கார்ல் மார்க்ஸ்

மே- 5 .
 'காரல் மார்க்ஸி'ன் 
198-வது பிறந்த நாள்

எல்லாக் காலங்களுக்கும் நிலைத்திருக்கின்ற பெரும் புகழ்மிக்க, அருஞ்செயல்கள் புரிந்த மாபெரும் மனிதர்களுக்கு மத்தியில் பாட்டாளி வர்க்கத்தின் மிகச்சிறப்பான தத்துவ ஆசிரியரும் தலைவருமான கார்ல் மார்க்ஸ் தனிச்சிறப்பான இடத்தை வகிக்கிறார்.
இயற்கை, சமூகம் மற்றும் மனித சிந்தனையின் வளர்ச்சியை நிர்ணயிக்கின்ற பொது விதிகளைப் பற்றி இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற போதனையைப் படைத்து அதன் மூலம் உலகத்தை இன்னும் சிறப்பான முறையில் அறிந்து கொள்வதுடன், அதைப் புரட்சிகரமாக மாற்றியமைப்பதற்கும் வழி காட்டியதனால் மார்க்ஸ் வரலாற்றுக்கு மிகப்பெரும் சேவை செய்திருக்கிறார்.
முதலாளித்துவத்தின் வீழ்ச்சியும் கம்யூனிஸ்ட் சமூகத்தின் வெற்றியும் தவிர்க்க முடியாதவை என்று விஞ்ஞான ரீதியாக நிரூபித்துக் காட்டியதன் மூலம், மனித குலத்துக்கு இன்னும் சிறப்புமிக்க எதிர்காலத்தைப் பற்றி அதுவரையிலும் தெளிவில்லாத கனவாக மட்டுமே இருந்த சோஷலிசத்தை மார்க்ஸ் ஒரு விஞ்ஞானமாக மாற்றியமைத்தார். 
மார்க்ஸ் தன்னுடைய நண்பரான பிரடெரிக் ஏங்கல்சுடன் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் உலக வரலாற்றுப் பாத்திரத்தை விஞ்ஞான ரீதியாக நிறுவினார். அதுவே மிகவும் வளர்ச்சியடைந்த, முற்றிலும் முரணில்லாத புரட்சிகரமான வர்க்கம், அது தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலம் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலின் ஒவ்வொரு வடிவத்திலிருந்தும் மனித குலம் அனைத்தையும் விடுவிக்கும் என்பதை எடுத்துக் காட்டினார்.
பாட்டாளி வர்க்கப் புரட்சி மற்றும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் மூலமாக சோஷலிச சமூகத்துக்கு முன்னேறும் பாதையை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைப் பற்றிய போதனை மார்க்சியத்தின் அடிப்படையான பகுதியாகும். பாட்டாளி வர்க்கம் தன்னுடைய சொந்தப் பாட்டாளி வர்க்கக் கட்சியை அமைத்துக் கொண்டாலொழிய, முதலாளி வர்க்கத்துக்குச் சவக்குழி தோண்டுவது மற்றும் புதிய சமூகத்தை நிர்மாணிப்பது என்ற வரலாற்றுக் கடமையை அது நிறைவேற்ற முடியாது என்பதை மார்க்சிய மூலவர்கள் போதித்தார்கள்.
மார்க்சின் போதனையே தொழிலாளி வர்க்கத்தின் சித்தாந்தம், அதன் அடிப்படை நலன்களின் தத்துவ ரீதியான வெளியீடு; 
அது உலகத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைக்கின்ற விஞ்ஞானம்.மார்க்ஸ் வாழ்ந்த, பாடுபட்டுழைத்த, போராடிய காலத்தையும் நம்மையும் பிரிக்கின்ற வருடங்களைப் பின்னோக்கிப் பார்த்தால், புரட்சிகரமான வர்க்கப் போராட்ட நிகழ்வுப் போக்கில் பெருந்திரளான உழைக்கும் மக்கள் மீது அவருடைய போதனையின் தாக்கம் எப்படி வளர்ச்சியடைந்து வருகிறது என்பதை நாம் தெளிவாகக் காண முடியும்.

