2015 ல் இணையம் ?

 2015 ஆம் ஆண்டு முதல், “எங்கும் எதிலும் இணையம்” என்ற அடிப்படையில், இணையம் ஒரு புத்துணர்வுடன் வேகமாக வளரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 
2014 ஆம் ஆண்டு மார்ச் 11ல், உலக வைய விரிவலை (World Wide Web) தன் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழாவினைக் கொண்டாடியது. நம் வாழ்க்கை நடைமுறையை, இணையம் எப்படி எல்லாம் மாற்றி உள்ளது என்று சிந்தித்துப் பார்க்க, அந்நாள் ஒரு நல்ல தருணமாக அமைந்தது. அத்துடன், இனி வருங்காலத்தில் இணையம் எப்படி வளரும் என்றும் எண்ணிப் பார்க்க ஒரு தொடக்கமாகவும் அமைந்தது.
 “எங்கும் எதிலும் இணையம்” (Internet of Things) என்ற கருத்தும் கட்டமைப்பும் இப்போது பரவி வருகிறது. 
நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் டிஜிட்டல் மயமாகி, இணையம் வழியே அனைத்தும் ஒன்றை ஒன்று தொடர்பு கொண்டு இயங்குவதையே இப்படி குறிப்பிடுகிறோம்.
எவ்வளவு வேகமாக நாம் இணையத்துடன் இணைந்து இயங்கி வருகிறோம். 1995 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் கூட இணையம் குறித்து அறிந்தவர்கள் 42%க்கும் குறைவாகவே இருந்தனர். 
பலர் இது பற்றி அறியாதவர்களாகவே வாழ்ந்தனர். இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறையில் இயங்கியவர்கள் மட்டுமே இணையத்தை அறிந்திருந்தனர். 
இந்தச் சூழ்நிலையை, தற்போது பன்னாட்டளவிலான தகவல் தொடர்பு மையம் (International Telecommunication Union) அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, எந்த அளவிற்கு நாம் வேகமாக, இப்பாதையில் பயணம் செய்துள்ளோம் என்று அறியலாம்.
 இந்த செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும் 2014 ஆம் ஆண்டின் முடிவில், மூன்று கோடி பேர் உலக அளவில் இணையத்தில் இயங்குவார்கள் என்று அந்த மையம் அறிவித்துள்ளது. 
இனி, வரும் ஆண்டுகளில், இணையம் புத்துணர்ச்சியுடன் வேறு ஒரு முழுமயான பாதையில் நம்மை இணைக்க, வாழ்விக்க இருக்கிறது. அது “எங்கும் எதிலும் இணையம்” என்பதே. 
”எங்கும் எதிலும் இணையம்” என்பது மக்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகள், தகவல்கள், பொருட்கள் ஆகிய அனைத்தையும் இணையம் வழி இணைப்பதே ஆகும். மக்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு நிர்வாகம் ஆகிய அனைத்தும், உலக அளவில் இணையச் செயல்பாட்டினை, இந்த அடிப்படையில் அமைத்து வருகின்றன. திறமையுடன் கூடிய வாழ்க்கை ஒன்றை வழங்க, அனைத்தும் டிஜிட்டல் மயமாகி உள்ளது. 
இந்தியாவில், அதன் ஜனத்தொகையில் 81% பேர், மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 10% பேர் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துகின்றனர். வரும் மூன்று ஆண்டுகளில், ஒவ்வொரு மாதத்திலும் இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்குவோர் எண்ணிக்கை 5 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 80 லட்சம் சாதனங்களுக்கு மேல், நெட்வொர்க்கில் இணையும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. 
இந்த நெட்வொர்க்கில், கம்ப்யூட்டர், டேப்ளட் பி.சி.க்கள் மற்றும் மொபைல் போன்களுக்கும் மேலாகப் பல சாதனங்கள் இணைக்கப்படும். தெருவிளக்குகள், சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்துமிடங்கள், பெரிய விளக்குகள், சிறிய வர்த்தக மையங்கள், விடுதிகள், உணவு நிலையங்கள் என அனைத்தும் சென்சார் வழி உணரப்படும். 
இணையத்தில் இவற்றின் இயக்கம் அறிந்து அனைவரும் இவற்றை அணுகும் வழிகள் கிடைக்கும். 
