சங்ககால தென்காசி ..!
தமிழகத்தில் கீழடி அகழ்வாராய்ச்சி தொடங்கி, பழங்காலத் தமிழர்களின் செங்கல் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், தொல்லியல் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லாக தென்காசி மாவட்டத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த மிகப்பெரிய செங்கல் கட்டமைப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு, கீழடியைப் போன்றே தென்காசியும் தமிழர்களின் தொன்மையான நாகரிக மையமாக இருந்திருக்கலாம் என்பதற்கான வலுவான சான்றுகளைத் தந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மாநில தொல்லியல் துறையினரால் தென்காசி மாவட்டத்தின் கலிங்கப்பட்டி/மாலையடிப்பட்டி அருகே, வைப்பார் ஆற்றின் வலது கரையில் இந்த அகழ்வாய்வு நடத்தப்பட்டது. இங்கு முற்றிலும் செங்கற்களால் கட்டப்பட்ட சதுர வடிவ ‘படிக்கிணறு’ (Stepwell) ஒன்று வெளிப்பட்டுள்ளது. தமிழகத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த இது போன்றதொரு படிக்கிணறு கண்டறியப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்தக் கிணறு 4 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட சதுர அமைப்பில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உட்பகுதிக்குள் இறங்குவதற்காகக் கல்லால் ஆன படிக்க...