அதனால்தான் அவர் பெரியார்.


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெரியாருக்கு மட்டும் ஏன் இத்தனை சிலைகள்? 
அரசியலிலும், சமூக இயக்கங்களிலும் தங்களுக்குள் முரண்படுவோர்  கூட பெரியாரை மட்டும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டது எதற்காக?
திரிபுராவில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்டுகள் தோற்ற நிலையில், அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது. 
அதையடுத்து தமிழ்நாட்டில் பெரியாரின் சிலைகளை அகற்றப்போவதாக பாஜகவினர் ஏன் கோபம் காட்டவேண்டும்?
கம்யூனிஸ்டுகள், திராவிடக் கட்சிகள், தலித் அமைப்புகள், தமிழ்த்தேசியவாதிகள், பெண்ணியவாதிகள் என்று பல்வேறு நிறங்களும், முழக்கங்களும் உடைய அமைப்புகளும், இயக்கங்களும், தனி நபர்களும் ஏன் பெரியாரைப் போற்றவேண்டும்?

ஈரோட்டில் செல்வக் குடும்பத்தில் பிறந்த ஈ.வெ.ராமசாமி-யை மதங்களுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும், பெண்ணடிமைத் தனத்துக்கும் எதிராகத் திருப்பியது எது?
குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாரபட்சங்கள் இளம் வயதிலேயே அவரது கவனத்தைக் கவர்ந்தன. குழந்தைத் திருமணம் செய்து குழந்தையாக இருக்கும்போதே கணவனை இழந்து கைம்பெண்ணாகி வாழ்நாள் முழுவதும் கைம்பெண்ணாகவே வாழ நேர்ந்த பல்லாயிரம் பெண்களின் துயரம் அவரை ஆட்கொண்டது.
அவ்விதம் குழந்தைப் பிராயத்திலேயே கணவனை இழந்த தமது சகோதரி மகளுக்கு குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி அவர் மறுமணம் செய்வித்தார்.
நாகம்மையாரை மணந்துகொண்டு தமது தந்தையின் வணிகத்தை கவனித்து வந்த நேரம், குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி துறவு பூணும் நோக்கத்தோடு காசிக்குச் சென்றார். அங்கிருந்த அன்ன சத்திரங்கள் பிராமணர் அல்லாதோரை உள்ளே அனுமதிக்க மறுத்ததால் அவர் பசியில் வாடி, சத்திரத்தில் இருந்து வீசி எறிந்த இலைகளில் இருந்து உணவை எடுத்து உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டது. இது அவரது மனதில் நீங்கா வடுவை ஏற்படுத்தியது.
பிறகு அவர் தமது துறவு எண்ணத்தைக் கைவிட்டு ஊருக்குத் திரும்பினார். இயல்பாகவே இருந்த ஆர்வத்தினால் அவர் பல பொதுப் பணிகளை சொந்த ஊரான ஈரோட்டில் மேற்கொண்டார்.
காந்தியக் கொள்கைகளால் கவரப்பட்டு அவர் 1919-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். கதர், மது எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு என்னும் காந்தியின் அடிப்படைக் கொள்கைகளுக்காக உழைத்தார்.
விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று தாம் வகித்த நகரமன்றத் தலைவர் உள்ளிட்ட ஏராளமான பொதுப் பதவிகளைத் துறந்தார்.
தமது மனைவி நாகம்மையையும், சகோதரி பாலாம்பாளையும் அரசியலில் ஈடுபட ஊக்குவித்தார் பெரியார். அவர்கள் இருவரும் தலைமையேற்று காங்கிரஸ் கட்சியின் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நடத்தினர்.
கள்ளுக்கடை மறியல் போராட்டத்துக்கு ஆதரவாக, கள் இறக்கப் பயன்படக்கூடாது என்று, தமது தோப்பில் இருந்த தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி அழித்தார் பெரியார்.
ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். இந்நிலையில், கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கோயில் இருக்கும் தெருக்களில் நடமாட தலித்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் போராட்டங்கள் நடத்தினர்.

போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அங்கிருந்த போராட்டத் தலைவர்கள் பெரியாருக்கு கடிதம் எழுதி போராட்டத்தை தலைமையேற்று நடத்தும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
அப்போது சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த பெரியார் காந்தியின் அறிவுரையையும் மீறி தமது கட்சிப் பதவியைத் துறந்து திருவிதாங்கூர் விரைந்தார்.
திருவிதாங்கூர் மகாராஜா பெரியாரின் நண்பர் என்பதால் அவர் அரசு மரியாதையோடு வரவேற்கப்பட்டார். ஆனால், தாம் அரசை எதிர்த்துப் போராட வந்திருப்பதால் அரசு மரியாதையை ஏற்க முடியாது என்று மறுத்த பெரியார் தொடர்ந்து வைக்கத்தில் போராட்டம் நடத்திக் கைதானார். இதையடுத்து அவரது அவரது மனைவி நாகம்மை பெண்களைத் திரட்டி போராட்டத்தைத் தொடர்ந்தார்.
போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகே அவர் ஊருக்குத் திரும்பினார். இதனால், வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார்.
இதனிடையே சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்ற முயன்று தோற்றுப் போனார் பெரியார்.
இந்நிலையில், சேரன்மாதேவி என்ற இடத்தில் காங்கிரஸ் மானியத்தில் வ.வே.சுப்ரமணிய ஐயர் என்பவரால் நடத்தப்பட்ட குருகுலப் பள்ளியில் பிராமண மாணவர்களுக்குத் தனியாகவும், பிராமணர் அல்லாத மாணவர்களுக்குத் தனியாகவும் உணவு பறிமாறப்படுவதை அவர் எதிர்த்தார்.
ஆனால், வ.வே.ஐயர் தமது போக்கை மாற்றிக் கொள்ள மறுத்ததுடன், காங்கிரசும் அந்த பள்ளிக்கான மானியத்தை நிறுத்த மறுத்தது.
இதையடுத்து அவர் காங்கிரசில் இருந்து வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். வைதீக மதத்தையும், கடவுள் நம்பிக்கையையும், மூடப் பழக்கவழக்கங்களையும் பெரியார் எதிர்த்தார். பிராமணர் அல்லாதவர்கள் தம்மையே தாழ்வாக நினைக்கக் கூடாது என்பதை சுயமரியாதை இயக்கம் வலியுறுத்தியது.
இந்த நிலையில், 1916ம் ஆண்டு தொடங்கப்பட்ட நீதிக்கட்சி என்று பரவலாக அறியப்பட்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் தலைவராகப் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிராமணர்கள் ஆரிய இனத்தில் தோன்றியவர்கள் என்றும் பிராமணர் அல்லாதோர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வாதிட்ட பெரியார் திராவிடர்களை மானமும் அறிவும் மிக்கவர்களாக மாற்றுவதற்காகத் தாம் பாடுபடுவதாக கூறினார்.
குழந்தை திருமண எதிர்ப்பு, விதவை மறுமணம், பெண்களுக்கு கல்வி, தமது துணைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, ஒத்துவராத திருமணத்தை முறித்துக் கொள்ளும் உரிமை ஆகியவை வேண்டும் என்று வாதிட்ட பெரியார், பெண்கள் குழந்தை பெறும் இயந்திரமாக இருக்கத் தேவையில்லை என்று வாதிட்டார். அவரது பெண்ணுரிமைக் கருத்துகள் இன்றைய நிலையில் கூட புரட்சிகரமாகத் தோன்றக்கூடியவை.
சுதந்திரத்துக்கு முந்தைய இந்திய அரசு இந்தியைத் திணிக்க முயன்றபோது அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர். இந்தியா முழுவதும் ஒரே நாடாக ஆவதை எதிர்த்த அவர் தென்னிந்தியப் பகுதிகள் இணைந்து திராவிட நாடாக ஆகவேண்டும் என்று குரல் கொடுத்தார்.
 ஆனால், தமிழ்நாடு தவிர்த்த பிற பகுதிகளில் இதற்கு ஆதரவு இல்லாத நிலையில், தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கத்தை மாற்றினார்.
இட ஒதுக்கீட்டு கொள்கைக்காக வாதிட்ட, பெண்ணுரிமைக்காக வாதிட்ட, மூடப் பழக்கங்களை எதிர்த்த, மதத்தை எதிர்த்த பெரியார் தமது கருத்துகள் பரவ தமிழ்நாடு முழுவதும் நீண்ட சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு பிரசாரம் செய்தார்.
தமது பிரசாரங்களில் தாம் சொல்வதாலேயே ஒரு கருத்தை ஏற்கவேண்டியதில்ல என்றும், சிந்தித்துப் பார்த்து அவரவர் கருத்துக்கு சரியெனப் படுகிறவற்றை மட்டுமே ஏற்றால் போதுமென்றும் வாதிட்டார் அவர்.
ரஷியாவுக்குப் பயணம் சென்று வந்த பிறகு பொதுவுடமைக் கொள்கைகளில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. 
