பாலியல் சட்டதிட்டம்......,

ஐக்கிய நாடுகளின் கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் உள்ள பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பேர், தமது வாழ்நாளில் ஒரு முறையாவது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். 

அதில் பாதிக்கும் மேலானோர் தமது பதினாறு வயதுக்குள் இத்தகைய சூழலில் சிக்குகின்றனர் என தெரியவந்துள்ளது. நிதர்சனம் என்னவென்றால், எண்பது சதவிகிதம் பேர், தமக்கு நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றி வெளியில் சொல்வதேயில்லை. 
இதைப் பற்றி தெரிவிக்காமல் இருக்க ஒரு பக்கம் பயம்தான் காரணம் என்றாலும், மறுபக்கம் தமது சமூக சூழலால் நாணி இதை அவமானம் எனக் கருதி போலீசாரிடம் தெரிவிப்பதில்லை. இவை அனைத்துக்கும் மேலாக, பாலியல் துன்புறுத்தல் பற்றிய அறியாமை நிலவுவதும் முக்கியக் காரணம் எனலாம்.
டெல்லியில் நிகழ்ந்த கூட்டு பலாத்காரத்துக்குப் பின் பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. பலாத்காரத்துக்கு தண்டனை வழங்கும் ஐ.பி.சி. 375-ல் சீர்திருத்தம் செய்யப்பட்டது.
1. பெண்ணின் விருப்பம் இன்றியோ;
2. அவளது அனுமதி இன்றியோ;
3. பயமுறுத்தி சம்மதிக்க வைத்தோ;
4. மணமுடித்த பெண்ணை கணவன் என ஏமாற்றி சம்மதிக்க வைத்தாலோ;
5. அவளுக்கு தெரியாமல் மயக்கம் தரும் வஸ்துவை கொடுத்து, அவளது சம்மதம் கேட்டாலோ; 
6.பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணின் சம்மதத்துடனோ/சம்மதமின்றியோ;
7. சம்மதத்தை தெரிவிக்க முடியாத நிலையில் உள்ள பெண்ணை பலாத்காரம் செய்வது உள்ளிட்டவை தண்டிக்கப்படலாம்.
மேலும், பெண்ணின் சம்மதத்தைப் பெறுவதன் அவசியம் பற்றிய பல தகவல்கள் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்மதம் வாய்மொழியாகவோ, சைகையாகவோ இருக்கலாம். 
நாம் இந்த சட்டத் திருத்தங்களைத் தெரிந்துகொள்வது அவசியம். 

நம்மில் பலரும் பாலியல் துன்புறுத்தலாக கருதுவது இதன் உச்சகட்டமான பலாத்காரத்தையோ அல்லது பாலியல் ரீதியான தாக்குதல்களையோதான். நாம் தினந்தோறும் அனுபவிக்கும் சைகை மற்றும் வாய்மொழி சீண்டல்களை பாலியல் துன்புறுத்தல் என கருத முடியாத அளவுக்கு அவை நமக்கு பழக்கமாகிவிடுகின்றன. 
ஐ.பி.சி. 354 சட்டத்தின் கீழ் உள்ள ஏ,பி,சி,டி குற்றப் பிரிவுகள் ஆண் பெண்ணைத் தாக்குவது தொடர்பான குற்றங்களுக்கானவை. 

இதில், பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக தொடுவது, பாலியல் ரீதியான கோரிக்கைகள் வைப்பது, விருப்பமற்ற பெண்ணுக்கு ஆபாசப் படம் காண்பிப்பது, நேரடியாகவோ அல்லது இணையதளத்திலோ பின்தொடர்வது,அனுமதியின்றி புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது மற்றும் அதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது போன்றவையும் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

2 வயது குழந்தைகள்,சிறுமிகள் முதல் கிழவிகள் வரை பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் காலத்தில் இது போன்ற சட்டங்கள் கண்டிப்பாக தேவை.

ஆனால் காதலித்து பலமுறை இருவரும் மனமொத்து உடலுறவு கொண்ட பின்னர் ஏதாவது பிரசினை என்றால் ஆன் தன்னை கற்பழித்ததாக காவல் துறையில் புகார் கொடுப்பதும்.அதை வாங்கியவுடனே ஆணையும் ,சில நேரங்களில் அவனின் குடும்பத்தையும் கைது செய்வது வாடிக்கையாகி விட்டது.
கற்பழிப்பு என்பது பெண்ணின் சம்மதமின்றி பலாத்காரமாக ஒரு முறை நடப்பது.அதனால்தான் அது பாலியியல் பலாத்காரமாக பெயர் மாறியுள்ளது.

