நலம் பெற தாண்டுங்கள்.

உடல் உழைப்பு குறைந்து கணினிமயமான இன்றைய உலகில் ஆண்களுக்கும், பெண்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. 

அதுவும் தகவல் தொழில் நுட்பம் பணியில் இருப்பவர்களுக்கு உண்ணவும் உறங்கவுமே நேரம் கிடைப்பது அரிதாகி வரும் இந்நிலையில் உடற்பயிற்சி பற்றி எண்ணுவது எங்கே?
அவர்களுக்கு கிடைக்கும் ஒய்வு நேரத்தையும் ஆண்டராய்ட் அலைபேசிகளை நோண்டுவதிலேயே செலவிட்டுவிடுகிறார்கள்.
இதனால் கண்களும் கெட்டுப்போய்,மனதும் குப்பையாகி மனஅழுத்தத்துக்குள்ளாகிறார்கள்.ஒவ்வொரு மனிதனும் தனித் தீவாகவே உள்ளனர்.
மனைவி மக்களிடம் கூட ஓட்டுதல் இல்லா நிலை.
விளைவு, உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்து, நோய்களால் அவதிப்படுவதும், சிறு வயதிலேயே தொப்பை ஏற்படுவதும் என, பிரச்னைகள் சர்வ சாதாரணமாகி விட்டன.

வேறு வழியின்றி, உடலின் கலோரிகளை எரிப்பதற்கு, பணம் செலவழித்து "ஜிம்'முக்கு பயிற்சி செல்ல வேண்டிய நிலைக்கு பலரும் ஆளாகின்றனர். 

இந்த பிரச்னைக்கு எளிய தீர்வாக இருப்பது, "ஸ்கிப்பிங்'. 
இதை வீட்டிலேயே அதற்கான கயிறை வாங்கி கிடைக்கும் நேரத்தில் செய்யலாம்.ஜிம்முக்கு போகும் கட்டாயம் இல்லை.
அனைத்துவிதமான உடல் உறுப்புகளுக்கும் இது மிகசிறந்த ஆரோக்கியத்தையம் தருகிறது.
இந்த கயிறுதாண்ட(ஸ்கிப்பிங்)லை   பெண் பிள்ளைகளின் விளையாட்டு என்றே பலரும் தவறாக எண்ணியிருக்கின்றனர்.காரணம் சங்ககாலம் முதல் தமிழ் இளம் பெண்கள் விளையாட்டாக பூங்கயிறு தாண்டல் விளையாட்டை குழுவாக சேர்ந்து விளையாடி வந்துள்ளனர். இதை பெண்களுக்கு என ஒதுக்கிவிட்டனர்.

இதனால் சிலர்  ஆண் பிள்ளைகளை "ஸ்கிப்பிங்' பயிற்சி செய்ய விடாமல் தடுக்கிறார்கள் .அது தவறு.

உண்மையில், உடலை, வலுவாக்கி, அழகாக்கும் எளிய உடற்பயிற்சிகளில் "ஸ்கிப்பிங்' முதன்மையானது.
"ஸ்கிப்பிங்' செய்வதன் மூலம் உடலில் ரத்த அழுத்தம் சீராகும்.

 அதிகப்படியாக இருப்பின், குறையும். 
உடல் பருமன் பிரச்னை தீரும். 


தினமும் இப்பயிற்சி செய்தால், தேவையற்ற கொழுப்பு கரைந்து, தொப்பை பிரச்னை படிப்படியாக குறையும்.

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் தரக்கூடியது ஸ்கிப்பிங்.

இப்பயிற்சியால், இருதயமும், நுரையீரலும் வலுப்பெறுகின்றன. கை, கால், தொடையில் இருக்கும் தசைகளுக்கு அதிக சக்தியும், வலுவும் கிடைக்கின்றன.

"ஸ்கிப்பிங்' பயிற்சியை துவங்குமுன், இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஷூ பயன்படுத்துவது நல்லது. "ஸ்கிப்பிங்' கயிறு சரியான அளவு கொண்டதாக இருப்பது முக்கியம். 
அதிக நீளமாகவோ, குட்டையாகவோ இருப்பது கூடாது.

