நெஞ்ச நெருப்பு சாம்பலாக்காமல் விடாது...

மனிதகுலம் தனக்கான உணவை சமைத்துச் சாப்பிடத் துவங்கியதிலிருந்து நெருப்புடனான போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 
குறிப்பாக பெண்களின் எரிபொருள் தேடும் பணி அவர்களின் வாழ்க்கையின் கணிசமான காலத்தை சாப்பிட்டு விட்டது. சாப்பிட்டுக கொண்டிருக்கிறது. 

பெண்களின் பெரும் பகுதி வாழ்க்கை தண்ணீருக்கும் விறகுக்குமாய் தொலைந்து போய் விடுகிறது.21 ஆம் நூற்றாண்டில் நடைபோடுகிற மனித சமூகம்இன்னும் சமையலுக்காக விறகைச் சார்ந்திருப்பதிலிருந்து விலகிட முடியாத நிலையே நீடிக்கிறது. கரண்ட் அடுப்புகள் வந்துவிட்டன. 

ஆயினும் மண்ணெண்ணெய் அடுப்புகளும் தவிர்க்க முடியாததாகவே உள்ளன. அதற்காக ரேசன் கடைகளில் வரிசையில் நிற்கும் காலமும் மண்ணெண்ணெய் வழங்கக் கேட்டு போராடும் காலமும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

விறகுகள் எரிப்பதால் மீத்தேன் போன்ற வாயுக்கள் வெளியாவதால் பெண்களின் ஆரோக்கியம் கெடுவது மட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகிறது என்றும்காடுகள் அழிகின்றன என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். 

விறகுக்காக அழிவதை விட மரம் கடத்துபவர்களால் அழிவதே அதிகம் என்பதை கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள் மரம் வளர்க்கச் சொல்லி பிரச்சாரம் செய்யத்தயங்குவதில்லை. ஆனால் அரசின் சார்பில் நடப்படும்,நட்டதாகக் கூறப்படும் மரக்கன்றுகள் எல்லாம் வளர்ந்திருந்தால் இப்போதுள்ள வனப்பகுதி போல் இன்னொரு பகுதி வனம் அதிகரித்திருக்கும். 

ஆனால் எல்லாமே வெறும் கணக்குக்காக மட்டுமே செய்யப்படுவதால் மக்கள்வரிப்பணம் வீணாவதைத் தவிர வேறென்றும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை.எரிசக்தியில் மரபுசார்ந்த எரிசக்தி,மரபு சாரா எரிசக்திஎன்று இருவகை இருந்தாலும் பெரும்பாலான ஏழை,எளிய மக்கள், கிராமப்புற மக்கள் வாழும் இந்தியாவில் சாண எரிவாயுத் திட்டம் போதிய அளவு பயனைத் தரவில்லை.

விவசாய நாடான இந்தியாவில் தற்போது விவசாயமே அழிவின் பிடியில் இருப்பதாலும் கால்நடைகள் வளர்ப்பு குறைந்து போய் விட்டதாலும் சாண எரிவாயுத் திட்டத்துக்கு மானியம் கொடுத்தாலும் கூட பெரிய அளவுவெற்றிபெறவில்லை.

இந்த நிலையில் தான் எரிவாயுத்திட்டம் நடைமுறைக்குவந்தது. அதைப் பயன்படுத்தும் மக்களுக்கு அரசாங்கம் மானியமும் தந்தது. 

அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனும் பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் மட்டுமே எரிவாயு விநியோகம் செய்து வந்தன.அரசும் மானியம் வழங்கி வந்தது. 

ஆனால் 1990க்குப் பின் உலகமயம் தாராளமயம் தனியார்மயம் அறிமுகமான பின் ஏழை,எளிய மக்கள், நடுத்தர மக்கள் பாதிக்கப்படும் வகையில் மானியத்தை வெட்டிச் சுருக்கும் வேலையில் மத்திய ஆட்சியாளர்கள் ஈடுபட்டனர். 

இதில்காங்கிரஸ் கூட்டணியும் சரி, பாஜக கூட்டணியும் சரி ஒன்றுக்கொன்று சளைக்கவில்லை.வீட்டு உபயோகத்துக்குப் பயன்படும் எரிவாயு சிலிண்டர், வர்த்தக நிறுவனங்களின் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் எனப் பிரித்து அதற்கான விலை நிர்ணயம்செய்யப்பட்டது. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு அரசுமானியம் வழங்கியது. 

