மோடி வித்தை?

உத்தரப் பிரதேசத்தில் பலகட்டமாக தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. 
சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்து நாட்டு மக்களை தியாகம் செய்ய அறைகூவல் விடுத்தார் இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சர். அதற்கு அவர் கூறிய காரணங்கள்
 (1) கருப்புப் பணம் ஒழியும்; 
(2) கள்ளப்பணம் ஒழியும்; 
(3) தீவிரவாதிகளுக்குச் செல்லும் பணம் தடைப்படும்;
 (4) டிஜிட்டல் பரிவர்த்தனை வளரும், ஆகியவைகளாகும். 
ஆனால், இவை எதுவும் நடக்கவில்லை. புழக்கத்திலிருந்த பணம் ஏறக்குறைய அனைத்தும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டன. இப்போதுவரை எவ்வளவு பணம் வந்து சேர்ந்தது என்பதை அரசோ, மைய வங்கியோ நாட்டிற்கு தெரியப்படுத்தவில்லை; அல்லது அறிவிக்க விரும்பவில்லை. 
அனைத்து வங்கி பண பரிவர்த்தனைகளும் மின்னணு முறையில் நடைபெறும் நாட்டில் 60 நாட்கள் கடந்தும் எவ்வளவு பணம் வந்து சேர்ந்தது என அறிவிக்காமல் மக்களை ஏமாற்றுகிறார்கள். 
இந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கையின்போது ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் ஊரே சிரிக்கும் அளவுக்கு அரசின் எடுபிடியாக அது மாறியதைக் கண்டோம். இப்போதும் அந்தப் போக்கு தொடர்வதுதான் இந்த கள்ள மௌனத்திற்குக் காரணம். ரிசர்வ் வங்கியை எடுபிடியாக மாற்றிய ஒன்றிய அரசு இப்போது ஒன்றிய புள்ளியியல் நிறுவனம் (Central Statistical Organisation - CSO) என்ற அமைப்பையும் அதன் ஊதுகுழலாக மாற்றிவிட்டது தெளிவாகிறது.
பணமதிப்பழிப்பின் தீய விளைவுகளை பட்டியலிட்ட பொருளாதார நிபுணர்கள் அனைவரும் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறையும் என்பதை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினர். 
இதனை பல கட்டுரைகளில் மின்னம்பலம் வாசகர்களுக்கு நாமும் சுட்டிக்காட்டியிருந்தோம்.
ஆனால், இந்த எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் விதமாக இந்தியப் பொருளாதாரம் தனது வளர்ச்சியை தொடர்ந்துள்ளதாம். எவ்விதத் தொய்வும் இல்லையாம். பொருளாதாரம் மந்தமாகிவிடும் என்று கூறிய ஹார்வார்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் (நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்) கூறிய கூற்று பொய்த்துவிட்டதாம். 
இந்திய உழைக்கும் வர்க்கத்தின் கடுமையான உழைப்பினால் பொருளாதார வளர்ச்சி குன்றவில்லையாம். இவையெல்லாம் தலைமை அமைச்சரின் முழக்கங்கள். இந்த முழக்கங்களை முழங்கும் முன், CSO ஒரு கணிப்பை வெளியிட்டது. அதில்தான் தில்லாலங்கடி வேலையை காட்டியிருக்கிறது ஒன்றிய அரசு. 
அந்த தில்லாலங்கடி வேலையை துல்லியமாக படம் பிடித்துள்ளார் மிண்ட் பத்திரிக்கையில் கட்டுரை எழுதும் மானஸ் சக்ரவர்த்தி.
இந்தியப் பொருளாதாரம் டிசம்பர் மாத காலாண்டில் (ஒரு நிதியாண்டை நான்கு காலாண்டுகளாகப் பிரித்து பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவது வழக்கம்) இந்தியப் பொருளாதாரம் வளர்ந்ததாகக் கூறப்படும் வேகத்திற்கு ஈடான அளவில் வங்கிக் கடன் வளர்ச்சி இல்லை.
வங்கிக் கடன் 3.3 % மட்டுமே வளர்ந்த இக்காலகட்டத்தில் மொத்த மதிப்புக் கூட்டல் (Gross Value Added) 10.1 % வளர்ந்துள்ளதாம். 
ஆக வங்கிக் கடன் சரிந்த இக்காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி மட்டுப்படவில்லை என்பது CSO-ன் புள்ளிவிவர தில்லாலங்கடி.
