ஜி மெயிலின் கிட்டங்கி...


இமெயில் புரோகிராம்களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும், காப்பகம் ஆகும். 
இதில் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்திடலாம். ஒரு சிலர் இங்கு வைத்தால், மெயில்கள் காணாமல் போகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். 

அவ்வாறு ஜிமெயில் நிச்சயம் செயல்படாது. இதில் புரியாத விஷயம் ஏதோ இருக்கிறது என்று எண்ணும் வாசகர்களும் உள்ளனர். இதனைச் சற்று விரிவாக இங்கு காண்போம். 
ஜிமெயிலின் ஒரு சிறந்த வசதி அல்லது பரிமாணம் அது தனக்கென ஒரு சேமித்து வைக்கும் 
ஆர்க்கிவ் ( கிட்டங்கி) இடத்தை வைத்திருப்பதுதான். 
ஜிமெயிலைப் பயன்படுத்தத் தொடங்கிய காலத்தில் பலருக்கு இது புதிராகவே இருக்கும். இந்த ஆர்க்கிவ் என்பது உங்கள் மெயில்களைப் பல ஆண்டுகள் தொடர்ந்து வைத்திருக்கும் என்பதல்ல. அவற்றை அது விடவே விடாது; என்றும் விட்டு விடாது என்று எண்ண வேண்டாம். விவரங்களுக்கு மேலே படியுங்கள்.
இந்த ஆர்க்கிவ் பட்டனை உங்கள் ஜிமெயிலின் இன்பாக்ஸ் தோற்றத்தில் காணலாம். 

இதில் கிளிக் செய்தால் அது அப்போது கர்சர் உள்ள இமெயில் செய்தியை இன்பாக்ஸிலிருந்து எடுத்துவிடுகிறது. 
அப்புறம் என்ன செய்கிறது? ஏன் எடுக்கிறது? 
இது உங்கள் இமெயில்களை ஒரு ஒழுங்கு செய்திடும் வேலை தான். 
நீங்கள் ஆச்சரியப்படலாம். இன்பாக்ஸிலிருந்து எடுக்கப்பட்ட இமெயில் எங்கு செல்கிறது என்று பார்க்க விரும்பலாம். இது நீங்கள் அந்த இமெயில் செய்திக்கு ஏதேனும் லேபிள் பெயர் தந்திருக்கிறீர்களா என்பதைப் பொறுத்து உள்ளது. 
நீங்கள் அதற்கு லேபிள் கொடுத்திருந்தால் அது அந்த லேபிளுக்கான பாக்ஸிற்குச் செல்கிறது.இதனை ஆல் மெயில் பிரிவிலும் (All Mail) பார்க்கலாம். 
இதனைக் கொஞ்சம் இன்னும் பின்னோக்கிச் சென்று விளக்கமாகப் பார்க்கலாம். உங்கள் ஜிமெயிலுக்கு ஒரு இமெயில் செய்தி வந்தவுடன் அது தானாகவே இன்பாக்ஸ் லேபிலை வாங்கி கொண்டு இன்பாக்ஸ் பிரிவில் வைக்கப்படுகிறது. 

இதனுடைய லேபிளை மாற்றாதவரை அது வேறு எந்த பிரிவிற்கும் மாற்றப்படுவதில்லை. இதற்கு ஒரு லேபிள் தராமல் ஆர்க்கிவ் பட்டன் அழுத்தி ஆர்க்கிவ் பிரிவிற்கு அனுப்பினால் ஆல் மெயில் வியூவில் மெசேஜிற்கு அடுத்தபடியாக “Inbox” என்று இருப்பதைக் காணலாம். 
இது எதற்காக என்றால் உங்களின் அனைத்து மெயில்களையும் நீங்கள் அவை எங்கிருந்து வந்தவை என்று பார்ப்பதற்காக. அதே நேரத்தில் அவை ஆல் மெயில் போல்டரிலும் காட்டப்படுகின்றன. 
இதனை இன்னும் விளக்கமாகப் புரிந்து கொள்ளவும் இந்த ஏற்பாட்டினைச் சோதித்துப் பார்க்கவும் கீழ்க்கண்டபடி செயல்படவும். 
இன் பாக்ஸ் சென்று ஏதேனும் ஒரு இமெயில் மெசேஜைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு ஒரு லேபில் கொடுக்கவும். 
ஆனால் ஆர்க்கிவ் செய்திட வேண்டாம். இனி நீங்கள் கொடுத்த லேபில் வியூ சென்று அங்கு உள்ள பட்டியலில் இந்த இமெயில் செய்தி இடம் பெற்றிருப்பதனைக் காணுங்கள். 
இங்கு நீங்கள் கொடுத்த லேபிலும் முதலிலேயே அதற்கு வழங்கப்பட்ட இன்பாக்ஸ் லேபிலும் காட்டப்படுவதனைக் காணலாம். இவை ஆல் மெயில் போல்டரிலும் காட்டப்படும். 
இப்போது மீண்டும் இன் பாக்ஸ் சென்று இன்னொரு மெசேஜைத் தேர்ந்தெடுங்கள். 

