உச்சத்தில் ஒரு ஊழல் பேர்வழி!

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக உலககபாடி இறுதிப்போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்தியா உலக சாம்பியன் ஆனது. 


ஆனால் அதே நாளில் இன்னொரு பதவியேற்பும் நடந்தது. பதவியேற்புக்கும், கோப்பையை வென்றதற்கும் சம்பந்தம் இல்லை. 

ஆனால்ஒன்று நாட்டிற்கு தலைநிமிர்வு மற்றொன்று தலைகுனிவு நாட்டுக்கு மட்டுமல்ல. 
உலகுக்கே ஏன்? 
உலக அளவில் மருத்துவர்களுக்கான அமைப்பு உலக மருத்துவக் கழகம். 
இதில் உலகெங்கிலும் இருக்கும் லட்சக்கணக்கான மருத்துவர்கள், உறுப்பினர்களாக உள்ளனர். 112நாடுகளை சேர்ந்த பல்துறை மருத்துவ நிபுணர்கள், இதில் அங்கம் வகிக்கின்றன. 

இந்தஉயரிய அமைப்பின் தலைவராக கேத்தன்தேசாய் எனும் இந்தியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெருமை தானே என சில தேசபக்தர்கள் சொல்லக்கூடும். 

அப்படி தேர்வு செய்யப்பட்டவர் நேர்மையானவராக, சாதனைகள் புரிந்தவராக, உலகமே மெச்சும் புதிய கண்டுபிடிப்புக்களை செய்து மருத்துவத்தை அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் மாபெரும் சேவை செய்தவராக இருந்தால் நாடே பெரு விழா எடுத்து அவரை பாராட்டி இருக்கும். ஆனால் தேர்வானவரோ பல ஊழல்குற்றச்சாட்டுகளில் சிக்கியவர். 
அவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையிட்ட போது கட்டித் தங்கங்களை கண்டு எடுத்தனர். கணக்குக்கே வராத 2500 கோடி ரூபாயை கைப்பற்றினர். 

அதிர்ச்சியாக உள்ளதா? 

இந்த மாமனிதரை பலர் மறந்திருக்கக் கூடும். 
இது போன்ற பல ஊழல்கள் நடந்து கொண்டே இருப்பதால் எதை நினைவில் கொள்வது? அந்த கறை படிந்தகைகளுக்குச் சொந்தக்காரர்தான் கேத்தன் தேசாய்.

யார் இந்த கேத்தன்?
இந்தியாவில் இருக்கும் லட்சக்கணக்கான மருத்துவர்கள்( ஆங்கில மருத்துவம் பின்பற்றும்) உறுப்பினர்களாக இருக்கும் இந்தியமருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர்.பல மாநிலங்களில் இருக்கும் கிளை அமைப்புக்களின் மூலம் ‘ஜனநாயக’ முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு கவுன்சிலின் நிர்வாகிகள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். 

அப்படி என்ன இவர்களுக்கு மதிப்பு இருக்கிறது என வினவலாம். இந்தியாவில் இருக்கும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் எத்தனை மருத்துவம் படிப்பதற்கான இடங்கள் இருக்க வேண்டும் என்பதையும், மருத்துவக் கல்லூரி புதிதாக துவக்குவதற்கும், கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்குவதற்கும், தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கும் இந்த அமைப்பின் (நிர்வாகிகளின் குறிப்பாக ‘தலைவரின்’) ஒப்புதல் பெற வேண்டும். 
இன்று மிகப்பெரிய வணிகமாக மாறியுள்ள மருத்துவ படிப்புக்கு, (தனியார் கல்லூரிகளின் மூலம்) அவர் கையொப்பமே அடிப்படை.

அப்படிப்பட்ட பொறுப்பில் கேத்தன் தேசாய் இருந்த போது, 2010 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் புதிய கல்லூரி துவக்குவதற்கு 2 கோடி(கம்மி தான்) பெற்றார் என்ற ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. 
வருமான வரித்துறை ரெய்டும்நடந்தது. இந்த ஊழல் நடந்தது 2010 ஆம் ஆண்டு. இந்த பெரு ஊழலை செய்த காலத்தில்தான் அவர் பல பொறுப்புக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 
ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருந்ததால், அந்த பொறுப்புக்களை அவர் ஏற்கமுடியவில்லை. பொதுவாகவே இது போன்ற அமைப்புகளில் அடுத்து பதவி ஏற்கபோவது யார் என்பதை முன்கூட்டியே தேர்வு செய்துகொள்ளும் நடைமுறை உண்டு.