அண்மையில் உரையாற்றுகையில், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், இந்த 21 ஆம் நூற்றாண்டு, இனி நகரங்களின் நூற்றாண்டாக இருக்கும் என்று கூறினார். மற்ற நாடுகளில் இந்த மாற்றம் ஏற்படப் போகிறதோ இல்லையோ, இந்தியாவில் இது ஏற்படுவது உறுதியாகியுள்ளது. ஐ.நா. எடுத்த கணக்கெடுப்பின்படி, இந்தியாவில், 2050 ஆம் ஆண்டில், 40.4 கோடி பேர் புதியதாக நகரங்களில் வாழத் தொடங்குவார்கள். 
அதே நேரத்தில், கிராமப் புறங்களில், 85.7 கோடி பேர் வாழ்வார்கள். உலக அளவில் கிராமப் புறங்களில் வாழும் மக்கள் எண்ணிக்கையில் முதலிடம் கொண்டதாக இந்தியா அமையும்.
இதனால் தான், நம் அரசு நகரங்களை மட்டுமின்றி, கிராமப்புறங்களையும் முன்னேற்ற வழிகளில் மாற்ற திட்டமிடுகிறது. அந்த வகையில் ”டிஜிட்டல் இந்தியா” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இதன் அடிப்படையில், கிராமப்புறங்களில் ப்ராட்பேண்ட் இணைப்பு திட்டம், உலகத்தை எப்போதும் இணைக்கும் தொலைபேசி கட்டமைப்பு, பொதுமக்களுக்கான இணைய இணைப்பு பொது மையங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழக வளாகங்கள் அனைத்தும் வை பி இணைப்பில் கொண்டு வருதல், அரசு நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கல், அரசு வழங்கும் பொதுமக்கள் சேவைகளை டிஜிட்டல் வழி இயக்குதல் மற்றும் வேலை வாய்ப்பினைப் பெருக்குதல் எனப் பலமுனை திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
இனி எதிர்காலத்தில் நகரங்களுக்கிடையே போட்டி இருக்கும். குடிமக்கள், குறிப்பாக இளைஞர்கள் பொருளாதார அடிப்படையில், சமூகம் மற்றும் சுற்றுப் புறச் சூழ்நிலை சிறப்பாக அமைந்துள்ள நகரங்களில் குடியேறுவதையே விரும்புவார்கள். 
”ஸ்மார்ட் சிட்டீஸ்” என்ற பெயரில் தற்போது நகரங்கள் முழுமையான டிஜிட்டல் மயமாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. 
முதல் கட்டமாக, அரசு குறிப்பிட்ட நகரங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை டிஜிட்டல் மயமாக்கும் பணியில் இறங்கியுள்ளது. ஐ.எச்.எஸ். டெக்னாலஜி நிறுவனம் அறிவித்துள்ள ஆய்வின்படி, இன்னும் 11 ஆண்டுகளில், உலக அளவில், முழுமையான டிஜிட்டல் நகரங்களின் எண்ணிக்கை 88 ஆக இருக்கும். 
தற்போது அந்த வகையில் 21 மட்டுமே இருக்கின்றன. இந்த வளர்ச்சி தொடர்ந்து அசுர வேகத்தில் நடைபெறும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
2013 ஆம் ஆண்டில், CII & Cisco ஆகிய நிறுவனங்கள் இணைந்து, இந்தியாவில் டிஜிட்டல் நகரங்களை உருவாக்கும் முயற்சிகளுக்கான அறிக்கை ஒன்றை மிகவும் விரிவாகத் தயாரித்து வழங்கியது.
 'Smart City in Indian Context' என்ற இந்த அறிக்கையில், இந்திய நகர கட்டமைப்பு இனி மிகச் சிறப்பாக மாற்றப்பட்டு இயங்க வேண்டும் எனவும், அதற்கு ஐ.சி.டி. அமைப்பினை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவித்தது. அரசும் இதனை ஏற்றுக் கொண்டது.
 எப்படி நம் வாழ்க்கைக்கு தண்ணீர், சமையல் எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகிய மூன்றும் அடிப்படைத் தேவைகளோ, அது போல, தொழில் நுட்ப வளர்ச்சியும் பயன்பாடும் ஓர் அடிப்படைத் தேவை என்பதனை ஏற்றுக் கொண்டது. 