இப்போது அதற்கு ஒரு லேபில் அமைத்து ஆர்க்கிவ் பட்டனையும் அழுத்தி ஆர்க்கிவ் செய்திடுங்கள். 
அடுத்து லேபில் வியூவில் சென்று பார்த்தால் நீங்கள் அதற்குக் கொடுத்த லேபில் இருக்கும். ஆனால் இன்பாக்ஸ் லேபில் இருக்காது. ஒரு மெசேஜை ஆர்க்கிவ் செய்திடுகையில் அந்த இமெயில் செய்திக்கு வழங்கப்பட்ட இன்பாக்ஸ் லேபில் நீக்கப்படுகிறது.இதனால் இந்த இமெயில் மெசேஜ் இன்பாக்ஸில் தொடர்ந்து காட்டப்பட மாட்டாது. 
அப்படியானால் ஆர்க்கிவ் செய்ததை மீண்டும் மீட்டு இன்பாக்ஸ் கொண்டு வர முடியாதா? 
கொண்டு வந்து அதற்கு வேறு ஒரு லேபில் வழங்க முடியாதா? 
என்று நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது. தாராளமாகக் கொண்டு வரலாம். 
ஆர்க்கிவ் சென்று மீட்க விரும்பும் மெசேஜில் கர்சரைக் கொண்டு செல்லவும். 
அங்கு More Actions என்று ஒரு லிங்க் கிடைக்கும். அதனைக் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் உள்ள Move to Inbox என்பதில் கிளிக் செய்திடவும். 
நீங்கள் அந்த மெசேஜிற்குச் செய்ததெல்லாம் மீண்டும் ரிவர்ஸ் ஆகி அந்த மெசேஜ் இன்பாக்ஸிற்குச் சென்றுவிடும். 
ஆர்க்கிவ் பட்டன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட சில இமெயில்களை எடுத்துச் சென்று தனியே பிரித்து வைக்க முடிகிறது. முயற்சி செய்து பார்த்தால் இதனை நீங்கள் விரும்புவீர்கள்.

2000000 பேர்களுக்கு பயிற்சி?
 கூகுள் நிறுவனம், இந்தியாவில் 20 லட்சம் சாப்ட்வேர் பொறியாளர்களுக்குத் தன் ஆண்ட்ராய்ட் மொபைல் ஆப்பரேட்டிங் திட்டத்தில் பயிற்சி அளிக்கும் திட்டத்தினைத் தொடங்க இருக்கிறது. 
நூறு கோடி பேருக்கு மேல் மொபைல் போன் பயனாளர்களாக இருக்கும் இந்திய நாட்டில், லட்சக் கணக்கில் இயங்கும் மென்பொறியாளர்களை இலக்காகக் கொண்டு, இந்த திட்டத்தினை வகுத்துள்ளது.
மிகுந்த அளவில், செலவழிக்கத்தக்க வருமானம் ஈட்டல், அதிகமான எண்ணிக்கையில் இளைஞர்கள் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் அதிவேக இணைய பயன்பாடு ஆகிய அனைத்தும் பல பன்னாட்டு நிறுவனங்களின் கவனத்தை இந்தியாவின் பால் ஈர்த்து வருகின்றன. 