உழைக்கின்ற, ஒடுக்கப்பட்டிருக்கின்ற பெருந்திரளான மக்கள் அனைவருக்கும் தலைமை தாங்குகின்ற மிக வளர்ச்சியடைந்த வர்க்கமான தொழிலாளி வர்க்கம் உலக வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் மென்மேலும் அதிகரிக்கின்ற தாக்கத்தைக் கொண்டிருக்கிறது; 

மார்க்சினால் கண்டுபிடிக்கப்பட்டு லெனினால் மேலும் விரிந்துரைக்கப்பட்ட சமூக வளர்ச்சி பற்றிய புறநிலை விதிகளை வழிகாட்டியாகக் கொண்டு உலகத்தை அதிகத் தீவிரமாக உணர்வுப்பூர்வமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
லெனினால் வளர்க்கப்பட்டு, உலக கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளால் படைப்பாற்றலுடன் கையாளப்பட்டு, தொடர்ச்சியாகச் செழுமைப்படுத்தப்பட்டு, சோவியத் யூனியனிலும் மற்ற சோசலிச நாடுகளிலும் சோசலிச நிர்மாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற மார்க்சின் போதனை அதன் மிகச்சிறப்பான தகுதியை மென்மேலும் நம்பிக்கையூட்டுகின்ற முறையில் நிரூபித்து வருகிறது.

எ.ஸ்தெபனோவா(1985)
- கார்ல்மார்க்ஸ் வாழ்க்கைச் சுருக்கம் நூலின் முன்னுரை.
============================================================================================================
இன்று,

மே -05.

  •  பொதுவுடமை தத்துவஞானி கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம்(1818)
  • டென்மார்க் விடுதலை தினம்(1945)
  • எதியோப்பியா விடுதலை தினம்(1941)
  • உலக ஆஸ்துமா தினம்
  • பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பி.யு.சின்னப்பா பிறந்த தினம்(1916)
  • தென்னாப்பிரிக்காவில் ஆப்ரிக்கான் மொழி அதிகாரபூர்வ மொழியானது(1925)

========================================================================

75 -ம் வயதில் 

பிபிசி தமிழோசை 
================
பிபிசி உலக சேவையின் மூத்த மொழிப்பிரிவுகளில் ஒன்றான பிபிசி தமிழோசை தொடங்கி இன்றோடு (03-05-2015) 74 ஆண்டுகள் முடிந்து, 75வது ஆண்டு தொடங்குகிறது.
பிரிட்டனின் காலனிய ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டம் மற்றும் இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் தொடங்கப்பட்ட இந்திய துணைக்கண்டத்தின் மொழிப்பிரிவுகளில் ஒன்றான பிபிசி தமிழோசை தனது நீண்ட பயணத்தில் பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளின் ஒலி சாட்சியாக இருந்திருக்கிறது.
காலவெள்ளத்தில் 75 ஆண்டுகள் என்பது ஒரு துளியாக இருக்கலாம். ஆனால் ஒரு ஒலிபரப்பு நிறுவனத்தின் வாழ்க்கையில் அது ஒரு பெரும் பகுதி.பிபிசி தமிழோசை தொடங்கப்பட்டது.
1941 மே மாதம் 3 ஆம் தேதி என்றாலும் அதற்கு பிபிசி தமிழோசை என்கிற பெயர், அது தொடங்கி சில ஆண்டுகளுக்குப் பின்னரே சூட்டப்பட்டது. இதன் பின்னணியை பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தமிழோசையின் முன்னோடி ஆசிரியர்களில் ஒருவரான சிவபாதசுந்தரம் பின்வருமாறு தெரிவித்திருந்தார்.
“பிபிசி தமிழோசை யுத்தகாலத்தில் ஆரம்பித்தபோது இலங்கை கடிதம் என்று ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியை எழுதிப் படித்தவர் தம்பு என்பவராவர். அவர் இலங்கைக்காரர். 
ஆனால் இந்திய சிவில் சர்வீஸ் சேவையில் சென்னையில் கலெக்டராக பணியாற்றியவர். 
அவர் தான் அந்த இலங்கை கடிதத்தை எழுதிப் படித்தவர். இரண்டாவது உலகயுத்தம் முடிவடைந்த பின்னர் 1947ஆம் ஆண்டு தமிழ் ஒலிபரப்பை சஞ்சிகை நிகழ்ச்சியாக விரிவுபடுத்தும் நோக்குடன் பிபிசி என்னை (சிவபாதசுந்தரத்தை) அழைத்தது. 
1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான் பிபிசிக்கு வந்தேன். 1948ஆம் ஆண்டு ஒரு முறையான சஞ்சிகை நிகழ்ச்சியாக இதை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஒரு முறையான முகப்பிசையை உருவாக்கி, இலங்கைக் கடிதம் என்று இருந்ததை உலகக் கடிதமாக, உலக நிகழ்ச்சியாக நடத்துவதற்கு ஏற்பாடாகி, 1948 ஆம் ஆண்டு தான் தமிழ் நிகழ்ச்சிக்கு தமிழோசை என்கிற பெயர் ஏற்பாடாயிற்று” என்று தெரிவித்தார் சோ.சிவபாதசுந்தரம்.
பிபிசி தமிழோசையின் துவக்ககால முகப்பிசை மறைந்த இசைக்கலைஞர் டி.பி.ஜேயராமையர் அவர்களால் தயாரிக்கப்பட்டு தமிழோசையில் கே.பி.ரங்காச்சாரி காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 
1999ஆம் ஆண்டு வரையிலுமே கூட அந்த இசைதான் பிபிசி தமிழோசையின் முகப்பிசையாக இருந்தது.
பவளவிழா காணும் பிபிசி தமிழ் தொலைக்காட்சியிலும் செய்திகளை வழங்குகிறதுஇதன் இணையதளச் செய்திகள் இப்போது சென்னையிலிருந்து வெளிவரும் `ஹிந்து நாளேட்டின் தமிழ்ப் பதிப்பிலும் இடம்பெறுகின்றன.