அந்த மானியம் எரிவாயு விநியோகஏஜென்சிகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் வழங்கப்படும் மானியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் ‘ஆதார் அட்டை’ அறிமுகப்படுத்தப்பட்டு அதை இணைத்தால் தான் மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு நிர்ப்பந்தித்தது. இப்போதோ எல்லாமே ஆதார் மயமாகிவிட்டது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஆதாரை எதிர்த்த பாஜக, மோடி ஆட்சிக்கு வந்ததும் முன்னிலும் வெகுவேகமாக ஆதாரை கட்டாயப்படுத்தி எல்லாவற்றுக்கும் ஆதாரேஅவசியம் என்றது. உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கக்கூடாது என்று சொல்லியும் கூட மோடி அரசு அதைஅலட்சியப்படுத்திவிட்டு மூர்க்கத்தனமாகவே அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. 

சமூக நலத்திட்டங்களுக்கு மட்டுமின்றி பள்ளிக் குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, மதிய உணவுக்கும் கூட ஆதாரை கட்டாயமாக்கியது. அத்தகைய கட்டாயத்தினால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு சிறுமியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு பயன்படுத்துபவர்கள் ஆதார் எண்ணை இணைத்தால்தான் மானியம் வழங்க முடியும் என்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு வங்கியில் செலுத்துகிறோம் என்றும் மத்திய ஆட்சியாளர்கள் அறிவித்தனர். 

ஆனால்எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் சந்தைவிலை கொடுத்தே வாங்கவேண்டும் என்றும் பிறகு அவர்களுக்குரிய மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் அமலானது.
இந்த நடவடிக்கை மக்களின் எதிர்ப்புக்குள்ளானது என்றாலும் கூட அதைஆட்சியாளர்கள் பொருட்படுத்தவில்லை. 

இது மானியத்தை சிறிது சிறிதாகக் குறைத்து முற்றிலுமாக நிறுத்துவதற்கான முன்னோட்டம் தான் என்ற அச்சம் உண்மையாகிக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சி 60 ஆண்டுகளில் செய்யாததை நாங்கள் 60 மாதங்களில் செய்துவிடுவோம் என்று கூறியபாஜக 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தது. 

அப்போது வீட்டுக்குப் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.404.50. 

அதற்கு முந்தைய ஆண்டான 2013லும் அதே404.50தான். 

ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் 2015ஆம் ஆண்டில் 656.50 ஆக பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்தது. 

இதனால் சமையல் கட்டில் மட்டுமல்ல புகைச்சல் ஏழை,எளிய நடுத்தர மக்கள் மனதிலும் தான். 
2015 ஏப்ரல் மாதத்தில் சிலிண்டர் விலை 651 ரூபாய்.
அதற்கான மானியம் 234 ரூபாய் என்றானது. 
ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் சிலிண்டரின் விலையும் மானியத்தின் அளவும் ஏற்ற இறக்கங்களுக்கும் மாற்றங்களுக்கும் உள்ளாயின.

2015 ஜூன் மாதத்தில் ரூ.649.50ஆனது. 
ஆகஸ்ட் மாதத்தில் ரூ.626ஆனது. அப்போது மானியம் ரூ.217 தான். 
அடுத்த மாதத்தில் (செப்டம்பர்) ரூ.598 ஆககுறைந்தது. 
சர்வதேசச் சந்தை விலைக்கேற்ப குறைக்கப்பட்டது என்றார்கள். அப்போதைய மானியம் ரூ.189.18 ஆனது. 

இரண்டு மாதங்களிலேயே ரூ.643.50 ஆனது.
2016 ஆம் ஆண்டில் விலை 607.50 ஆனதால் மானியம்ரூ.197.28 ஆனது. 
மார்ச் மாதத்தில் விலை ரூ.545 ஆகவும்மானியம் ரூ.134.87 ஆகவும் குறைந்தது. 

