ஆர்ய வஞ்சத்தின் பிடியில் கீழடி!

சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா்.
கீழடி அகழ்வாராய்ச்சி உட்புறக் காட்சி
சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்மணிகள் மட்டுமே 600 கிடைத்துள்ளன.முத்துமணிகள்,பெண்களின் கொண்டை ஊசிகள், பெண்கள் விளையாடிய சில்லு,தாயக்கட்டை,சதுரங்க காய்கள்,சிறுகுழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள் ஆகிய சங்க காலம் குறிப்பிடும் பல தொல்பொருட்களும் இங்கு அதிகளவில் கிடைத்திருக்கின்றன.
கீழடி அகழ்வாராய்ச்சி பழைய பொருள் காட்சி
அதேபோல, இங்கு கிடைத்துள்ள நூல் நூற்கும் தக்ளி, அக்கால மக்கள் நூல் நூற்று ஆடை நெய்து அணிந்து வாழ்ந்திருப்பதை உறுதி செய்கிறது.பட்டிணப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளின் அருகே இக்கேணிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.அதிகளவில் செங்கல் வீடுகளும் வீடுகளின் மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்டிருந்ததையும் இங்கு கிடைத்துள்ள சான்றுகளின் மூலம் உணர முடிகிறது.
கீழடி அகழ்வாராய்ச்சி பழைய பொருள்
குடிநீா் தேவைக்காகவும், வீட்டின் பிற பயன்பாடுகளுக்காகவும் உறைகிணறு தோண்டும் முறை சங்க காலம் முதல் அண்மைக் காலம் வரை இருந்துவருகிறது.சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் பட்டிணப்பாலை என்ற நூலில் பூம்புகார் நகரத்தின் ஒருபகுதியில் உறைகிணறுகள் இருந்தது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டிணப்பாலை நூலாசிரியா் உருத்திரங்கண்ணனார் “உறை கிணற்று புறச்சேரி” எனக் குறிப்பிட்டுள்ளார்.அந்த சங்க காலத்தைச் சோ்ந்த உறைகிணறுதான் கீழடி அகழாய்விலும் கண்டறியப்பட்டுள்ளது.வீடுகள் தோறும் குளியலறைகள் இருந்திருக்கின்றன.
கீழடி அகழ்வாராய்ச்சி பழைய குடுவை
இப்பகுதியில் மட்டும் ஒரு டன் அளவிற்கு கருப்பு சிவப்பு மட்கல ஓடுகள் கிடைத்துள்ளன.பல ஓடுகளில் “தமிழ் பிராமி” எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலை மலைக்கொளுந்தீஸ்வரர் கோயிலில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தை சோ்ந்த சூது பவள மணிகளும், ரோமானிய நாட்டு அரிட்டைன் வகை மட்கல ஓடுகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. இது அக்கால மக்களின் வாணிக தொடா்பையும், வணிகச் சிறப்பையும் நமக்கு உணா்த்துகிறது. குறிப்பாக தென்தமிழகத்தில் அகழாய்வில் கிடைக்கும் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்ட மண்பாண்டங்களும், கொங்குப் பகுதியில் மட்டும் கிடைத்த ரசட் கலவை பூசப்பட்ட மண்பாண்டங்களும் இங்கு கிடைத்துள்ளன. ரசட் கலவையின் தாக்கம் இருப்பதைப் பார்க்கும்போது கொங்குப் பகுதியோடு வாணிபத் தொடா்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
கீழடி அகழ்வாராய்ச்சி பழைய பானை
வரலாற்றின் தொடக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால் இங்கு அதிகளவில் செங்கல் கட்டிடங்கள் இருந்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. சங்ககாலத்தில் வைகை நதியின் வலது கரையில் பண்டைய வணிக பெருவழிப்பாதை இருந்துள்ளது. மதுரையிலிருந்து இராமேஸ்வரம் அழகன்குளம் துறைமுகப் பட்டிணத்துக்கு “கீழடி திருப்புவனம்” வழியாக பாதை இருந்துள்ளது. மதுரைக்கு அருகாமையிலேயே இந்த ஊா் வணிக நகரமாக இருந்துள்ளது.
அழகன் குளத்தில் நடந்த அகழாய்வில் பண்டைய ரோமானிய நாட்டின் உயா்ரக ரவுலட், ஹரிடைன் மண்பாண்டங்கள் கிடைத்தது போன்று கீழடி பள்ளிச்சந்தை புதூரிலும் கிடைத்துள்ளது. அந்த வகையில் அழகன் குளம் துறைமுகப் பட்டிணத்தையும் மதுரையையும் இணைக்கும் இடமாக கீழடி பள்ளிச்சந்தை புதூா் இருந்திருக்கலாம். மேலைநாடுகளுக்கு கடலில் பிரயாணம் செய்யும் வணிகா்கள் இந்த ஊரின் வழியாக சென்றிருக்கலாம். இங்கு கிடைத்துள்ள தடயங்கள், சான்றுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. அந்தவகையில் இந்த இடம் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.
கீழடி அகழ்வாராய்ச்சி பழைய செங்கல்
முதல்கட்ட ஆய்வில் கிடைத்ததைவிட, இரண்டாம் கட்ட அகழாய்வில் 10-க்கும் மேற்பட்ட சங்ககால கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அக்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் முத்திரை கட்டைகள் (இரப்பா் ஸ்டாம்ப்), எழுத்தாணிகள், அம்புகள் , இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் எழுத்துக்களுடைய மட்பாண்ட ஓடுகள் உட்பட 5300-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. “அரிக்கன்மேடு, காவிரி பூம்பட்டிணம், உறையூா் போன்ற அகழாய்வில் கிடைத்ததைவிட அதிக எண்ணிக்கையில் தொடா்ச்சியாக பல கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
சங்ககாலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழாய்வு மாற்றியமைத்துள்ளது. கீழடியில் கண்டறியப்பட்டுள்ள கட்டிடங்கள் மூலம் ஒரு நகர நாகரீகம் இருந்ததற்கான அத்தனை அடிப்படை ஆதாரங்களும் கிடைத்துள்ளன.தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் சுடுமண் முத்திரை கிடைத்தது இதுவே முதல்முறை.