உலக கம்யூனிஸ்டுகளின் முதல் ஆவணமான கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை என்ற புத்தகத்தை தமிழில் முதன் முதலில் மொழி பெயர்த்துப் பதிப்பித்தவர் பெரியார். தமது கருத்துகளைப் பரப்ப 'குடியரசு' முதற்கொண்டு பல பத்திரிகைகளையும் நடத்தியவர் பெரியார்.
அவர் கம்யுனிசக் கொள்கைகளை நம் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப வகைப்படுத்தி தருவதாக கூறியுள்ளார்.
இந்திய மண்,கலாசாரம்,பழக்க வழக்கங்களுக்கேற்ப பொதுவுடமை கொள்கைகளைத் தந்தாலேயே பெரியாரை இடதுசாரிகளும் கொண்டாடுகிறார்கள்.
தம்மைவிட வயதில் மிகவும் குறைந்தவரான மணியம்மையை அவர் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட பலர் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டு திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து 1949ல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை உருவாக்கினர். அந்தக் கட்சியும் அதிலிருந்து பிரிந்த அண்ணா திமுகவும் தமிழ்நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வருகின்றன.
சுயமரியாதை, மத மறுப்பு, மூட நம்பிக்கை மறுப்பு, பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, திராவிடக் கொள்கை, பிராமணர் எதிர்ப்பு போன்ற தாம் நம்பிய பல கொள்கைகளுக்காக வாழ்நாளெல்லாம் போராடியவர் பெரியார். இந்தப் போராட்டத்தில் அவரைப் பாராட்டியவர்களும், எதிர்த்தவர்களும் உண்டு.
பிராமண எதிர்ப்பும், கடவுள் மறுப்பும் அவரது கொள்கையாக இருந்தபோதும் அதை தனிப்பட்ட நபர்களை வெறுப்பதற்கான வழிகளாக அவர் மாற்றிக்கொண்டதில்லை. பிராமணராக இருந்தபோதிலும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜகோபாலாச்சாரியுடன் பெரியார் கடைசிவரை நல்ல நட்பைப் பேணினார். கடவுள் நம்பிக்கை உடைய குன்றக்குடி அடிகளார் போன்றவர்களோடும் பெரியாருக்கு நல்ல நட்பு நிலவியது.
இன்றளவும் சுயமரியாதை பகுத்தறிவு என்ற வார்த்தைகளுக்கு   மகத்துவம் இருக்கிறது என்றால், அது பெரியார் சிலர் தங்களை உயர்ந்தவர்களாகவும் மற்றவர்களை தீண்டத்தகாதவர்களாகவும்  மக்களிடம் உண்டாக்கிய எண்ணங்களை இதன் மூலம் தகர்த்து எறிந்ததுதான் .
"பகுத்தறிவு ,திராவிடம், சுய மரியாதை, மூட நம்பிக்கை மறுப்பு, எழுத்து சீர்திருத்தம், பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, பிராமணர்களுக்கு மற்றவர்கள் தாழ்வில்லை"
இவை எல்லாம்  தமிழர்களுக்காக பெரியார் விட்டுச் சென்ற செல்வங்கள்.
அதனால்தான் அவர் பெரியார்.
தமிழக மக்களுக்கு தந்தை பெரியார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 தோழர் லெனின் -தந்தை பெரியார்.
இன்று இந்தியாவை காவியாக்க முனைந்து வெறிபிடித்தலையும் பாஜக வுக்கு எதிரிகள் காங்கிரசல்ல.
இடது சாரிகள் மட்டும்தான்.
திரிபுராவில் காங்கிரஸாரை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க முடிந்த அவர்களிடம் விலை போகாதவர்கள் இடதுசாரிகள் மட்டும்தான்.ஆனால் தமிழத்தில் காலை ஊன்ற கூட முடியாமல் தடுப்பது திராவிட இயக்கங்கள்தான்.
எனவேதான் பாஜகவினருக்கு லெனின்-பெரியார் சிலைகளைப் பார்த்தால் பற்றிக்கொண்டு வருகிறது.
திரிபுராவில் லெனின் சிலை போல தமிழ்நாட்டில் பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென எச். ராஜா  பதிவிட்ட விவகாரம் நேற்று சர்ச்சையாக உருவெடுத்தவுடனேயே, இது அவரது தனிப்பட்ட கருத்து என பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
ஆனால் ராஜா பாஜகவின்  தேசிய செயலாளர்.அவர் கூறுவது பாஜகவின் கருத்தல்ல என்று எப்படி கூற முடியும்?பாஜக தலைவர் அமித்ஷா இப்படி கலவரத்தை தூண்டிய ராஜா மீது எந்த நடவடிக்கையும் கிடையாது என்று சொன்னதோடு இதுவரை ராஜாவை கண்டித்து கூட  எந்த அறிக்கையும் விடவில்லை.அதேபோல்தான் பிரதமர் மோடி,உள்துறை அமைசசர் ராஜ்நாத் சிங்கும்.பெரியாரை பற்றி தவறாக கூறக்கூடாது என்கிறார்களே தவிர கூறியவரை கண்டிக்கவே இல்லை.