பிபிசி தமிழோசையின் வரலாற்றில் 2015ஆம் ஆண்டு மற்றும் ஒரு மைல்கல்.

இதுவரை வானொலி மற்றும் இணையதளம் என்ற இரு ஊடகங்களில் மட்டுமே செயல்பட்டுவந்த பிபிசி தமிழோசை, இப்போது தொலைக்காட்சி மூலமும் புதிய நேயர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
========================================================================
ஏழை - பணமுதலை இருக்கும் வரை இருக்கும் மார்க்சீயம்.
என்றைக்கும் பொருந்தும் மார்க்சீயம்.!
-------------------------------------------------------------------
மார்க்சியத்தை லட்சியவாதம், தத்துவம், அரசியல் என மூன்றாக வகைப்படுத்தி முன்னிரண்டும் தேவை என்றும், மூன்றாவது காலாவதியாகிவிட்டது என்றும் ஜெ.மோ சொல்கிறார்.
 மார்க்சியம் அதன் அனைத்து அம்சங்களிலும் உள் இணக்கமும், இசைவும் கொண்டது. அதன் சில அம்சங்கள் தேவை என்றால் எல்லாமும் தேவை. சில அம்சங்கள் தேவையில்லை என்றால் எல்லாமும் தேவையில்லை என்று பொருள் கொள்ள வேண்டும். 
ஆக ஜெயமோகன் மார்க்சிய அரசியலை நிராகரிப்பது என்பது ஒரு அர்த்தத்தில் மார்க்சியத்தை நிராகரிப்பதே! 
ஆனால் கால வளர்ச்சியில் மார்க்சிய அரசியல் வடிவம் என்பதும் மாறக்கூடியது.19ம் நூற்றாண்டின் அரசியல் துடிப்பும், எழுச்சியும், 20ம் நூற்றாண்டில் வேறு வடிவங்களில் வெளிப்பட்டது, 
21ம் நூற்றாண்டில் இன்னும் மற்றொரு வடிவத்தில் வெளிப்படும். வெளிப்படுகிறது. 
இப்போது நாம் 20ம் நூற்றாண்டின் அரசியல் வடிவத்தை ஏற்க இயலாது என்பதற்காக, மொத்த அரசியலை நிராகரிக்கிறோம் எனச் சொல்ல முடியுமா?வடிவம் மாறலாம். உள்ளடக்கம் என்ன என்பதுதான் நாம் பார்க்க வேண்டிய அடிப்படையான விசயம். 
அதன்படி உலகை உருவாக்குவோர் உழைப்பாளிகள். அவர்கள் முதலாளித்துவச் சுரண்டலில் சிக்குண்டு இருக்கும் வரை, மொத்த உலகமும் சிக்கலில் சிக்கியிருக்கும் வரை சுதந்திரமான உலகம் சாத்தியமில்லை. எனவே உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தை வென்று பெற வேண்டும் என்பது இப்போதும் பொருத்தப்பாடு உடையதே! 
ஆனால் 21ம் நூற்றாண்டுக்குரிய வடிவத்தை தேர்ந்து கொள்ள வேண்டும் என்பது மெய். அதை மார்க்சியம் நிராகரிக்கவில்லை, மார்க்ஸூம் நிராகரிக்கவில்லை.
தொழில்நுட்பக் கருவிகள் விஞ்ஞானத்தின் பாய்ச்சல் வேகத்தில் என்னதான் மாற்றம் கண்டாலும் மனிதர்களுக்கு அப்பாற்பட்டு சுயம்புவான சக்தியாக அது வளர்ந்து மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது என்று சொல்ல முடியாது, ஆனால் இன்றைக்கு அப்படித் தோற்றம் காட்டுகிறது என்பது உண்மைதான். அந்த தோற்றத்தை மெய்யென நம்பி ஜெயமோகன் பேசுகிறார்.
எனவே மனிதர்களால் - ஆகவே உழைப்பாளர்களால் - தொழில்நுட்பத்தின் போக்கிற்கு உட்பட்டு செயல்பட நேரும் என்கிறார். 
இல்லை, இல்லவே இல்லை.. மனிதனின் வல்லமையை ஒருபோதும் தொழில்நுட்பம் தோற்கடிக்க முடியாது! 
அடிப்படையான விசயம் என்னவென்றால் மார்க்சியம் மனிதகுல விடுதலைக்கான செயல் தத்துவம்! 