மத்திய தொல்லியல்துறையின் சார்பில் 2014 ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வுப் பணி நடைபெற்றது. இந்த அகழாய்வில் சுமார் 7000 க்கும் அதிகமான தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 
தமிழகத்தில் முதன்முறையாக சங்க கால நகரமொன்று கண்டறியப்பட்டது. வீடுகள், கிணறுகள், தொழிற்கூடங்கள், வடிகால்கள் எல்லாம் மிக விரிவான அளவில் கண்டறியப்பட்டன. இக்கண்டு பிடிப்பானது சங்ககாலத்தில் தமிழகத்தில் செழிப்புற்ற நகர நாகரிகம் இருந்ததை மெய்ப்பிப்பதாக அமைந்தது. 
கரிமவேதியல் ஆய்வின் படி இதன் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்பதும் நிரூபண மானது.

இந்துத்துவா கும்பல் எரிச்சல்.

ஆனால் வேத நாகரிகமே இந்தியாவின் பூர்வ நாகரிகம் என்று நிறுவ முயலும் இந்துத்துவாவாதிகளுக்கு கீழடி ஆய்வும் அதன் கண்டுபிடிப்புகளும் ஏற்புடையதாக இல்லை. 


எனவே இவ்வாய்வை முன்னெடுத்த அதிகாரி அமர்நாத் இராம கிருஷ்ணனை அசாம் மாநிலத்துக்கு மாற்றி னர். தங்களுக்கு ஏற்ற ஓர் அதிகாரியை நியமித்து ஆய்வினை தொடராமல் முடக்கி னர். 