தமிழ்நாட்டில் கலவரம் தூண்டி பாஜகவை காலூன்ற வைக்க அவர்கள் செய்த ஆழம் பார்க்கும் செயல்தான் இது என்பது தெரிகிறது.
திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட திருப்பத்தூர் நகர் ஒன்றியச் செயலாளர் ஆர். முத்துராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் ,எந்த சிலையையும் அவமதிப்பதை பாஜக கண்டிக்கிறது என்றும் தமிழிசை கூறியிருக்கிறார்.ஆனால் இந்த பிரச்னையின் ஆணிவேர் ராஜா அதே பொறுப்பில் இன்னும் பொறுப்பில்லாமல்தான் அழைக்கிறார்.அவர் மீது எந்த நடவடிக்கையும் கிடையாது.
ஆனால்  தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மட்டும்தான் எச். ராஜா அளித்த விளக்கம் ஏற்கமுடியாதது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சித் தலைமை முடிவுசெய்யும் என்றும் கூறியுள்ளார் .
 எச். ராஜா இன்று செய்தியாளர்களிடம் பேசினார். தனக்குத் தெரியாமல் தன் ஃபேஸ்புக் அட்மின் அந்தக் கருத்தைத் தெரிவித்துவிட்டதாகவும் அதற்காக தான் வருத்தம்(கவனிக்கவும் மன்னிப்பு அல்ல. )அந்த அட்மினை பணியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் ராஜா தெரிவித்தார்.
பா.ஜ.க. தலைவர்கள் எச். ராஜாவின் கருத்தை ஒத்துக்கொள்ளவில்லை என்றுபேசினாலும்,திருப்பத்தூர் முத்துராமனை கட்சியை விட்டு நீக்கியது போல் இவர்  மீது மட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்பதுதான் தற்போதைய பலரின் மனதில் எழுந்துள்ள வினா?
அதற்கு பதில் காண்பதும் சுலபம்.பாஜகவை இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்க கொள்கை சூழ்ச்சியே "பார்ப்பனர்கள் பின்னால் இருந்து இயக்க முன்னாள் தெரியும் முகம் சூத்திரனாகத்தான் இருக்க வேண்டும்.சாவி கொடுப்பது அல்லது இயக்குவது அவர்கள்தான்.ஆனால் மோடி ,பொன்னார்,தமிழிசை போன்றவர்கள்தாம் மக்களிடம் வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டும்.இயக்குனர்கள் தப்பி விடுவார்கள்.
குருமூர்த்தி போன்ற வர்கள் பணமதிப்பிழம்பில் மோடியை குற்றம் சாட்டியது போல் காட்டி அதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் கட்டிக்கொள்வார்கள்.எதிர்த்து அறிக்கைகள் கூட விடுவார்கள்.ஆனால் அதற்கு திட்டமிட்டு இயங்க செய்ததே அவர்கள்தாம். 
"எச். ராஜா நீண்ட காலமாகவே இப்படிப் பேசிவருகிறார். பெரியார் சிலையை செருப்பாலடிப்பேன் என்றார்.அப்போது பலரால் கவனிக்கப்படா நபர் இவர்.ஆனால் அப்படி பேசியே இன்று கவனிக்கப்படும் நபராக்கியுள்ளார்.

