ம் பிரிவுகள் விமர்சனங்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. அதைத் தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும்'' என்று அறிவுரை கூறினர்.
அதுபோல, மற்றொரு முறை இதே வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாகப்பன் அமர்வு, “எதிர்க் கட்சித் தலைவர்கள், ஆட்சியாளர்களையும் அரசாங்கத்தையும் சாதாரணமாக விமர்சிப்பதற்கெல்லாம், அவதூறு வழக்குத் தொடர்வதா?..
. வழக்குத் தொடர்வதற்கு முன், பேச்சில் அவதூறு உள்ளதா என்பதை ஆராய வேண்டாமா? ...
அரசு வக்கீல்களைத் தமிழக அரசு போஸ்ட்மேன்போலப் பயன்படுத்துகிறதா? 
ஓர் அரசியல் எதிராளி மீது அவதூறு வழக்குகளைத் தொடுப்பதற்கு அரசாங்கத்தைத் தூண்டும் வகையில் அனுமதி வழங்க ஒரு முதல்வர் தன்னுடைய அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்த முடியுமா'' எனக் கேட்டு கண்டனம் தெரிவித்தனர். 
நீதிபதி மிஸ்ரா மேலும் கூறியபோது, ''ஜனநாயகத்தில் ஓர் அரசியல் எதிரிக்கு, சாமான்ய மனிதர்களுக்கு இருப்பதைப்போல நடைபெறும் ஆட்சியை விமர்சனம் செய்வதற்கான உரிமை உண்டு'' என்றும் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குத்தான் இதை உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது என்பதையாவது அவர் புரிந்துகொண்டால் சரி.
                                                                                                         - ஜோ.ஸ்டாலின்,
                                                                                                                                                                                        ஆனந்த விகடன்.
========================================================================================

‘நீட்’ தேர்வில் வெற்றிபெற...
தமிழ் நாட்டில் தற்போது நடை முறையில் உள்ள பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெறுவது சிரமம் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். 
பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுவது சிரமம். 

இதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்துவதால் எந்தவித மாற்றமும் வராது என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
காரணம் தற்போது தமிழ் நாட்டில் உள்ள பிளஸ்-2 பாடத்திட்டம் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய நிலையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.

தற்போது இந்திய அளவில் கல்வி ,பாடத்திட்டங்கள் வெகுவாக மாறி விட்டது.
அதற்கேற்ப நம் தமிழக கல்வித்துறை பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும்.

சி.பி.எஸ் சி.பாத்திட்டங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பாடத்திட்டங்கள் அமைந்தாலே 
 ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு, ‘நீட்’ எனப்படும் அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத்தேர்வு ஆகியவைகளில் நம்தமஜித் நாட்டை சேர்ந்த மாணவர்கள் வெற்றிப் பெற முடியும்.


தற்போது நடத்தப்பட்ட  இந்ததேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களில் சி.பி.எஸ்.இ. படித்தவர்கள்  , மாநில கல்வி திட்டத்தில் படித்தவர்கள்  கலந்துகொண்டனர்.

அவர்களில் தமிழ் நாட்டு மாநில கல்வி திட்டத்தில் பயின்றவர்கள் இத்தேர்வு மிகக்கடினமாக இருந்ததாகவும் தங்கள் முடிந்த அளவு எழுதியுள்ளதாகவும் வெற்றி என்பது கடினம் என்றும் கூறியுள்ளார்கள்.
அப்படியே முடிவுகளும் வந்துள்ளன.

ஆனால் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அந்த மாநில அரசு பின்பற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டங்களில் படித்த மாணவ-மாணவிகள் அதிக எண்ணிக்கையில் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். 

தமிழக மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களும் ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு  கண்டிப்பாக  15 வருடங்களுக்கு முன்பு தயாரித்த பாடத்திட்டத்தை மாற்றவேண்டும். தமிழகத்தில் இப்போது நடைமுறையில் உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் தற்போது நடத்தப்படும் இந்திய அளவிலான போட்டித்தேர்வுகளுக்கு ஈடு கொடுப்பதாக இல்லை.

இன்றைய சூழ்நிலை, கல்வி,சமூக ,தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உடனடியாக புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டும். 

தமிழ்நாட்டில் பிளஸ்-1 பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது நம்  தமிழக மாணவர்களிடம்  இல்லை. 

