மாரீச மான்..

ஆர்எஸ்எஸ்...
இப்போது மின்னுவது போல் தோற்றமளிக்கும் வகையில் தன்னை வெளிக்காட்டிக் கொள்கிற ஆர்எஸ்எஸ்-சின் கடந்த காலம் மிகவும் அவக்கேடானது. 
அதைப் புரிந்து கொள்கிற எவரும் அந்த இயக்கத்தை அண்ட மாட்டார்கள். தீண்ட மாட்டார்கள். திரும்பிப் பார்க்க மாட்டார்கள். எனவேதான், அது தேசபக்தி முலாம் பூசி வருகிறது. 
ஆளும் அரசுக்கு அதாவது ஆர்எஸ்எஸ் என்கிற அமைப்பின் அரசியல் பிரிவான பாஜகவின் அரசாங்கத்தை, அதன் செயல்பாடுகளை விமர்சிப்போரெல்லாம் தேச விரோதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். மாட்டுக்கறி தின்றால் தேச விரோதி. 
செத்த மாட்டின் தோலை உரித்தால் தேச விரோதி. அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தால் தேச விரோதி என்று தேச விரோத சான்றிதழ், அவர்களின் சேமிப்புக்கிடங்கில் ஏராளமாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. 
தனது எதிரிகள் அனைவர் மீதும் அவர்கள் இந்த தேச விரோத முத்திரையை குத்திக் கொண்டே இருக்கிறார்கள். 
ஆனால், இவர்களின் தேசபக்தி எத்தகையது?
ஆர்எஸ்எஸ்-சும் அதன் தத்துவமும்:
ஆர்எஸ்எஸ் என்கிற அமைப்பு 1925-ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று பலிராம் ஹெட்கேவர் என்பவரால் Keshav-Baliram-Hedgewarஆரம்பிக்கப்பட்டது. அகண்ட பாரதத்தில் ஒரு இந்து ராஷ்டிரத்தை அமைப்பதுதான் அவர்களின் நோக்கமென சொல்லப்பட்டது. இதற்கான தத்துவமாக அவர்கள் இந்துத்துவாவை ஏற்றுக் கொண்டனர். 
இந்துத்துவா என்பதை வரையறுத்தவர் “வீர”சாவர்க்கர். இந்த வீர என்பது இவர்களே இட்டுக் கட்டி சேர்த்துக் கொண்டது. இந்த சாவர்க்கர் இங்கிலாந்தில் இருந்த பொழுது அன்றைய காலனி ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுதினார், பேசினார். 
இதன் காரணமாக கைது செய்யப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார். அது வரை பொங்கிப் பிரவாகம் எடுத்த சாவர்க்கரின் வீரம் அதன் பிறகு சாம்பலாகி கரைந்து போனது. சிறைக்குள் இருந்தபடி மன்னிப்பு கடிதம் எழுதினார். 
அதன் பிறகு, வெளியே வந்தார். வெளியே வந்த பிறகும், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் பிறகு இந்திய அரசாங்கத்திற்கும் 7 முறை மன்னிப்பு கடிதங்கள் எழுதினார். (கடிதங்களின் பட்டியல் அடைப்புக்குள் உள்ளது).
இவரை வீர சாவர்க்கர் என்பதை விட மன்னிப்பு கடிதங்களின் மன்னன் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும். இவர்தான் இந்துத்துவா என்பதை வரையறுத்தார். 
ஆர்எஸ்எஸ்-காரர்கள் இந்துத்துவா என்பதும், இந்து என்பதும் ஒன்று என்பது போல பசப்பித் திரிகிறார்கள். ஆனால் இந்துத்துவாவை வரையறுத்த சாவர்க்கர் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு நாத்திகர். அவரது மனைவி மரணமடைந்த போது இந்து முறைப்படி அடக்கம் செய்யக்கூடாது என்றும், சடங்குகள் எதுவும் செய்யக்கூடாது என்றும் உறுதியாக மறுத்து விட்டார். 
