நேரடி எச்சரிக்கை?
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. பஹல்காம் தாக்குதல், வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப இந்தியா கூட்டணி ஆயத்தம்.
பீகாரில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்ப்பு பணி நிறைவு. 32 லட்சம் வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவம் அளிக்கவில்லை என தேர்தல் ஆணையம் தகவல்.

நேரடி எச்சரிக்கையா?
முட்டுக் கொடுப்பா??
அவர் நினைத்திருந்தால் அந்தக் கேள்வியை கடந்து போயிருக்கலாம். ஆனால் அப்படிச் செல்ல அவர் முயற்சிக்கவில்லை. வரிந்து கட்டிக்கொண்டு ‘கூட்டணி ஆட்சி’குறித்த கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறார் அண்ணாமலை.
ஏற்கனவே கூட்டணி ஆட்சி விவகாரம் அதிமுக – பாஜக இடையே பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் அண்ணமலை ஊற்றிய எண்ணெய்யில் கொழுந்து விட்டு எரிகிறது. இதற்கு மேலும் சமாளிக்க முடியாமல்தான் நேரடியாகவே அமித்ஷாவுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார் பழனிசாமி.
அதிமுக – பாஜக கூட்டணியை அறிவிப்பதற்கு முன்பே டெல்லியில் பழனிசாமியுடனான சந்திப்பிற்கு பிறகு, ‘தமிழ்நாட்டில் 2026இல் என்.டி.ஏ. ஆட்சி அமையும்’ என்று அறிவித்தார் அமித்ஷா. இதையடுத்து சென்னையில் அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பு நிகழ்விலும் கூட, ’கூட்டணி ஆட்சி’ தான் என்பதை அறிவித்தார் அமித்ஷா. அதுவும் பழனிசாமியை பக்கத்தில் வைத்துக்கொண்டே இதை அறிவித்தார் அமித்ஷா.
அமித்ஷா அப்படிச் சொல்லவில்லை. அவரது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்று அதிமுகவினர் எவ்வளவோ போராடி சமாளித்துக் கொண்டிந்த வேளையில், கேரளாவில் பேசியபோதும் தமிழகத்தில் 2026இல் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சிதான் என்பதை உறுதிப்படுத்தினார் அமித்ஷா.
வேறு வழியில்லையே சமாளித்துதானே ஆகவேண்டும். அதனால்தான், அமித்ஷா சொன்ன வார்த்தைகளை பிரித்து, எங்கள் ’கூட்டணி’ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித்ஷா சொன்னாரே தவிர ’கூட்டணி ஆட்சி’ என சொல்லவில்லை என்று, அமித்ஷா சொன்னதற்கு புதிய அர்த்தம் கொடுத்து சமாளித்துக் கொண்டிருந்தார் பழனிசாமி. அதிலும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார் அண்ணாமலை.
அவர் நினைத்திருந்தால் அந்தக் கேள்வியை கடந்து போயிருக்கலாம். ஆனால் அப்படிச் செல்ல அவர் முயற்சிக்கவில்லை. வரிந்து கட்டிக்கொண்டு ‘கூட்டணி ஆட்சி’குறித்த கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறார் அண்ணாமலை.

அண்ணாமலை சொன்ன பதிலை மேலோட்டமாகப் பார்த்தால் நியாயமான பதில் – சரியான பதில் என்றே தெரியும். உள்ளார்ந்து பார்த்தால் அதில் விஷமத்தனம் இருப்பது புரியும். இதே கேள்வியை பாஜகவில் இருக்கும் வேறு யாரிடமாவது கேட்டிருந்தால் கூட்டணிக்கு சாதகமாகவே பூழி மெழுகி பேசி இருப்பார்கள். ஆனால் கூட்டணிக்கு பாதகம் வரும்படியே உடைத்து பேசி இருக்கிறார் அண்ணாமலை.
‘கூட்டணி ஆட்சி’ தான் என்று ஒருமுறை அல்ல; மூன்று முறை கூறியிருக்கிறார் அமித்ஷா. என் தலைவார் தெளிவாக இப்படிச் சொல்லி இருக்கும் போது கூட்டணி ஆட்சி இல்லை என்று நான் சொல்ல முடியாது. நான் அப்படிச் சொன்னால் அது கட்சியில் ஒரு தொண்டனாக இருக்க தகுதியாக இருக்காது. என் தலைவர்கள் சொன்ன கருத்தை வலுப்படுத்தாமல் அதில் சந்தேகம் எழுப்பினால் தொண்டனாக இருக்க எனக்கு தகுதியில்லை. அமித்ஷா சொன்ன கருத்தில் அதிமுகவுக்கு மாற்று கருத்து இருக்குமேயானால் அவருடன் அவர்கள் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டார் அண்ணாமலை. ஏற்கனவே எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது மாதிரி ஆகிவிட்டது அண்ணாமலையின் இந்த பதில்.