கீழடி போலவே 2014 ஆம் ஆண்டு அகழாய்வு தொடங்கப்பட்ட குஜராத் மாநிலம் வாட்நகர், அரியானா மாநிலம் பிஞ்சூர், பீகார் மாநிலம் உரைன் ஆகிய இடங்களில் இப்பொழுதும் அகழாய்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

ஆனால் இவற்றில் மிக அதிக பொருட்கள் கண்டறி யப்பட்ட கீழடி அகழாய்வு மட்டுமே தொட ராமல் நிறுத்தப்பட்டது.

அராஜக உத்தரவு.

இந்தப் பின்னணியில் இப்பொழுது மத்திய தொல்லியல் துறை புதிய உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. அவ்வுத்தர வின் படி கீழடியில் 2014-16 ஆம் ஆண்டு வரையிலான கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலான அறிக்கையை அமர்நாத் இராம கிருஷ்ணன் தயாரிக்க வேண்டியதில்லை. 

அவருக்கு பதிலாக, தற்போது பெங் களூரு அகழாய்வுப்பிரிவின் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் அந்த அறிக்கையை தயாரிக்கவேண்டும் என்கிறது அவ்வுத்தரவு.

 அதேபோல அமர்நாத் இராமகிருஷ்ணன் குழு கண்டறிந்துள்ள தொல்பொருட்கள் பெங்களூரு மற்றும் சென்னையில் மூடி முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாக உள்ளன.

அதனை பெங்களூரு அதிகாரி கதவை உடைத்து எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவ்வுத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

எந்த அதிகாரி ஆய்வு நடத்தி புதியன வற்றை கண்டறிகிறாரோ அவர் தான் அதற்குரிய ஆய்வறிக்கையை தயாரித்து வழங்க வேண்டும். இதுதான் தற்போது வரை உள்ள நடைமுறை. 

ஆனால் இந்திய தொல்லியல் துறை வரலாற்றில் இதற்கு முன்பு இல்லாத வகையில் கண்டறிந்தவர் ஆய்வறிக்கையை எழுத வேண்டியதில்லை என்றும் இவ்வாய்வில் எந்த வகையிலும் தொடர்பே இல்லாத நபர் ஆய்வறிக்கையை எழுதவேண்டும் என்றும் கூறுகிறது இவ்வுத்தரவு.

முடக்குவதற்கு தொடர் முயற்சிகள்

கீழடியின் ஆய்வினை சீர்குலைக்க முதலாமாண்டோடு ஆய்வினை முடக்கமுயன்றனர். பொதுவெளியில் வந்தஅழுத்தத்தின் காரணமாக இரண்டா மாண்டுக்கு அனுமதி வழங்கினர். 
ஆனால் நிதி ஒதுக்காமல் இழுத்தடித்தனர். பின்னர் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த பின் நிதிஒதுக்கினர். 

தொடர்ந்து மூன்றாமாண்டு அனுமதியை வழங்க மறுத்தனர். நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம் என்று எல்லா இடங்களிலும் கீழடி பேசுபொருளான பின், மூன்றாமாண்டு பெயரளவுக்கு ஆய்வு நடத்தி வெறும் பத்து குழிகள் மட்டுமே தோண்டி கண்துடைப்பாக ஆய்வினை நடத்தி நிரந்தரமாக மூடிவிட்டனர்.

இந்தப் பின்னணியில் முதல் இரண்டு ஆண்டு நடந்த ஆய்வும், அதன் கண்டுபிடிப்பும் எல்லா வகையிலும் முக்கிய மானவையாகின்றன. 
எனவே அந்த ஆய் வறிக்கையை சீர்குலைக்கும் முயற்சியில் இப்பொழுது இறங்கியிருக்கிறார்கள். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 


