ஆதார் அட்டைதானே மிச்சம்

"காடு வெளஞ்சாலென்ன?

நாடு தினம்  புதுசானால் என்ன?

வெள்ளக்காரன் போனதாலென்ன?

அரசியல்வாதிக்கு அதிகார'தன"ங்களும்,

விடுதலை பெற்ற‌ அடி(மை)மக்களுக்கு

ஆதார் அட்டைதானே மிச்சம்?"

*விடுதலைத் தின வாழ்த்துகள் !*
==========================================================================================

ன்று ,
ஆகஸ்ட் -15.
இந்தியன் வங்கி ஆரமபம்(1901)
  • பனாமா கால்வாய் திறக்கப்பட்டது(1915)
  • இந்திய விடுதலைத் தினம் (1947)
  • தென் கொரியா உருவாக்கப்பட்டது(1948)
  • பஹ்ரைன் ஐரோப்பாவிடம் இருந்து விடுதலை பெற்றது(1971)
===========================================================================================
அந்நிய காலனியாதிக்கத்தை எதிர்த்து இந்திய மக்கள் ஒன்றுபட்டு உறுதியுடன் போராடியதன் விளைவே விடுதலை எனும் விளைச்சல் ஆகும். 
இந்திய திருநாடு இன்றைக்கு71ஆவது சுதந்திர திருநாளை மகிழ்வுடன் கொண்டாடுகிறது. வியாபாரம் செய்ய வந்த பிரிட்டிஷார் உள்ளிட்ட வெளிநாட்டினர் இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து அதிகாரம்செலுத்தினர். 
நாட்டின் வளங்களை ஒட்ட உறிஞ்சி கொழுத்தனர். 
இதை எதிர்த்து போராடியதேச பக்தர்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
வாழ்நாள் முழுவதும் சிறைச்சாலையிலேயே கழித்தவர்கள், தூக்கு மேடையேறியவர்கள், துப்பாக்கிக் குண்டுக்கு பலியானவர்கள் என விடுதலைப் போரின் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்த்தப்பட்ட தியாகங்கள் காவியங்களை விஞ்சக்கூடியவை. 
1917ஆம் ஆண்டு ரஷ்ய மண்ணில் வெடித்தெழுந்த யுகப்புரட்சி இந்திய விடுதலைப் போராட்டத்தின் முகத்தை மாற்றியமைத்தது. விடுதலை பெறுகிற தேசம், சோசலிச அமைப்பாகவும் மாற வேண்டும் என்ற லட்சயத்துடன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு புது இரத்தம் பாய்ச்சினர்.
பூரண விடுதலை ஒன்றே நோக்கம் என்ற முழக்கத்தை முதன் முதலில் எழுப்பியவர்கள் கம்யூனிஸ்ட்டுகளே. இந்தியாவில் பரவத் துவங்கியவுடனே கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டதோடு, பல்வேறு சதி வழக்குகளை எதிர் கொண்டது. 
1947 இந்திய வரைபடம்.

இதை உறுதியோடு எதிர்கொண்டு விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர், விவசாயிகள், மாணவர், இளைஞர், கலைஞர்களின் அமைப்புகளும் உருவாகின.
விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற பெருமிதத்தோடு கம்யூனிஸ்ட்டுகள் இன்றளவும் களத்தில் நின்று பெற்ற விடுதலையை பாதுகாக்கவும் மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை, ஜனநாயகம் போன்றவற்றை போற்றி வளர்க்கவும் போராடி வருகின்றனர். 
ஆனால் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காத இன்னும் சொல்லப்போனால் அந்தபோராட்டத்தை சீர்குலைத்தவர்களின் கையில் இன்றைக்கு அதிகாரம் சிக்கியுள்ளது. 
இதைப் பயன்படுத்தி இந்தியாவின் ஆகப் பெரும் சிறப்பான பன்மைத்துவத்தை சிதைக்கின்றனர்.
 சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை அச்சுறுத்துகின்றனர். 
மறுபுறத்தில் விடுதலைப் போராட்டத்தின் ஒருபகுதியாக வளர்த்தெடுக்கப்பட்ட சுதேசி உணர்வு திட்டமிட்டு நசுக்கப்படுகிறது.
முந்தையகாங்கிரஸ் கூட்டணி அரசும், இப்போதைய பாஜககூட்டணி அரசும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக இந்திய திருநாட்டை மாற்றிவிட்டன. 
சுயேச்சையான அயல்துறை கொள்கை கைகழுவப்படுகிறது. 
சுதந்திர இந்தியாவின் வளங்கள் முழுவதும்கார்ப்பரேட்டுகளுக்கும், பெரு முதலாளிகள், நிலப்பிரபுக்களுக்குமே தாரை வார்க்கப்படு கிறது. 
பெரும் பகுதி மக்களின் வாழ்நிலை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. 