 மிதமான அல்லது வெறும் வயிறுடன் பயிற்சி செய்வதே சரியானது. ஸ்கிப்பிங் பயிற்சி, சமமான, வழுக்கும் தன்மை இல்லாத இடத்தில் செய்ய வேண்டும். 
கற்கள் மிகுந்த இடத்திலோ, மார்பிள் பதித்த தரைகளிலோ பயிற்சி செய்யக்கூடாது.

முதலில் கயிறை உங்களது பின் குதிகாலின் அடிப்பகுதியில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் மெதுவாகக் கயிறைச் சுழல விட, அந்த வேகத்துக்கு ஏற்பக் கயிறைத் தாண்ட வேண்டும். முதலில் மெதுவாக ஆரம்பித்து, பின் வேகத்தைக் கூட்ட வேண்டும்.

இவ்வாறு, நின்ற இடத்திலேயே ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதே, முதல்படி. தொடர்ந்த பயிற்சியின் மூலம் அடுத்தடுத்த நிலைகளை எட்ட முடியும். 
முன்புறம் தாவுதல், பின்புறம் தாவுதல், ஒடிக் கொண்டே தாவுதல், குறுக்கு வாக்கில் தாவுதல் என, பல வகைகளில் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாம்.

தினமும், அரை மணி நேரம் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால், உடலில் இருக்கும் 200 கலோரிகள் வரை எரிந்து காலியாகி விடும்.
 அதன் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். 
ஒரு சில மாதங்கள் "ஸ்கிப்பிங்' தொடரும் பட்சத்தில், தொப்பை உள்ளிட்ட உடல் பிரச்னைகள், நிச்சயமாக இருந்த இடம் தெரியாமல் போய் விடும். 
கவனிக்க 
இதய நோயாளிகள் ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்க்கவும்.

கணுக்கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள் முடிந்த வரை ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்க்கலாம்.
அந்நிலையில்  பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப்பெற்றப் பின்னர்  செய்வதுதான்  நல்லது.

========================================================================================
ன்று,
ஆகஸ்ட்,19.
  • உலக புகைப்பட தினம்
  • உலக  மனிதநேய தினம்
  • ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்(லெனின் கிராட் ) நகரம் அமைக்கப்பட்டது(1768)
  • கொழும்பு தலைமை தபால் அலுவலகம் திறக்கப்பட்டது(1895)
  • ஆப்கானிஸ்தான் விடுதலை தினம்(1919)
 ஒற்றுமை
இன்று இடிந்து விழுந்த கொள்ளிடம் பாலம் ,கலைஞர் ,வாஜ்பேயி  ஆகியோருக்கிடையில்  ஒரு சோக உள்ளது. 
அது 1924ஆண்டுதான் . 
கலைஞர் கருணாநிதி பிறந்தது ஜூன் 3, 1924. 
அது போல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த ஆண்டும் 1924. 
அதுபோல் கொள்ளிடம் பாலம் கட்டப்பட்டதும் 1924-ஆம் ஆண்டு.
கலைஞர்,வாஜ்பாய் இறந்ததும் ஆகஸ்ட் மாதமாகும்.
 கொள்ளிடம் பழைய பாலமும் தனது வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக முடித்து வரும் இதே ஆகஸ்ட் மாதம்தான்! 
என்னே ஒரு சோக ஒற்றுமை பாருங்கள்!
====================================================================================

ஈழம் பிடித்துத் தர சீமான் இனிமேல் வரமாட்டார்?