இந்தியாவில், மொபைல் போன் பயன்படுத்துபவர்களில், ஐந்தில் ஒரு பங்கினர் தான், ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பிரிவு இனி அதிவேகமாக வளர இருக்கின்றது. 
அதற்கான தொடக்க நிலை தொடங்கிவிட்டது. ஸ்மார்ட் போன்களின் விற்பனை மற்றும் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. Strategy Analytics என்ற ஆய்வு அமைப்பின் கணிப்பின்படி, ஸ்மார்ட் போன் பயன்பாட்டில், இந்தியா அடுத்த ஆண்டில், அமெரிக்காவின் இரண்டாவது இடத்தைப் பிடிக்க உள்ளது. முதல் இடத்தில் சீனா உள்ளது. 
தொழில் நுட்பத்திற்குப் பெயர் பெற்ற ஐபோன்களைத் தயாரித்து வழங்கும் ஆப்பிள் நிறுவனம், பெங்களூருவில், ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான மையம் ஒன்றைத் திறக்க இருப்பதாகச் சென்ற மே மாதம் அறிவித்தது. 

இந்த மையத்தில், ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும், இந்தியாவிற்குத் தேவையான அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரிப்பவர்களுக்கு தொழில் நுட்ப உதவி வழங்கப்படும். 
இணையத்தைத் தொடர்பு கொள்வோரில், இந்தியாவில், பெரும்பாலானவர்கள், தங்கள் மொபைல் போன்கள் வழியாகத்தான் தொடர்பு கொண்டு வருகின்றனர். 

எதிர்காலத்தில் இணையத் தொடர்பினை மேற்கொள்பவர்கள் அனைவருமே, இந்தியா மட்டுமின்றி, பிற நாடுகளிலும், மொபைல் சாதனங்களையே பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில், மொபைல் சாதனங்களில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களை வடிவமைப்பதில், இந்தியா உலக அளவில் முதல் இடம் பெறும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. 
எனவே, அந்த வகையில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சிக்கு உறுதுணையாக, கூகுள் 20 லட்சம் பேருக்குத் தன் மொபைல் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பயிற்சி அளிக்கும் திட்டத்தினை வடிவமைத்து அமல்படுத்தத் தயாராகி வருகிறது.
Android Skilling என அழைக்கப்படும் இந்த பயிற்சித் திட்டம், தனியார் மற்றும் அரசு பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடைமுறைக்கு வரும். 

அத்துடன், அரசு நிதி உதவியுடன் நடத்தப்படும் National Skill Development Corporation of India கழகத்தில், இந்தப் பயிற்சி கட்டணத்துடன் வழங்கப்படும். 
கூகுள் நிறுவனத்தின் கூற்றுப்படி, 2018 ஆம் ஆண்டில், இந்தியாவில் 40 லட்சம் புரோகிராம் வடிவமைப்பவர்கள் இருப்பார்கள். இது உலக அளவில் மிகப் பெரிய எண்ணிக்கையாகும். இவர்களில் 25%க்கும் குறைவானவர்களே, மொபைல் சாதனங்களுக்கான புரோகிராம் வடிவமைப்பதில் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், தன் ஆசிய நாடுகள் சுற்றுப் பயணத்தின் போது, “இந்தியா, ஐ.ஓ.எஸ். சிஸ்டம் வளர்ச்சியில் ஈடுபடும் திறன் வாய்ந்த புரோகிராமர்களைக் கொண்ட நாடாக வளர்ந்து வருகிறது” என்று குறிப்பிட்டார். 
அப்போது மேலும் பேசுகையில், பெங்களூருவில் ஆப்பிள் நிறுவனம் அமைக்க இருக்கும் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணி மையத்தில், புரோகிராம் வடிவமைப்பவர்களுக்குத் தேவையான சாதனம் மற்றும் சாப்ட்வேர் வசதிகள் செய்து தரப்படும் என்றார். 
இவற்றின் மூலம் உலகளாவிய ஆப்பிள் பயனாளர்களுக்கான புரோகிராம்கள் வடிவமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மொபைல் சாதனங்களைப் பயன்படுத்த இருக்கும் அடுத்த சந்ததியினருக்குத் தேவையான புரோகிராம்களுக்கான புதிய சாப்ட்வேர் வழிமுறைகளைக் கொண்ட புதிய லட்சக்கணக்கான பொறியாளர்களை, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இலக்கு வைத்து தங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன என்று இந்தப் பிரிவில் ஆய்வு நடத்துபவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

=====================================================================================
ன்று,
செப்டம்பர்-19.
  • சிலி ராணுவ தினம்
  • சுவாமி விவேகானந்தர் சிகாகோ உலக சமய மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்(1893)
  •  பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடானது நியூசிலாந்து(1893)
  • அமெரிக்கா, நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது(1957)

======================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?