மே மாதத்தில் விலை ரூ.559.50 ஆகவும் மானியம் ரூ.149.35 ஆகவும் அதிகரித்து ஜூன் மாதத்தில் விலை ரூ.528 ஆகவும் மானியம்ரூ.171.82 ஆகவும் ஆனது. 
ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்மாதங்களில் ரூ.525.50 ஆனது. நவம்பர் மாதத்தில் ரூ.566ஆனது.2017 ஜனவரியில் விலை ரூ.623 ஆக உயர்ந்தது. 

மானியம் ரூ.197.29 ஆனது. பிப்ரவரி மாதத்தில் ரூ.776.50 என்றுவேதாளம் முருங்கை மரம் ஏறியது. அப்போதைய மானியம்ரூ.3
50.57. ஏப்ரல் மாதத்தில் ரூ.761.50 மற்றும் ரூ.329.61 ஆனது. மே மாதம் ரூ.669 மற்றும் ரூ.235.23 என சற்றுக்குறைந்தது.
ஜூன் மாதம் பதிவு செய்த போது ரூ.575.71 ஆக இருந்த சிலிண்டர் விலை ஜூலை மாதம் வழங்கப்பட்டதால், நாடு முழுவதும் ஜிஎஸ்டி பூதத்தின் தாக்குதலுக்குள்ளானது. 

மத்திய, மாநில அரசுகளின் தலா 2.5 சதவீத வரி விதிப்பால் ரூ.604.50 ஆனது. ஜிஎஸ்டி வரிமட்டும் ரூ.28.78 சேர்ந்து சுமையை அதிகரித்தது. 

இப்போதைய மானியம் ரூ.112.21.ஆகஸ்ட் மாதம் அடிப்படை விலை ரூ.608.09, ஜிஎஸ்டிவரி ரூ.304.40 ஆக மொத்தம் ரூ.638.49. 
அப்போதைய மானியம் பில்படி ரூ.158.41 ஆனால் வங்கியில் பயனாளியின் கணக்கில் ஏறிய மானியம் ரூ.134.16 தான்.

 செப்டம்பர் மாத விலை ரூ.655.71. ஜிஎஸ்டி வரி ரூ.32.78. மொத்த விலை ரூ.688.50. இப்போதைய மானியம் பில்படி ரூ.204.53.ஆனால் வங்கியில் இன்னும் ஏறவில்லை. 

எப்போது ஏறுமோ? 
எவ்வளவு சேருமோ?
இப்படித்தான் ஒவ்வொரு முறையும் பில்படியான விலை மக்களிடம் வசூலிக்கப்பட்டு விடுகிறது. 

ஆனால்பில்படியான மானியம் வங்கிக்கணக்கில் சேருமா சேராதா என்பது மோடிக்கே வெளிச்சம். ஏனெனில் ஒவ்வொரு முறையும் பில்லைப்பார்த்து மானியத்தொகை வங்கியில் சேருகிறதா சேரவில்லையா என்பதை எத்தனை பேர் கவனித்துக் கொண்டிருக்கப்போகிறார்கள்.

இத்தகைய எண்ணம் தான் மத்திய அரசுக்கு, மானியத்துக்கு எங்கே போய் யாரைக்கேட்பது? 
அப்படிக் கேட்பவர்களை தேசத்துரோகி என்று சொன்னாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை, ஏனென்றால் கேஸ் மானியத்தை விட்டுக் கொடுப்பவர்கள் தான் தேசபக்தர்கள் என்று கூட சொல்வார்கள். 

ஆனால் எரிவாயு பயன்படுத்தும் ஏழை,எளிய, நடுத்தர மக்களுக்கு வழங்கப்படும் மானியத்தை வெட்டுவதில் குறியாய் இருக்கும் மோடி அரசு கார்ப்பரேட் கனவான்களுக்கு அள்ளி வழங்கும் கோடிகளை குறைக்கவா போகிறார்கள் ?

