தமிழக மக்கள் தலை

அதிமுக தேர்தல் அறிக்கை மாபெரும் விலையில்லா அதிரடியாக இருக்கும் என்றே தெரிகிறது.
திமுக தேர்தல் அறிக்கையை மிஞ்சி செய்ய என்ன  இருக்கிறது என்று ஆய்வு செய்வதிலேயே ஜெயலலிதாவின் காலம் கடந்து விட்டது.

இந்த அறிக்கை முதலில் தம்பித்துரை,பொன்னையன் போன்ற அதிமுக அறிவுசார் குழுமம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இப்போது ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில் பதவியில் உள்ள நிதித்துறைச்  செயலர் சண்முகம் உட்பட்ட நான்கு இ.ஆ.ப.அதிகாரிகளால் அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு ஜெயலலிதாவிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதில் இலவசமாக வந்து மக்களையும் ,குறிப்பாக திமுக உட்பட்ட எதிர்க்கட்சிகளை திக்கு முக்காட வைக்க சில உள்ளதாக தெரிகிறது.
அதில் எல்.சி.டி தொலைக்காட்சி,குளிர்சாதன பெட்டி,இ-பைக் இருக்கலாம் என்பது பலத்த யூகங்களை உண்டாக்கி இருக்கிறது.

ஆனால் இவை விலை அதிகமாக இருக்குமே எப்படி சமாளிப்பார்கள் என்ற எண்ணம் வரலாம்.
அதிமுக அரசு அமைந்தால் தரப்படும் இலவசங்கள் அல்ல விலையில்லாப் பொருட்கள் அனைத்தும் சீனத்தயாரிப்புகள் என்பதுதான் சிறப்பு குறிப்பு.

சென்ற முறை இலவச பென் ,மிக்சி போன்றவற்றை தயாரித்து வழங்க நம் தயாரிப்பாளர்கள் கட்டுப்படியாகவில்லை என்று மறுத்தபோது வெளியெ தெரியாமல் இவை ஆயிரக்கணக்கில் சீனாவில் தயாரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டன.அதனால் இவை வெறும் கூடுகள் மட்டுமே என்ற அளவில் வந்து கொடுக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே காய்லாங்கடைக்கு போய்விட்டன.

காரணம் நம் அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் கேட்ட 60% கமிசன் தான்.இதனால்தான் நமது தமிழகத்தயாரிப்பாளர்கள் மனசாட்சி படி தயாரிக்க மறுத்து விட்டார்கள்.

இந்த மூன்று பொருட்களும் இவர்கள் கேட்கும் கமிசன் கழித்து தயாரிக்க ,அதை விட குறைந்த விலையில் தர சீன தயாரிப்பாளர்கள் தயாராம்.

அந்த தயாரிப்புகள் என்ன நிலையில் இருக்கும்.

மிக்சி ,கிரைண்டராவது ஓடாமல் அடம் பிடித்தது.

ஆனால் சீன பொருட்கள்?அவ்வப்போது வெடிக்கும் சீன அலைபேசிகள் பற்றி செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.

1000ரூபாய் அலைபேசியே அதிர் வேட்டாய் வாங்கியவரின் முகத்தைசிதைக்கும் போது அதே 1000த்தில் தயாரிக்கப்படும் எல்.சி.டி .தொலைக்காட்சி ...?

இலவசங்கள் கொடுத்ததால்தான் டாஸ்மாக்கை மூட முடியவில்லை.கருணாநிதி வைத்த 90000கோடி கடன் தற்பொது 4 லட்சம் கோடிகளாகி விட்டது எனும் ஜெயலலிதா ஆட்சி அதிகாரிகள் ஒரு வேளை அதிமுக தேர்தல் அறிக்கையில் இவைகள்அறிவிக்கப்பட்டால்,ஒரு வேளை அவர்  ஆட்சிக்கு வந்து, ஒரு வேளை வழங்கப்பட்டால் தமிழ்நாட்டுகடன் தொகை 10 லட்சம் கோடிகளை தாண்டி விடும் அடுத்த ஐந்தாண்டுகளில்.

தற்போது ஒவ்வொரு தமிழ்க்குடிமகன் தலை மீதும் இருக்கும் 40000ரூபாய் கடன் லட்சம் ரூபாயாகி விடும்.

இது போன்ற விலையில்லா வினைகள் நம் மக்களுக்கு தேவைதானா?

