அட ....வெங்காயம்.

இன்றைய நிலையில்  நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பது வெங்காயம்தான். 
நாடு முழுவதும் வெங்காயத்திற்கான விலை எகிறியுள்ளது. 
இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளில் களமிறங்கி இருக்கின்றன. 
காரணம் வெங்காய விலை எற்றத்தால் டெல்லி மாநிலத்தில் ஆட்சி மாற்றமே நடந்துள்ளது.
இச்சூழலில் இந்த அற்புத ‘வெங்காயம் ’ குறித்த அரிய தகவல்களை அறிவோம்...
பெரியார் தனது உரையாடலில் அடிக்கடி வெங்காயத்தை சேர்த்துக் கொள்வார்.அதாவது என்ன வெங்காயம் என்று அடிக்கடி சொல்வார்.
*  ஒரு கடி வெங்காயத்தில் ஒரு பிடி ‘பழங்கஞ்சி’ குடிக்கிற ஏழ்மை. ‘பர்கரிலும்’ வெங்காயம் சுவைக்கிற வளமை... இப்படி வெங்காயம் ஒரு ‘பொதுமை’ காட்டி நிற்கிறது. 

* இது ஒரு பழமையான மூலிகைப்பயிர். முற்காலத்து யூதர்களின் உணவு. 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் ருசித்தது. இதன் அதிக பயன்பாட்டை அரேபியர்களிடம் பார்க்கலாம்.  

* நேபாளத்தில் கடவுளுக்கு நிவேதனம் செய்யும் பொருளே வெங்காயம்தான். ‘மருத்துவ தந்தை’ ஹிப்போகிரேட்ஸ் ‘வெங்காய மருத்துவ’த்தை சொல்ல மறக்கவில்லை. 

* அமெரிக்கா, இங்கிலாந்து என பல நாடுகளில் மருத்துவப்பொருளாகவே வெங்காயம் மதிக்கப்படுகிறது. தலைவலித்தால் வெங்காயத்தை தட்டிப்போடுகிற நம் பாட்டி வைத்தியமும் இதையே பறைசாற்றி நிற்கிறது. 

* அசைவம், சைவமென அத்தனை வழி சமையலிலும், தாளிப்பு துவங்கி பஜ்ஜி, பக்கோடா என அத்தனையிலும் வெங்காயம் இருக்கிறது. தென்னிந்தியர்களின் பிரதான உணவாகி, தென்மாவட்ட மக்கள் வாழ்வுடன் இரண்டறக்கலந்த இது வாழ்வின் முக்கிய அங்கமாக நடை தொடர்கிறது.

* வெங்காய காரத்திற்கு ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ வேதிப்பொருளே காரணம். இதுவே நெடி நிரப்பி, கண்ணீர் வரவழைக்கிறது. எனவேதான் வெட்டுபவனையே அழ வைத்து விந்தை செய்யும் வெங்காயத்தை தமிழ் இலக்கியங்களும் விட்டுவைக்கவில்லை. 
* மரத்தில் தொங்கும் ‘தேன் ராட்டு’ எடுக்க, வெங்காயத்தை மென்று ஊதி ஈ துரத்துவதை கிராமத்துச் சிறுவர்களிடம் இன்றும் காணலாம். வகுப்புக்கு விடுமுறை பெற ‘கொஞ்ச நேர காய்ச்சலுக்காக’ பெரிய வெங்காயத்தை இரண்டாய் வெட்டி கைகளின் ‘அக்குள்’களில் சிறிது நேரம் வைக்கும் நகர விடுதி மாணவர்களும் இருக்கின்றனர். இன்றும் திருமண வீடுகளில் வழங்கும் சீர்பொருட்களில் ஒரு தட்டு வெங்காயமும் இடம் பிடிக்கிறது. 

* சந்தனத்திற்கு மாற்றாக வெற்றிலையுடன் வெங்காயம் சேர்த்து அரைத்த கலவையை புண், வேனற்கட்டு வராதிருக்க குழந்தைகளின் மொட்டைத் தலைகளில் தடவுதல் தென்மாவட்டத்தில் தொடர்கிறது. 

* தவறுக்கு தண்டனையாக கண்களில் வெங்காயச் சாறிடுதல் தென்னக கிராமங்களில் இருக்கிறது. மயங்கியவரை எழுப்பிட வெங்காயம் முகரச் செய்தலும் உண்டு. 

* வெங்காயத்தில் புரதம், தாது உப்புகள், வைட்டமின்கள் என உடம்புக்கான ஊட்டச்சத்து அதிகம். இதயத்திற்கு சக்தி தருகிறது. நரை, தலை வழுக்கையை தடுக்கிறது. உடல் வெம்மை தணித்து, ரத்த விருத்தி, எலும்பு வலிமை நிறைக்கிறது. பித்த, கண், வாத நோய்கள் தீர்க்கிறது. பாலில் இட்டு காய்ச்சிக் குடித்தால் சளி, இருமல் பறக்கிறது. இன்னும் உணவே மருந்தாக வெங்காயம் செய்யும் விந்தைகள் ஏராளம். 