ஆய்வு நடத்திய அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களே ஆய்வறிக்கை எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்று தமுஎகச வலியுறுத்துகிறது. தமிழரின் தொல் நாகரிகத்தை குழிதோண்டி புதைக்க மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சியை அனைவரும் கண்டிக்க முன்வர வேண்டும் என்றும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை :மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்றதிலிருந்து இந்தியாவின் பன்முகப்பண்பாட்டை மறுத்து, இந்துத்துவா அடிப்படையிலான ஒற்றைப் பண்பாட்டை திணிக்க அனைத்து முயற்சி களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஆனால், இந்தியநிலப்பரப்பு வரலாறு அவர்களுக்கு எதிராக உள்ளது.எனவே வரலாற்றை தங்கள் வசதிக்கேற்ப வளைத்து எழுதும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல்துறையின் சார்பில் நடைபெற்ற அகழ் வாய்வை முடக்க அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டது. மிகுந்த ஆர்வத்துடனும், அர்ப் பணிப்புடனும் அகழ்வாய்வுப் பணியில் ஈடுபட்டு, தமிழரின் தொன்மை மிகுந்த நாகரிகத்தை நிரூபிக்க முயன்ற அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன், அசாம்மாநிலத்திற்கு எவ்வித காரணமுமின்றி இடமாறுதல் செய்யப்பட்டார். 
அதன்பின் பெயரளவுக்கு கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. அமர்நாத் இராமகிருஷ்ணன் தலைமையிலான குழு கண்டறிந்த தொல் பொருள்கள் குறித்த அறிக்கையை அவர் எழுதக் கூடாது என்றும், இந்த ஆய்வுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத பெங்களூரு அகழ்வாய்வு பிரிவு தலைவர்தான் எழுத வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள உத்தரவு முற்றிலும் நயவஞ்சக எண்ணம் கொண்டது ஆகும். 


அகழ்வாய்வை மேற்கொண்ட அதிகாரியே அறிக்கையை எழுத வேண்டும் என்ற தொல்லியல்துறையின் நடைமுறை முதல்முறையாக மாற்றப்படுவதன் நோக்கம் என்ன? 

கீழடியில் கிடைத்த பொருள்களின் தொன்மையை மறுதலிக்கும் சதியோ என சந்தேகம் வருகிறது.

எனவே, மத்திய தொல்லியல்துறை தன்னுடைய உத்தரவை திரும்பப் பெற்று, அகழ்வாய்வை மேற்கொண்ட அமர்நாத் இராமகிருஷ்ணன், அது தொடர்பான அறிக்கையை எழுத அனுமதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
==========================================================================================
ன்று,
அக்டோபர்-08.


  • இந்திய விமானப் படை தினம்
  • பெரு கடற்படை தினம்

  • இந்திய விமானப்படை நிறுவப்பட்டது(1932)

  • ஜெர்மனி, மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது(1939)

  • கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம்(1959)
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
சமூக அக்கறை மிகுந்த தனது பாடல்களால் மக்களின் மனதில் வெள்ளமெனப் பாய்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தனது வறுமையின் பொருட்டு விவசாயம், வியாபாரம், நாடக நடிப்பு, டிரைவிங், உப்பளத்தொழில் என எண்ணற்ற தொழில்களையும் வேலைகளையும் செய்தவர். பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் கற்றவர். அவரது குயில் இதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார். 

வறுமை மிகுந்த சூழலில்,  பெரும் முயற்சிக்குப் பிறகு தனது 25வது வயதில் 'படித்த பெண்' என்ற திரைப்படத்திற்காக முதல் பாடலை எழுதினார். அடுத்தடுத்த வருடங்களில் தனது அபாரமான கவிதை ஆற்றலால் திரையிசைப்பாடல் உலகில் அழுத்தமாக காலூன்றினார். அவரது கவிதைக்கொடி,  புகழ்காற்றில் படபடத்தது.