ஒருவரை மிஞ்சி ஒருவர் தேர்தல் அறிக்கை கொடுத்து விளையாட தமிழக மக்கள் தலைதானா கிடைத்தது.
கடைசி செய்தி:​ -
அதிமுக தேர்தல் அறிக்கையில் சீனத்தயாரிப்பு அலைபேசி மட்டும் அம்மா அலைபேசி என்ற பெயரில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றபடி திமுக தேர்தல்  அறிக்கையில் கூறியவற்றை கொஞ்சமாக திருத்தி  இலவச வை பை ,முதியோர் ஓய்வூதியம்,மகளிர் மண உதவி,தாலிக்கு 8 கிராம் தங்கம்,மகளிர் ஸ்கூட்டருக்கு 50% மானியம் ,100 யூனிட் கீழ்  மின்சாரப் பயனாளர்களுக்கு இலவசம் என்ற அளவிலேயே அறிக்கை அமைந்துள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கையின் சாராம்சங்கள்:

1. விவசாயக்கடன்கள் முழுவதும் ரத்து செய்யப்படும்

2. மீனவர்களுக்கான உதவித்தொகை 5 ஆயிரமாக உயர்த்தப்படும்

3. பத்திரப்பதிவு எளிமைப்படுத்தப்படும்

4.  அவிநாசி அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும்

5. மீனவர்களை எஸ்.டி. பட்டியலில் சேர்க்க நடவடிக்கை

6. உள்நாட்டு மின் உற்பதிக்கு தொடர்ந்து முக்கியத்துவம்

7. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை

8. மடிக்கணிணிகளூடன் கட்டணமில்லா இணைய வசதி

9. மகப்பேறு உதவித்தொகை 18 ஆயிரமாக உயர்வு

10. 100 யூனிட் வரையிலான மின்சாரம் இலவசம்

11. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை

12. கூட்டுறவுக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்

13. பொங்கலுக்கு கோ- ஆப்டெக்சில் துணி வாங்க 500 ரூபாய் கூப்பன்

14. தமிழக ஆறுகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

15. மகளிர்களுக்காக வாங்கும் ஸ்கூட்டர்களுக்கு 50 சதவிகிதம் மானியம்

16. ஏழை, எளியோருக்கு அம்மா வங்கிக்கார்டுகள்

17. படித்து வேலையில்லாமல் இருக்கும் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து

18. இலவச முழு உடல் பரிசோதனை திட்டம் அனைத்து மாவட்டங் களுக்கும் செயல்படுத்தப்படும்

19. அரசு ஊழியர்களின்  ஊதிய முறை மாற்றியமைக்கப்படும்

20. லோக் ஆயுக்தா அமைக்கப்படும்

21. புதிய கிராணைட் கொள்கை வகுக்கப்படும்

22. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் இலவச செல்போன்

========================================================================================
இன்று,
மே-05.
  •  கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம்(1818)

  • டென்மார்க் விடுதலை தினம்(1945)

  • எதியோப்பியா விடுதலை தினம்(1941)

  • பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பி.யு.சின்னப்பா பிறந்த தினம்(1916)

