விஷம்போல் ஏறும் விலைவாசி ..,

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை பாம்பு விஷம் போல அன்றாடம் ஏறிக்கொண்டே போகிறது. 

திங்களன்று தலைநகர் தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.15ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.15 ஆகவும் இருந்துள்ளது. 

சென்னை, மும்பை போன்ற நகரங்களில் பெட்ரோல், டீசல்ஆகியவற்றின் விலை  அதிகரித்து 82 ரூபாயாக உள்ளது. 

உதாரணமாக மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.56 ஆகவும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.54 ஆகவும் இருந்தது.


இந்த உயர்வு போதாது என்று சமையல் எரிவாயு (கேஸ்) விலையை சிலிண்டருக்கு ஒரே அடியாக 66.50 ரூபாய் உயர்த்தி ஒரு சிலிண்டர் விலை ரூ.661ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் ரூ.595 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது ஒரேயடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளதன் மூலம் அனைத்துப்பொருட்களின் விலையும் மேலும் ஒரு சுற்று உயரும்அபாயம் எழுந்துள்ளது. 
லாரி உரிமையாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் எனப் பலதரப்பினரும் டீசல் விலை உயர்வு குறித்து அபயக்குரல் எழுப்பியும் மோடி அரசு கண்டுகொள்ள மறுக்கிறது. 

பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் கேஸ் விலை உயர்வுக்கும் தமது அரசுக்கும் சம்பந்தமே இல்லாதது போல பிரதமர் மோடி ஒழுக்கம் பற்றி வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்.

பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த விலை உயர்வு தற்காலிகமானதே என்றும் பெட்ரோல் டீசல் விலையை கட்டுப் படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கேட்டுக் கேட்டு புளித்துப்போன வார்த்தைகளைக் கூறியுள்ளார். 

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பது உண்மைதான். 

ஆனால்விலையில் பாதிக்கும் மேல் வரி என்கிற நிலையில் வரியைச் சற்று குறைத்தால் கூட மக்களுக்கு நிவாரணம் அளிக்க முடியும். 
பீப்பாய் 140 டாலருக்கு விற்றபோது இருந்த காங்கிரஸ் அரசு லிட்டர் 40க்குள்தான் விற்றது உண்மையாநிலை.ஆனால் இப்போது 16 டாலரில் இருந்து 55 டாலருக்குத்தான் விலை உயர்ந்துள்ளது.
அதுவும் அமெரிக்காவுக்கு வால் பிடிக்காமல் ஈரானில் இருந்து வாங்கினால் 20டாலர்தான்.


ஆனால் மோடி அரசு அதற்குத் தயாராக இல்லை. மாறாக மாநிலஅரசுகள் வரியைக் குறைத்துக் கொள்ளட்டும் என இலவச ஆலோசனை வழங்குகிறது. 

மாநிலஅரசுகள் வரியைக் குறைப்பதால் மட்டும் சமாளிக்கக்கூடிய பிரச்சனை அல்ல இது. பெரும்பகுதி வரி மத்திய அரசினால் வசூலிக்கப்படுவதாகும்.பெட்ரோல், டீசலுக்கு அரசு விலை நிர்ண யிக்கும் முறையை விலக்கிக் கொண்டதே அம்பானி போன்ற பெருமுதலாளிகள் கொள்ளை லாபம் அடிக்கத்தான் என்பது தெளிவு. 

உள்நாட்டு மக்களை வதைக்கிற நிலையில் ஒரு லிட்டர் டீசல் 34ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பெட்ரோல் 38 ரூபாய்க்கும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

கச்சா எண்ணெய்யை இறக்கு மதி செய்து சுத்திகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அம்பானியின் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் பகல் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதும் மோடி அரசு அதன் பலனை மக்களுக்கு வழங்கவில்லை. 

தற்போது அதைக் காரணம் காட்டியே மக்களை கொள்ளையடிப்பது எந்தவகையிலும் நியாயமல்ல. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகிய வற்றின் விலையை குறைக்காவிட்டால் மக்களின் அன்றாட வாழ்வே ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகும்.
=====================================================================================

மோடி அரசின் சரித்திரச் சாதனை!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 62 மெசஞ்சர்பணியிடங்களின் நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஓர் அலுவலகத்தி லிருந்து மற்றோர் அலுவலகத்துக்குக் கடிதங்களை எடுத்துச்செல்லும் பணியான இது, பியூன் பணிக்கு இணையானதாகும். 

இதற்கான தகுதியாக 5ஆம் வகுப்புப் படிப்பும், சைக்கிள் ஓட்டத்தெரிவதும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 
இந்த 62 பணியிடங்களுக்கு சுமார் 93,500 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. 
அவற்றில் 3,740 பேர் எம்.பில்; அல்லது முனைவர் (பி.எச்டி.) படிப்பு முடித்தவர்கள். 
28,050 பேர் எம்பிஏ உள்ளிட்ட முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள். 
54,230 பேர் பி.டெக், பி.இ. உள்ளிட்ட பட்டப்படிப்பு முடித்தவர்கள். 
மொத்தம் வந்துள்ள 93,500 விண்ணப்பங்களில் 5லிருந்து 12 வகுப்புகள்வரை படித்துள்ளவர்கள் வெறும் 7,400 பேர் மட்டுமே. 
ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த மோடியின் உண்மையான சாதனை என்ன என்பதை, புள்ளிவிபரங்களைவிடத் தெளிவாக இது உணர்த்தியுள்ளது. 