’கூட்டணி ஆட்சி’ என்பதில் பாஜக ஒரு முடிவோடுதான் இருக்கிறது. ஆனால் இதே போக்கில் சென்றால் அதிமுக தொண்டர்களிடையே தனக்கு செல்வாக்கு இல்லாமல் போய்விடும் என்று நினைக்கிறார் பழனிசாமி. அதே நேரம் அண்ணாமலை சொன்னது மாதிரி, அமித்ஷாவுடன் நேருக்கு நேர் உட்கார்ந்து இது குறித்து பேசி முடிவெடுக்கும் கால சூழலும், அதிகாரமும் இல்லாததால் அமித்ஷாவின் கூட்டணி ஆட்சி கனவுக்கு வேட்டு வைக்கும்படி, ‘’அதிமுக கூட்டணியில் விரைவில் பிரம்மாண்ட கட்சி இணையும்’’ என்று அறிவிப்பு செய்திருக்கிறார் பழனிசாமி.
பழனிசாமியின் இந்த அறிவிப்புக்கு பிறகு அந்த பிரம்மாண்ட கட்சி எது? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. தவெகவைத்தான் அவர் அப்படி சொல்லி இருக்கிறார் என்றும், காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முயல்கிறார் பழனிசாமி. அந்த கட்சியைத்தான் அப்படிச் சொல்லி இருக்கிறார் என்றும் தகவல்கள் பரவுகின்றன.

தவெகவுடன் கூட்டணி அமைக்க முயற்சியா? என்ற கேள்விக்கு, ’ஆமாம்’ என்று பதில் சொல்லாமல், தேர்தல் வியூகத்தை வெளியே சொல்ல முடியாது என்று சுற்றி வளைத்து பதில் சொல்லி இருக்கிறார் பழனிசாமி. நின்றுபோன அதிமுக – தவெக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியிருப்பதால்தான் அதிமுக பற்றி விமர்சிக்க கூடாது என்று கட்சியினருக்கு விஜய் அறிவிறுத்தி இருப்பதாகவும் தகவல் பரவுகிறது.
தவெக மட்டுமல்லாது கம்யூனிஸ்டுகள், விசிகவையும் கூட்டணிக்குள் இழுக்க முயல்கிறார் பழனிசாமி. அவரின் இந்த அதிரடிகள் எல்லாமே, ‘கூட்டணி ஆட்சி’ என்று கூவும் பாஜகவை அச்சுறுத்தவே என்கிற பேச்சு எழுந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மறைமுகமாக அமித்ஷாவுக்கு அறிவுறுத்தி வந்த பழனிசாமி, அமித்ஷாவுக்கு நேரடியாகவே விடும் எச்சரிக்கை இது என்றே பேச்சு எழுந்திருக்கிறது.
எந்தப் பிரச்சினையைத் தீர்த்தார் ?
“தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமித்ஷா வீட்டுக் கதவைத் தட்டினேன்” என்று சொல்லி இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. அத்தோடு, எந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து இருக்கிறேன் என்பதைச் சொல்லி இருக்க வேண்டும். அதனை பழனிசாமி சொல்ல வில்லை. அப்படி ஏதாவது இருந்தால்தானே அவரால் சொல்ல முடியும்?
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பரப்புரையை திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு எந்தெந்த வகைகளில் வஞ்சிக்கிறது என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்லி வருகிறது தி.மு.க.
தமிழ்நாட்டின் நிதி உரிமைகள், ஜி.எஸ்.டி. கொள்கை மூலமாகப் பறிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து வசூலிக்கப்படும் வரி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தரப்படுவது இல்லை. தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டங்கள் இல்லை. பள்ளிக் கல்விக்கான ரூ.2000 கோடி நிதி மறுக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் திட்டங்களுக்கும் தமிழ்நாடுதான் நிதி தந்து நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. நீட் தேர்வு மூலமாக அடித்தட்டு மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு சிதைக்கப்படுகிறது. தேசியக் கல்விக் கொள்கையானது இந்தித் திணிப்புக் கொள்கையாக மட்டுமே இருக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கு ஒதுக்கும் நிதியைவிட சமஸ்கிருதத்துக்குத் தரும் நிதி 17 மடங்கு அதிகமாக இருக்கிறது. தமிழர்களின் வரலாற்றுப் பெருமை வெளியில் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே கீழடி அறிக்கையை வெளியில் விடாமல் மறைக்கிறார்கள். இவை அனைத்துக்கும் மேலாக, தொகுதி மறுவரையறை என்ற பெயரால் தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் எந்தப் பிரச்சினை பற்றி அமித்ஷாவிடம் பேசினார் பழனிசாமி?
“நான் மத்திய மந்திரி அமித்ஷாவை கள்ளத் தனமாகச் சந்தித்தேன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். அமித்ஷா, இந்த நாட்டின் உள்துறை அமைச்சர். அவரைப் பார்க்கக் கூடாதா? தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகத்தான் அமித்ஷாவைச் சந்தித்தேன்” என்று, எதுவும் தெரியாத பிள்ளையைப் போல பேசி இருக்கிறார் பழனிசாமி. இதனை அவர் கட்சியினரும் நம்பவில்லை. அமித்ஷாவும் நம்ப மாட்டார்.