தீபாவளி சமயத்தில் " தீ"வாளியைக் கவிழ்த்து விட்டுமக்களை வெந்து நொந்து வேதனையில் வாடவிடுகிறார்கள் மத்திய, மாநில ஆட்சியாளர்கள்.
நன்றி:தீக்கதிர்   
                                                                                                                                              -ப.முருகன்,
=======================================================================================
ன்று,
அக்டொபர் -18.
  • கணினி  கண்டுபிடித்த சார்லஸ் பாபேஜ் இறந்த தினம்(1871)
  • பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது(1922)
  • அமெரிக்க கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த தினம்(1931)
  • டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனம் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது(1954)
  • நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது(1991)
========================================================================================
கோழி(இறைச்சி)யும், இ-கோலி( கிருமி)களும் 
சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் கோழி இறைச்சி யில் இருக்கும் ஈ.கோலி பாக்டீரியா, மனிதர்களின் சிறுநீர் பாதையில் நோய் ஏற்பட காரணமாக இருக்கலாம் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறுநீர் பாதை தொற்றுக்கு ஆளாகிறார்கள். இதற்கு உணவு பழக்கம் உட்பட பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம் என ஏற்கனவே பல ஆராய்ச்சி தகவல்கள் கூறியுள்ளன. சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுபவர்களின் சிறுநீரை சோதித்து பார்த்ததில், 80 சதவீதம் பேருக்கு எஸ்செரிசியா கோலி(இ.கோலி) பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இது எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இந்த இ.கோலி பாக்டீரியாவில் பல வகை உள்ளன. 

சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் இறைச்சிகள் இதற்கு காரணமா என்ற ஆராய்ச்சி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. கலிபோர்னியா பகுதிகளில் சூப்பர் மார்க்கெட்களில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் இறைச்சிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. வான்கோழி, கோழி,் மாடு, பன்றி ஆகியவற்றின் இறைச்சி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வான்கோழி இறைச்சிகளை ஆய்வு செய்ததில், 73 சதவீதம் இறைச்சிகளில் இ-கோலி பாக்டீரியா பாதிப்பு இருந்தது. சிக்கன் பிரெஸ்ட் மாதிரிகளை ஆய்வு செய்தபோது 43 சதவீத இறைச்சிகளில் இ-கோலி பாக்டீரியா இருந்தது, மாட்டிறைச்சியில் 18 சதவீமும், பன்றிக் கறியில் 15 சதவீதமும் இ-கோலி பாக்டீரியா பாதிப்பு இருந்தது. 
மொத்தத்தில் நான்கில் ஒரு பங்கு இறைச்சியில் இ-கோலி பாக்டீரியா பாதிப்பு இருந்தது. இ-கோலி பாக்டீரியாவில் பல வகைகள் உள்ளன. ஆனால் சிறுநீர் பாதை தொற்றுக்கு ஆளானவர்களின் சிறுநீரில் இருந்த இ-கோலி பாக்டீரியாவும், சூப்பர் மார்க்கெட் இறைச்சிகளில் இருந்த இ-கோலி பாக்டீரியாவும் ஒரே வகை என்பது டிஎன்ஏ ஆய்வில் உறுதியானது. அதனால் சிறுநீர் பாதை தொற்றுக்கு காரணமான இ-கோலி பாக்டீரியா, சூப்பர் மார்க்கெட் இறைச்சிகளில் இருந்து பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. 

பச்சை மாமிசத்தை சரியான முறையில் பராமரிக்காதது, முறையாக சமைக்காதது போன்றவற்றால் இந்த இ-கோலி பாக்டீரியா மனிதனின் பெருங்குடலுக்குள் சென்று பாதுகாப்பாக உயிர் வாழ்கிறது. இந்த இ-கோலி பாக்டீரியா மலம் மூலமாக வெளியேறும்போது, மனிதர்களின் சிறுநீர் பாதையிலும் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சிறுநீர் பாதை தொற்றுக்கு உள்ளானவர்களிடம் என்ன உணவு சாப்பிட்டீர்கள் என்ற விஷயத்தை ஆராய்ச்சியாளர்கள் கேட்கவில்லை. அதனால் சிறுநீர் பாதை தொற்றுக்கு, சூப்பர் மார்க்கெட் கோழி இறைச்சி வகைகள்தான் காரணம் என்பதை 100 சதவீதம் உறுதிபடுத்த முடியவில்லை. இந்த ஆராய்ச்சி கட்டுரை கலிபோர்னியா மாநிலத்தின் சான் டியாகோவில் சமீபத்தில் நடந்த ‘ஐடீ வீக் 2017’ என்ற தொற்றுநோய் பாதிப்பு கருத்தரங்கில் வெளியிடப்பட்டது.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?