அவருடைய இந்துத்துவாவை கடைபிடிப்பவர்கள்தான் இந்துத்துவா என்பதை இந்து மதத்தோடும், மக்களோடும், கடவுளோடும் சில உணவுப்பழக்க வழக்கங்கள், உடை பழக்க வழக்கங்களோடும் இணைத்து மக்களை மோத விடுகிறார்கள்.
பற்றி எரிகையில் பார்வையாளராக :
இது ஒருபுறம் இருக்க, 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகள் சுதந்திரப் போராட்ட உணர்வு பற்றி எரிந்த காலம். மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளிகள் என சமூகத்தின் அத்தனை தரப்பினரும் தங்கள் படிப்பை புறக்கணித்து வேலையை புறக்கணித்து வீதியில் நின்று போராடினார்கள். தூக்கு மேடை ஏறினார்கள். 
துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானார்கள். 
சிறைச்சாலைக்கு போனார்கள். செக்கிழுத்தார்கள். 
மூவர்ணக்கொடியை கீழே விழுந்து விடாதபடி பிடித்ததற்காகவே அடிபட்டு செத்துப்போனார்கள்.
இந்த காலத்தில்தான் 1925ல் ஆர்எஸ்எஸ் உருவானது. 
அந்த இயக்கம் ஆங்கிலேயர்கள் இந்தியத் தாயின் ஒவ்வொரு அங்கத்தையும் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கொத்தி, குதறிக் கொண்டிருந்த காலத்தில் உருவானது. எனவே அந்த இயக்கம் இந்திய மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த இந்திய மக்களின் உணர்வாய் இருந்த அந்தப் போராட்டத்தில் அதன் பங்கு என்னவாக இருந்தது என்கிற கேள்வி மிக முக்கியமானது. 
இந்தக் கேள்விக்கு அந்த இயக்கத்தால் நேர்மையான பதிலை தர முடியாது. ஒருவேளை அது நேர்மையான பதிலை கொடுக்கும் என்றால் இந்திய மக்கள் மத்தியில் அதனால் தலை நிமிர்ந்து நடக்க முடியாது. ஒரு நாடு அந்நியரிடம் அடிமைப்பட்டு இருந்த போது அந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்குமான கடமை, வேறு எதையும் விட அந்த நாட்டின் விடுதலைக்காக போராடுவது மட்டுமாகவே இருந்திருக்கும். 
பாரதியின் வார்த்தைகளில் சொல்வதானால் “மேலோர்கள் வெஞ்சிறையில் வாடினர்” ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர்கள் ஒருவர் கூட, ஒருவர் கூட சுதந்திரப்போராட்டத்தில் சிறைக்குப் போனது கிடையாது.
நாங்களும் … தான் :
சில ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் டாக்டர் ஜி சிறைக்கு போனாரே என்பார்கள். ஆமாம், டாக்டர் பலிராம் ஹெக்டேவர் ஆர்.எஸ்.எஸ்.சின் நிறுவனத் தலைவர் இரண்டு முறை சிறைக்கு போயிருக்கிறார். ஒருமுறை 1920 அப்போது ஆர்.எஸ்.எஸ். ஆரம்பிக்கப்படவில்லை. 
ஹெக்டேவர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தார். எனவே அது ஆர்.எஸ்.எஸ். கணக்கில் சேராது. அதன் பிறகு 1930-ல் ஒரு முறை ஆர்.எஸ்.எஸ். தலைவரான பிறகு அவர் சிறைக்கு போனார். ஆனால் அப்போது ஒரு அமைப்பு என்கிற முறையில் ஆர்.எஸ்.எஸ். அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாது என்று அறிவித்துவிட்டார். 
அதையும் மீறி ஆர்.எஸ்.எஸ்.க்காக யாரேனும் சிறைக்குப் போனால் அது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்று சொல்லி நகர்ந்து விட்டார். ஆனால் டாக்டர் ஜி சிறைக்கு போனாரே என்று அவர்கள் பெருமிதத்தோடு கேட்பார்கள். டாக்டர் ஜி எதற்காக ஜெயிலுக்கு போனார் என்பதை அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் பதிவு செய்திருக்கிறார். 
சிறைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டு சென்றிருக்கும் காங்கிரஸ்காரர்களை அங்கு சந்தித்து அவர்களையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். வேலைக்கு அழைத்து வருவதற்காகத்தான் சென்றதாக கூறியிருக்கிறார். 
எனவே, அவர் மனதில் சுதந்திர தாகம் கொளுந்து விட்டு எரிந்து அதன் காரணமாக சிறைக்கு செல்லவில்லை.
இதைத் தவிர ஆர்.எஸ்.எஸ்.சின் எந்த காக்கை, குருவியும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு எந்தக் காலத்திலும் சிறைக்குப் போனதே கிடையாது. 
அந்த இயக்கத்தின் இரண்டாவது தலைவராகவும் இந்திய விடுதலைக்கு ஏழு வருடத்திற்கு முன்பாக தலைமை பொறுப்பை ஏற்றிருந்தவரும் அந்த இயக்கத்தின் தத்துவார்த்த ஆசானாக கருதப்படுவோரும் குருஜி என்று அழைக்கப்படுவருமான திரு. மாதவ சதாசிவ கோல்வால்கர் ஒரு போதும் ஜெயிலுக்கு போனதில்லை. 
சுதந்திரப் போராட்டத்தில் ஓரம் சாரமாக நின்று வேடிக்கை கூட பார்த்ததில்லை. தலைவர் எவ்வழியோ அவ்வழியே ஆர்.எஸ்.எஸ்சின் அத்தனை உறுப்பினர்களும் இருந்தார்கள்.
ஆங்கிலேயருக்கு வெண்சாமரம், பகத்சிங்கிற்கு ?
இது ஒருபுறமிருக்க போராடவில்லை என்றாலும் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாராட்டினார்களா என்றால் அதுவும் இல்லை. 
மாறாக, பகத்சிங் போன்று தூக்கு மேடையை ஏறியவர்களை அவர்கள் தூக்கில் தொங்கினார்கள், எனவே வெற்றி பெறாமல் இருப்பதற்கு ஏதோ காரணம் இருந்தது, எனவே அவர்களை உதாரண புருசர்களாக கொள்ள முடியாது என்று ஏகடியம் செய்தார்கள்.
சரி, ஜெயிலுக்கு போகவில்லை, போராட்டத்தில் ஈடுபடவில்லை, போராளிகளை பாராட்டவில்லை, அவர்களிடம் ஏதோ குறை இருந்தது என்று விமர்சித்தார்கள், ஆனால் பிரிட்டிஷ்காரர்கள் தேவ தூதர்களா இந்திய மக்களை பாதுகாக்க வந்தவர்களா? 
அவர்களைப் பற்றி எங்கேனும் ஆர்.எஸ்.எஸ். விமர்சனம் செய்திருக்கிறதா? 
ஒரு இடத்தில் கூட அப்படி ஒரு விமர்சனத்தை வைக்கவில்லை. 
வாயால் மட்டும் பேசிவிட்டு, செயலில் ஈடுபடாதவர்களை வாய்ச் சொல் வீரர் என்பர். ஆனால் வாய்ச் சொல் கூட வீச முடியாத அளவிற்கு அத்துணை வீரர்களாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இருந்தார்கள் என்பது உண்மை. மாறாக, பல இடங்களில் தங்கள் எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும் ஆர்.எஸ்.எஸ்,. தலைவர்கள், ஆங்கிலேயர்களைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். 
இது தான் ஆர்.எஸ்.எஸ்.சின் தேசத் தொண்டு, தேச பக்தி.
இப்படி தங்கள் கடந்த காலம் அவக்கேடாக இருக்கிற காரணத்தினால் சுதந்திரப் போராட்டத்தை முன்வைத்து தேச பக்தியை பேசினால் டவுசர் கிழிந்த போகும் என்று அவர்களுக்கு தெரியும். 
எனவே தான் மாட்டுக்கறி சாப்பிடாதவன் தேச பக்தன், கோழிக்கறி தின்பவன் தேச பக்தன் என்று தேச பக்திக்கு தின்னிய விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவமதிப்புக்கு தப்பாத தேசியக்கொடி :