அந்த அடிப்படையில் கேத்தன் முன்னரே தேர்வு செய்யப்பட்டவர்… தான் இருக்கும் நாட்டில் ஒருவர் மீது ஊழல் விசாரணை நடைபெறும் போதோ, பல குற்றச்சாட்டுக்கள் இருக்கும் நிலையில், அவரை உயர் பதவிக்கு முன்மொழிவதோ, நியமிப்பதோ இல்லை.

ஆனால் கேத்தன் தேசாய் ஏழு கடல், மலை தாண்டி, எப்படியெல்லாம் சாகசம் செய்யமுடியுமோ அப்படி எல்லாம் திறம்படசெய்து பதவியை கைபற்றியுள்ளார். 
சாதாரண பதவி அல்ல ..உலக பதவி.இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு. மருத்துவ துறையில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்த பெருமைஇந்த அமைப்புக்கு உண்டு. கடந்த காலங்களில், பல வகையான சட்டத்திருத்தங்கள், நோய்தடுப்பு திட்டங்கள், கடைக்கோடி சாமானிய இந்தியனுக்கும் பலன் அளிக்கும் முன்முயற்சிகள் என பல விஷயங்களை சொல்லி கொண்டேபோகலாம். 

ஆனால் அவை அனைத்தும் கேத்தன் தேசாய் போன்றவர்களால் மறந்தே போனது. இது ஒரு புறம்… இப்படிப்பட்ட ஊழல் பெருச்சாளிகளால் ஒட்டுமொத்த மருத்துவ சமூகமே வெட்கி தலை குனிய வேண்டிய அவல நிலை. ஏற்கெனவே மருத்துவர் உலகம் மீதிருந்த மதிப்பு வெகுவாக இது போன்ற ஆசாமிகளால் குறைய துவங்கியுள்ளது.

கேத்தன் தேசாய் என்ற தனி நபர் மட்டுமா இந்த ஊழலை செய்திருக்க முடியும். 
இதில் அரசும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது. ஒருமருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்றால் முதலில் மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டும்.
 உள்கட்டமைப்பு வசதிகள், துவங்கி, பல கட்டங்களை தாண்டி கிடைக்கவேண்டிய அங்கீகாரம் எளிதில் இல்லாத கல்லூரிக்கு கிடைக்கும் மாயம் என்ன? 
ஆக கையொப்பம் இடுபவராக வேண்டுமானால் கேத்தன் தேசாய் இருந்திருக்கலாம். 

அரசின் ஆதரவு இல்லாமல் கட்டமைப்பு வசதி எதையும் செய்திருக்க இயலாது. ஆக ஒட்டு மொத்தஅரசையும் குற்றவாளி கூண்டில் நிறுத்திட வேண்டும்.கேத்தன் தேசாய் போன்ற நபர்கள் எப்படிதொடர்ந்து எந்த ஆட்சி வந்தாலும் செல்வாக்கோடு இருக்கிறார் என்பதே ஒரு பெரிய ஆச்சரியம் தான் என்கிறார் நெறிமுறை மருத்துவத்துக்கான தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அபே சுக்லா.

மேலும் இவர் போன்றவர்கள் இம்மாதிரியான உயர் பொறுப்புக்கு செல்வது மேல்மட்ட சூழ்ச்சி என்றும், மருத்துவத்தை மக்கள் பணியாக நினைக்கும் பலரை அவமானப்படுத்துவதாகும் என்கிறார்.
மத்திய சுகாதார அமைச்சகமே ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளது. பசுமை நாயகன் அன்புமணி சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போதுபல சாதனைகளை செய்ததாக இன்னும் அவர்கட்சிக்காரர்கள் மார்தட்டி கொண்டிருக்கிறார்கள். 
அவர் அமைச்சராக இருந்த போது தான் இந்தியாவின் புகழ்மிக்க தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் சுய லாபத்துக்காக பொய்யான காரணங்கள் சொல்லி மூடப்பட்டது என்பதைநாடறியும். அதோடு கேத்தன் தேசாய்க்கும்அன்புமணிக்கும் பெரும் பனிப்போர் அக்காலத்தில் உருவானதும், அதற்கு முக்கியக் காரணம் முறையாக பணப்பரிமாற்றம் நடைபெறாதது தான் என்பதும் நாடறிந்த விவகாரம்.