"தோழர் லெனின்சிலையை அகற்றிவிடுவதால் கம்யூனிசம் வீழ்ந்துவிடும் நினைப்பவர்கள் படுமுட்டாளகத்தான் இருக்கவேண்டும்.
லெனின் இறந்து 90ஆண்டுகள் ஆகியும் கூட இன்றுவரை பாசிசவாதிகளுக்கு லெனின்,ஸ்டாலின் ,மார்க்ஸ் மீதான பயம் குறையவில்லை என்பதையே திரிபுராவில் தோழர் லெனின்சிலை அகற்றியநிகழ்வுமூலம் உறுதிபடதெரிகிறது .
கம்யூனிசம் வளரக்கூடியவிஞ்ஞானம் அதனை அழிக்கயாராலும் இயலாது".
                                                                                                                                                         -ஜிக்னேஷ்மோவானிகுஜராத் MLA

அதேபோல் இந்தியாவில் பெரியார் மீதான பயம் அவர் சிலையைப் பார்த்தும் வருகிறது இந்துத்து நாஜி  வெறியர்களுக்கு.
எச்ச ராஜா போன்றோருக்கு பெரியார் அன்றே பதில்சொல்லியுள்ளார்.

======================================================================================
ன்று,
மார்ச்-08.


  • இந்திய விடுதலை போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் பிறந்த தினம்(1908)

  • நியூயார்க் பங்குச்சந்தை நெறிபடுத்தப்பட்டது (1817)

  • உலக  மகளிர் தினம்
=======================================================================================
பாலகங்காதர திலகர்
முதன் முதலில் நாடுதழுவிய இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரிய இவர் இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர்.
திலகர் 1856 ஜுலை 23ல் மகாராஷ்ராவில் உள்ள இரத்தினகிரி என்ற இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் கங்காதரர் ராமச் சந்திர திலக் மற்றும் பார்வதிபாய் ஆவார். திலகரின் தந்தை ஆசிரியராகப் பணியாற்றினார்.
திலகர் சிறுவயதிலேயே நேர்மையானவராகவும், நல்லொழுக்கம் உடையவராகவும் விளங்கினார். தனது தொடக்கக் கல்வியை புனேயில் கற்றார். தனது பதினாறாவது வயதில் சத்திய பாமா என்ற பெண்ணை மணந்தார்.
பள்ளிக் கல்வியை முடித்துப் பின் டெக்கான் கல்லூரியில் சேர்ந்து 1877ல் கணிதத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். பின் 1879ல் சட்டப் படிப்பை முடித்தார். முதலில் தனியார் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணியாற்றி பின் பத்திரிக்கையாளார் ஆனார்.
ஆங்கிலக் கல்வியானது மாணவர்களை இந்திய பண்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்களை முற்றிலும் மாற்றுவதாக கடுமையாக விமர்சித்தார். நல்ல கல்வியே நல்ல மக்களை உருவாக்கும் என்று கூறினார்.
மேலும் இந்தியர்கள் அனைவரும் இந்திய கலாச்சாரம், தேசியக் கொள்கைகள் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணி தக்காண கல்வி சமூகத்தை நிறுவினார். தரமான கல்வியை இந்திய இளைஞர்களுக்கு வழங்குவதே அதனுடைய கொள்கையாகும்.