ஓ ரு தேசத்தில் ஒரு குடிமகன் தேசியக் கொடியை வணங்குவதும், மரியாதை கொடுப்பதும் மிக முக்கியமான அம்சம். 
ஆனால் 1947 ஆகஸ்ட் 14ந் தேதி ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரப் பூர்வ பத்திரிகை இப்படி எழுதியது. “நாங்கள் மூவர்ணக் கொடியை வணங்கவும் மாட்டோம், மதிக்கவும் மாட்டோம்” என்று. 1949 நவம்பர் 8-ந் தேதி அதே ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை எழுதியது. 
“மனுநீதியை ஏற்காத அரசியல் சட்டத்தை ஏற்க மாட்டோம்” என்று. 
மனிதர்களில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பிறப்பால் பிரித்து வைக்கிற மனுநீதி தான் அவர்களின் வேதப் புத்தகமானது. 
2002ம் ஆண்டு வரை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் மூவர்ணக் கொடியை அவர்கள் ஏற்றியதே கிடையாது. 
இவர்கள் தான் தேச பக்தியை பற்றி பேசுகிறார்கள்.
எனவே நாட்டின் விடுதலைக்காக போராடுவது அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்பது, தேசியக் கொடியை வணங்குவது, போற்றுவது என்று எதை எடுத்தாலும், எதைப்பற்றி பேசினாலும் அவர்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறி தடுக்கி விழுந்து விடும். 
எனவே தான் அவர்கள் தேசபக்திக்கு புது இலக்கணம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள்.
முஸ்லீமாக இருந்தால், கிறித்தவனாக இருந்தால் மதச்சார்பற்றவனாக இருந்தால் சுருக்கமாய் சொல்வதென்றால் பாஜக ஆட்சியின் கொள்கைகளை ஆதரிக்காதவன் என்றால் நீ தேச விரோதி என்று முத்திரைக் குத்த ஆரம்பிக்கிறார்கள். 
மேற்கண்ட எந்தவொன்றையும் அளவீடாக கொண்டால் ஆர்.எஸ்.எஸ். என்கிற அமைப்பை எந்தவொரு இந்தியனையும், எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 
எனவே தான் ஆர்.எஸ்.எஸ். பாஜக அதன் பரிவாரங்கள் தேச பக்திக்கு புது விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போதும் அவர்கள் முஸ்லிம் லீக்தான் இந்தியா இரு நாடுகளாக பிரிந்ததற்கு காரணம் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் மோடி அரசாங்கம் தேச பக்தர் என்று புகழாரம் சூட்டி இந்து மகா சபையின் தலைவராக இருந்த ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு தபால்தலை வெளியிட்டது. 
அந்த ஷியாமா பிரசாத் முகர்ஜி வங்க மாநிலத்தில் முஸ்லிம் லீக்கோடு கூட்டணி மந்திரி சபையில் நிதியமைச்சராக இருந்த போதுதான் வங்காளத்தை பிரிப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வங்காளத்தில் மட்டுமன்றி சிந்து மாகாணம் மற்றும் வடமேற்கு எல்லை மாகாணம் ஆகியவற்றில் இருந்த காங்கிரஸ் அரசாங்கங்களை கவிழ்த்து விட்டு முஸ்லிம் லீக்கோடு இணைந்து இந்து மகா சபை ஆட்சியதிகாரத்தை பங்கிட்டுக் கொண்டார்கள். 
இன்னும் சொல்ல ஏராளம் இருக்கிறது. 
அவர்களால் எழுதப்பட்ட அவர்களின் எழுத்துக்களே இத்தனைக்கும் சாட்சியாய் இருக்கிறது.
