போதை அது அழிவு பாதை .
நவீன மருத்துவ முன்னேற்றம் காரணமாக ஆண்களின் ஆயுட்காலம் 67 வயதாக உயர்ந்திருக்கிறது. ஆனால், தகாத பழக்கங்களால் 50 வயதுக்குள்ளேயே தங்களை அழித்துக் கொள்கிற ஆண்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது வேதனையானது.
போதை பொருட்கள் பயன்படுத்தாத ஆண்களே இல்லை என்கிற அளவுக்கு இன்று பலரும் ஏதோ ஒரு பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.
தவறான நண்பர்கள், பார்ட்டி கலாசாரம், திடீரென ஏற்படும் வேலை இழப்பு, காதல் தோல்வி, விவாகரத்து, பொருளாதார நெருக்கடி, மன அழுத்தம் என்று பல்வேறு காரணங்களால் தகாத பழக்கங்களுக்கு ஆளாகி, அதற்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.
அவர்களே வெளியேற வேண்டும் என்று ஒரு கட்டத்தில் நினைத்தாலும் முடிவதில்லை.
கொலைகள், தற்கொலைகள், விபத்துகள் என்று பெரும்பாலான ஆண்கள் இளவயதிலேயே உயிரிழப்பதன் பின்னாலும் இந்த போதை வஸ்துக்களே இருக்கின்றன.
உடல்ரீதியான, மனரீதியான பல்வேறு பாதிப்புகளையும் ஆண்கள் இதனால் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமூகத்தில் நன்மதிப்பும் கெட்டுப்போவதுடன், அவருடைய குடும்பத்தார் சந்திக்கும் துயரங்களும் வார்த்தைகளால் விவரிக்கக் கூடியதல்ல.
போதைப் பொருட்கள் மீது இருக்கும் அடிமைத்தனத்தை உடைக்க, முதலில் அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
மனநல மருத்துவரின் ஆலோசனை மூலமாகவும், மருந்துகள் மூலமாகவும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றலாம். தேவைப்படும் பட்சத்தில் போதை மறுவாழ்வு மையத்திலும் சேர்த்து சிகிச்சைகள் எடுக்க வைக்கலாம்.
பிரச்னை வந்த பிறகு அதிலிருந்து நிவாரணம் தேடுவது என்பதைவிட வரும்முன் காப்பதே எப்போதும் சிறந்தது.
போதைப்பொருள் பயன்படுத்தும் நபரின் வாரிசுகளுக்கும் மரபணு காரணமாக அந்த அடிமைத்தனம் பரவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
அதனால், போதையின் பாதை பரம்பரை பரம்பரையாக அழிவைத் தரும் பாதை என்பதை மறக்கக் கூடாது.
மதுவென மெல்லக் கொல்லும் விஷம்.
- டாக்டர் கு.கணேசன்
இன்று உலகிலேயே மிக அதிகமாக மது குடிப்பவர்கள் இந்தியர்கள். அதில் தமிழகத்தில் நிலை மிக மிக மோசம். சுமார் ஒரு கோடிப் பேர் ‘ஆல்கஹால் அடிமைகள்’.
இதில் 13 வயது சிறுவர்களும் அடக்கம். மதுவால் நோய் வந்து நேரடியாகவும், போதையில் ஏற்படும் விபத்து போன்றவற்றால் மறைமுகமாகவும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஐந்து லட்சத்தைத் தாண்டுகிறது.
அணு ஆபத்து மனிதர்களை மொத்தமாக அழிக்கும் என்றால், மது கொஞ்சம் கொஞ்சமாக!
ஆம், ‘மது... மயக்கம்... மரணம்...’ இது அன்றாடம் நிகழும் நிஜம். இந்த ஆபத்து எப்படி நேர்கிறது? மதுவில் இருக்கும் ‘ஆனந்தப் பொருளு’க்குப் பெயர் ஆல்கஹால். ஆக்ஸிஜனைப் போல் ஆல்கஹாலும் குடிநோயாளிகளுக்கு அனுதினமும் அவசியம். என்ன காரணம்?
போதை!
இது எப்படி ஏற்படுகிறது?
‘எண்டார்பின்’ (Endorphin) என்ற சந்தோஷ சமாசாரம் செய்யும் சதி.
அது என்ன எண்டார்பின்?
சுருக்கமாகச் சொன்னால், பெருமகிழ்ச்சியில் திளைக்கும்போது உங்கள் மூளையில் உருவாகும் ஒரு ரசாயனம்தான் ‘எண்டார்பின்’.
