ரயில் மூலம் 250 கோடி ரூபாய்,

மும்பையிலிருந்து ரயில் மூலம், குஜராத்துக்கு கடத்தப்படவிருந்த கோடிக்கணக்கான ரூபாயையும், நகைகள் மற்றும் விலை மதிப்புமிக்க கற்களையும், தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும், வருமான வரித்துறையினரும் பறிமுதல் செய்தனர்.
பைகளில் வைக்கப்பட்டிருந்த, ரூபாய் நோட்டுக்கள் மற்றும் தங்க நகைகளின் மதிப்பு, 250 கோடி ரூபாய் இருக்கலாம் என, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இவை யாருக்கு சொந்தமானவை என்ற மர்மம் விலகவில்லை.
மும்பையிலிருந்து, ஆமதாபாத்திற்கு, ரயில் மூலம், கோடிக்கணக்கான மதிப்புள்ள, ரூபாய் நோட்டுக்களும், நகைகளும், விலை உயர்ந்த கற்களும் கடத்தப்பட உள்ளதாக, தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளுக்கு, தகவல் கிடைத்தது.

உடன், அவர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளை உஷார்படுத்தினர்.வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவினரும், தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும், மும்பை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, நேற்று முன் தினம் இரவு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில், ரயில் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த, நான்கு லாரிகளை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, ஒவ்வொரு லாரியிலும், 25க்கும் மேற்பட்ட பைகள் இருந்ததை கண்டனர். நான்கு லாரிகளிலும் சேர்த்து மொத்தம், 102 பைகள் இருந்தன. பைகளைப் பரிசோதித்ததில், அவை
ஒவ்வொன்றிலும், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களும், நகைகளும், விலை மதிப்புமிக்க கற்களும் இருந்தன.
பைகளுக்கு பாதுகாப்பாக இருந்த, 45 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் விசாரணை நடத்தியதில், பாதிக்கும் மேற்பட்டோர், பைகளில் என்ன இருக்கிறது என்பதை அறியாதவர்களாகவே இருந்தனர்.
நான்கு லாரிகளை ஓட்டி வந்த டிரைவர்களும் பிடிக்கப்பட்டு, போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். டிரைவர்களிடம் விசாரணை நடத்திய போது, பைகளில் இருந்த பணம் மற்றும் நகைகள், ரயில் மூலம், குஜராத்துக்கு கடத்தப்பட இருந்தது தெரியவந்தது.
ரயில் மூலம் ஏராளமான பணத்தை கடத்த திட்டமிட்டவர்கள், ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்கள்.
இவர்கள், குஜராத் மாநிலம், ஆமதாபாத் மற்றும் ராஜ்கோட்டை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. எனினும், அவர்கள் யார் என்பது, இன்னும் கண்டறியப்படவில்லை. லாரிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், தெற்கு மும்பையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு நோட்டுகளை எண்ணும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில், 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று வரை, ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணி தொடர்ந்தது.
பிடிபட்ட பணம் மற்றும் நகைகளின் மதிப்பு, 2,500 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என, முதல்கட்டமாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர், அந்தத் தகவல் மறுக்கப்பட்ட, 250 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கலாம் என, கூறப்பட்டது. 
இதற்கிடையில், பணத்தை எடுத்து வர பயன்படுத்தப்பட்ட லாரிகளுக்கு, தெற்கு மும்பையில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்றின் இன்ஸ்பெக்டர், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததாக, தகவல்கள் கிடைத்துள்ளன.
 அதனால்,போலீசாருக்கும், பணத்தை அனுப்பிய ஹவாலா கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும், தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும், வருமான வரித்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 குஜராத்தில், 25 கோடி ரூபாய் மதிப்புள்ள, பணம் மற்றும் வெள்ளி கட்டிகளுடன், நேற்று முன் தினம் கடத்தப்பட்ட லாரி, நேற்று மீட்கப்பட்டது.பாவ்லா - பகோதரா நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் இரவு, லாரி கடத்தப்பட்டதும், மாநிலம் முழுவதும், போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று காலை, போயான் என்ற கிராமத்தில், அந்த லாரி மீட்கப்பட்டது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?