சுதந்திரம் என்பது 100 பேர் சேர்ந்து வித விதமான ஆயுதங்களுடன் தாக்கினாலும், வெறுங்கையினாலாயே அவர்கள் அனைவரையும் அடித்து வீழ்த்திவிட்டு, சட்டை மடிப்பு கூடக் களையாமல் புன்னகை தவழக் காட்சி தரும் தமிழ் சினிமாக் கதாநாயகர்களைப் போன்றது அல்ல…சுதந்திரப் போராட்டக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களும் உயிர்த் தியாகங்களும் இன்று கண்டுகொள்ளப்படாமல், அவற்றை, இளைய தலைமுறையினருக்கு கற்பிக்க வேண்டும் என்பதையும் மறந்து, சுதந்திரம் என்பது ஒருசில தலைவர்களின் சாதனை எனக் கற்பிக்க முயல்கிறார்கள்.
1947-ஆம் ஆண்டு, பிப்ரவரி-18 ஆம் நாள், பரபரப்பான சூழ்நிலையில் கூடியிருந்த பிரிட்டிஷ் காமன்ஸ் சபையில் அன்றையப் பிரதமர் கிளமெண்ட் அட்லி, ஒரு மசோதாவைத் தாக்கல் செய்தார்.
மாட்சிமை தாங்கிய மன்னரது அரசாங்கம் 1948-ஆம் ஆண்டு, ஜூன் மாத முடிவிற்குள், பொறுப்புள்ள இந்தியப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து வெளியேறத் தீர்மானித்திருக்கிறது என்பதுதான் அந்த மசோதா.மசோதாவை எதிர்த்துப் பேசிய வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு சில அரசியல்வாதிகளின் போராட்டத்தை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியவர், ‘மிஸ்டர் அட்லி அவர்களே, இந்தியர்களுக்கு ஆளத் தெரியாது, ஆட்சி முறையின் பால பாடத்தை அறிந்து கொள்ளவே, அவர்களுக்கு 100 ஆண்டுகளாவது தேவைப்படும், சட்டமும் ஒழுங்கும் சீர் குலைந்து போகும். நீருக்கும் காற்றுக்கும் கூட அவர்கள் வரி விதிப்பார்கள்’ என்றார்.
இக்காலத்தில்தான் இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தூக்கு மேடை ஏறி உயிர்த் தியாகம் செய்த தோழர்களை மீண்டும் மீண்டும் நினைவு கூர்வதும், இளம் தலைமுறையினருக்குப் போதிப்பதும் நமது கடமையாகும்.
தேச விடுதலைக்காகப் போராடிய வீரர்களில் முக்கியமானவர் பகத்சிங். 
இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிரான மசோதாவை தாக்கல் செய்து, விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, இந்திய அரசின் மத்திய சட்டசபையில் (நாடாளுமன்றத்தில்) புகை வெடி குண்டுகள் வீசப்பட்டன.
வெடிகுண்டுகளை வீசினார்கள் என பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், அஜாய்குமார்கோஷ், சிவவர்மா, கிஷோரிலால் உள்ளிட்ட அனைவரும் லாகூர் சதி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு, வழக்கு நடந்து, முடிவில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனையும் மற்றவர்களுக்கு நீண்டகாலச் சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டன.
இந்தக் கொடிய தண்டனைக்கு எதிராக நாட்டு மக்கள் கொதித்து எழுந்தார்கள், மக்களின் தேச பக்த உணர்வு சுடர் விட்டு எரிந்தது. இந்தக் காலத்தில் ஆங்கிலேய அரசுடன் வட்டமேஜை மாநாட்டில் பங்கு கொண்டிருந்த காந்தி, இந்த மூன்று மாவீரர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரவில்லை.