இதனைவிட பெரிய தில்லாலங்கடி வேலை தொழிற்துறை வங்கிகளிலிருந்து வாங்கும் கடன் 4.3 % அளவு சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவு. ஆனால், தொழிற்துறை இதே காலகட்டத்தில் 9.5 % வளர்ந்துள்ளதாம். வங்கிக் கடன் வீழ்ந்தபோதும் தொழிற்துறை சிறப்பாக வளர்ந்துள்ளதாம்.
RBI-ன் புள்ளிவிவரப்படி, டிசம்பர் காலாண்டில் மக்களிடம் புழக்கத்திலிருந்த பணம் மற்றும் அவர்கள் வங்கிகளில் வைத்திருந்த பணத்தின் அளவு 12.1 % என்ற அளவிலிருந்து 6.5 % அளவிற்கு குறைந்துபோனது பணமதிப்பழிப்பு நடவடிக்கையின்போது. இதனால் நாட்டில் Money Supply என்று சொல்லக்கூடிய பண அளிப்பு சுருங்கியது தெளிவாகிறது. 
ஆனால் பண அளிப்பு பாதியாகக் குறைந்தாலும், நாட்டின் மொத்த உற்பத்தி செப்டம்பர் காலாண்டில் 11.8 % என்ற அளவிலிருந்து டிசம்பர் காலாண்டில் 10.6 % என்ற அளவில்தான் குறைந்ததாம். ஆக, பண அளிப்பிற்கும் வளர்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லையாம். 
கடனும் வாங்காத காசும் இல்லாத ஒரு வளர்ச்சியை இந்தியா பெற்றுள்ளதாக (டிசம்பர் காலாண்டில்) CSO புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
காற்றை புசித்து உயிர்வாழும் ஒரு யோக நிலையை இந்திய பொருளாதாரம் எட்டிவிட்டது. அதனை இயக்குவது பணமும் அல்ல, கடனும் அல்ல. மோடியின் தில்லாலங்கடி வித்தையே!!
என்ன ஒரு கேலிக்கூத்து? 
இந்த தில்லாலங்கடி வேலை அனைத்து வங்கிகள், பொருளாதார நிபுணர்களையும் வெட்கமடையச் செய்துள்ளது. 
இந்திய ஒன்றியத்துக்குச் சொந்தமான இந்திய ஸ்டேட் வங்கியில் துவங்கி பல தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த புள்ளிவிவர தில்லாலங்கடியை “TOO GOOD TO BE TRUE” என்பது முதல் பல வகைகளில் சந்தேகிக்கின்றனர்.
உத்தரப் பிரதேச மாநில தொழிலாளர்கள் பிழைப்பைத் தேடி வேறு மாநிலங்களில் அமைப்புசாரா தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர். 
பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் பெரிதும் இழப்பை சந்தித்தவர்கள் அவர்களே. அங்குதான் இப்போது சட்டமன்றத் தேர்தல். மோடி தனது வழக்கமான மெய்யறு (Post Truth) அரசியலை அங்குதான் நிகழ்த்துகிறார். 
வேலையிழப்பு என்ற கசப்பான உண்மையா அல்லது மோடியின் மெய்யறு (Post Truth) அரசியலா என்பது விரைவில் தெரியும்.
நன்றி: மின்னம்பலம்.
========================================================================================
ன்று,
மார்ச்-04.

  • சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை கண்டறிந்தனர்(1275)

  • எமிலி பேர்லீனர், மைக்ரோபோனைக் கண்டுபிடித்தார்(1877)
  • பிரிட்டனின் முதலாவது மின்சார டிராம் வண்டி, கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது(1882)
  • கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது(1994)
  • அசாம் மாநிலம், அசோம் என பெயர் மாற்றப்பட்டது(2006)
========================================================================================
நீதிதேவன் மயக்கம்?


வறட்சியின் கோரப்பிடியில் தமிழகம் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. 
தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் குடங்களை தூக்கிக் கொண்டு தண்ணீரைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆற்றுநீர், ஊற்று நீர், உப்பு நீர், ரயில் நீர் எது கிடைத்தாலும் போதும் என்று மக்கள் ஆலாய்ப் பறக்கின்றனர். சுத்தமான குடிநீர் வேண்டுமென்று இப்போது யாரும் எதிர்பார்ப்பதில்லை. கால்நடைகள், விலங்குகள் குடிக்கத் தண்ணீரின்றி, செத்து விழுந்து கொண்டிருக்கின்றன. காற்றும், நீரும் இல்லாமல் உயிர்கள் வாழ முடியாது. 
அதனால் தான், ‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் திருவள்ளுவர். மனித குலம் உயிர்வாழ தவிர்க்கவே முடியாத தண்ணீர் வளத்தைப் பாதுகாப்பதில், அரசுக்கு முக்கிய பொறுப்பிருக்கிறது. 
தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டு வழக்கமாக பெய்ய வேண்டிய மழை அளவில் தென்மேற்குப் பருவமழையில் 19 சதவீதமும், வடகிழக்குப் பருவமழையில் 62 சதவீதமும் குறைவாக பெய்திருக்கிறது என்பது உண்மை தான்.
ஆனால், 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்ததே, மழை வேண்டாம், வேண்டாம் என மக்கள் கதறி வேண்டிக் கொண்டனரே? 
அந்த மழைநீர் முழுவதும் எங்கே?தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சென்னையும் அதற்கு விதிவிலக்கல்ல! சென்னை நகர குடிநீர் தேவைக்கு ஆண்டு தோறும் 11 டி.எம்.சி தண்ணீர் தேவை. 2015ஆம் ஆண்டுபெய்த மழையில் மட்டும் கடலில் சென்று கலந்த நீரின் அளவு 300 டி.எம்.சி. அதாவது அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேவையான தண்ணீரை கடலில் கலக்கச் செய்துவிட்டது அதிமுக அரசு. 
இதைவிட மாபாதகச் செயல் வேறு இருக்க முடியுமா? 
இது தான் சிறந்த நிர்வாகத்தின் லட்சணமா?தூர் வாருவதாகச் சொல்லி ‘ஷேவிங்’ செய்தவர்கள்ஆண்டுதோறும் பெய்யும் மழைநீரில் 80 சதவீதம் வீணாக்கப்படுகிறது. பெய்யும் மழைநீரை சேமித்துப் பாதுகாக்க பாரம்பரியமாக உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்காமல் மண்மேடிடச் செய்து தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காமல் செய்த குற்றவாளி திமுகவும், அதிமுகவும். தூர்வாருவதாக சொல்லி ஒதுக்கிய பணத்தையெல்லாம் ஏரி, குளம், குட்டைகளுக்கு ‘ஷேவிங்’ செய்துவிட்டு (மண்ணை லேசாக சீவிவிட்டு) தங்களுக்குள் ஒதுக்கிக் கொண்டவர்கள், ஆளுங்கட்சி செல்வாக்கை பயன்படுத்தி அதிகாரிகள் துணையுடன் நீர்நிலைகளை ஆக்கிரமித்து விற்பனை செய்தவர்கள், ரியல்எஸ்டேட் என்ற பெயரில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக்கி வரத்து வாய்க்கால்களை வளைத்துக் கொண்டவர்கள் இரு கட்சிகளையும் சார்ந்தவர்கள் தான். 
மேட்டூர் அணை, 1934ஆம் ஆண்டு பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. எண்பது ஆண்டுகளுக்கு மேலான பிறகும் இதுவரை ஒருமுறை கூட தூர்வாரப்படவில்லை. 
இதனால் 20 அடிகளுக்கு மேல் வண்டல் படிந்து அதன் முழு கொள்ளளவு திறன் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அணைகளின் நிலையும் இதுதான். எந்தவொரு நீர்நிலையும் அதன் முழு கொள்ளளவு திறனுடன் இன்று இல்லை. பாசன மேம்பாட்டிற்கென உருவாக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் நீண்டகாலமாக கிடப்பிலே போடப்பட்டுள்ளன. 
அவினாசி - அத்திக்கடவு திட்டம், காவிரி- வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம், காவிரியில் 16 இடத்திலும், கொள்ளிடத்தில் 7 இடத்திலும் கதவணைகள் அமைக்கும் திட்டம் போன்றவை இதற்கு உதாரணங்களாகும். தமிழ்நாட்டில் விவசாயம் 60 சதவீதம் நிலத்தடி நீரைப் பயன்படுத்தித்தான் நடைபெறுகிறது. இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் நிலத்தடி நீர்வளம் பெருகுவதுடன், கிணறுகள், குளங்களில் நீர் மட்டம் உயர்ந்திருக்கும். மழை பெய்யாதது இயற்கையின் குற்றம். ஆனால் பெய்த மழைநீரை சேமித்து பாதுகாக்காதது மனிதனின் குற்றம். 
ஆட்சியாளர்களின் அலட்சியம். கடந்த 50 ஆண்டுகாலமாக மாறி மாறி ஆட்சியிலிருந்த திமுகவும், அதிமுகவும் தான் இந்த நிலைமை உருவாக காரணமான குற்றவாளிகள். இந்த குற்றம் சுலபத்தில் சரி செய்ய முடியாத குற்றம் என்பதை அவர்கள் உணர்ந்ததாக தெரியவில்லை. 