தங்களின் அவக்கேடான கடந்த காலத்தை மறைப்பதற்காக சில நேரங்களில் அவர்களின் சில தலைவர்களை அரிதாரம் பூசி இவரும் சுதந்திரப் போராட்ட வீரர்தான் என்று நிறுத்தும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார்கள். 
1999 தேர்தலுக்கு முன்பாக அட்டல் பிஹாரி வாஜ்பாயையும் கூட சுதந்திரப் போராட்ட வீரர்தான் என்று அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.
 பிரண்ட் லைன் ஏடு 1998 பிப்ரவரி 7-20 தேதியிட்ட இதழில் அப்போது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஆவணக்காப்பகத்தில் உள்ள ஆவணங்களை வெளியிட்டு அதை பொய்யாக்கியது. உடனடியாக வாஜ்பாயின் சார்பில் அந்த பத்திரிகைக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டது. 
தங்களுடைய எழுத்தும், தரவுகளும் சரியானவை என்று பிரண்ட் லைன் உறுதிபடக் கூறிய போது வாஜ்பாய் வக்கீல் நோட்டிசை திரும்பப் பெற்றுக் கொண்டார். 
அவக்கேடான கடந்த காலத்தை மறைப்பதற்காக பொய் சொல்வதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல மாரிசன் மானாக இருந்த தருணம் போன்று இந்த தருணம் 1420604516அவர்கள் அழகாக காட்சி தருகிறார்கள். மாரிசனின் கடந்த காலம் அரக்கன், ஆர்.எஸ்.எஸ்.சின் கடந்த காலம் தேச விடுதலை இயக்கத்திற்கு துரோகமிழைத்தது. மாரிசனின் மான் வேடத்திற்கு பிந்தைய காலம் அவனுடைய இறப்பில் முடிந்தது. 
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வரலாறு வெளிப்படும் போது அதன் மொத்த கொள்கையும் முடிவுக்கு கொண்டு வரப்படும். 
அந்த நாளை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகன் கையிலும் இருக்கிறது. மிகக் குறிப்பாக ஒவ்வொரு இளைஞனின் கையிலும் இருக்கிறது. 
ஆர்.எஸ்.எஸ். எனும் போது அது ஒரு கவர்ச்சிக்கரமான கவரிங், மிக அழகான மாரீசமான் என்பதை ஒவ்வொருவரும் மனதில் நிறுத்த வேண்டும்.
1911 முதல் 1950 வரை 40 ஆண்டு காலத்தில் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் “வீர” சாவர்க்கர் எழுதிக் கொடுத்த மன்னிப்பு கடிதங்களின் விபரம் கீழே. உலகத்தில் எந்த புரட்சிக்காரனும், எந்த உத்திக்காகவும் இத்தனை முறை மன்னிப்புக் கடிதம் எழுதித் தந்து சாதனைபடைத்திருக்க மாட்டான்.
வ.எண்.    ஆண்டு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுக்கப்பட்ட அதிகாரி
1. 1911 ஜூலை 4, 1911ல் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார்.
6 மாத காலத்திற்குள் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தார்.
2. 1913 நவம்பர் 14, 1913, சர் ரெஜினால்டு கார்டக் – வைஸ்ராயின்
எக்ஸ்க்யூட்டிவ் கவுன்சில் உறுப்பினர்.
3. 1917 அரசுக்கு
4. 1920 மார்ச் 30, 1920 – அரசுக்கு
5. 1924 அரசுக்கு
6. 1948 பிப்ரவரி 22, 1948 – போலீஸ் கமிசனர் – பாம்பே.
7. 1950 ஜூலை 13, 1950 – தலைமை நீதிபதி எம்.சி. சாக்லா,
நீதிபதி கஜேந்திர கட்கர், பாம்பே உயர்நீதிமன்றம்.
                                                                                                                                      -