ஆக இது ஒரு கூட்டு கொள்ளை. இந்த முடைநாற்ற விவகாரங்களையெல்லாம் கொஞ்சம் கூட பார்க்காமல், ஒருமதிப்புமிக்க அமைப்பின் சர்வதேச தலைவராகஒருவர் பொறுப்பேற்கிறார் என்றால் மருத்துவ உலகத்தை லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் கார்ப்பரேட்டுகள் ஊடுருவல் இல்லாமலா இருந்திருக்கும்? 
அறுதியிட்டு சொல்ல முடியும். 
இது அவர்கள் வேலைதான். 

யார் முக்கிய பொறுப்புக்கு வந்தால் தங்கள் நோக்கம் நிறவேறுமோ அவர்களின் மிகப்பெரிய பலத்தோடுதான் இது நடந்துள்ளது.

இந்துத்துவா அஜெண்டா
இந்த விவகாரத்திலும் வித்தியாசமான அணுகுமுறையை மத்திய பாஜக அரசு முன்மொழிகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் வழியாக நாக்பூர் மேலிடம் புது திட்டத்தை பேசவைக்கிறது.
நடைமுறையில் இந்திய மருத்துவ கவுன்சில் அகில இந்திய நிர்வாகிகள், மற்றுமுள்ளபொறுப்புக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேர்தல் எவ்வாறு நடக்கிறதுஎன்பது அதில் நடக்கும் கோளாறுகள் போன்றபல விவகாரங்கள் விவாதிக்கப்படவேண்டியவை. 

அதிலும் வெளிப்படையான தன்மைதேவை என்பது மறுப்பதற்கில்லை. செல்வாக்கை பயன்படுத்துவது, மாநில வேற்றுமைகள் என பல சிக்கல்கள் உண்டு. ஆனாலும்வரையறுக்கப்பட்ட ஜனநாயக முறைப்படிதேர்தல் நடக்கிறது. 
இதற்கு சீர்திருத்தங்களுடன் கூடிய மாற்றங்கள் தேவை. ஆனால் பாஜகதேர்தல் முறைக்கே ஆப்பு வைக்கிறது. தேர்தல்நடைபெற்றால் கேத்தன் தேசாய் போன்றவர்களெல்லாம் பதவிக்கு வந்துவிடுகிறார்கள்.
ஆகவே நியமன முறை தான் சரியானது. 
அதிலும் எல்லோருமே மருத்துவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. என மாற்று ஆலோசனை பட்டியல் நீளுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பையே கலைத்து விட்டு புதிதாக தேசிய மருத்துவ கமிஷன் எனும் புது பெயரில் துவக்கலாம் எனவும் முன்மொழிகிறது.
அதற்கான மாதிரி சட்ட முன்முடிவுகளையும் யாரெல்லாம் அதில் முடிவு எடுக்கும் அதிகாரத்திற்கு நியமிக்கலாம் என்பது போன்ற பல ஆலோசனைகளை விவாத பொருளாக்கியுள்ளது. 

ஒரு தனி நபரின் கீழ் கமிஷனை நியமித்து, அவருக்கு கீழ் இயங்கும்குழுவில் சிறு எண்ணிக்கையில் மருத்துவர்கள், பெரும்பான்மையாக மருத்துவம் சாராதவர்கள், தரவரிசை தீர்மானிப்பவர்கள், அறிஞர்கள் என பல்வேறு நபர்களை உள்ளே போட மோடி அரசு திட்டமிடுகிறது.

ஏற்கெனவே பல துறைகளை காவிமயமாக்க பாஜக எடுத்து வரும் முயற்சிகளை நாம்அறிவோம். மருத்துவத்துறையை வேத காலத்தோடு ஒப்பிட்டு, மோடி உட்பட பலர் பேசி வருவதும், அதை விஞ்ஞானமாக பார்க்காமல் அதிலும் குறுகிய அரசியல் லாபம் தேடும் முயற்சிகளை நாம் அனுமதிக்கக்கூடாது. இருக்கும் நடைமுறையில் உரிய மாற்றங்கள் செய்து, வெளிப்படை தன்மையோடு செயல்படும் அமைப்பாக மாற்ற வேண்டும். 