தேசிய நெடுஞ்சாலைகள் எப்படி நம் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான அடிப்படையை வழங்குகின்றனவோ, அதே போல, ”இணைய நெடுஞ்சாலைகளும் (broadband highways)” நமக்கு வளர்ச்சிக்கான அடிப்படையைத் தரும் என்று உணர்ந்துள்ளது அரசு. 
ஆனால், நகரங்கள் தற்போது பொருளாதார சிக்கலில் தவிக்கின்றன. செலவினங்கள் அதிகரித்து வருகின்றன; வருமானம் தரக்கூடிய வளங்கள் குறைந்து வருகின்றன. உலக அளவில் இது எங்கும் எதிர்கொள்ளும் பிரச்னைகளாக இருந்து வருகின்றன. 
இதனை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதர்களுக்கான குடியிருப்பு குறித்து ஆய்வு செய்திடும் அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய தொழில் நுட்பங்களின் அடிப்படையில் அமைக்கப்படும் கட்டமைப்புகள், அனைவரும் அறியக்கூடிய தகவல்கள், சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் ஆகியவை இணைந்தால், நாம் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க முடியும். 
வாகனங்கள் நிறுத்துமிட சிக்கலைத் தீர்க்க இயலும். சூழ்நிலை மாசுபடுவதை நிறுத்த முடியும். குற்றங்களைத் தடுக்க இயலும். 
நகரங்களில் வசிக்கும் குடிமக்களுக்கும், வந்து செல்வோருக்கும் வாழ்க்கை நடைமுறைகளுக்கான செலவினைக் குறைக்க முடியும். 
எடுத்துக் காட்டாக, மக்கின்சே ஆய்வு அறிக்கைபடி, தெருவிளக்குகளுக்கு நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின் சக்தியில், 1.5% செலவிடப்படுகிறது. இவற்றை நெட்வொர்க் இணைப்பில் கொண்டு வந்தால், 40% மின் சக்தியை மிச்சப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மிகத் திறமையான முறையில், தெருவிளக்குகளைப் பயன்படுத்தினால், 40% குற்றங்கள் குறையும் என்றும் அறியப்பட்டுள்ளது. 
இதே மக்கின்சே அறிக்கையில், இந்தியாவில் 2010 முதல் 2020 வரை ஒவ்வொரு ஆண்டும், 70 கோடி முதல் 90 கோடி சதுர மீட்டர் பரப்பளவில், வீடுகள் மற்றும் வர்த்தக வளாகங்கள் அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த வளாகங்கள் திறன் கூடிய சென்சார்களுடன் அமைக்கப்பட்டு நெட்வொர்க் மூலம் நிர்வகிக்கப்பட்டால், மின் சக்தியை நாம் பெரிய அளவில் மிச்சப்படுத்தி வேறு பணிகளுக்குப் பயன்படுத்தலாம்.
சாலைப் போக்குவரத்து நெருக்கடி காரணமாக, ஓர் ஆண்டில், உலக அளவில் நேரம் மற்றும் எரிபொருள் வகையில், 1000 கோடி டாலர் அளவில் வீணடிக்கப்படுகிறது. 
வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் தேடும் வாகன ஓட்டிகளால், நகரங்களில் மேலும் 30% சாலை நெருக்கடி ஏற்படுகிறது. இதில் சுற்றுப்புறச் சூழ்நிலை மாசு படுவதும், பாதிப்பும் அதிகமாகிறது.
 நெட்வொர்க் மூலம் சாலைகள் இணைக்கப்படுகையில், ஒவ்வொரு காருக்கும் அதன் அருகாமையில் எங்கு நிறுத்தும் இடம் இருக்கிறது என்றும், அந்த இடத்திற்குச் செல்லும் வழியும் காட்டப்படும். 
சிஸ்கோ நிறுவனத்தின் அறிக்கையில், டிஜிட்டல் மயமாக்குவதில், மிக முக்கியமான தகவல் ஒன்றையும் தந்துள்ளது. 