இயற்கை நீதிக்கு முரணான தீர்ப்பு தமிழகத்தின் நெற்களஞ்சியம் அரிசிக்காகக் கையேந்தும் அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. ரேசன் அரிசி இல்லையென்றால் பட்டினிச்சாவு தான் என்ற பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது.
தாமிரபரணி ஆற்றில் இருந்துகோகோகோலா - பெப்சி உள்ளிட்டபன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் உறிஞ்சுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த குளிர்பான ஆலைகள் முறைப்படியான அனுமதி பெற்றே தாமிரபரணியில் தண்ணீர் எடுப்பதாலும், மேலும் உபரியாக செல்லும் தண்ணீரையே இந்த நிறுவனங்கள் உறிஞ்சுவதாலும் அவற்றுக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.இது விவசாயிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.திருநெல்வேலி மாவட்டம், கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு ‘கோகோ கோலா’ நிறுவனம், தனதுகுளிர்பான கம்பெனியை துவங்கியது.
துவக்கத்தில் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதற்கு மட்டுமே அனுமதி பெற்ற ‘கோலா’ நிறுவனம் தற்போது ஒரு நாளுக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சிவருகிறது. 
இதற்காக கோலா நிறுவனம் அரசுக்குச் செலுத்தும் தொகை ஆயிரம் லிட்டருக்கு வெறும் 37.50 காசுகள் மட்டுமே ஆகும்.கோலா நிறுவனத்தின் இந்த தண்ணீர் கொள்ளையால், தாமிரபரணி ஆற்று நீரையே தங்களின் விவசாயத்திற்கு நம்பியிருக்கும் நெல்லை,தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளும்,தாமிரபரணி மூலம் குடிநீர் ஆதாரத்தைப் பெற்று வந்த நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட பொதுமக்களும், பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக கோடைக்காலத்தில் தண்ணீர் கிடைக்காமல் அலையும் நிலை ஏற்பட்டது. 
கடைமடைப் பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டது. சிறு, குறு தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் போனது. எனவே, கோகோ கோலா நிறுவனம் தாமிரபரணி தண்ணீரை உறிஞ்சுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அரசியல் இயக்கங்கள், பொதுநல அமைப்புக்கள் போராட்டங்களில் ஈடுபட்டன. ஆனால்,அரசு நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மாறாக, கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் குடிநீர் பாட்டில் தயாரிப்பதற்கான ஆலையை துவங்க பெப்சி நிறுவனத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியது. 
மேலும் அந்த நிறுவனத்திற்கு, ரூ. 15 கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட36 ஏக்கர் சிப்காட் நிலத்தை, ஆண்டுஒன்றுக்கு வெறும் 36 ரூபாய்க்கு 98 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுத்தது.
அதாவது 36 ஏக்கர் நிலத்தை 98 ஆண்டுகள் பயன்படுத்திக் கொள்வதற்கு, பெப்சி நிறுவனம் அரசுக்கு ரூ. 3 ஆயிரத்து 600 செலுத்தினால் போதும். இந்த அடிப்படையில் பெப்சி நிறுவனமும், கங்கைகொண்டானிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தாமிரபரணி ஆற்றிலிருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் நிலை உருவானது.
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், தங்களின் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தி வந்த நிலையிலேயே, சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கும் தொடர்ந்தனர்.கடந்த நவம்பர் 21-ஆம் தேதி இந்தவழக்குகள், நீதிபதி எஸ். நாகமுத்து, எம்.வி. முரளிதரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 
“அப்போது, விவசாயிகள் ஏற்கெனவே தண்ணீர்தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில், குளிர்பான ஆலைகளுக்கு எப்படி தண்ணீர் வழங்க இயலும்?” என்று கேள்விஎழுப்பிய நீதிபதிகள், தாமிரபரணி தொடர்ச்சி யில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யஇடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். 
இந்த தடை விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
அவர்கள் இத்தீர்ப்பை வரவேற்றுக் கொண்டாடினர். 
கோகோகோலா- பெப்சி நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றை உறிஞ்சுவதற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசையும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில்தான், தாமிரபரணி தொடர்பான வழக்கு, வியாழனன்று மீண்டும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் செல்வம், கலையரசன் அடங்கிய அமர்வு வழக்குகளை விசாரித்தது.
