வாலிப கவிஞர் "வாலி"




சினிமா பாடலாசிரியர் "வாலி" (வயது 82) இன்று காலமானார். [1931-2013]
நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த கவிஞர் வாலிஜூன் 14 முதல் நுரையீரல் தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார்.
 உடல்நிலை மோசமானதை அடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
 சில தினங்களில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட் டது.
பின்னர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதித்ததை அடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை நேற்று முன்தினம் இரவு மோசமானது.

அவருக்கு டாக்டர்கள் செயற்கை சுவாசம் பொருத்தி தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கவிஞர் வாலி இன்று காலமானார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிறந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்.
வாலி (1931-2013)

கவிஞர் வாலி, 1931 அக்., 29ல் திருச்சிக்கு அருகே உள்ள திருப்பராய்த்துறையில் பிறந்தார். இவரது பெற்றோர் ஸ்ரீனிவாச அய்யங்கார் - பொன்னம்மாள்.
 பின் ஸ்ரீரங்கத்துக்கு குடி பெயர்ந்தார் வாலி. இளம் வயதில் நண்பர்களின் உதவியுடன் "நேதாஜி எனும் கையெழுத்து பத்திரிகையை துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி.
 இதில் பங்கேற்ற பல இளைஞர்களில் ஒருவர் தான், பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா.
 துவக்க விழாவுக்கு திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததாலும், வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக்கொடுக்கும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது.
இதன் மூலம் வாலியின் கவிதை திறன் வெளிப்பட்டது.

தமிழ் மேல் பற்று கொண்டிருந்த இளம் வயதில் வாலி ஓவியத்தில் ஈடுபாடு மிக்கவராக இருந்தார். பள்ளிப் பருவத்தில், பிரபல ஓவியர் "மாலி மீது கொண்ட பற்றினால், தானும் ஒரு சிறந்த ஓவியராக வரவேண்டும் என விரும்பினார். இதையடுத்து "நீயும் அவரைப் போல வரவேண்டும் என இவரது பள்ளி நண்பர் பாபு, இவருக்கு "வாலி எனப் பெயர் வைத்தார்.

எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சிக்குப் பின், சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பை முடித்தார். இவரை சினிமாவுக்கு பாட்டெழுத அழைத்து வந்தவர் டி.எம்.சவுந்தர்ராஜன். 1958ம் ஆண்டு பாடலாசிரியராக சினிமாவில் கால்பதித்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் முதல் இன்றைய தனுஷ், சிம்பு வரை சுமார் மூன்று தலைமுறை சினிமாவிற்கு 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். குறிப்பாக எம்.ஜி.ஆரின் சூப்பர்-டூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த பெருமைக்குரியவர் வாலி என்று சொல்லலாம்.

இவரது பாடல்வரிகளில் விஷேசம் என்னவென்றால் தூய தமிழ் வார்த்தைகள் மட்டுமல்லாது போஃக், ஹிப்-ஹாப் போன்ற பாடல்களையும் கலந்து கட்டி தனது பாடல் வரிகளில் கொடுக்கும் வல்லமை படைத்தவர். இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றவாரும் பாடல்களை கொடுத்தவர்.
 கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் எழுதிய உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.
"அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு பாடல் வரிகள் எழுதும்போது கமல், காதல் தோல்வியை மையப்படுத்தி ஒரு பாட்டு எழுதுங்கள் என்று வாலியிடம் சொல்லியிருக்கிறார். அவரும் சுமார் 5 பாடல்களை கமலுக்கு எழுதி கொடுத்துள்ளார். ஆனால் கமல் திருப்திபடவில்லை. பின்னர் இறுதியாக 6வதாக ஒரு பாட்டை எழுதி கமலிடம் கொடுத்து, இதுக்கு மேல் என்னால் பாடல் எழுத முடியாது என்று சொல்லியுள்ளார். அந்தப்பாடல் தான் உன்ன நெச்சேன் பாட்டு படிச்சேன் என்ற பாடல்...  அந்தப்பாடல் தான் தேசிய விருது பெற்றது."

பாடலாசிரியராக மட்டுமல்லாமல், அவதார புருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம், வாலிப வாலி... உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். மேலும் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் 17 திரைப்படங்களுக்கு, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். "வடை மாலை எனும் திரைப்படத்தை, மாருதிராவுடன் சேர்ந்து இயக்கியுள்ளார்.

* வெற்றிலை பாக்கு பிரியரான இவர், 15 வயதிலிருந்து தொடர்ந்த இப்பழக்கத்தை, 76 வயது வரை தொடர்ந்தார். பின் நிறுத்திவிட்டார். கவிதை, உரைநடை, சிறுகதை உட்பட, 15 புத்தகங்களை எழுதியுள்ளார்.

* வெள்ளை மற்றும் சந்தன நிற ஆடையை விரும்பும் இவர், இதுவரை, வெளிநாடு எங்கும் சென்றதில்லை. இவருக்கு இஷ்ட தெய்வம், முருகன்; பிடித்த விளையாட்டு, கிரிக்கெட்.
கவிதையின் இமயமாக கருதப்படும் "வாலி இளமைக்காலத்தில் வறுமையின் காரணமாக தனது வாழ்க்கையில் ஒருமுறை "தற்கொலை முடிவை எடுத்தார். அப்போது கண்ணதாசன் சுமைதாங்கி என்ற படத்துக்காக எழுதிய "மயக்கமாக கலக்கமாக வாழ்க்கையில் வருத்தமா என்ற பாடலில் "உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்து பார்த்து நிம்மதி தேடு என்ற பாடல் வரியைக் கேட்டு வாலி மனம் மாறி, தற்கொலை முடிவை கைவிட்டார். இதன் பின் தன்னம்பிக்கையுடன் புதிய வாழ்க்கையை தொடங்கினார்.