  • தென்னாப்பிரிக்காவில் ஆப்ரிக்கான் மொழி அதிகாரபூர்வ மொழியானது(1925)
கார்ல் மார்க்ஸ் 
மனிதகுலத்தை உய்விக்கும் சிந்தனை எழுச்சியை தந்த கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் இன்று .உலகின் தலைசிறந்த காதல்,நட்பு ,சித்தாந்தம் எல்லாம் ஒரே ஒரு மனிதன் வசம் என்றால் மார்க்ஸுக்கு தான் அப்பெருமை . போராட்டம், வறுமை, வலிகள், பசி இவையே வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிறைந்திருந்த பொழுது எளியவர்களும்,பாட்டாளிகளும் எப்படி துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது என ஓயாமல் சிந்தித்த அசாதாரணமான மனிதர் அவர் .ஜெர்மனியில் மே - 5 -1818 இல் பிறந்த மார்க்ஸுக்கு அவரின் அப்பா எல்லையற்ற சுதந்திரம் தந்தார் ;மகனின் போக்கிலேயே இருக்க விட்டார் . மார்க்ஸ் இறக்கும் வரை அப்பாவின் புகைப்படம் சட்டைப்பையில் இருக்கிற அளவுக்கு இருவருக்குமான பந்தம் உறுதியானது ..
தத்துவஞானி ஹெகலை ஆதரித்த குழுவில் தன்னையும் இணைத்துக்கொண்ட மார்க்ஸ் மதத்தை மறுத்தார் ;மதம் என்பது மனிதத்தன்மை அற்றது,அது போதைப்பொருளை போன்றது என கடுமையான விமர்சனங்களை வைத்தார் ஷேக்ஸ்பியர் கதே என எண்ணற்ற இலக்கிய ஆளுமைகளின் எழுத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்த அண்டை வீட்டு நண்பரிடம் அடிக்கடி உரையாடும் பொழுது தான் அவரை விட ஏழு வயது முதிர்ந்த ஜென்னியிடம் காதல் பூத்தது .
கரடுமுரடான சுபாவம் கொண்ட,ஏழ்மையில் உழன்ற மார்க்ஸை செல்வ வளம் மிகுந்த குடும்பத்தின் நங்கையான ஜென்னி மனதார நேசித்தார் .அவர்களின் காதல் பல வருடங்கள் காத்திருப்புக்கு பின் கனிந்தது -அப்பொழுது தான் மார்க்ஸ் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியிருந்தார்;அவரின் எழுத்துகள் பாட்டாளிகள் எப்படி முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என தெளிவுபடுத்தின .எப்படி சிலரிடம் செல்வம் தேங்கி கிடக்கிறது என்பதையும் விளக்கினார் .எல்லாவித அடக்குமுறைகளையும் பாட்டாளிகள் தகர்த்தெறிய ஒன்று சேர வேண்டும் என அவரின் எழுத்துகளின் மூலம் உத்வேகப்படுத்தினார் .
பிரஷ்ய அரசு நாடு கடத்தியது ;இவரின் சிந்தனை வேகத்தை பார்த்து பிரான்ஸ் அரசு ஒரு நாளுக்குள் வெளியேற வேண்டும் என்றது . பெல்ஜியத்தில் போய் குடியேறினார் மார்க்ஸ் .நிலைமை இன்னமும் மோசம் ;எல்லா இடங்களுக்கும் ஜென்னி புன்னகை மாறாமல் உடன் வந்தார் .
ஒரு முறை விபசார விடுதியில் ஒரு நள்ளிரவு முழுக்க சந்தேகப்பட்டு போலிஸ் அடைத்துவைத்த பொழுது கூட சின்ன முகச்சுளிப்பை கூட மார்க்ஸை நோக்கி காட்டாத மங்கை அவர் .எங்கெல்ஸை ஏற்கனவே ஒரு முறை சந்தித்திருந்த மார்க்ஸ் மீண்டுமொரு முறை சந்தித்த பொழுது எண்ணற்ற தளங்களில் தங்களின் சிந்தனை ஒத்திருப்பதை கண்டார் .இவரை காப்பதை தன் வாழ்நாள் கடமையாக செய்தார் ஏங்கல்ஸ் .வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பிக்கொண்டே இருந்தார் . இங்கிலாந்தின் நூலகங்களில் தவங்கிடந்து மூலதனத்தை உருவாக்கினார்கள் ;ஒரு
பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு விலை தந்தே அதை வாங்குவீர்கள் .அந்த பொருளை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி தயாரிக்கும் தொழிலாளிக்கு நீங்கள் கொடுக்கும் பணம் போய் சேர்கிறதா என்றால் இல்லை -மூலதனத்தை போட்ட முதலாளி ஒட்டுமொத்த லாபத்துக்கும் சொந்தக்காரர் ஆகிறார்
அப்படியில்லாமல் மூலத்தை உழைக்கிறவனுக்கு பிரித்து தரவேண்டும் என்பதே அதன் சாரம் .உலகின் பொருளாதரத்தை பற்றி மார்க்ஸ் எழுதிய காலத்தில் வீட்டு நிலைமை ஏகத்துக்கும் மோசமானது .பிள்ளைகள் மாண்டு போனார்கள் ;"பிறந்த பொழுது உனக்கு தொட்டில் கட்ட காசில்லை ;இப்பொழுது அடக்கம் செய்ய காசில்லை !"என ஜென்னி கண்ணீர் விடுகிற அளவுக்கு நிலைமை மோசம் ,பசியால் நொடிந்து போய் மார்பிலிருந்து ரத்தம் சொட்ட பிள்ளைக்கு பாலூட்டிய கொடுமையிலும் மார்க்ஸை அன்போடு சுருட்டு வாங்கித்தந்து காத்தார் ஜென்னி .
ஜென்னி இறந்த இரண்டு வருடங்களில் ஏற்கனவே மனதளவில் இறந்து போயிருந்த மார்க்ஸ் மீளாத்துயில் கொண்டுவிட்டார் . காரல் மார்க்ஸ் கண்ட கனவான பாட்டாளிகளின் புரட்சி அடுத்த நூற்றாண்டில் பல நாடுகளில் காட்டாற்று வெள்ளம் போல பொங்கிப்பெருகிற்று .சூரியனின் கதிர்கள் போல உலகம் முழுக்க கம்யூனிசம் நீக்கமற மக்களின் சிந்தனையில் புகுந்தது .'
                                                                                                                               - பூ.கொ.சரவணன்