முதலில் திராவிடம், இடையில் கம்யூனிசம், தேவைப்பட்டால் நாஸிசம் என்று காலத்திற்குக் காலம் என்றல்ல கணத்திற்குக் கணம் தன்னை உருமாற்றிக்கொள்ளும் சீமான் கடந்தவாரம் மிக முக்கியமான கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார். 
ஈழப் பிரச்சனையை, அதிலும் கடந்த இனப்படுகொலையை, பிரபாகரன் போன்ற குறியீடுகளை தனது அரசியல் அடையாளமாகப் பயன்படுத்தி தமிழகத்தில் வாக்குத் திரட்டி முதலமைச்சர் ஆகிவிடுவேன் என்று கூறும் சீமான் தமிழீழம் பிடித்துத் தருவேன் என்று வேறு கூறிவருகிறார்.
வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பை சுய நிர்ணைய உரிமைக்கு உட்பட்ட பகுதியாக ஏனைய தேசிய இனங்களுடன் இணைந்து கூட்டாட்சி அமைப்பதா அன்றி எது நடந்தாலும் பிரிந்து செல்வதா என்பது ஒரு தேசிய இனத்தின் முடிவு. 
இல்லை தமிழீழம் என்ற பெயரில் பிரிந்து செல்வோம் என்பது சீமான் குழுவின் தனிப்பட்ட முடிவு.
இந்தியாவில் இந்துதுவ பாசிசம் போன்றே இலங்கையில் பேரினவாதம் என்பது ஒடுக்கும் தத்துவமாகவும் ஆட்சி அதிகாரத்தின் பின் புலத்தில் செயற்படும் கோட்பாடாகவும் காணப்படுகிறது. சிங்கள பௌத்த பேரினவாதம் என்றழைக்கப்படும் இக் கோட்பாடானது, சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழும் அரசிற்கு எதிரான போராட்டங்களை தமிழ் பேசும் சிறுபான்மையினர் மீது மடைமாற்றுவதற்கு பயன்பட்டது.
இதனையும் மீறி இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதப் போராட்டம் சிங்கள மக்கள் மத்தியிலிருது இரண்டு தடவை எழுந்தது. 1971 ஆம் ஆண்டும் 1987 முதல் 1989 ஆம் ஆண்டும் ஏற்பட்ட ஜே.வி.பி இயக்கத்தின் ஆயுதப் புரட்சி இலங்கை அரசாங்கங்களை ஆட்டம் காண வைத்திருந்தது.
இலங்கை அரசுகளின் இத் தந்திரோபாயத்தைப் புரிந்துகொண்டு குரலெழுப்பிய சிங்கள முற்போக்கு ஜனநாயக வாதிகள் இலங்கை அரசு படைகளால் அழிக்கப்பட்டுள்ளனர்.