ஆனால் ‘நீட்’ தேர்வில் பிளஸ்-1 வகுப்பில் இருந்துதான் அதிக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதை படித்து செல்லாத மாணவர்கள் பாடுதான் திண்டாட்டம்.
ஆனால் தமிழ்நாட்டில் பெயர் அளவில் தான் பிளஸ்-1 வகுப்புகள் நடத்தப்பட்டு, தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. 

அதனால்  பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டத்தை  மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது.. 
பாடத்திட்டத்தை மாற்றாதவரை ‘நீட்’ தேர்விலும், ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்விலும் தமிழகத்தை சேர்ந்த மாநில கல்விமுறையில் படித்த மாணவ-மாணவிகள் வெற்றிபெறுவது கண்டிப்பாக  சிரமமான காரியமாகும் . 

தற்போது  பள்ளிக்கல்வி இயக்குனரகம் ‘நீட்’ தேர்வுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினாலும் நம் கல்வி திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு வெற்றிபெறுவது சிரமம். 

சிறப்பு வகுப்புகளால் எந்த மாற்றமும் வராது என்ற   கருத்தையே  தமிழ்நாட்டு   கல்வியாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.                                                                                                                                   -
=======================================================================================
இன்று
ஆகஸ்டு-24.
நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம்
  • கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது(1690)
  • ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது(1936)
  • நேட்டோ ஒப்பந்தம் அமலுக்கு வந்தது(1949)
  • நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம் பிள்ளை இறந்த தினம்(1972)
  • உக்ரேன் விடுதலை தினம்(1991)