வாலியின் கலைச்சேவையை பாராட்டி 2007ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இதுதவிர தமிழக அரசு மாநில விருதுகளை ஐந்து முறை (எங்கள் தங்கம் -1970, இவர்கள் வித்தியாசமானவர்கள் - 1979, வருஷம் பதினாறு, அபூர்வ ராகங்கள் - 1989, கேளடி கண்மணி - 1990, தசாவதாரம் - 2008) பெற்றுள்ளார்.

கடைசி பாடல்...
வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் காவியத்தலைவன் படத்திற்காக எழுதப்பட்டுள்ள "கோடாளி மூடிச்சு போட்டு..."என்று தொடங்கும் பாடல் தான் வாலி எழுதியிருக்கும் கடைசி பட பாடல்.  இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

காதல் திருமணம் செய்து கொண்ட வாலியின் மனைவி பெயர், ரமணத்திலகம். அவரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போனார். வாலிக்கு பாலாஜி என்ற ஒரு மகன் உள்ளார்.
 இவரது தத்துவ வார்த்தைகள் கொண்ட பாடல்கள் எம்.ஜி.ஆரை மக்களிடம் பிரபலப்படுத்த பெரிதும் உதவியாக இருந்தது.
 தமிழ் சினிமா உலகில் வாலிப கவிஞர் என அழைக்கப்பட்ட கவிஞர் வாலி இதுவரை சுமார் 15 ஆயிரம் பாடல்கள் வரை எழுதியுள்ளார். 50 ஆண்டுகளுக்கு மேலாக திரை உலகில் இளமை ததும்ப பாடல் களை எழுதி வந்தார்.தத்துவ பாடல்களிலும் தனித்துவம் பெற்றவர்.குறும்பாக பேசுவதிலும்-எழுதுவதிலும் திறன் பெற்றவர்.
அடிப்படையில் நல்ல ஓவியர்.பொய்க்கால் குதிரை ,உட்பட பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.
எம்.ஜிஆர் படங்களுக்கு பாடல்கள் எழுதினாலும்,அவருடன் நெருக்கமாக இருந்தாலும்.கலைஞர் கருணாநிதியுடனும் நட்புடன் இருந்தார்.
தமிழில் ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி, புதிய வானம் புதிய பூமி, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, ஏமாற்றாதே ஏமாறாதே, கண் போன போக்கிலே கால் போகலாமா, காற்று வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன், வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கையிகளில், நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், மன்னிக்க வேண்டுகிறேன், அவளா சொன்னால் இருக்காது என எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் இருந்து இக்கால நடிகர்கள் படங்கள் வரை ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதி உள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
 வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர். சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார். தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 வாலி பேசியது:-

     "வியர்வை சிந்தி உழைப்பவன்தான் சினிமாவில் வளர முடியும். காக்காய் பிடிப்பவன் வளர முடியாது. அதே நேரம், நான் பார்த்த, என் அனுபவத்தில் சொல்கிறேன், ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத துறை சினிமா. இதில் ஒழுக்கமாக இருப்பவர்கள் எஸ்.பி.முத்துராமன் போன்ற வெகுசிலர்தான். இன்னொன்று, சினிமாவில் வெற்றியை மண்டைக்குள் கொண்டு போகக் கூடாது. தோல்வியை மனசுக்குள் கொண்டு போகக் கூடாது. எவ்வளவு வளர்ச்சி வந்தாலும் மனிதன் மனிதனாகத்தான் இருக்க வேண்டும்.
திரையுலகைப் பொறுத்தவரை மழை விழுந்தாலும், மாடு சிறுநீர் கழித்தாலும் எந்த மாற்றமும் அடையாத பாறைபோல, கிட்டத்தட்ட சுரணை இல்லாமல் இருக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்.
இல்லேன்னா இருக்க முடியாது.
சினிமாவுக்கு வருவதற்கு நாடக அனுபவம் ரொம்ப முக்கியம். சினிமாவே செல்லுலாய்டு வடிவிலிருக்கும் நாடகம்தான். ரயில்வே வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தவர் நாகேஷ். உன் முகத்தை கண்ணாடியில் பார்த்திருக்கியா, எந்த தைரியத்தில் சினிமாவுக்கு வந்தே? என்று அவரிடம் நானே கேட்டிருக்கிறேன்.
ஆனால் பிற்காலத்தில் அவர் வருகைக்காக எம்.ஜி.ஆர், சிவாஜியெல்லாம் 4 மணி நேரம் வரை காத்திருந்ததும் நடந்தது.

கண்ணதாசன் 4 ஆயிரம் பாடல்தான் எழுதி இருக்கிறார். நீங்கள் (வாலி) 15 ஆயிரம் பாடல் எழுதி இருக்கிறீர்களே? என்று என்னிடம் சிலர் கேட்பதுண்டு. கண்ணதாசன் 54 வயது வரைக்கும்தான் வாழ்ந்தார். எனக்கோ இப்போது 80. அவரும் இன்றுவரை உயிரோடு இருந்திருந்தால் 20 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதி இருப்பார். அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகம் வாழ்க்கை நெறிகளை விளக்கும் அருமையான, உண்மையான புத்தகம். எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் அந்த புத்தகத்தை கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் பாட நூலாக்கி இருப்பேன்."

suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?