2009 ஆண்டில் நடைபெற்ற இனப்படுகொலை ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், இலங்கை அரசு மேலும் பேரினவாதத்தை முன்வைத்து அரசியல் நடத்த முடியாத சூழல் உருவானது.
 இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டமாக நடத்த வேண்டிய அரசியல் சூழல் இன்றும் காணப்படுகிறது என்பது வெளிப்படையான உண்மை என்றாலும் அப்போராட்டத்தை அங்குள்ள மக்கள் திட்டமிட்டு படி நிலை வளர்ச்சி ஊடாக நடத்த வேண்டும், அதற்காக அவர்கள் அங்குள்ள குறைந்தபட்ச ஜனநாயக அரசியல் சூழலைப் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
இதனைச் சீமான் ஒருவகையில் உணர்ந்துள்ளது போன்ற தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்தவாரம் நடைபெற்ற அவரது கட்சிக் கூட்டம் ஒன்றில் அவர் இப்படிக் கூறுகிறார்.
“கண்டபடி பதிவிடாதீர்கள், நாங்கள் எல்லாம் நக்சல்பாரிகளா, எங்கள் தலைவர் சாரு மஜும்தார் என்று அவன் பாட்டுக்கு பேசிட்டுப் போயிட்டன். உடனேயே சீமான் கட்சி நக்சல்பாரி இயக்கம் என எங்க அண்ணன் பொன் ராதாகிருஷ்ணன் பேசுகிறார்”
சாரு மஜும்தார் என்ற ஆயுதப் போராட்ட இயக்கத் தலைவரைப் போன்றவரே சீமான் என அவரது இயக்க உறுப்பினர் ஒருவர் பேசி யூ டியூப்பில் பதிவிட்டதற்கே இவ்வளவு அச்சப்படும் சீமான் ஈழம் தொடர்பாக என்ன பேசுகிறார்?
அடுத்த ஈழப் போர் தொடங்கும், தமிழீழத்தைப் பிடித்தே தீருவோம், இந்தியாவில் படை திரட்டி இலங்கைக்கு அனுப்புவோம், என்பதில் ஆரம்பித்து சிங்களப் பெண்களைப் பாலியல் வல்லுறவிற்கு உபடுத்துவேன், மார்பகங்களை அறுப்பேன் என்பது வரை பேசுகிறார்.
அரசியல் பாதுகாப்புள்ள சீமான் சாரு மம்ஜூதாருக்கு இவ்வளவு அச்சப்பட்டால், பேரினவாதம் இன்னும் கோலோச்சும் ஈழத்தில் வாழும் தமிழர்கள் எவ்வளவு அச்சப்பட வேண்டும்? அங்கு சிறையிலிருக்கும் விடுதலைப் புலிகளின் கடந்தகாலப் போராளிகள் எவ்வளவு அச்சப்படுவார்கள். தடுப்புக்குச் சென்றுவந்த போராளிகளின் நிலை?
இவை அனைத்திற்கும் அப்பால் இலங்கை அரசு தனது இராணுவ பலத்தை அதிகரிக்கும் போதெல்லாம், சிங்கள மக்கள் கேள்வி கேட்கிறார்கள். 
அப்போதெல்லாம், தமிழ் நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் தீவிரவாதம் இன்னும் நிலைகொண்டுள்ளது என இலங்கை அரசாங்கம் அவர்களது வாயை மூடிவிடுகிறது. பெரும்பான்மை மக்களின் ஆதரவைத் தன்பக்கம் திருப்பிக்கொள்கிறது.
தவிர, பொழுது போக்கிற்காகவும், தம்மைத் தலைவர்கள் என்று அழைத்துக்கொள்வதற்காகவும், இன்னபிற பிழைப்புவாத நலன்களுக்காகவும் ஈழம் பிடிக்கப்போவதக உணர்ச்சி வசனம் பேசும் புலம்பெயர் தமிழர்களும் சீமானின் அறிவுரையை ஏற்பார்கள் என நம்புவோமாக.
சிறியளவிலான ஜனநாயக சூழலையும் இலங்கை அரசு இவர்களைக் காரணம் காட்டி மூடிவருகிறது. சீமன் உட்பட்டவர்கள் இலங்கையில் மக்கள் அமைப்புக்களை உருவாக்கி ஒரு அமைப்பின் நிறுவன வேலைகளில் ஈடுபடுவதில்லை. மாறாக அவ்வாறான வேலைகளில் ஈடுபடும் சூழலையும் சீர்குலைத்து இலங்கை அரசிற்கு சார்பான அரசியல் சூழலை ஏற்படுத்தத் துணை செல்கிறார்கள்.
இலங்கைப் பேரினவாத அரசிற்கு எதிரான போராட்டத்தை ஈழத்தமிழர்கள் தமது எல்லைக்குளில்ருந்து முன்னெடுக்கும் வழிகள் அனைத்தையும் அடைத்துவிடுவதற்கு இவர்களின் உணர்ச்சிப் பேச்சுக்கள் தடையாக அமைந்துவிடுகின்றன. 
சாரு மம்ஜூதார் குறித்துப் பேசுவதால் தனக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாகப் பேசும் சீமான், இனியாவது தான் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தும் ஆபத்துக் குறித்து உணர்ந்துகொள்வார் என நம்புவோமாக.
                                                                                                                               நன்றி:இனியொரு,
===================================================================================
நல்லப் பொழுதை எல்லாம் தூங்கி ...
நீண்ட நேரம் தூங்கினால் தான், உடல் நலத்துக்கு நல்லது என்று, பலரின் நினைப்பாக இருக்கிறது. விடுமுறை நாட்களில், நேரம் கடந்து எழுந்திருப்போர் தான், இன்று அதிகம். 

ஆனால், எட்டு மணி நேரம் தூக்கம் போதும், உற்சாகம் பிறக்க. அதிகாலையில் எழும் பழக்கம், துவக்கத்தில் சற்று சிரமமாகத் தான் இருக்கும். 