ஆனால் பிறருக்கு தெரியாமல் பலமுறை பெண்ணின் சம்மதத்துடன் நாய்ப்பெறும் உடலுறவு யார் கண்ணிலாவது மாட்டி விட்டால்மட்டும்  பெண்ணுக்கு சாதகமாக சட்டத்தில்  பாலியியல் பலாத்காரமாக மாறி ஆணை அலைக்கழித்து விடுகிறது.
அதையே அந்த ஆண் தன்னை அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்ததாக சொன்னால் என்ன நடவடிக்கை இருக்கும்?
 அனைவரும் தமது தனிப்பட்ட பாதுகாப்புக்காக இந்த பாலியல் சட்டதிட்டங்களைத் தெரிந்துகொள்வது அவசியமாகின்றது. 

ஏனெனில், நமக்கான உரிமைகளைத் தெரிந்துகொள்வது நமது மாறிவரும் சமூக சூழலில் பாதிப்புக்குள்ளானவர்களைக் குற்றஞ்சாட்டும் நிலையிலிருந்து மாற்றலாம்.
==============================================================================
இன்று,
ஆகஸ்டு-28.
  • ஹென்ரி ஹட்சன், டெலவர் வளைகுடா பகுதியை கண்டுபிடித்தார்(1609)
  • வில்லியம் ஹேர்ச்செல், சனி கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்(1789)
  • சயின்டிபிக் அமெரிக்கன் என்ற இதழின் முதல் பதிப்பு வெளியானது(1845)
  • காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்(1898)
  • குவைத்தை தனது ஒரு பகுதியாக ஈராக் அறிவித்தது(1990)

==============================================================================
முகனூல் :-

தலைக்கனம் தலைக்குனிவைத் தரும்...!

'தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும்' என்று தலைக்கனம் பிடித்த பண்டிதர் ஒருவர் இருந்தார்.
அடர்த்தியான புருவம், பெரிய மீசை, அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்குச்சி போல் காணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே அவரது அடையாளம்...
வீதியில் அவரைக் கண்டு விட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்...
ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும் ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால் மட்டந்தட்டிவிடுவார்.
இதில் சிலர் அழுது விடுவது கூட உண்டு...
ஒரு நாள் அவருக்கு மட்டந்தட்ட யாருமே கிடைக்கவில்லை.
ஊர் எல்லை வரை வந்து விட்டார்...
அங்கே ஒரு மரத்தடியில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நாவிதரைப் பார்த்தார்...
நாவிதரின் உடைகள் நைந்து போய் அவரது வறுமையைக் காட்டினாலும், அதை அவர் சுத்தமாய்த் துவைத்து, நேர்த்தியாய் உடுத்தியிருந்த விதம் அவருக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தது...
இது பண்டிதருக்கு எரிச்சலை மூட்டியது...
இன்று இந்த மனிதனைக் கதறி அழவைத்தே ஆக வேண்டுமென்று முடிவெடுத்து அவரை நெருங்கினார்...
"என்னப்பா! முடி வெட்ட எவ்வளவு? சவரம் பண்ண எவ்வளவு?" என்றார்...
அவரும், "முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி!" என்று பணிவுடன் கூறினார்...
பண்டிதர் சிரித்தபடியே,
"அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு..." என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...
வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை...

வேலையை ஆரம்பித்தார்...
'நாவிதர் கோபப்படுவார்' என்று எதிர்பார்த்திருந்த
பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்...
பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்...
"ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது...
உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே... அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க...?"
இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.
"நல்ல சந்தேகங்க சாமி...
நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.
முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்...
எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா...?"
இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.
அடுத்த முயற்சியைத் துவங்கினார்...
"இதென்னப்பா, கத்தரிக் கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு... கோல் எங்கே போச்சு?''
இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிமிருந்து.
"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க..." என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்...
இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம்.
கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்...
"எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற...
ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..."
இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது...
அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்...
இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார்.
கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....
இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்... பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார்,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?"
பண்டிதர் உடனே, "ஆமாம்..." என்றார்...
கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து,
"மீசை வேணுமுன்னிங்களே சாமி! இந்தாங்க..."
பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய்...
அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்...
நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்.
அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா...?"
இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
'வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்...' என்ற பயத்தில் உடனே சொன்னார்,
"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...".
நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்...
"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..." என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்...
நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்...
முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்...
அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது...
கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு, விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்...
*"நம்முடைய அறிவும்...*
*புத்தியும்...*
*திறமையும்...*
*அதிகாரமும்...*
*அந்தஸ்தும்...*
*பொருளும்...*
*மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல..."*
                                                                                                                     ' புதிய தேடல் ' பக்கத்தில் இருந்து.
==============================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?