ஒரு நாட்டின் டிஜிட்டல் மயமாக்கம், முக்கிய ஐந்து விஷயங்களைப் பொருத்துள்ளது. அவை: 1. எதிர்காலத்தை நன்கு கணித்து செயலாற்றக் கூடிய அரசியல், நிர்வாகத் தலைவர்கள், உலக அளவிலான, அனைவரும் தெரிந்து கொண்டு பயன்படுத்தக் கூடிய வாழ்க்கைத் தர நிர்ணயங்கள், திறன் சார்ந்த விதிமுறைகள், பொதுமக்களும் அரசும் இணைந்து செயல்படுதல் மற்றும் புதிய வாழ்க்கைச் சூழ்நிலை உருவாக்கம்.
சென்ற 2014 அக்டோபரில், இந்திய அரசின் மின்னியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையால் ”எங்கும் எதிலும் இணையம்” என்பதற்கான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
 இந்தியாவிற்கான Internet of Things (IoT) கொள்கை வரைவு என இது அழைக்கப்பட்டது. 
இந்த தொழில் பிரிவில், 2020 ஆம் ஆண்டுக்குள் 1,500 கோடி டாலர் மதிப்பிலான தகவல் தொழில் நுட்ப பிரிவு தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதற்கான அறிக்கையாக இது அமைந்துள்ளது. 
இன்றைக்கு 20 கோடி சாதனங்கள் இந்தியாவில் இணைய இணைப்பில் உள்ளன. 
இதனை வரும் 2020 ஆம் ஆண்டில், 270 கோடியாக உயர்த்த இந்த திட்டத்தினை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. தற்போது இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில், சாப்ட்வேர் புரோகிராம் அமைப்பாளர்கள் உள்ளனர். 
2017 ஆம் ஆண்டிற்குள்ளாக, இந்த எண்ணிக்கை 30 லட்சமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
முடியப் போகும் 2014 ஆம் ஆண்டு, ”எங்கும் எதிலும் இணையம்” என்பதற்கான தொடக்கத்தினை மிக அருமையாக மேற்கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளது. 
இதன் இயக்கம் வேகம் பிடித்து, வளர்ந்து, இந்தியாவை உலக அளவில் முன்னிறுத்தும் என வரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம். அப்போது நம் இந்தியத் தெருக்கள் பாதுகாப்பானதாக இருக்கும்.
 வீடுகள் திறன் செறிந்த டிஜிட்டல் இயக்க உறைவிடங்களாக மாறும்.
                                                                                        நன்றி:தினமலர்.
=============================================================================
கோச்”சடை”?

”கோச்சடையான் மூலம் கொஞ்சம் பணத்தை இழந்தாலும் அந்தப் படம் என் மகள் சௌந்தர்யாவுக்கு நிறைய அனுபவத்தைக் கொடுத்தது. இனிமேல் பணம் சம்பாதித்து சௌந்தர்யா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. 
நான் சம்பாதித்த பணத்தை விரயம் செய்யாமல் இருந்தாலே போதும். ‘கோச்சடையான்’ படம், சினிமா என்றால் என்ன? பணம் என்றால் என்ன? என்று எல்லா விஷயங்களையும் புரியவைத்துவிட்டது” ‘லிங்கா’ பாடல் வெளியீட்டு விழாவில் இப்படிவார்த்தைகளை உதிர்த்தார் ரஜினி. ஏ ன் அவர் இப்படிப் பேசினார் என்பது பலருக்கும் புரியாமல் இருந்தது.
 ‘கோச்சடையான்’ படத்துக்காக வாங்கப்பட்ட கடன் விவகாரத்தில் ரஜினிகாந்த்தின் பிணை சொத்து ஏலத்துக்கு வந்து நின்றபோதுதான், அவர் உதிர்த்த அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் முழுமையாகப் புரிகிறது!
ரஜினிக்கு இரண்டு மகள்கள். மூத்தவர் ஐஸ்வர்யா. அவர் நடிகர் தனுஷை திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மகள் செளந்தர்யா. இவர் அஸ்வின் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். செளந்தர்யா சினிமா தயாரிப்பு, இயக்கம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார். செளர்ந்தர்யா இயக்கத்தில் உருவானதுதான் ‘கோச்சடையான்’ படம். ‘கோச்சடையான்’ படத்தை ஈராஸ் மற்றும் மீடியா ஒன் நிறுவனங்கள் தயாரித்தன.இரண்டிலும் ரஜினிக்கு பங்கு இருந்தது.