விளக்கம் தேவை என்றால், நீங்கள் நன்றிப் பெருக்கில் நண்பரைக் கட்டி அணைக்கும்போது... உங்கள் காதலை காதலி ஏற்றுக்கொள்ளும்போது... பிடித்த இணையுடன் உறவில் உச்சத்தை எட்டும்போது... இப்படி நீங்கள் பரவசப்படும்போதெல்லாம் உடலில் அமுதசுரபியாகச் சுரப்பது எண்டார்பின்.
மது அருந்தும்போது ரத்தத்தில் கலக்கும் ஆல்கஹால், மூளையில் எண்டார்பின் சுரப்பதைத் தூண்ட, காற்றில் உடல் பறப்பது போல் ஒரு போதை தலைக்குள் ஏறுகிறது.
எண்டார்பின் கொடுக்கும் இந்த ஏக சுகத்தை, மூளை தனது அழிக்க முடியாத ஹார்டு டிஸ்க்கில் நிரந்தரமாகப் பதிவு செய்து கொள்கிறது.
நாளடைவில் உடலும் மூளையும் அந்த சுகபோக அனுபவத்துக்குப் பழகிவிட, குறிப்பிட்ட நேரத்தில் அந்த சுகத்தைத் தேடி அலைகிறது.
‘மணி ஆறாச்சு... சரக்கு எங்கே?’ என்று மூளை கேட்கிறது. இப்படித்தான் பலரும் குடி போதைக்கு அடிமையாகின்றனர்.
மது குடித்ததும், ஆல்கஹால் நேராக சிறுமூளைக்குச் (Cerebellum) சென்று “ஹலோ!” சொல்கிறது. வீட்டுக்கு விருந்தாளி வந்துவிட்டால் கொஞ்ச நேரம் அம்மாவை மறந்துவிடும் குழந்தை மாதிரி, இந்தப் புதிய நட்பில் மூளை எனும் எஜமானரின் கட்டுப்பாட்டிலிருந்து சிறுமூளை விலகிவிடுகிறது.
மது குடிப்பவர்களின் கண்களில் போதை தெரிவதும், கால்கள் பின்னுவதும், வாய் குழறுவதும், லேசான மயக்கத்தில் திளைப்பதும் இதனால்தான்!
ஒருவர் தொடர்ந்து 5 ஆண்டுகள் தினமும் 3 பெக் மது அருந்தினால், அவரது கல்லீரல் பாதிக்கப்படுவது உறுதி. ஆல்கஹால் என்பது முழுக்க முழுக்க மாவுச்சத்து நிரம்பிய அமிலம்.
அது உடலுக்குள் அதிகமாகப் போனால், கல்லீரல் அதைக் கொழுப்பாக மாற்றி தன்னிடம் சேமித்துக் கொள்கிறது. அடுத்த 5 ஆண்டுகள் அவர் தொடர்ச்சியாக மது அருந்துகிறார் என்றால், கல்லீரல் செல்கள் பாதிக்கப்படும்.
ஈரம் மிகுந்த மரங்களில் கறையான்கள் யோசிக்காமல் கூடு கட்டுவதைப் போல், கெட்டுப் போன கல்லீரல் செல்களில் கொழுப்பு செல்கள் சுலபமாகக் குடியேறிவிடும்.
இதனால் கல்லீரல் லேசாக வீங்கத் தொடங்கும். இதன் பெயர் ‘ஃபேட்டி லிவர்’ (Fatty liver). கல்லீரல் பாதிப்பின் முதற்கட்டம் இது; அறிகுறி எதுவும் வெளியில் தெரியாது. இதை நினைத்து ‘வயிறுதான் சமத்தாக இருக்கிறதே’ என்று குடிநோயாளிகள் சந்தோஷப்பட முடியாது.
இந்தக் கட்டத்தில் அவர்கள் சுதாரித்தால் ஆச்சு! இல்லாவிட்டால் அவர்களின் மொத்த ஆரோக்கியமும் போச்சு! வருஷத்துக்கு ஒருமுறை வயிற்றை ஸ்கேன் செய்து, கல்லீரல் பரிசோதனை (LFT) செய்து, அதன் நிலைமையைப் புரிந்து, மதுவை மறந்து, தகுந்த மாத்திரை, மருந்துகள் மூலம் சரி செய்துகொள்ள வேண்டும்.
இல்லையென்றால், ஆறுமுகத்துக்கு ஆன கதிதான் உங்களுக்கும் ஆகும். ஆறுமுகத்துக்குக் கொத்தனார் வேலை. மனைவி கீரை விற்பவர்.