காந்தியின் இந்நிலையைக் கண்டு மக்கள் சோர்வடைந்தனர்.
இந்த மகத்தான மூன்று தோழர்களின் தேச பக்த உணர்வை அன்று சிலரால் உணர்ந்து கொள்ளமுடியாவிட்டாலும், நாட்டு மக்கள், சாதி, மத, பேதமின்றி அந்த வீரத் தியாகிகளுக்குப் புரட்சி அஞ்சலி செலுத்தி, வீரர்களின் கனவான விடுதலையைப் பெற்றே தீருவோம் என சபதமேற்றனர்.
14-ஆவது வயதில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று, நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்ட சந்திர சேகர ஆசாத்தை நோக்கி, ‘‘உன் பெயர் என்ன?’’ என்று நீதிபதி கேட்டதற்கு, ஆசாத், ‘‘சுதந்திரம்’’ என்றார். இருக்கும் இடம் எது? என்று கேட்ட போது, ‘சிறைச் சாலை’ எனப் பதிலளித்தார். இதற்காக ஆசாத்துக்கு 15 கசையடிகள் கொடுக்கப்பட்டன.
18-ஆவது வயதில் புரட்சியாளனாகப் புறப்பட்டவர் மகாவீர்சிங். இவருக்குத் திருமணம் செய்விக்க வேண்டும் என்று இவரது தந்தை முயன்றபோது, ‘‘தந்தையே, தேசம் சீர் கெட்டுக் கிடக்கும் நிலையில் தேக சுகத்தில் எவ்வாறு ஈடுபட முடியும் ?’’என்று தன் தந்தையிடம் வினவினார்.
மகாவீர் சிங். பெல்லாரி சிறையில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட மகாவீர்சிங், பின்பு, அந்தமான் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு சித்ரவதை செய்யப்பட்டு மாண்டுபோனார். 
அவர் அந்தமான் சிறையில் எழுதி வைத்த வாசகம் இது- ``உயிரைத் தராமல், யார் பெற்றது சுதந்திரம்? என் அன்னை மண்ணிற்காக உவகையுடன் அர்ப்பணிக்கிறேன் என் உயிரை’’மற்றொரு புரட்சியாளர் பஞ்சாபைச் சேர்ந்தவர் மதன்லால்திங்ரா. லண்டனில் பொறியியல் பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேறியவர். 
அப்போது, இளம் வங்கப் புரட்சியாளர் குதிராம்போஸ், 18-ஆவது வயதில் தூக்கிலிடப்பட்ட செய்தியறிந்து, துடித்துப் போனார். குதிராம்போஸ், தூக்கிலிடப்பட்டதற்குக் காரணமாக இருந்த கர்சான்வில்லியை, இந்திய தேசிய சங்கத்தின் ஆண்டுவிழாவில் வழிமறித்து, நேருக்கு நேர் நின்று, துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, அதன் காரணமாக மரண தண்டனை பெற்றவர் மதன்லால் திங்ரா.
‘‘அந்நியரின் துப்பாக்கிகளால் அடிமைப்பட்ட மண்ணில் போர் ஒருபோதும் ஓயாது. நிராயுதபாணிகளாக நிற்கும் மக்கள், பகிரங்கமாகப் போர் நடத்தும் சாத்தியமில்லை. 
அதனால்தான், நான் திடீர்த் தாக்குதல் நடத்தினேன். என் கைத் துப்பாகியால் சுட்டேன். என் அன்னை மண்ணுக்கு, இரத்தத்தைத் தவிர, இந்த எளியவனால் வேறு எதனை வழங்க முடியும்? 
சுதந்திரப் பலிபீடத்தில் என் உயிரை அர்ப்பணிக்கிறேன். சாவை எப்படி வரவேற்க வேண்டும் என்னும் பாடத்தைத்தான் இன்று இந்திய மக்கள் கற்க வேண்டும். 
அதனைக் கற்றுக் கொடுக்க முதலில் நமது உயிரைத் தியாகம் செய்யவேண்டும். இந்தியத் தாயின் மடியில் நான் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும்.
சுதந்திரம் கண் விழிக்கும் வரை, இதேபோன்ற புனித வேள்வியில் நான் மீண்டும் மீண்டும் ஈடுபட்டு என் உயிரைத் தியாகம் செய்யவேண்டும்…’’- மதன்லாலின் இந்த மரண வாக்குமூலம், ‘‘உலகம் முழுவதும் தேச பக்தியின் பெயரில் வெளிவந்திருக்கும் மரண வாக்கு மூலங்களில் மிகச் சிறந்த வாக்குமூலமாகும்’’ என்று, இந்தியர்களை வெறுத்த சர்ச்சிலே வர்ணித்துள்ளார்.மதவாதமும் சாதிய வாதமும் இனவாதமும் பேசி, அரசியல் ஆதாயம் தேட, ஊழல் பேர்வழிகள் ஊர்வலம் வருகின்றபோது, இந்த நாட்டுக்காக, சோசலிச ஜனநாயக இந்தியாவைக் காணப் போராடிய இந்த வீரத் தியாகிகளின் வரலாற்றை இன்று இளம் தலைமுறையினருக்கு நினைவூட்டுவது சுதந்திர தினக் கடமையாகும்.

=========================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?