நாமக்கல் கவிஞர் ன மக்களால் அன்புடன் அழைக்கப்பெற்ற தி.வெ.இராமலிங்கம் பிள்ளை. மிகமிக எளிய சொற்களால் கவிதை பாடி விடுதலை வேட்கையை தமிழ்நாட்டில் பரப்பிய  கவிஞர். 
 பழைய சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் கரூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே அமைந்துள்ள மோகனூர் என்னும் ஊரில் 1888 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தை வெங்கட்டராம பிள்ளை தாயார் அம்மணி அம்மாள். அவ்வூர் ஹெட் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் வெங்கட்டராம பிள்ளை.
நாமக்கல் நம்மாழ்வார் பள்ளியில் தம் தொடக்கக் கல்வியைக் கற்றார். தனது உயர்நிலைக்கல்வியை கோயம்புத்தூரில் பயின்றார்.
 கல்லூரியில் படிக்கும் போதே அவரது தந்தையாரின் வற்புறுத்தலால் தந்தையின் சகோதரி கரூர் வீரப்ப பிள்ளையின் மகளான முத்தம்மாளை திருமணம் செய்து கொண்டார்.  1924 ஆம் ஆண்டு முத்தம்மாள் தீராத வயிற்று வலியால் தசுன்புற்று இறந்தார்.
 வாடிய இராமலிங்கம் பிள்ளையை நண்பர்களும் உறவினர்களும் தேற்றி அவரது மனதை மாற்றி மணைவியின் தங்கையான செளந்தரம்மாளை திருமணம் செய்து வைத்தனர்.  இவர்கள் மூன்று ஆண் குழந்தைகளையும், இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்றெடுத்தனர்.
 தந்தை வெங்கட்ராமன், காவல் துறையில் தலைமைக் காவலராகப் பதவி வகித்ததால், தன் மகனையும் காவல்துறையில் பணியாற்றச் செய்ய வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். காவல் துறைப் பணியை விரும்பாத இராமலிங்கர் தனது வீட்டை விட்டு வெளியேறி 15 நாள்கள் சுற்றித்திரிந்தார். 
இதனால் அவரது தந்தை அவரை மீண்டும் அழைத்து நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியை வாங்கித் தந்தார். வேலை செய்ய  மனமில்லாத இராமலிங்கர் சரிவர தனது பணிகளைச் செய்யாமல் பணியை உதறி வெளியேறினார்.
அதன்பின் நாமக்கல் தொடக்கப்பள்ளியொன்றில் ஆசிரியர் வேலையில் தந்தையார் அமர வைத்தார். அப்பணியிலும் ஈடுபாடு இல்லாமல் அடிக்கடி அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டு புரட்சிக் கனல் தெறிக்கப் பேசி வந்தார். இதன் காரணமாக தலைமையாசிரியர் அவரை வேலையில் இருந்து நீக்கினார். அதன் பிறகே அரசியலில் முழு ஈடுபாடு காட்டி அதில் ஈடுபடலானார்.
 புகைப்படம் போல் அதே வடிவில் தோற்றமிருக்குமாறு வரையும் திறமைபெற்ற கவிஞர், இவரது ஆசிரியராக இருந்த ஒரு ஆங்கிலேயர், எல்லியட் என்று பெயர், அவர் இவரது ஆற்றலை வளர்க்க உதவினார். இவர் ஓவியங்கள் நல்ல விலை போயின. அப்படி இவர் வரைந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியமொன்றை தில்லியில் நடந்த அவரது முடிசூட்டு விழாவில் பரிசளிப்பதற்காக 1912 இல் தில்லிக்குப் பயணமானார். ஓவியத்தைப் பார்த்து மன்னர் குடும்பம் இவருக்கு ஒரு தங்கப் பதக்கத்தை அளித்தது.
 இவருக்கு கவிதை புனையும் ஆற்றலும் இருந்தது. 1924 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்கார் அறிவித்த ஒரு போட்டியில் தேசபக்திப் பாடல்களை எழுதித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். 
அதுமுதல் இவர் பல கவிதைகளைப் புனைந்து தள்ளினார்.
 1930 இல் உப்பு சத்தியாக்கிரகத்துக்காக எழுதிய "கத்தியின்றி" பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இவரது பாடல்களை சங்கு கணேசன் தனது "சுதந்திரச் சங்கு" பத்திரிகையில் வெளியிட்டு வந்தார்.
அவருடைய தன் வரலாறான "என் கதை'யே நாவல் படிப்பதுபோல் விறுவிறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும். இவர் எழுதிய "மலைக்கள்ளன்', (இக்கதைதான் எம்.ஜி.ஆர நடிக்க திரைப்படமாகி ஜனாதிபதி பரிசை பெற்றது.இந்திய மொழிகள் பலவற்றிலும் தயாரிக்கப்பட்டது.)"மரகதவல்லி', "கற்பகவல்லி', "காதல் திருமணம்' ஆகிய புதினங்கள் வாசகர்களால் ரசித்துப் பாராட்டப்பட்டவை. 
"அவளும் அவனும்' என்ற சிறு காவியத்தை நாமக்கல் கவிஞர் எழுதியுள்ளார்.
வேதாரண்யம் கடற்கரையில் உப்புக் காய்ச்சுவதற்கான பாதயாத்திரையை ராஜாஜி தலைமையில், பாரதியாரின் பாடல்களைப் பாடிக்கொண்டே தொண்டர்கள் அணிவகுத்து நடைப்பயணம் சென்றனர். அப்போதுதான் நாமக்கல் கவிஞர் எழுதிய "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்' என்ற பாடலையும் தொண்டர்கள் உற்சாகத்தோடு பாடிக்கொண்டே சென்றனர். அந்தப் பாடலும், எழுதிய கவிஞரும் புகழ் பெற்றனர்.
 1932 இல் இவருக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. 
1937-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் போட்டியிட்டனர். கவிஞர் சேலம் நகராட்சி உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 1949இல் ஆகஸ்ட் 15 சுதந்திரத் திருநாளில் அப்போதைய சென்னை மாகாணத 'அரசவைக் கவிஞர்' எனும் பதவி வழங்கப்பட்டது. 1956 ஆண்டிலும் பின்னர் 1962ஆம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இவர் செயல்பட்டார்.
 மத்திய அரசு 1971 இல் இவருக்கு தில்லியில் 'பத்மபூஷன்' விருதளித்து பாராட்டியது.
 84 ஆண்டுகள் நிறை வாழ்வு வாழ்ந்த கவிஞர், காவிய ஓவியர் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை 1972-ஆம் ஆண்டு ஆகஸ்டு 24 ஆம் தேதி இரவு 2 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில், தாம் போற்றிய தமிழ்கூறு நல்லுலகைவிட்டு விண்ணுலகு அடைந்தார்.

 அவர் வாழ்ந்த இல்லத்தை தமிழக அரசு  நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடிக் கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது. தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம் அருங்காட்சியகத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
========================================================================================
   ஜால்ரா செய்திகளை மட்டுமே வெளியிட்டாலும் கொஞ்சம் சொரணை இருக்கத்தான் செய்கிறது.







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?