10 லட்சம் ஆண்டு மனிதகுல வரலாற்றில் நிமிர்ந்த மனிதனாக மாறிய 1 லட்சம் ஆண்டுகளில் இப்போதுதான் கி.மு., கி.பி. என சில ஆயிரம் ஆண்டுகளை பதியக் கற்றிருக்கிறது மானுடம். இதன் ஒட்டுமொத்த தரிசனத்தைக் கண்டவர் மார்க்ஸ், எனவே ஒரு நூற்றாண்டு என்பது காலண்டரில் ஒரு நாள் தேதி கிழிவது போலத்தான். 
20ம் நூற்றாண்டு சோசலிசத்தின் சில அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அதையே ஆதாரமாக வைத்து நான் மார்க்சிய அரசியலை நிராகரிக்கிறேன் என்று ஜெ.மோ சொல்வதால் மார்க்சியம் காலாவதியாகிவிடாது!
 மார்க்ஸ் என்ன சொன்னார் என்று பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை! 
மாறாக இன்றைய உலகில் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் மார்க்ஸ் நம்மோடு இருந்தால் என்ன சொல்வார்,
 என்ன செய்வார் என்பதைக் கொண்டே மார்க்ஸை காண வேண்டும். மார்க்ஸை நீர்த்துப் போகச் செய்ய யாராலும் முடியாது.
ஏனென்றால் உலகத்தின், வாழ்க்கையின் இயக்கத்தை உள்ளது உள்ளபடி விஞ்ஞானப்பூர்வமாக ஆய்வு செய்து சொன்னவர், அதன்படி செயல்படச் சொன்னவர் மார்க்ஸ். அவர் சுயவிருப்பத்தின் பேரிலோ, வெறுப்பிலோ வர்க்க அடிப்படையில் உலகம் பிளவுண்டு இயங்குவதை சொல்லவில்லை.
அவர் ஒரு துளியையும் தன் தத்துவத்தில் சுயவிருப்பாகச் சொல்லவில்லை, அதன்படி செயல்படவும் இல்லை. அப்படி செய்திருந்தால் மார்க்ஸ் காலத்தின் காலடியில் வீழ்ந்து பட்டிருப்பார். 
மார்க்சியம் காலத்திற்கேற்ப வளரும் தத்துவம், வளரும் நடைமுறை! 
இதை தெரிந்து கொள்ளாமல், புரியாமல் ஜெ.மோ இருப்பாரானால் நேர்மையான முயற்சியில் அவரால் புரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள முடியும்.இல்லாமல், அவருக்கு இதில ஒரு முடிவோடு இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். 
காலவெள்ளத்தில் யார் கரைந்து போவார்கள் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை! மார்க்ஸ் எப்போதும் புன்னகைப்பார்!!
                                                                                                                                   -வே.தூயவன்.
 மார்க்சியம் இன்றைக்குப் பொருந்துமா? 
என்ற கேள்வியைக் கேட்டு பொருந்தாது என்ற அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரர் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய பதிவுக்கு முகநூலில் ஆற்றிய எதிர்வினை.
இந்துத்துவ வெறியன் ஜெயமோகனுக்கு பதில் கொடுக்கவேண்டிய கட்டாயம் இல்லை என்றாலும் அவன் எழுதுவதையும் சொல்லித்திரிகிற கூட்டம் விஷ்ணுபுரம் வட்டம் என்று இருக்கிறது.அவர்களில் மனசாட்சி உள்ள ஒருவருக்காவது உறைக்க வேண்டும்  என்றுதான் இப்பதிவு
மீள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றும் மார்க்சியம் கண்டு இவர்கள் மிரளப்போய்தானே ,இவர்களை மார்க்சீயப் பூதம் பயம் முறுத்தப்போய்தானே ,உயிருடன் அதன் கதிர்
வீச்சு இருப்பதை கண்டு தானே இப்படி எல்லாம் ஜெயமோகன் உட்பட்ட இந்துத்துவா,வலது சாரிகள் ,கார்பரேட் அரசியல்வாதிகள் புலம்புகிறார்கள்.
.========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?