 கடந்த 26-ம் தேதி எக்ஸிம் வங்கி சார்பில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டு உள்ளது. 
அ தில், ”2014-ம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று ரூ.22 கோடியே 21 லட்சத்து 85 ஆயிரத்து 865 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கோரியும் செலுத்தப்படாததால், மேற்படி கடனுக்கு ஜாமீனாகக் கொடுக்கப்பட்ட லதா ரஜினிகாந்த் அவர்களின் சொத்தை சுவாதீனம் எடுத்துக் கொள்வதாகவும் 60 நாட்களுக்குள் அசலும் வட்டியும் செலுத்தப்படாவிட்டால், மேல் நடவடிக்கை எடுக்கப்படும். 
இந்த சொத்தைப் பொறுத்து எந்தவிதமான வில்லங்கமும் இனி ஏற்படுத்தக் கூடாது’ என்று கொடுத்த விளம்பரம்தான் இன்று பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. ‘லிங்கா’ விழாவில் ரஜினி பேசியதும், நாளிதழில் வந்த விளம்பரமும் பல்வேறு சந்தேகங்களை கிளப்புகின்றன.
நிலத்தின் வரலாறு!
விவகாரத்தில் கூறப்பட்டுள்ள நிலம் உள்ள திருமுடிவாக்கத்துக்கு நேரில் சென்றோம். 
சென்னை பல்லாவரத்தில் இருந்து திருநீர்மலை தாண்டி இருக்கிறது திருமுடிவாக்கம். சிட்கோ தொழிற்பேட்டைக்குள் இருக்கிறது அந்த நிலம். காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டு பெரிய கேட் போடப்பட்டிருந்தது. பயன்பாடு இல்லாததால் உள்ளே புதர்மண்டிப் போய் கிடந்தது. 237/3, 237/4 மற்றும் 236/2 என மூன்று சர்வே எண்களுடன் மொத்தம் 2.13 ஏக்கர் கொண்டது இந்த விவசாய நிலம். இதன் ரிஷிமூலத்தை கிளறினோம். 
அரங்கு நிறைந்த காட்சிகளாக?
லோகம்மன், ரவி, வேலு, ராஜேஸ்வரி, லதா, கவிதா, பிரேமா, கண்ணன் என 8 பேரிடம் இருந்து இந்த நிலத்தை 57.93 லட்சத்துக்கு லதா ரஜினிகாந்த் 2006 ஆகஸ்ட் 23, 25 தேதிகளில் வாங்கியிருக்கிறார்.
 ரேணுகா ரவிக்குமார்தான் பவர் ஏஜென்டாக இருந்து நிலத்தை வாங்க உதவியிருக்கிறார். படப்பை சார் பதிவாளர் அலுவலகத்தில் இந்த நிலத்துக்கான பத்திரப்பதிவு நடைபெற்றிருக்கிறது.
அதன் பிறகு இந்த நிலத்துக்கான பத்திரத்தை இந்தியன் வங்கியில் வைத்து 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 10, 13 தேதிகளில் ரூ.3 கோடிக்கு கடன் வாங்குகினார் லதா ரஜினி.
2009 செப்டம்பர் 16, 17 தேதிகளில் இதே நிலத்துக்கான பத்திரத்தை மீண்டும் இந்தியன் வங்கியில் காட்டி 40 கோடி ரூபாய் கடன் வாங்குகினார் லதா ரஜினி. இந்தியன் வங்கியில் முன்பு வாங்கிய ரூ.3 கோடி கடனை 2011-ல் லதா ரஜினி திருப்பி செலுத்திவிடுகிறார்.
அதன் பிறகு அதே பத்திரத்தை 2011 ஜூலை 8-ம் தேதி மீடியா ஒன் நிறுவனத்திடம் வைத்து ரூ.20 கோடி கடன் வாங்குகினார் லதா ரஜினி. இது வந்தனா என்கிற ஏஜென்ட் மூலம் செய்து கொடுக்கப்படுகிறது. 
ஒரே நிலத்தின் பத்திரத்தை வைத்து மூன்று இடங்களில் கடன் வாங்கப்பட்டுள்ளது.
சொத்து தொடர்பான வில்லங்கச் சான்றிதழை பார்த்தபோதுதான் இப்படி அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன.