                                                                                                                                      -க.கனகராஜ்

  நன்றி:'"இளைஞர் மு‍ழக்கம்" '
==================================================================================================================
உலகநாயகன்  கமல் ஹாசனுக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான, 'செவாலியர் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.பல்வேறு துறைகளில், சிறந்து விளங்குபவர் களை பெருமைப்படுத்தும் வகையில், பிரான்ஸ் அரசு, 1957 முதல், ஆண்டுதோறும் செவாலியர் விருது வழங்கி, கவுரவித்து வருகிறது. 'இந்த ஆண்டுக்கான செவாலியர் விருது, நடிகர் கமல் ஹாசனுக்கு வழங்கப்படும்' என, பிரான்ஸ் அறிவித்துள்ளது. 
பிரான்ஸ் நாட்டின் கலாசாரத்துறை அமைச்ச கம், சிறந்த நடிப்பாற்றலுக்காக, இந்த விருதை கமலுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக, 1995ல், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு, இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. 

கடந்த, 1960ல் வெளியான, களத்துார் கண்ணம்மா படம் மூலம், குழந்தை நட்சத்திர மாக,சினிமாவில் அறிமுகமான கமல், 57 ஆண்டு களாக, திரைப்படத் துறையில் பல்வேறு சாதனை களை படைத்து வருகிறார். இதுவரை, 18 பிலிம்பேர் விருது, பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருது, கவுரவ டாக்டர் பட்டம், மூன்று முறை தேசிய விருது என, எண்ணற்ற விருதுகளை கமல் பெற்றுள்ளார்.

விரைவில் பிரான்சில், அவருக்கு செவாலியர் விருது வழங்கப்பட உள்ளது. 
செவாலியர் விருது குறித்து, வாட்ஸ் ஆப்பில் கமல்ஹாசன் :

செவாலியர் விருதை பெருமிதத்துடன், நன்றியுடன் ஏற்கிறேன். அவ்விருதின் பெருமையை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய சிவாஜி, சத்யஜித் ரேயை என் கரம் கூப்பி வணங்குகிறேன். இனி நாம் செய்ய வேண்டிய கலை, இலக்கிய பணிக்கான ஊக்கியாகவே இவ்விருதை உணர்கிறேன்.
கலை கடற்கரையில், கை மண்ணளவு அள்ளிவிட்ட பெருமை, எவ்வளவு சிறுபிள்ளை தனமானது என்பதை உணர்கிறேன். வயதில்லாது என்றும் ஆர்ப்பரிக்கும் கலை கடல் அலைகள், இத்தகைய தருணங்களில் கரை மோதி, என் போன்றோர் முகத்தில் தெளித்து, உப்பிட்டவர் நினைவை உணரச் செய்கிறது.

இதுவரையான என் கலை பயணம், தனிமனித பயணம் இல்லை என்பதை உணர்கிறேன். கைதாங்கி எழுத்தும், கலையும் அறிவித்தபெருங்கூட்டத்துடன் நான் ஏற்ற யாத்திரை இது என்பதையும் உணர்கிறேன். பெரும்பான்மை தமிழகத்து ரசிகர்கள், ௪ வயது முதல் என் கைப்பிடித்து படியேற்றி, பீடத்தில் அமர்த்தி பார்க்கும் தாய்மை உள்ளம் கொண்ட அவர்களுக்கும் இவ்விருது அர்ப்பணம்.

என் பெற்றோர் இருந்து பார்க்க இயலாத குறை, என் குடும்பத்தில் எஞ்சிய பெரியோரும், இளையோரும், என் சிறு வெற்றிக்கும் ஆர்ப் பரிக்கும் என் ரசிகர்கள் கூட்டம் போக்கி விடு கிறது.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
===========================================================================================

இன்று,

ஆகஸ்டு-22.


  • சென்னை நகரம் உருவாக்கப்பட்ட தினம்(1639)
  • தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது(1926)
  • 12 நாடுகள் இணைந்து ஜெனீவாவில் செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்தன(1864)
  • நெப்டியூனின் முதல் கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது(1989)
சென்னை தினம் என்பது  சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் . 
இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து கடை பிடிக்கப் படுகிறது .


கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.

=================================================================================================================

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
 ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இருந்து வரும் உர்ஜித் வருகின்ற செப்டம்பர் மாதம் 4-ம் தேதி  24வது  கவர்னராக பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார்.
  சுப்பிரமணியன் சுவாமி விமர்சனங்களால் ரிசர்வ் வங்கிக்கு ''இரண்டாம் முறையாக பதவி வகிக்க விரும்பவில்லை'' என ரகுராம் ராஜன்  மறுப்புத் தெரிவித்து விட்டார்.
இதன் மூலம் கடந்த 25 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இரண்டாவது முறையாக  பதவி வகிக்காமல்  விலகும் ஒரே கவர்னர் ரகுராம் ராஜன்தான்.
இவரை  வைத்திருந்தால் பகாசுர முதலாளிகள் கோரிக்கைப்படி வங்கி வட்டி விகிதங்கள்,நடைமுறைகளைமாற்றிட  ரகுராம்ராஜன் சரிப்பட்டு வரமாட்டார் என்று பாஜக தலைமை,பிரதமர் மோடி,அருண் ஜெட்லீ போன்றோர் கருத்தியதால்தான் சுப்பிரமணியன் சுவாமி மூலம் ரகுராம் ராஜன் மீது தேவையற்ற கடுமையான விமர்சனங்களை கிளப்ப வைத்ததாக தெரிகிறது.
ரகுராம் ராஜன்க்கு பின்னர் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக அருந்ததி பட்டாச்சார்யா, நிதி ஆயாக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா ,  உர்ஜித் பட்டேல் ஆகியோர் கவர்னராகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது உர்ஜித் பட்டேல்ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது 52 வயதான உர்ஜித் பட்டேலும்  ரகுராம் ராஜனைப் போலவே    யேல் பல்கலைக்கழகத்தில்தான் பொருளாதத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.. 
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 1986ம் ஆண்டு எம்பில்லும் முன்னதாக 1984ம் ஆண்டு லண்டன் பல்கலையில் பொருளாதாரம் படித்தார். 
 உர்ஜித், ரிசர்வ் வங்கியில் கடந்த 2013 ம் ஆண்டு ஜனவரி 11ம் பணியில் இணைந்தார். தற்போது நிதி கொள்கை துறையின் தலைவராக (மானிட்டரி பாலிசி கமிட்டி) உள்ளார்.

ரிசர்வ் வங்கி துணை கவர்னராவதற்கு முன்,போஸ்டன் குழுமத்தின் அறிவுரையாளராக பணியாற்றினார். கடந்த 1998ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை, மத்திய நிதியமைச்சகத்துக்கும் றிவுரையாளராக இருந்துள்ளார். 
ரிலையன்ஸ் குழுமத்திலும் பணிபுரிந்துள்ளார். இந்த தகுதிதான் அவரை ரிசர்வ் வங்கி கவர்னரா க்கியுள்ளது 
உர்ஜித் பட்டேல் கடன்கள் சீர்திருத்தம், வங்கித்துறை சீர்திருத்தம் ஓய்வூதிய நிதி கையாள்தல், அந்நிய செலாவணியை கையாள்வதில்  முனைப்புடன் செயல்படுபவர்.

இந்த உர்ஜித் பட்டேலும் பதவி விலகி செல்லும் ரகுராம் ராஜனும் நெருங்கிய நண்பர்கள். ரகுராம் ராஜனின் நம்பிக்கைக்குரியவராவும் உர்ஜித் பட்டேல் விளங்கினார். அதனால் ரிசர்வ் வங்கி பதவியில் இருந்து ரகுராம் ராஜன், விலகி சென்றாலும் அவரது கொள்கைகளையே  உர்ஜித்தும் பின்பற்றுவார் என்றே கருதப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் கொள்கைகளில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்றே நம்பப்படுகிறது.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?