தக்காண கல்வி சமூகத்திலிருந்து புதிய ஆங்கில மேல்நிலைப் பள்ளியும் பெர்கஸ்ஸான் கல்லூரியும் தோற்றுவிக்கப்பட்டது. திலகர் பெர்கஸ்ஸான் கல்லூரியில் கணிதத்தைப் பயிற்றுவித்தார்.
பின் திலகர் தனது நண்பர்களுடன் இணைந்து கேசரி என்ற மராத்திய பத்திரிக்கையையும், மராட்டா என்ற ஆங்கிலப் பத்திரிக்கையும் தொடங்கினார். இந்த பத்திரிக்கையில் இந்திய மக்களின் துயரங்கள் மற்றும் உண்மைநிலைகள் படங்களாக வெளியிடப்பட்டன.
மக்களுக்கு சுதந்திர விழிப்புணர்வை ஊட்டும் விதமாக பல கட்டுரைகளை வெளியிட்டார். ஆங்கில அடக்குமுறை மற்றும் சுரண்டல்கள் பற்றியும் எழுதினார். இதனால் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1890ல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். புனே நகர்மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விநாயகர் சதுர்த்தி, சிவாஜி உற்சவம் ஆகிய சமூக விழாக்களின் மூலம் மக்களை ஒற்றுமைப்படுத்தி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார்.
பெண் குழந்தைகளின் இளவயது திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதாரித்தார். 1896ல் பிளேக் நோய் பரவியது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் விக்டோரியா மகாராணியின் வைரவிழா கொண்டாட்டத்தில் கவனம் செலுத்திய ஆங்கிலேய அரசைக் கண்டித்து பத்திரிக்கையில் எழுதினார். எனவே ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
1905ல் கர்சன் பிரபு வங்கத்தை இரண்டாகப் பிரித்தார். இதனை எதிர்த்த திலகர் 1907ல் சுதேசி இயக்கத்தை ஆரம்பித்தார். வெளிநாட்டுப் பொருட்களை விட்டுவிட்டு இந்தியாவில் செய்யப்படும் பொருட்களை மட்டும் பயன்படுத்துவது என்பதே சுதேசி இயக்கம் ஆகும்.
தன்வீட்டின் முற்றத்திலேயே சுதேசிப் பொருட்கள் கொண்ட கடையை ஆரம்பித்தார். கிராமம் கிராமமாகச் சென்று சுதேசி பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சென்றார். அப்போது தான் காங்கிரஸ் கட்சி மிதவாதிகள், தீவிரவாதிகள் என பிரிவுகளாகப் பிரிந்தது.

தீவிரவாதிகள் பிரிவில் திலகர் ஈடுபட்டு அந்நிய ஆட்சிக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டார். இதனால் ஆறு வருடங்கள் மாண்டலே என்ற இடத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது கீதா ரகசியம் என்ற நூலை எழுதினார். இந்த நூலை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை இந்திய விடுதலைப் போராட்டத்திற்குப் பயன்படுத்தினார்.
சிறையில் இருந்து வெளிவந்தபின் காங்கிரசின் மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகளை இணைக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. பின் அன்னிபெசன்ட் அம்மையாருடன் இணைந்து ஹோம்ரூல் இயக்கத்தில் ஈடுபட்டார். சுயராஜ்ஜியம் என்பதே அதனுடைய கொள்கை ஆகும்.
திலகர் ஊர் ஊராகச் சென்று சுயராஜ்ஜியம் பற்றி எடுத்துரைத்து மக்களிடம் சுதந்திர வேட்கையைத் தூண்டினார். மக்களை ஒற்றுமைப் படுத்தி விடுதலை உணர்வினை மக்களிடம் கொண்டு செல்வதையே தலையாய கடமையாகக் கொண்டார்.
மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் எனப் பொருள்படும் லோகமான்யர்என்ற அழைக்கப்பட்ட பால கங்காதர திலகர் 1920 ஆகஸ்டு 1ல் காலமானார்.
இந்திய சுதந்திர வரலாற்றில் முதன் முதலில் மக்களின் செல்வாக்கைப் பெற்ற தலைவர் என்ற பெருமை பெற்ற‌வ‌ர் பால கங்காதர திலகர். 



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?