நாளடைவில், அதுவே பழக்கமாகி விடும். குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் எழ முடியாவிட்டால், கடிகாரத்தில் அலாரம் வைத்து எழுந்திருக்கலாம்.
பிரம்ம முகூர்த்தம் என்று öசால்லப்படுகிற, அதிகாலை 4 மணி முதல், 6 மணிக்கும் எழுந்தால், உடலில் உள்ள வாதம் சீர்கெடாது. 

அதிகாலையில் புத்தம் புதிய காற்று வளிமண்டலத்திலிருந்து நமக்கு கிடைக்கும். சுத்தமான காற்றை சுவாசிக்கும் போது, ரத்த ஓட்டம் சீராகி, நோய்கள் தாக்கும் அபாயம் குறைந்தே போகும்.
இரவில் நல்ல தூக்கம்: அதிகாலையில் எழுவோர், சுறுசுறுப்பாக இருப்பதும், தாமதமாக எழுவோர், மந்தத்தன்மையோடு இருப்பதும், புதிய காற்றை சுவாசிக்க முடியாமல் போவது தான். 

அதிகாலையில் தூங்கி எழுவதால், மன அழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசோல் என்ற ஹார்மோன் சுரப்பு கட்டுப்படுத்தப்படும். அதிகாலையில் எழும் பழக்கத்தை கையாண்டால், இரவிலும் நல்ல தூக்கம் பிடிக்கும். மேலும், இரவில் நன்றாக தூங்க வேண்டும் என்றால், அரை வயிறுக்கு தான் உணவு உட்கொள்ள வேண்டும்.

கால் வயிறு நீர் குடித்து, கால் வயிற்றை காலியாக வைக்க வேண்டும். அப்போது, ஜீரண சக்திக்கு எவ்வித இடையூறும் இருக்காது. தூங்க செல்லும் முன் குளியல் மேற்கொண்டால், இரவில் நல்ல ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தை பெறலாம். 
அதிலும், இரவில் சீக்கிரம் குளித்துவிட்டு தூங்கினால், காலையில் அலாரம் அடிப்பதற்கு முன்பே எழ முடியும்.

இரவில் தாமதமாக, அதுவும் ஆரோக்கியமற்ற உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக, அசைவ உணவுகள் உண்பதை தவிர்ப்பது நல்லது. 
ஏனெனில், செரிமானம் சீராக நடைபெற்று, தூக்கத்துக்கு இடையூறு ஏதும் நேராமல் இருக்கும். 
தூக்கத்துக்கு இடையூறு ஏற்படாமல் நிம்மதியான தூக்கத்தை ஒருவர் மேற்கொண்டால், காலையில் வேகமாக எழலாம்.
அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த பின், மனதை அமைதிப்படுத்த வெளியே காற்றோட்டமாக சிறிது தூரம் நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். 
இதனால், இரவில் நிச்சயம் நல்ல தூக்கத்தை பெற்று, அதிகாலையில் வேகமாக எழ முடியும் அதிகாலை எழுந்தவுடன், உடற்பயிற்சி, தியானம், யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த நேரத்தில் விழிப்பவர்கள் பெரும்பாலும் ஆரோக்கியமாகவே இருக்கின்றனர். 
உடல் நலக்குறைவு கொண்டவர்கள் கூட, அதிகாலையில் எழும் பழக்கத்தை வழக்கப்படுத்தினால், உடல் நலம் சீராக இருக்க வாய்ப்பு உருவாகும்.
உடலில் உள்ள கழிவுகள் காலையிலேயே வெளியேறாவிட்டால், பின் அந்த நாளானது அசவுகரியமானதாக இருக்கும். எனவே, உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு, வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து, தேன் சேர்த்து குடிக்க வேண்டும். 
இதுவும், காலையில் செய்யும் ஆரோக்கிய பழக்கங்களில் ஒன்று. 
தவிர, அன்றைய நாளுக்கு, என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற பட்டியலை தயாரித்து, அதன்படி, நேரம் தவறாது முடிக்க முடியும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?