ஊழல், முறைகேடுகள், தகுதியில்லாதவருக்கு அதிகாரம், செல்வாக்கு மையங்கள் என அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வரவேண்டுமே தவிர பரவலாக்காமல் குவிமையமாக, மருத்துவகவுன்சிலை திருத்தியமைப்பது பலனளிக்காது.கேத்தன் தேசாய் சர்வதேச தலைவராகபொறுப்பேற்றுள்ளது குறித்து பல மருத்துவவர்கள் தங்கள் கண்டன குரலை, எதிர்ப்பை பல வடிவங்களில் தெரிவித்துள்ளனர்.
நிறுவனமயமாகி வரும் ஊழல், அதற்கு துணை நிற்கும் கார்ப்பரேட்டுகள் என சதிவலை பின்னலை, அதில் குளிர் காய்ந்து அரசியல் செய்ய நினைக்கும் பாஜகவை மக்களிடத்தில் அம்பலப்படுத்த வேண்டிய அவசியமும் கட்டாயமும் உள்ளது. 
இதனிடையே அகில இந்திய ஹோமியோ மருத்துவ கவுன்சிலின் தலைவர் முறைகேடாக கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் கைது செய்யப்பட்டுள்ளார் எனும் தகவலும், தென்காசிக்கு அருகில் நாட்டுமருந்து சாப்பிட்டு 3 அப்பாவிகள் இறந்ததும் பரப்பரப்பாக விவாதிக்கப்படுகிறது. 
கேத்தன் தேசாய், வழியில் பயணிக்கும் கூட்டம் ஒரு புறம், தனக்கு வந்திருக்கும் நோய்க்குஎளிய, குறைந்த செலவில் மருத்துவம்தேடும்மக்கள் திரள் ஒரு புறம் என இரு வேறுஇந்தியாவாக காட்சியளிக்கும் நம் தேசத்தின் நிலையை மாற்ற வேண்டாமா?

மத்திய சுகாதார அமைச்சகமே ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. கேத்தன் தேசாய்க்கும்

அன்புமணிக்கும் பெரும் பனிப்போர் அக்காலத்தில் உருவானதும், அதற்கு முக்கியக் காரணம் முறையாக பணப்பரிமாற்றம் நடை

பெறாதது தான் என்பதும் நாடறிந்த விவகாரம்.
                                                                                                                                              -என்.சிவகுரு,
நன்றி:தீக்கதிர் .
========================================================================================
ன்று,
அக்டோபர் -30.


  • உலக சிக்கன தினம்

  • இந்தியா ஐநாவில் இணைந்தது(1945)

  • இந்திய விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கம் பிறந்த தினம்(1908)

  •   பசும்பொன் முத்துராமலிங்கம் நினைவு தினம்(1963)

  • செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்த ஹென்றி டியூனாண்ட் நினைவு தினம்(1910)

=========================================================================================
1.“ அஸாமைச் சேர்ந்த 'ஜாதவ் பயேங்' தனியொரு நபராக 1,360 ஏக்கரில் ஒரு காட்டையே உருவாக்கி யிருக்கார் .” 


2. “ உண்மையில் #Internet என்பது முற்றிலும் இலசவசமானது! நாம் தரும் பணம் இன்டர்நெட்க்கு அல்ல அந்த வசதிக்கான கட்டமைப்பு செலவுக்கான பணமே.” 


3. “ அப்பிள் (Mac) கம்பியூட்டர்களுக்கு அருகில் புகை பிடிப்பவர்களின் கம்பியூட்டர் வாரண்டியை அப்பிள் நிறுவனம் தள்ளுபடி செய்கிறது .” 


4. “ இந்திய நடிகர்களிலேயே கமலஹாசன் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது .” 


5. “ கத்திரிக்காய் என்பது தமிழ் பெயர் அல்ல! கத்திரிக்காயின் (Brinjal) தமிழ் பெயர் 'வழுதுணங்காய்'!.” 





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?