இப்போது லதா ரஜினியின் சொத்து ஏலத்துக்கு வருகிறது என எக்சிம் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், மீடியா ஒன் நிறுவனம் வாங்கிய கடனுக்கு லதா ரஜினி தன் நிலத்தை பிணையமாகக் காட்டியிருந்தார் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, மூன்று சர்வே எண்கள் கொண்ட 2 ஏக்கர் 13 சென்ட் உள்ள நிலம் பல முறை அடமானம் வைக்கப்படுள்ளது.
கடன் மேல் கடன்!
இப்போது பிரச்னைக்குள்ளான நிலத்துக்கு அருகிலேயே இன்னும் சில இடங்கள் இருக்கின்றன. 
கார்ப்பரேஷன் மற்றும் ஆந்திரா வங்கியிடம் இருந்து அந்த நிலங்களை ஸ்ரீராகவேந்திரா எஜுகேஷனல் சொசைட்டி ரூ.1.70 கோடிக்கு 2006ம் ஆண்டு வாங்குகிறது. ராகவேந்திரா எஜுகேஷனல் சொசைட்டிக்கு சேர்மன் மற்றும் டிரஸ்டியாக இருப்பவர் லதா ரஜினி. 
இந்த நிலத்தையும் சென்னை சி.பி.ராமசாமி ஐயர் ரோட்டின் அருகே உள்ள 5,823 சதுர அடி நிலத்தையும் கௌசல்யா, கல்பனா, சுப்பிரமணியம் ஆகியோரிடம் அடமானமாக வைத்து தலா ரூ.20 கோடி வீதம் ரூ.60 கோடி கடன் வாங்குகிறார் லதா ரஜினி.
 27.11.12, 6.3.13 தேதிகளில் மயிலாப்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இதற்கான பத்திரப் பதிவு நடைபெற்றிருக்கிறது. அடுத்த 7 மாதத்திலேயே கடனை திருப்பி செலுத்திவிடுகிறார் லதா ரஜினி.
எல்லாம் மகளுக்காக!
இவ்வளவு கடன்களை வாங்கும் அளவுக்கு என்னதான் பிரச்னை? 
‘லிங்கா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய பேச்சிலேயே பதில் இருக்கிறது. ”செளந்தர்யா இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தில் நடித்தேன். 
 பெரிய நிறுவனங்கள் கூட இருந்ததால் படம் வெளியே வந்தது. இல்லாவிட்டால் வந்திருக்காது. 
வந்த படமும் ஓடாததினால் பலத்த நட்டம்.
‘கோச்சடையான்’ மூலம்  பணத்தை இழந்தாலும் அந்தப் படம் சௌந்தர்யாவுக்கு நிறைய அனுபவத்தை கொடுத்தது” என ரஜினி பேசினார்.
‘கோச்சடையான்’ வெளிவர பெரிய நிறுவனங்கள் உதவியதையும் ‘கோச்சடையனு’க்காக பணத்தை இழந்ததையும் ரஜினியே சொல்லிவிட்டார். இவ்வளவு கடன்பட்ட காயத்தை உணர்ந்ததால்தானோ என்னவோ, ”இனிமேல் சௌந்தர்யா பணம் சம்பாதித்து காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
 நான் சம்பாதித்த பணத்தை விரயம் செய்யாமல் இருந்தாலே போதும்” என மேடையிலேயே சொல்லும் அளவுக்கு ரஜினி தள்ளப்பட்டிருக்கிறார். அத்துடன், ”கோச்சடையான் படம் சினிமா என்றால் என்ன?
 ஜனங்கள் ரசனைஎன்றால் என்ன? 
ரஜினி நடித்து விட்டார் என்பதற்காகவே பார்க்கத்துடிக்கும் முட்டாள்கள் அல்ல.
என்று நிறைய விஷயங்களை  அதில் பாடம் கற்றிருக்கிறார் ரஜினி.
”கோச்சடையான் பண்ணும்போது வேறு படம் பற்றி யோசிக்கவில்லை. ஆனால் வெறும் ரஜினி பொம்மையை வைத்து ஏமாற்றி விட்டார்கள் என்ற கோபத்தில் ரசிகர்களால்‘கோச்சடையானி’ல் பிரச்னைகள் ஏற்பட்டதும் அதை முடித்துவிட்டுத்தான் வேறு படம் பற்றி சிந்திப்பது என இருந்தேன். 