* ‘மண்ணுக்குள் மாயாண்டி, உரிக்க உரிக்கத் தோலாண்டி’ என்ற நம்மூர் வழக்குச் சொற்களில் ஒன்றுமில்லாத விஷயத்திற்கு வெங்காயத்தையே உவமைப்படுத்தியபோதும், ஈவெரா பெரியார் போன்றோர் ‘வெங்காயம்’ என்று அடிக்கடி தங்கள் அற்புத வார்த்தைகளில் பயன்படுத்தியதன் அர்த்தம் இப்போது விளங்குகிறது.   

* வெங்காய வைத்தியம் குறித்து நம் சித்தர்கள் அருளிச்சென்றவை அதிகம். தோல் உரித்த வெங்காயத்துடன், வெல்லம் சேர்த்துச் சாப்பிட, பித்தம், ஏப்பம் குறையும். வெங்காயச்சாறு, கடுகு எண்ணெய் சமஅளவு எடுத்துச் சூடாக்கி இளஞ்சூட்டில் காதில் விட இரைச்சல் மறையும். வெங்காய துண்டுகளுடன், சிறிது இலவம் பிசின், கற்கண்டு தூள் சேர்த்து பாலுடன் கலந்து சாப்பிட மூலக்கோளாறு நீங்கும் என வெங்காய மருத்துவத்தின் பட்டியல் நீள்கிறது. 
========================================================================
இன்று,
ஆகஸ்ட்-27.

  • மால்டோவா விடுதலை தினம்(1991)
  • கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை பிறந்த தினம்(1876)
  • உலகின் முதல் ஜெட் விமானமான ஹென்கெல் ஹி 178 சேவைக்கு விடப்பட்டது(1939)
  • மலேசிய அரசியலமைப்பு சாசனம் அமலானது(1957)
  • =======================================================================
''1911-ம் ஆண்டு வியட்நாமை ஆக்கிரமித்த ஃப்ரெஞ்சுப் படைகள், 'கலகம் செய்தார்கள்’ என்று ஆசிரியர் குடும்பம் ஒன்றைக் கூண்டோடு வண்டியில் அள்ளிக் கொண்டுபோய் கொலை செய்தது. 

வண்டியில் இடம் இல்லாததால், ஒல்லியாகவும் பார்க்கப் பரிதாபமாகவும் இருந்த அந்த ஆசிரியரின் மகனை அப்படியே விட்டுவிட்டு, 'இவன் தானாகவே செத்துவிடுவான்’ என்று கிண்டல் செய்துவிட்டுச் சென்றனர். 

பிற்காலத்தில் அந்தச் சிறுவன் ஃப்ரெஞ்சுப் படைகளையும் மன்னராட்சியையும் ஒழித்துக்கட்டி மாபெரும் கதாநாயகனாக உயர்ந்தான். 

அமெரிக்கப் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்தான். 

அந்தச் சிறுவனின் பெயர் ஹோசிமின்!''

========================================================================
2050ஆம் ஆண்டில் டிமென்ஷியா என்கிற நினைவாற்றல் மங்கும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உலகளவில் தற்போது இருப்பதைவிட மூன்று மடங்கு அதிகரித்து, பதிமூன்று கோடியை தாண்டிவிடும் என்று ஒரு புதிய கணிப்பு கூறுகிறது.
முன்னர் இருந்ததை விட தற்போது மக்கள் நீண்ட காலம் வாழ்வதனால் டிமென்ஷியாவின் பாதிப்பும் அதிகரிக்கும் என்றும், இது பொதுசுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கு கடுமையான சவால்களை எற்படுத்துவதாகவும், அல்ஸைமர்ஸ் போன்ற மூளை பாதிப்பு நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு உதவிவரும் அல்ஸைமர்ஸ் டிசீஸ் இண்டர்நேஷ்னல் என்கிற அமைப்பு தெரிவித்துள்ளது.
டிமென்ஷியாவால் பாதிக்கப்படும் புதிய நோயாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடிபேராக இருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

மூளை அழுகல் நோய் என்பது மிகப்பெரும் சவாலாக உருவெடுப்பதாக எச்சரிக்கைImage copyrightSPL
Image captionமூளை அழுகல் நோய் என்பது மிகப்பெரும் சவாலாக உருவெடுப்பதாக எச்சரிக்கை

உலகளவில் டிமென்ஷியாவால் பாதிக்கப்படுபவர்களைப் பராமரிப்பதற்கான செலவு 800 பில்லியன் டாலர்களையும் தாண்டிவிட்டதாக அந்த அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.
நினைவாற்றல் மங்குவது மற்றும் சிந்திக்கும் திறனை இழப்பது உள்ளிட்ட எல்லாவிதமான மூளை அழுகல் நோய்களுக்கும் மொத்தமாக டிமென்ஷியா என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
மூளை அழுகல் நோய்களில் மிகவும் பொதுவாக காணப்படுவது அல்சைமர்ஸ் நோயாகும். மூளை அழுகல் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் அல்சைமர்ஸ் நோயால் அவதிப்படுபவர்கள் என்பது குறிப்பிடதக்கது.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?