விபத்தில் கணவனை இழந்த மகள் உடனிருப்பது வீட்டுக்குக் கூடுதல் சுமை. அந்த சோகத்தில் குடிக்க ஆரம்பித்தார். காலையில் ஒரு குவார்ட்டர் குடித்தால்தான் கட்டுமானக் கரண்டியைக் கையில் எடுக்கமுடியும். அப்படி ஒரு மெகா குடி!
ஆறுமுகம் ஆரம்பத்தில், “பசி இல்லை, சாப்பிடப் பிடிக்கவில்லை, வாந்தி வருகிறது, வயிறு வலிக்கிறது” என்றுதான் என்னிடம் வந்தார். அப்போதே “மதுவைத் தொடாதே!” என்று எச்சரித்தேன். “என்னால குடிக்காம இருக்க முடியல, டாக்டர்” என்றார்.
அவருக்கு மஞ்சள் காமாலை வந்தது.
பாபநாசம் போய் பச்சிலை மருந்து சாப்பிட்டார். “இது குடியால் வந்த காமாலை.
பச்சிலைச் சாற்றுக்குக் கட்டுப்படாது. குடிப்பதை நிறுத்தினால்தான் காமாலை அடங்கும்” என்றேன். அவர் புரிந்துகொள்ளவில்லை.
குடிப்பதையும் விடவில்லை.
ஆறு மாதத்துக்குள் ஆறு கிலோ எடை குறைந்தது.
நெஞ்சு எலும்பெல்லாம் வெளியில் தெரிந்தது.
“எங்கிருந்துதான் வந்து சேர்ந்ததோ” என அவரே ஆச்சரியப்படும் அளவுக்கு வயிற்றில் நீர் கோர்த்து, பானை மாதிரி வீங்கிவிட்டது.
அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. பணக்கஷ்டம். அரசு மருத்துவமனைக்குப் போனார். ஸ்கேன் ரிப்போர்ட் ‘லிவர் சிரோசிஸ்’ (Liver Cirrhosis) என்றது.
மாதாமாதம் அங்கே அட்மிட் ஆகி வயிற்றுக்குள்ளிருந்து சுமார் மூன்று லிட்டர் வீச்சம் எடுத்த திரவத்தை ஊசி மூலம் வெளியில் எடுத்துக் கொண்டு வந்தார்.
அதிக பலனில்லை.
பாதை தெரியாதவருக்குப் பார்வையும் தெரியாமல் போனால் எப்படி இருக்கும்?
ஆறுமுகத்துக்கு வயிற்றில் நீர் சேர்ந்தது போதாமல், கால்களிலும் நீர் சேர்ந்து யானைக்கால் போன்று வீங்கி விட்டது. நடக்கும்போது எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் விண்விண்ணென்று வலி உயிர் போனது. அவர் படும் அவஸ்தைகளைப் பார்த்து மகளும், மனைவியும் அழாத நாள் இல்லை.
“எப்போதுதான் விடியும்?” என்று ஏங்கித் தவித்தவர்களுக்கு மரணம்தான் முடிவு சொன்னது. ஆம், ஓர் அந்திப்பொழுதில் ஆறுமுகம் குடம் குடமாக ரத்த வாந்தி எடுத்துச் செத்துப்போனார்.
மதுவென்பது ரசித்துப் புசிக்கும் பழச்சாறு அல்ல. மெல்லக் கொல்லும் விஷம்! எப்படி? இதை ‘லிவர் சிரோசிஸ்’ கட்டத்திலிருந்து தொடர்வோம்.
கல்லீரல் பாதிப்பின் இரண்டாவது கட்டம் இது. 60 மி.லி. மதுவைச் செரித்து முடிக்க இயல்பான கல்லீரலுக்கு ஒரு மணி நேரம் ஆகும். லேசாக வீங்கிய கல்லீரலுக்கு இரண்டு மணி நேரம் ஆகும். ‘ஃபேட்டி லிவர்’ கொண்ட ஒருவர், ஒரு நாளில் எட்டு ‘லார்ஜ்’ மது குடிக்கிறார் என்றால், என்ன ஆகும்? கணக்குப் போட்டுப் பாருங்கள்.
16 மணி நேரம் ஆகும். இதற்கிடையில் பித்தநீர் சுரப்பது, என்சைம்கள் உற்பத்தி என ஏகப்பட்ட வேலைகளையும் அது பார்க்க வேண்டும்.
பாவம் கல்லீரல்!
அதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது?
அந்த 16 மணி நேரத்துக்குள் குடிநோயாளி அடுத்த ஆறு லார்ஜ்களை உள்ளே இறக்கிவிடுகிறாரே! இப்படி அடுத்தடுத்து கல்லீரல் தாக்கப்படுவதால், முதலில் தர்பூசணி போல் காணப்பட்ட கல்லீரல், இப்போது முள் முள்ளாக இருக்கும் அன்னாசி போல் மாறிவிடுகிறது.