என்னைப் பொறுத்தவரை பிரச்னை உருவானால் உடனே முடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் சிறிய பிரச்னைகள்கூட பெரிய பிரச்னைகளாக ஆகிவிடும்” என ‘லிங்கா’ பட விழாவில் பேசிய ரஜினி, இன்னொரு விஷயத்தையும் சொன்னார். ”ஆறு மாதத்தில் ‘லிங்கா’வை முடிக்க முடியுமா? அப்படி முடியும் என்றால் நடிக்கத் தயார் என்றேன்” என சொல்லியிருக்கிறார். இப்படி எந்தப் படத்துக்கும் ரஜினி காலக்கெடுவை விதித்ததில்லை. ‘லிங்கா’வை இவ்வளவு சீக்கிரம் முடிக்கச் சொன்னதற்கு காரணமே ‘கோச்சடையான்’ மூலம் ஏற்பட்ட கடனை அடைக்கத்தான் என்பது புரிகிறது.
கோச்”சடை சிக்கல்”!
”ரஜினியின் திரைப்பட வரலாற்றில் பல முறை வெளியீட்டு தேதி தள்ளிப்போன முதல் படம் ‘கோச்சடையான்’தான். 
அட்வான்ஸ் புக்கிங் எல்லாம் தொடங்கிய நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. 
‘மாற்றான்’ படம் விநியோகத்தில் நஷ்டம், ‘கோச்சடையான்’ வாங்கிய அட்வான்ஸ் என 26 கோடி ரூபாயை தயாரிப்பாளர் முரளி மனோகர் செட்டில் செய்த பிறகுதான் ‘கோச்சடையான்’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போடவே ரிலீஸுக்கு பிரேக் விழுந்தது.
 ‘கோச்சடையான்’ ரிலீஸுக்கு தயாரான நிலையில் இன்னொரு பிரச்னை முளைத்தது. படத்துக்காக ஒரு வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்திய பிறகுதான் படத்தை வெளியிட வேண்டும் என மும்பையில் உள்ள லேப் நிறுவனத்துக்கு கடிதம் கொடுத்தது அந்த வங்கி.
 வேறு வழியில்லாமல் தன் மகள் இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தைக் காப்பாற்ற வேண்டும் என ரஜினி பணத்தை இறக்கினார். 
அதில்தான் சொத்துகளை அடமானமாக வைத்துக் கடன்கள் வாங்கப்பட்டது” என்கிறார் சினிமா தயாரிப்பாளர் ஒருவர்.
படம் ரிலீஸ் ஆன சில மாதங்கள் ஆன பிறகும் பிரச்னை தீரவில்லை. ‘ரூ.10 கோடியை தர மறுக்கிறார்கள்’ என சொல்லி முரளி மனோகர், லதா ரஜினி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் புகார் செய்தார் விநியோகஸ்தர் அபிர்சந்த் நாகர். 
இப்படி அடுக்கடுக்கான பிரச்னைகளை எதிர்கொண்டது அந்தப் படம். இந்தப் புகாரையும் அப்போதே முரளி மனோகர் மறுத்தார்.
 மீடியா ஒன்?
‘எக்சிம் வங்கியிடம் தங்களது சொந்த திறன் மற்றும் தொழில் அடிப்படையில் வாங்கிய ரூ.20 கோடி கடனை 2015 மார்ச் 31-ம் தேதிக்குள் திருப்பிச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
 முதன்மை கடனாளியான நாங்கள் எக்சிம் வங்கி அதிகாரிகளுடன் பேசி இருக்கிறோம். 
. இது கடன் பெற்ற கார்பரேட் நிறுவனத்துக்கும், வங்கிக்கும் இடையிலான ஒரு பிரச்னைதான். விரைவில் தீர்க்கப்படும்’ என விளக்கம் கொடுத்திருக்கிறது.
இது சம்பந்தமாக லதா ரஜினிகாந்த் விளக்கம் அளிக்க முன்வந்தால் வெளியிடத் தயாராக இருக்கிறோம்!

நன்றி:ரைட் நியூஸ்.
=============================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?