அப்போது, “தாமிரபரணியில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை மட்டுமே பயன்படுத்துகிறோம்; இதற்காக மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்றுள் ளோம்; சிப்காட் வளாகத்தில் உள்ள பல்வேறு ஆலைகளும் தாமிரபரணி ஆற்று நீரையே பயன்படுத்துகின்றன; அப்படியிருக்க எங்கள் மீது மட்டும் வழக்கு தொடர்ந்திருப்பதில் உள்நோக்கம் இருக்கிறது” என்று கோக்- பெப்சி ஆலைகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டு, “தாமிரபரணியில் இருந்து முறையாக அனுமதி பெற்றே குளிர்பானம் தயாரிக்கப்படுகிறது; 
அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் உள்நோக்கம் இருக்கிறது; எனவே, குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று தீர்ப்பளித்து உள்ளனர்.இது விவசாயிகளையும் பொதுமக்களை யும் கவலை அடையச் செய்துள்ளது. 
கருவேலமரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சசுவதால் அதை அடியோடு அழிக்க ஆணையிடும் நீதிமன்றமே பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீரை உறிஞ்ச அனுமதியளிக்கிறது.
கோகோ கோலா ,பெப்சி தமிழநாட்டில் தண்ணீரை உறிஞ்சி எடுத்து மோசமான பானத்தை விற்று,லாபத்தை அமெரிக்காவுக்கு கொண்டு போகிறது.இகசப்பு மட்டும் தமிழக மக்களுக்கு.நிலத்தடி நீர் ,வாழ்வாதாரம் வீணாகிறது.
இதை நீதிபதிகள் கவனத்தில் கொள்ளவில்லை.அப்படி செய்தது என்னவாயிருக்கும்.?
தமிழக அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு, தாமிரபரணி ஆறு கொள்ளை போவதைத் தடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்றிலிருந்து பண்னாட்டு குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுப்பதற்கு தடை நீக்கப்பட்டதை அறிந்ததும், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
தாமிரபரணி ஆற்றை காப்பதற்கு தமிழக அரசு தவறி விட்டதாக குற்றம்சாட்டிய அவர்கள், தாமிரபரணியைக் காக்க மிகப்பெரும் போராட்டம் துவங்கப்படும் என்றும் அறிவித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆனால், பன்னாட்டுக் கம்பெனிகளின் குளிர்பான உற்பத்திக்கு தடையில்லாமல் தண்ணீர், ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு, நீச்சல் குளங்களுக்கு தாராளமாக தண்ணீர் வழங்கப்பட்டுக் கொண்டிக்கிறது. கங்கைகொண்டானில் கோக்ககோலா கம்பெனி தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை மதுரை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. 
தாமிரபரணியிலிருந்து பாசனத்திற்காக மட்டுமில்லாமல் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய 4 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு குடிக்கவே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பன்னாட்டு குளிர்பான கம்பெனி தடையின்றி தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என்ற தீர்ப்பு இயற்கை நீதிக்கு புறம்பானது. கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது. 
பெங்களூரில் நீதிபதி "குமாரசாமி"
தமிழகத்தில் நீதிபதி "கருணாகரன்"
நீதித்துறையின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. சீமைக்கருவேல மரங்களால் நீர்வளம் குன்றிப் போகிறது என்று சொல்லி அதை வேரோடு அழிப்பதற்கு உத்தரவிட்ட இதே உயர்நீதிமன்றம், ஆற்றில் ஓடும் தண்ணீரை தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர்கள் ஒரு கம்பெனி எடுத்துக் கொள்வதால் நீர்வளம் பெருகும் என்று எந்த அடிப்படையில் முடிவுக்கு வந்தது என்பது புரியாத புதிராக இருக்கிறது. 
முதலில் குடிதண்ணீர், இரண்டாவது விவசாயம், மூன்றாவதாக தொழிற்சாலைகளுக்கு என்பதை மாற்றி முதலில் தொழிற்சாலைகளுக்குத் தான் என்று இந்த தீர்ப்பின் மூலம் புதிய இலக்கணத்தை உயர்நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டுமென தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். 
இது அநியாயம் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்திருந்தால் நிச்சயமாக தலையிட்டிருப்பார்கள். ஆனால், மக்களைப் பற்றி கவலைப்படாதவர்களாக இருப்பதனால் தான் எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இத்தகையவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும். அணைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும். 
தூர்வாரும் பணியில் மக்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும். நமது பாரம்பரியமான நீராதாரங்களை பாதுகாக்க பராமரிப்பை மேம்படுத்த எழுக தமிழகமே! 
அடுத்த 25 ஆண்டுகளுக்கு தேவையான தண்ணீரை கடலில் கலக்கச் செய்துவிட்டது அதிமுக அரசு. இதைவிட மாபாதகச் செயல் வேறு இருக்க முடியுமா? 
இது தான் சிறந்த நிர்வாகத்தின் லட்சணமா?
தண்ணீருக்கான போராட்டம் தமிழகமெங்கும் வெடிக்க வேண்டும். வெடிக்கும்.
===========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?