பொதுவுடமைக் கருத்தியலை தீவிரமாக நம்பியவர். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அரசியல் விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல திரையிசையைப் பயன்படுத்தினார். இளைஞர்களுக்கு மட்டுமின்றி,  சிறுவர்களுக்கும் தனது கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்று விரும்பியவர். சினிமாவின் கதை சிச்சுவேஷன்களைப் பயன்படுத்தி, சிறுவர்களுக்காக பல பாடல்களை எழுதினார். அவற்றில் ・சின்னப்பயலே... சின்னப்பயலே சேதி கேளடா・ திருடாதே பாப்பா... திருடாதே・ தூங்காதே தம்பி... தூங்காதே・போன்ற பாடல்கள் மிகப் பிரபலமானவை.
தத்துவம், அரசியல், காதல், நகைச்சுவை, சோகம் என பல உணர்வுத்தளங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். 187 பாடல்களை மட்டுமே எழுதியிருந்த சூழலில்,  தனது 29 வயதிலேயே காற்றில் கலந்தார். பட்டுக்கோட்டையைப் பொறுத்தவரை பாடல்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. அவரது வரிகள் ஒவ்வொன்றும் காலத்தில் எதிர் நீச்சல் போடுபவை. மனிதன் பூமியில் வாழ்கின்ற காலம் வரைக்கும் நிலைத்து நிற்பவை. எல்லா காலங்களுக்கும் பொருந்திப் போகிறவை.         

உதாரணமாக சமீபத்தில், வங்கிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு விஜய்மல்லையா உல்லாசப் பயணத்திலிருப்பதையும், டிராக்டருக்கு தவணை கட்டவில்லையென ஒரு விவசாயி போலீசால் தாக்கப்பட்டதையும் ஒப்பிட்டு பார்ப்போம். கீழே பட்டுக்கோட்டையின் வரிகள்:  

பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது - ஒரு 
பஞ்சையத்தான் எல்லாம் சேர்ந்து திருடனென்றே ஒதைக்குது!    
(பொறக்கும்போது பொறந்த குணம் போக போக மாறுது...)
எத்தனை ஆண்டுகள் கழித்தும் அவரது பாடல்,  இன்றைய சமூகத்தை தோலுரிப்பதாக உள்ளது...இதுதான் பட்டுக்கோட்டையார். அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் நாம் அனைவரும் கேட்க வேண்டிய மற்றொரு பாடல்: 

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா- இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா- தம்பி
தெரிந்து நடந்துகொள்ளடா- இதயம்
திருந்த மருந்து சொல்லடா!- இப்படி பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
சைனஸ் தொல்லைக்காக ஆபரேஷன் செய்தபோது, டாக்டர்கள் தவறான இடத்தில் ஆபரேஷன் செய்துவிட, அதன் பக்கவிளைவாக முகம் வீங்கி சிகிச்சை பலனின்றி,  தமது 29 வயதில் 08.10.1959 ல் பட்டுக்கோட்டையார் இயற்கை எய்தினார். 

ஒரு முறை ஜனசக்தி பத்திரிக்கை ஆசிரியர், கவிஞர். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திடம், "பெரிய கவிஞர்களான கம்பன், இளங்கோ, பாரதி போன்றவர்களே பெயரை சிறிதாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஏன் இவ்வளவு பெரிய பெயரை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டாராம். அதற்கு பட்டுக்கோட்டை, " அவர்கள் பெரிய கவிஞர்கள். நான் சின்னக் கவிஞன் பெயராவது பெரிதாக இருக்கட்டுமே...?!" என்றாராம். 

தன்னடக்கமாக அவர் அப்படிச் சொல்லியிருந்தாலும்,  மானுட சமூகத்தின் மீது அவர் கொண்ட நேசத்தாலும் அக்கறையாலும், மாபெரும் கவிஞராகவே மக்களின் இதயத்தில் என்றென்றும் நிறைந்திருப்பார்.
பட்டுக்கோட்டையின் பாடல்களை நாட்டுடமையாக்கி,  அரசு தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இவரையும் இவரது பாடல்களையும் நாம், நம் குழந்தைகளுக்கும் இந்த தலைமுறை இளைஞர்களுக்கும் அறிமுகப்படுத்துவதின் வாயிலாக பெருமை தேடிக்கொள்வோம். அவரது பாடல்களை கேட்பதின் வாயிலாகவும் நினைவுக்கூறுவதின் வாயிலாகவும் இன்றைய நாளை நீங்கள் மகத்துவமானதாக மாற்றலாம்.
                                                                                                                                                                                                                                                                                        - மாயன்
==========================================================================================
ரஃபேல் போர் விமான ஊழலில் மோடியின் மேல் சிபிஐ-யில் புகார். 
முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் அருண் ஷோரி, முன்னாள் பாஜக  நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, மூத்த சுப்ரீம் கோர்ட் வழக்குரைஞர்  பிரஷாந்த் பூஷன் ஆகியோர் சிபிஐ இடம் முற்றச்சாட்டை விசாரிக்க மனு கொடுத்துள்ளனர்.
கண் துடைப்பு,


பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையில்லிட்டருக்கு தலா ரூ.2.50 குறைத்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். 

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்புதொடர்ந்து வீழ்ந்து வருவதாலும்தான் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதாக மோடி அரசு தொடர்ந்து கூறி வந்தது. 
இப்போ எந்த விளக்கெண்ணை ஆட்சியாம்?
தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால், மும்பையில் பெட்ரோல் விலை ரூ.90 ஐ தொட்டது. 

இதே நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ எட்டும் என மக்கள் அச்சம் கொண்டனர்.

சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் அடுத்தமாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்த கண்துடைப்பு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 

பாஜக தலைவர் அமித் ஷா கேட்டுக்கொண்டதால், பாஜக ஆளும் மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல்விலை லிட்டருக்கு தலா ரூ.2.50 குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலையொட்டி தினந்தோறும் விலை அறிவிப்பு என்ற நடைமுறை மாற்றியமைக்கப்பட்டு, பெட்ரோல், டீசல்விலை உயர்வு தேர்தல் முடியும் வரை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இப்போது அதே பாணியைத்தான் மீண்டும் பாஜக பின்பற்றுகிறது.

 அதிலும் கூட கடுமையாக உயர்த்தியதில் ஒரு பகுதியை குறைத்துவிட்டு, மக்களுக்காக தியாகம் செய்துவிட்டதுபோல பாஜகவினர் பீற்றிக் கொள்கின்றனர். 
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த நிலையில், அதன் பலன் இந்திய மக்களுக்கு கிடைத்துவிடாமல் கலால் வரியை உயர்த்தி விலை உயர்வை நிலை நிறுத்தியது மோடி அரசு. 


2014 நவம்பர் முதல்2016 ஜனவரி வரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒன்பது தவணைகளில் ரூ.11.77ம் டீசலுக்கு ரூ.13.47ம் உயர்த்தப்பட்டது. 

ஆனால் ஒருமுறை மட்டுமே கலால் வரி ரூ.2 குறைக்கப்பட்டது. 
தற்போது இரண்டாவது முறையாக பெயரளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. 
இதனால் பெருமளவு பலன் ஏற்பட வாய்ப்பில்லை.

மூன்று மாநில தேர்தல் முடிந்தவுடன் மீண்டு ம் கிடுகிடுவென விலை உயர்த்தப்பட வாய்ப்பு உண்டு. மாதாமாதம் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில், இந்த மாதமும் ரூ.35.50 உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளன. 

மீனவர்கள் டீசல்விலை உயர்வால் கடலுக்கு செல்ல முடியாதநிலை உருவாகியுள்ளது. பேருந்து கட்டணமும் மறைமுகமாக உயர்த்தப்படுகிறது. 

மக்கள் கதறியபோதும் வரியை குறைத்து நிவாரணம் வழங்க முன்வராத மோடி அரசு, தற்போது சிறு அளவில் வரிக் குறைப்பு செய்து நாடகமாடுகிறது. 

இதனைமக்கள் நம்பமாட்டார்கள். 

அனைத்து வகையிலும் மக்களுக்கு விரோதமாகவே செயல்படும்மத்திய பாஜக கூட்டணி அரசின் நயவஞ்சகத்தை மக்கள் புரிந்தே வைத்திருக்கிறார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?