கருப்புப் பணத்திலிருந்து ரூ.15 லட்சம் மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் ‘ஜூம்லா’ என்று சொன்னதுபோல, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியையும் வெளிப்படையாக `ஜூம்லா’ என்று கூறவில்லையே தவிர, உண்மை நிலை அதுவாகத்தான் உள்ளது. 

இதைப் பற்றிப் பேசினால், சமூக செயற் பாட்டாளர்களைக் கைது செய்ததைப்போல, பக்கோடா விற்காமல் மெசஞ்சர் பணிக்கு விண்ணப்பித்தது தவறுஎன்று இந்தப் பட்டதாரிகளையும் கைது செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
=====================================================================================
ன்று ,
ஆகஸ்ட்-04.

  • ஜார்ஜ் ஈஸ்ட்மேன் தான் கண்டுபிடித்த கோடாக் கேமிராவிற்கு காப்புரிமம் பெற்றார்.(1888)

  • லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் அமைக்கப்பட்டது(1781)

  • அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1978)


ஜார்ஜ் ஈஸ்ட்மேன்,

1888 - ஜார்ஜ் ஈஸ்ட்மேன், ஃபிலிம் சுருளைப் பயன்படுத்திப் படமெடுக்கும் கேமராவை உருவாக்கி, காப்புரிமை பெற்றார். படமெடுக்கத் தகடுகளே பயன்படுத்தப்பட்டுவந்த காலத்தில், நெகிழ்வான ஃபிலிமை 1884 இல் இவர் உருவாக்கினார். 
1885 இல் அதை ஃபிலிம் சுருளாக உருவாக்கி விற்கத் தொடங்கியிருந்த நிலையில்தான், அதற்கான கேமராவையும் உருவாக்கினார். 

முதலில், ஜெலட்டின் காகிதம் சுற்றப்பட்ட ஃபிலிம் சுருளை உருவாக்கிய இவர், 
1889 இல் செல்லுலாய்ட் எனப்படும் நைட்ரோசெல்லுலோஸ் ஃபிலிமை உருவாக்கினார். 


திரைப்படத்துறை வளர்வதற்கும் இதுவே அடிப்படையாக அமைந்ததால்தான், இன்றுவரை திரைப்படத்துறை செல்லுலாய்ட் என்றே குறிப்பிடப்படுகிறது. 
ஈஸ்ட்மேன் கோடாக் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அதன்மூலம் கேமரா, ஃபிலிம் ஆகியவற்றை விற்பனை செய்தார். 

‘பட்டனை அழுத்துவதை மட்டும் நீங்கள் செய்யுங்கள், மற்ற அனைத்தையும் நாங்கள் செய்கிறோம்’ என்ற இந்நிறுவனத்தின் விளம்பரத்தின்படியே, அதற்கு முன்பு மிகச் சிக்கலானதாக இருந்த நிழற்படக் கலையை எளிமையாக்கியதால், ஏராளமான மக்களைச் சென்றடைந்தது. 

கோடாக் 1890 இல் உருவாக்கிய மடக்கும் கேமராவும் 1895 இல் உருவாக்கிய பாக்கெட் கோடாக் கேமராவும் எளிதில் எடுத்துச் செல்லத்தக்கதாக கேமராவை மாற்றின. 
1901 இல் அறிமுகப்படுத்திய, வெறும் 1 டாலர் விலையுள்ள பிரவ்னி என்ற கேமரா, எளிய மக்களிடமும் நிழற்படக் கலையை எடுத்துச்சென்று, மிகப்பெரிய சந்தையை உருவாக்கியது. 

1900-99 காலத்தில் கோடாக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட காப்புரிமைகள் 19,576. இந்நிறுவனத்தின் பொறியாளரான ஸ்டீவன் சாசென், 1975 இலேயே உலகின் முதல் டிஜிட்டல் கேமராவை உருவாக்கிவிட்டார். 
நிழற்படத் துறையின் 90 சதவீத வணிகத்துடன் முடிசூடா மன்னனாக விளங்கிய கோடாக் நிறுவனம், பல்வேறு துறைகளிலும் கால்பதித்திருந்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சியிடம் தோற்றுப்போய்விட்டது. 
2013 இல் திவால்நிலைக்கு விண்ணப்பித்தாலும் காப்புரிமைகளை ரூ.4,000 கோடிக்கு விற்றபின், சில தொழில்களில் தொடர்கிறது. 

நிறுவனம் உச்சத்திலிருந்தபோதே, முதுகெலும்பு பாதிப்பால் அவதிப்பட்ட ஈஸ்ட்மேன், 1932 இல் தனது 77ஆவது வயதில், ‘என் நண்பர்களுக்கு: என் வேலை முடிந்துவிட்டது. 
எதற்காகக் காத்துக்கொண்டு?’ என்று எழுதி வைத்துவிட்டு, நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தார்.
======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?