காபி மருந்து?

நாம் காலையில் புத்துணர்ச்சிக்காக குடிக்கும் காபி மருந்தாகவும் பயன்படுகிறது. 
சிறுநீர் கற்களை வெளியேற்றும் தன்மை  காபிக்கு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.. 
வலி நிவாரணியாக பயன்படும் காபி, ஆஸ்துமாவை தடுக்கிறது. 
காபியின் பல்வேறு சிறப்புகள் குறித்து இன்று நாம் பார்ப்போம்:   
 காபியின் தாவரப் பெயர் காபி அராபிகா. 
அரபியன் காபி என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது. 
காபியில், காஃபின் என்ற வேதிப்பொருள் மிகுதியாக உள்ளது. இது எத்தியோபியாவை தாயகமாக கொண்டு வளர்ந்த தாவர இனம். காபி குடிப்பதால் வயிற்றில் புண், புற்றுநோய் வரும் என்ற தவறான அபிப்ராயம் உள்ளது. 
காபி குடிப்பதற்கும் கேன்சருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், காபி புற்றுநோயை தடுக்க கூடியது. 
குறிப்பாக, ஆசனவாயில் தோன்ற கூடிய கேன்சர் வராமல் தடுக்கிறது என கூறியுள்ளது.நாம் புத்துணர்ச்சிக்காக குடிக்கும் காபி, கிட்னி கல்லுக்கு மருந்தாகிறது. 
ஒரு ஸ்பூன் அளவுக்கு காபி பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். 
அதனுடன் சிறிதளவு வெட்டிவேர் சேர்க்கவும். பின்னர், தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கஷாயம் தயாரித்து பருகலாம். 
இது சிறுநீரை பெருக்குகிறது. 
சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை தணிக்கிறது. 
சிறுநீரக கற்களை வெளியேற்றுகிறது.

வலி நிவாரணியாக காபி பயன்படுகிறது. 
காபி கொட்டை அமில தன்மை கொண்டதால் புற்றுநோயை தடுக்கும். 
ஆஸ்துமாவுக்கு மருந்தாக அமைகிறது. 
காபி பொடியை கொண்டு பல்பொடி தயாரிக்கலாம். 
காபி பொடியுடன் ஆப்ப சோடா மற்றும் உப்பு சேர்த்து பல்பொடியாக உபயோகிக்கலாம். 
அவ்வாறு செய்தால் பற்களில் ஏற்படும் வலி, வீக்கம் சரியாகும். பல் சொத்தையாவது தடுக்கப்படும். பற்கள் ஆரோக்கியம் அடைகிறது. 
காபி கொட்டையில் காஃபின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் வலி நிவாரணியாக பயன்படுகிறது. புத்துணர்வு தரக்கூடிய காபியை அடிக்கடி குடிப்பவர்களுக்கு ஆஸ்துமா வருவது குறைவு என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புற்றுநோய் வந்த பின்னும் அதை தணிக்க காபி பயன்படுகிறது. 
காபி மேல் பூச்சாக பயன்படுகிறது. கட்டிகளின் மேல் வைத்தால் வலி போகும். ஒற்றை தலைவலியை காபி குறைக்கிறது. காபி நல்லது என்றாலும் அதிகமாக குடிக்க கூடாது. அதிகளவில் காபி குடித்தால் அது தலைவலியை உண்டு பண்ணும்.  
ஆத்ரட்டிஸ் உள்ளவர்களுக்கு உள் மற்றும் வெளி மருந்தாக காபி பயன்படுகிறது. அரை ஸ்பூன் காபி பொடியை எடுத்து கொள்ளவும். 
அதில் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். 
பின்னர் வடிகட்டி, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும். 
இது வலியை குறைக்க கூடியது. 
காபி பொடியுடன் எலுமிச்சை சாறு சேர்த்து வலியும், வீக்கமும் உள்ள இடத்தில் பூசினால் வலியும் வீக்கமும் குறையும்.


========================================================================

காலை நடைப்பயிற்சி
எப்படி செய்யவேண்டும்?
‘நடைப்பயிற்சியை எப்போது செய்தாலும் அதற்கேற்ற பலன் உண்டு. அதிலும் காலையில் மேற்கொள்கிற நடைப்பயிற்சியினால் அபரிமிதமான பலன்கள் உள்ளன’ என்கிறார் பொது மருத்துவரான அரசு மோகன். எல்லோராலும் எளிதாக செய்ய முடிகிற நடைப்பயிற்சி பற்றி தொடர்ந்து நம்மிடம் அவர் விளக்கியதிலிருந்து...

ஒரு நாளின் ஆசீர்வாதம்! சூரிய உதயத்தைப் பார்ப்பதே அரிதாகிவிட்ட அவசர வாழ்விலும் அதிகாலையில் கண் விழிப்பவர்கள் பாக்கியவான்கள். அதனால்தான் ‘காலை நடைப்பயிற்சி அந்த நாளுக்கான மொத்த ஆசீர்வாதம்’ என்கிறார் அமெரிக்கக் கவிஞரான ஹென்றி டேவிட். கொஞ்சம் செல்போனை கைவிட்டு... நான்கு சுவர்களைக் கடந்து... மனித அதிர்வுகளுக்கு அப்பால்... இயற்கையிலிருந்து உருவான மனிதன் இயற்கைக்கே திரும்பும் பாதை அதிகாலைதான். கொஞ்சம் வேடிக்கை பாருங்கள்!