வாட்டாக்குடி இரணியன்
தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை வட்டம்,வாட்டாக்குடி கிராமத்தில் இராமலிங்கம்-தையல் அம்மாளுக்கு 1920,நவம்பர் 15 அன்று பிறந்தவர் மாவீரன் வாட்டாக்குடி இரணியன்..
இவரது இயற்பெயர் வெங்கடாச்சலம்.
தனது 13 வது வயதில் உறவினர்களுடன் சிங்கப்பூர் சென்று கட்டிட வேலையிலும் தோட்டங்களிலும் வேலைபார்த்தார்.அங்கெல்லாம் ஆங்கிலேயர்கள்,சீனர்கள்,மலேசியர்களின் தோட்டங்களில் தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டது கண்டு அவருக்கு பொதுவுடைமைச் சிந்தனையாளர்களுடன் உறவு ஏற்பட்டது.
பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள் மலேயா கணபதி,வீரசேனன் ஆகியோருடன் இரணியனுக்கு தொடர்பு கிடைத்தது.நூல் வாசிப்புப் பழக்கம் உருவானது.பொதுவுடைமை மீதான பிடிப்பு அதிகமானது.இரகசிய அரசியல் கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புக்கிட்டியது. சிங்கப்பூரில் பொதுவுடைமை மற்றும் பகுத்தறிவு சிந்தனையை வளர்த்துக் கொண்டதால் நாத்திக சிந்தனையாளன் “இரணியன்” பெயரை தனது பெயராக மாற்றிக்கொண்டார்.
1943ல் சிங்கப்பூர் வந்த வங்கத்துச்சிங்கம் நேதாஜியைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார்.”இரத்தம் தாருங்கள்;விடுதலை பெற்றுத்தருகிறேன்” என்று சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் நேதாஜி வீரமுழக்கமிட்டதில் ஈர்ப்படைந்த இரணியன் நேதாஜி அமைத்த “இந்திய தேசிய இராணுவ”த்தில் சேர்ந்து பயிற்சியாளராக உயர்ந்தார்.
சுமார் பன்னிரெண்டாயிரம் தொழிலாளர்களைக் கொண்ட சிங்கப்பூர் துறைமுகத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரானார்.1946ல் தொழிற்சங்கத்தின் முடிவுக்கு ஏற்ப தொழிலாளர்களின் நலனுக்காக போராட்டம் நடத்தினார்.மலேசிய முதலாளிகளும் ஆங்கிலேயர்களும் போராட்டத்தை ரவுடிகளைக்கொண்டு நசுக்க நினைத்ததை எதிர்கொள்ள “இளைஞர் தற்கொலைப் படை”ஒன்றை நிறுவினார்.இளைஞர்களுக்கு கொரில்லா பயிற்சியும் துப்பாக்கிச்சுடும் பயிற்சியும் கொடுத்தார்.
1948ல் மலேசியா பொதுவுடைமைக் கட்சியைத் தடை செய்தது. பொதுவுடைமை இயக்கத்தலைவர்கள் தலைமறைவானார்கள்.தனது 28 வது வயதில் இரணியன் தனது சொந்த ஊரான வாட்டாக்குடிக்குத் திரும்பினார்.1947ல் விடுதலையடைந்த இந்தியாவில் நேதாஜிக்கு எதிர் சிந்தனை கொண்டவர்களின் காங்கிரசு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததும் பணக்கார சக்திகள் தொழில் முதலாளிகளாகவும் நிலப்பிரபுக்களாகவும் மாறியிருப்பதையும் கண்டு இதற்காகவா இந்திய விடுதலைக்காக நேதாஜி பாடுபட்டார் என்ற கலக்கம் அவருக்குள் உருவானது.
இந்தியாவிலும் பொதுவுடைமைக்கட்சி தடைசெய்யப்பட்டிருந்த நேரம்.அவரது ஊரான வாட்டாக்குடியில் நிலப்பிரபுக்களின் கொடுமை விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிராக அதிகரித்திருந்தது. ”சாணிப்பாலும் சவுக்கடி”யும் விவசாயத்தொழிலாளர்களுக்கு இயல்பான தண்டனையாக இருந்தது.ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் நண்பர்களுடன் சேர்ந்து ”விவசாய சங்கம்” ஒன்றை உருவாக்கினார்.
நிலப்பிரபுக்களுடன் மோதி விவசாயத் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தினார்.இதை பொறுக்க முடியாத நிலப்பிரபுக்கள் காவல்துறையின் உதவியுடன் இவர்மீது பல வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்ய முயன்றனர்.மீண்டும் தலைமறைவு வாழ்க்கை தொடர்கதையானது.நிலப்பிரபுக்களும் முதலாளித்துவ சிந்தனையாளர்களும் காவல்துறையினர் உதவியுடன் இரணியனுடன் தொடர்புடையவர்களைக் கொலை செய்யத் தொடங்கினர்.
1950 மே மாதம் 3 ஆம் நாள் இரணியனுடன் இணைந்து செயல்பட்ட சாம்பனோடை சிவராமனை காவல்துறை சுட்டுக்கொன்றது.
வடசேரிக் காட்டில் மறைந்திருந்த இரணியனை காவல்துறை நெருங்கியது.காலில் ஏற்பட்ட காயத்தால் அவரால் ஓடமுடியவில்லை.இரணியனையும் அவருடன் இருந்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் என்பவரையும் வடசேரி சம்பந்தம் என்பவர் காவல்துறைக்குக் காட்டிக்கொடுத்தார்.
1950 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் இரணியனையும் ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும் காவல்துறையினர் பிடித்தனர்.ஆறுமுகத்தின் மீது வழக்கு ஏதுமில்லை என்பதால் அவரை விடுவித்து தப்பிக்க காவல்துறையினர் சொன்ன போதும் இரணியனை விட்டுச் செல்ல மறுத்துவிட்ட ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும் இரணியனையும் காவல்துறை சுட்டுக்கொன்றது.
வாட்டாக்குடி இரணியன்,ஆம்லாப்பட்டு ஆறுமுகம்,சாம்பனோடை சிவராமன் ஆகியோரின் உடல்கள் பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு கூராய்வு செய்யப்பட்டன.பின்னர் பட்டுக்கோட்டை சுடுகாட்டில் அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன.