இதனால், கை இழந்தவர் கார் ஓட்டமுடியாத மாதிரி கல்லீரல் செயல் இழக்கிறது. இதைத்தான் ‘லிவர் சிரோசிஸ்’ (கல்லீரல் சுருக்கம்) என்கிறோம்.
இதன் கொடுமைதான் காமாலை, வயிறு வீக்கம், வீச்சம் எடுக்கும் நீர் கோத்தல், கால்வீக்கம் எல்லாமே! சிலருக்கு இது புற்றுநோயாகவும் மாறக்கூடும். இன்றைய நவீன மருத்துவத்தில் கல்லீரல் சுருக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, கல்லீரலைக் காக்கும் வசதி வந்துவிட்டது என்றாலும், மதுவை மறந்தால் மட்டுமே பல ஆண்டுகள் நிம்மதியாக வாழ முடியும்.
இல்லையென்றால் எந்த நிமிடமும் கல்லீரல் செயல் இழந்துவிடலாம். அப்போது ‘கல்லீரல் மாற்று’ (Liver Transplantation) ஒன்றுதான் தீர்வு.
இது லேசுப்பட்ட சிகிச்சை அல்ல; சவால் மிகுந்தது.
நினைத்த நேரத்தில் கல்லீரல் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் எல்லோருக்கும் இது பலன் கொடுக்கும் என்ற உத்தரவாதமும் இல்லை. கல்லீரல் பாதிப்பின் மூன்றாவது கட்டம் ‘ஈசோபேஜியல் வேரிசஸ்’ (Esophageal varices). சிலரின் கால்களைப் பார்த்திருப்பீர்கள்.
குட்டிப் பாம்பு படுத்திருப்பது போல் ரத்தக்குழாய்கள் நெளிநெளியாய் புடைத்துக்கொண்டிருக்கும்.
இதுமாதிரிதான் குடிநோயாளியின் உணவுக்குழாயில் ரத்தக் குழாய்கள் வீங்கி வெடிக்கக் காத்திருக்கும். இந்த ‘எரிமலைகள்’ எப்போதெல்லாம் வெடிக்கிறதோ, அப்போதெல்லாம் லிட்டர் கணக்கில் ரத்த வாந்தி எடுப்பார்கள். அந்த அதிர்ச்சியில் மரணம் அடைபவர்கள் அதிகம்.
இதைக் குணப்படுத்துவது ரொம்பவே கடினம். கிளைமாக்ஸாக இன்னொரு கட்டம் இருக்கிறது. அதற்கு ‘ஹெப்பாடிக் என்செபலோபதி’ (Hepatic encephalopathy) என்று பெயர். புத்தி பேதலித்து, பித்துப் பிடித்த மாதிரி அலைய வைக்கும் நோய் இது.
மது குடிப்பவர்களை மரணப் பாதைக்கு அழைத்துச் செல்வதில் மிகவும் உறுதியாக இருப்பது இதுதான். மதுவின் பாதிப்பால் ஏற்பட்ட மஞ்சள் காமாலை மூளைக்குப் பரவுவதால் இந்தக் கொடுமை ஏற்படுகிறது; குடிநோயாளியை ‘கோமா’வுக்குக் கொண்டு சென்று மரணக்குழியில் தள்ளிவிடுகிறது.
இதைத்தான் கிராமப்புறங்களில் ‘பித்தம் தலைக்கு ஏறி செத்துப்போனான்’ எனும் சொலவடையில் சொல்கிறார்கள்!
நன்றி: குங்குமம் டாக்டர்
=====================================================================================
இன்று,
பிப்ரவரி-26.
- 2வது பிரெஞ்ச் குடியரசு அறிவிக்கப்பட்டது(1848)
- பெய்ரூட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின(1984)
- குவைத் விடுதலை தினம்(1991)
- டிம் பெர்னேர்ஸ், லீ நெக்சஸ் என்ற உலகின் முதல் இணை உலாவியை அறிமுகப்படுத்தினார்(1991)
- =====================================================================================
வைகோவின் அந்தர்பல்டிகள்...


*
🔉பா.ஜ.க ஆட்சியில் கூட்டணி தர்மமெனக் கூறி 'பொடா'சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வைகோவுக்கே 'பொடா' சட்டம் பூமராங்காகப் பாய்ந்தது.













நன்றி :விகடன்