காலை நடைப்பயிற்சி ஏன் நல்லது என்பதற்கு முன்னால் காலைவேளையே எத்தனை அழகானது என்பதை கொஞ்சம் கவனியுங்கள். கண் விழித்தால் பளிச்சென்று புத்தம் புதிய ஒரு நாள்... பறவைகளின் பாடலையும் வெயிலற்ற வெளிச்சத்தையும் இதமான காற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக உதயமாகும் சூரியனையும் விடைபெறும் நிலவையும் இன்னும் மிச்சமிருக்கும் நட்சத்திரங்களையும் பனிமழையில் நனைந்திருக்கும் மலர்களையும்  கொண்ட ஒரு பொழுது எப்படி இருக்கிறது? இத்தனை ஒரு ரம்மியமான தருணத்தை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு நடந்தாலே நோய்கள் நம்மை விட்டுஓடிப் போய்விடாதா? புத்தம்புது காலை!

நன்றாகத் தூங்கி ஓய்வெடுத்த பிறகு வருகிற புத்தம்புதிய நாள் என்பதால் மனம் அமைதியாக இருக்கும். கவனச்சிதறல்கள் இருக்காது. மனிதர்கள், வாகனங்களின் இரைச்சல்கள் இருக்காது. காற்று மாசு இருக்காது. இதனால்தான் நடைப்பயிற்சிக்கு காலைவேளையே சரியான நேரம் என்கிறோம். முக்கியமாக ரத்த ஓட்டத்தை சீராக்கும் அட்ரினலின், கார்டிசால் போன்ற ஹார்மோன்கள் நாள் முழுவதும் உடலில் சுரந்தாலும் காலையில்தான் புதிதாக, அதிகமாக சுரக்கும். இந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது பல நன்மைகளைக் கொடுக்கும்.

நோய்களற்ற ஒரு வாழ்க்கை ‘காலையில்தான் வான்வெளியில் புத்தம்புதிய பிராண வாயு அதிகமாக இருக்கும். இதனால் நுரையீரலுக்கு சுத்தமான காற்றும், இதயத்துக்கு நல்ல ரத்த ஓட்டமும் கிடைக்கும். ரத்த ஓட்டம் சீராக இருந்தாலே ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும்’ என்கிறது 2011ம் ஆண்டு வெளியான ஆய்வு ஒன்று. இந்த ஆய்வின் முடிவு ‘Medicines & Science’ இதழில் வெளிவந்துள்ளது. ரத்தத்தில் கொழுப்பு சேர்வது தவிர்க்கப்பட்டால் இதய நோய்களுக்கு உங்களுடைய முகவரி தெரியாது. செல்களுக்கு போதுமான ரத்த ஓட்டம் இருப்பதால் புற்றுநோய்கள் வருவதையும் தவிர்க்க முடியும். 

இதில் இன்னொரு விஷயம், கால் பகுதியின் முட்டியில் பர்சா(Bursa) என்ற திரவம் இருக்கிறது. நம் எலும்புகளுக்கு உராய்வுத் தன்மையை இந்த பர்சா திரவம்தான் கொடுக்கிறது. போதுமான நடைப்பயிற்சி இல்லாதபோது இந்த திரவம்தான் முட்டிப் பகுதியில் சேர்ந்து கொண்டு வலியை உண்டாக்குகிறது. காலை நடைப்பயிற்சி மேற்கொண்டால் கால்வலியைத் தவிர்க்க முடியும். எடையைக் குறைக்க இதுவே நேரம்!
சராசரியாக 45 நிமிடங்கள் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறவர்களுக்கு வருடத்தில் 10 கிலோ வரை எடை குறைவது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டு ள்ளது. ஏனெனில், மாலை நடைப்பயிற்சியில் அந்த நாளின் சக்தியையே செலவழிக்கிறோம். காலை நடைப்பயிற்சியில்தான் ஏற்கெனவே சேர்ந்திருக்கும் கொழுப்பைக் கரைக்கிறோம். இதனால்தான் காலை நடைப்பயிற்சி எடையைக் குறைக்க நல்ல சாய்ஸ் என்கிறார்கள். மாலை வேளையில் ஓய்வு வேண்டும் என்று உடல் கேட்கும். அந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது உடலை சிரமப்படுத்துவது போன்று ஆகிவிடலாம். இரவில் கால்களிலும் உடலிலும் வலி வருவதற்கும் இது காரணமாகக் கூடும். அதனால் காலை நடைப்பயிற்சியே பக்க விளைவுகள் அற்றது. 