தனது 30 வது வயதில் விவசாயிகளின்… தொழிலாளர்களின் உரிமைக்காகப் பாடுபட்ட இரணியன் காவல்துறையால் கொல்லப்பட்ட தினம் இன்று… மே 5…
 பி.யு.சின்னப்பா
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஆக்டர், புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா என்ற, பி.யு.சின்னப்பா!
புதுக்கோட்டை சமஸ்தானத்தில், உலகநாத பிள்ளை -- மீனாட்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்; அவரது இயற்பெயர் சின்னசாமி. தந்தையின் வழியில், நாடக நடிகரானார்.
சந்திரகாந்தா திரைப்படம் மூலம், சினிமாவில் புகுந்தார். 
'மாடர்ன் தியேட்டர்ஸ்' சுந்தரம், உத்தம புத்திரன் படத்தில், சின்னப்பாவை இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். 
தமிழில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பெருமைக்குரியவர் இவரே! 
ஜகதலப்பிரதாபன் படத்தில், ஐந்து இசைக் கருவிகளை வாசித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். எம்.கே.தியாகராஜ பாகவதர் -- பி.யு.சின்னாப்பா இடையே கடும் போட்டி நிலவிய காலம் அது.
சிலம்பம், குஸ்தி, கத்திச் சண்டை, கம்புச்சண்டை, சுருள் பட்டா வீசுவதிலும் சின்னப்பா சூரர். 
அவர், மாந்திரீகம் கற்றுக் கொண்டார். 
1951 செப்., 23ல் இறந்தார்.பி.யு.சின்னப்பா பிறந்த தினம் இன்று!
========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?