“சம்பாதித்ததைக் காப்போம்; சம்பந்தியைக் காப்போம்” என்பதுதான் பழனிசாமியின் பஸ் பயணம் என்று சமூக ஊடகங்களில் பரவி வருவதை பழனிசாமி பார்த்தாரா எனத் தெரியவில்லை. பழனிசாமியை மிரட்டிப் பணிய வைத்திருக்கிறது பா.ஜ.க. ஆனாலும் ‘பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக’ ஒப்புக் கொள்ள பா.ஜ.க. தயாராக இல்லை. பா.ஜ.க., பழனிசாமியை நம்பவில்லை. பழனிசாமி, பா.ஜ.க.வை நம்பவில்லை. எனவே, இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றும் ‘கழுத்தறுப்பு’க் கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். இதனைத் திசை திருப்புவதற்காகத் தான் ‘எனக்கு கண் வேர்க்குது’ என்ற பாணியில் பஸ் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார் பழனிசாமி.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் பழனிசாமியின் உறவினர்களுக்குச் சொந்தமான 26 இடங்களில் ரெய்டு நடந்தது. ‘எடப்பாடிக்கு செக் – உறவினர் வீட்டில் தொடரும் ஐடி ரெய்டு’, ‘எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீட்டில் ஐந்தாவது நாளாக வருமான வரித்துறை ரெய்டு’, ‘எடப்பாடி உறவினர் வீட்டில் இறங்கிய ஐ.டி. அதிகாரிகள்’, ‘எடப்பாடி உறவினர் வீட்டில் விடிய விடிய ரெய்டு’, ‘கூட்டணிக்கு குறி வைக்கப்படுகிறாரா எடப்பாடி?’, ‘வசமாகச் சிக்கிய எடப்பாடி பழனிசாமியின் உறவினர்’, ‘எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீட்டில் சிக்கியது என்ன?’, ‘ரூ.750 கோடி வரி ஏய்ப்பு செய்த எடப்பாடியின் உறவினர்’, ‘உறவினரின் வரி ஏய்ப்பு – எடப்பாடிக்கு சிக்கல்’, என்று ஊடகங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டன. இதன் பிறகுதான் உள்துறை அமித்ஷா வீட்டுக் கதவைத் தட்டினார் பழனிசாமி.
சட்டமன்றம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு நாள் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, டெல்லி போனார். வெளிப்படையாகக் காரணம் சொல்லப்படவில்லை. டெல்லி விமானநிலையத்தில் நிருபர்கள் கேட்டபோது, “இங்கே எங்களுக்கு ஆபீஸ் இருக்கிறது, அதைப் பார்க்க வந்தேன், இது தெரியாம கேள்வி கேட்கிறீங்களே” என்று சலித்துக் கொண்டார் பழனிசாமி. ஆனால் மூன்று கார்களில் மாறி, உள்துறை அமைச்சர் வீட்டுக்குச் சென்றார் பழனிசாமி. உள்துறை அமைச்சர் வீட்டுக்கு இவ்வளவு ரகசியமாகச் செல்லத் தேவையில்லை. வெளிப்படையாகப் போகலாம். அவர் சொல்கிறாரே, ‘தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்கத் தேவையான’ கோரிக்கை மனுவை எடுத்துக் கொண்டு கூட அவர் சந்தித்திருக்கலாம். யாரும் அவரை தவறாகச் சொல்ல மாட்டார்கள்.
அமித்ஷாவைச் சந்திக்க வரவில்லை என்று சொல்லி விட்டு, கார் மாறி மாறிச் சென்றதைத்தான், ‘கள்ளத்தனமாகச் சந்தித்தார் பழனிசாமி’ என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சொல்கிறார்கள். இது தவறல்ல. இதுதான் உண்மை.
முன்னாள் முதலமைச்சர், ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய பழனிசாமி, உள்துறை அமைச்சரை எதற்காக வேண்டுமானாலும் சந்திக்கட்டும். அது அவரது விருப்பம். ஆனால் அதனை மறைத்தார், மறைக்க முயற்சித்தார். மாட்டிக் கொண்டார். இன்று அதனை மாற்றிப் பேசுகிறார் பழனிசாமி. ‘தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்காகப் போனேன்’ என்று சொல்லும் பழனிசாமி, என்ன பிரச்சினையைப் பேசினார் என்பதைச் சொல்ல வேண்டும். ஏதாவது ஒரு பிரச்சினையை உள்துறை அமைச்சர் அமித்ஷா தீர்த்து வைத்துள்ளாரா என்பதையும் சொல்ல வேண்டும்.
அமித்ஷா – பழனிசாமி சந்திப்பால் தமிழ்நாட்டு மக்களின் ஏதாவது ஒரு பிரச்சினையாவது தீர்ந்து விட்டதா என்பதையும் நாம் ஆராய வேண்டும். பழனிசாமியின் ‘சம்பந்தி’ பிரச்சினை ஒருவேளை தீர்ந்திருக்கலாம். அதனைத்தான் ‘மக்கள்’ பிரச்சினை என்று சொல்கிறாரோ.