எலும்பு தொடர்பான பிரச்னைகளை குணமாக்குவதற்கும், நீரிழிவைக் கட்டுபடுத்துவதற்கும் காலை நடைப்பயிற்சியே சிறந்தது என்பதையும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. காலை நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளவர்கள் நல்ல உணவு பழக்கவழக்கங்களையும் பின்பற்றுகின்றனர் என்று கூறுகிறது இன்னோர் ஆய்வு. இதனால் இவர்களுக்கு செரிமானக் கோளாறுகளும் இருப்பதில்லை. காலை நடைப்பயிற்சியில் தசைகள் சுருங்கி, விரிந்து சீராக இருப்பதால் தசைகள் வலிமையடைந்து முதுகுவலிக்கும் நிவாரணம் உண்டு. 

காலை நடைப்பயிற்சி என்பது அந்த நாள் முழுவதுக்குமான எனர்ஜி என்பதால், நாள் முழுவதும் நல்ல மனநிலையுடன் செயல்பட முடியும். உடல்நலம் தவிர தன்னம்பிக்கை, சுய மதிப்பு போன்றவற்றையும் காலை நடைப்பயிற்சி தருகிறது. இதனால் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. காலையில் பள்ளிக்கு நடந்து செல்லும் குழந்தைகளிடம் மன அழுத்தம் குறைந்து காணப்பட்டதையும் Medicines & Science இதழ் பதிவு செய்திருக்கிறது. 

நல்ல தூக்கத்துக்கான விலை காலையில் நடைப்பயிற்சிக்காக எழுவது பழக்கமானால் குறிப்பிட்ட நேரத்தில் எழ வேண்டும் என்ற தகவல் தானாகவே மூளையில் பதிவாகிவிடும். இரவில் சீக்கிரமாக உறங்கினால்தான் அடுத்த நாள் எழ முடியும் என்ற பக்குவமும் ஏற்படும். இரவில் தாமதமாக சாப்பிடுவது, பின் இரவில் தூங்கச் செல்வது போன்ற தவறான பழக்கங்களும் மாறும். ஆதலால்... காதல் செய்கிறீர்களோ இல்லையோ... காலை நடைப்பயிற்சியைத் தவறாமல் செய்யுங்கள்.. ஒரு நாளை மட்டும் அல்ல... இந்த வாழ்க்கையையே மகிழ்ச்சியானதாக  மாற்றி விடலாம்!
நடைப்பயிற்சி எப்படி செய்ய வேண்டும்?நடைப்பயிற்சி செய்யும்போது தனியாக செல்வதே நல்லது. 
மற்றவர்களுடன் செல்லும்போது தேவையற்ற பேச்சுகள் உண்டாகலாம்.
 மனதுக்குப் பிடித்த இசை கேட்டுவிட்டு செல்வதில் தவறில்லை. 
முடிந்த வரை செல்போன் போன்ற உபகரணங்களைத் தவிர்த்துவிடுங்கள். 
தளர்வான உடைகளும், வசதியான ஷூ அணிந்துகொள்வதும் முக்கியம். 
நடைப்பயிற்சி தொடங்கும் முன் பால், காபி, ஜூஸ் போன்ற எளிமையான உணவு வகைகள் எடுத்துக் கொள்வது அவசியம். 
உங்களது இயல்பான வேகம் எதுவோ, அதுவே நடைப்பயிற்சிக்குப் போதுமானது.
 இதய நோய்கள், ரத்த அழுத்தம், நுரையீரல் பிரச்னைகள் போன்ற மருத்துவரீதியான சிகிச்சையில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றே நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.


                                                                                                                                    - ஞானதேசிகன் 
நன்றி :தினகரன்.

========================================================================
இன்று,
ஆகஸ்ட்-24.

  • உக்ரேன் விடுதலை தினம்(1991)
  • கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது(1690)
  • நேட்டோ ஒப்பந்தம் அமலுக்கு வந்தது(1949)
  • ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது(1936)
  • நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம்  இறந்த தினம்(1972)



நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம் பிள்ளை(அக்டோபர் 10, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். 
“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திய பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டவர்.
இராமலிங்கனார் பழைய சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அம்மணிம்மாள், வெங்கடராமன் ஆகியோருக்கு பிறந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரஸின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்திமிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரக்ப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர்.
‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.
’கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்’
என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.

'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'
தமிழன் என்றோர் இனமுன்று
தனியே அதற்கோர் குணமுண்டு'
'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'
'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்'
என்ற வரிகள் இவரின் புகழை கூறும்.
எழுதிய நூல்கள் :
மலைக்கள்ளன் (நாவல்)
காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)
பிரார்த்தனை (கவிதை)
நாமக்கல் கவிஞர் பாடல்கள்
திருக்குறளும் பரிமேலழகரும்
திருவள்ளுவர் திடுக்கிடுவார்
திருக்குறள் புது உரை
கம்பனும் வால்மீகியும்
கம்பன் கவிதை இன்பக் குவியல்
என்கதை (சுயசரிதம்)
அவனும் அவளும் (கவிதை)
சங்கொலி (கவிதை)
மாமன் மகள் (நாடகம்)
அரவணை சுந்தரம் (நாடகம்)

கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது.

தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவில்லம் ஆக்கியுள்ளது. 
இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 
மேலும் சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடி கட்டிடத்திற்கு கலைஞர்  இவரது பெயரை  சூட்டியுள்ளார்.
========================================================================





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?