ஜியோவுக்காக பி.எஸ்.என்.எல். மூடுவிழா !





 மோடி அரசின் சாதனை  !

கார்ப்பரேட்டுகளை வாழ வைத்துக் கொண்டிருக்கும் மோடி அரசு, பல பொதுத்துறை நிறுவனங்களை அழித்தொழிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் முதலில் மூடுவிழா காணவிருக்கும் நிறுவனமாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் உள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சன்சார் நிகாம் லிமிடெட், இந்தியாவில் அதிக அளவிலான நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமாக உள்ளது.

 2017-18 -ஆம் ஆண்டுகளில் மட்டும் இந்நிறுவனம் ரூ. 31,287 கோடி நட்டத்தை அடைந்திருப்பதாக தொலைத்தொடர்பு செயலர் அருணா சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் நிதி நிலவரம், வருமான இழப்புகள், ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பிறகு வர்த்தகம் எப்படி இருந்தது, விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் பணியாளர்களை பணியைவிட்டு அனுப்புவது உள்ளிட்ட விவரங்களை பி.எஸ்.என்.எல். தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா, தொலைத் தொடர்பு செயலரிடம் தெரிவித்துள்ளார்.

முகேஷ் அம்பானியின் ஜியோ வருகைக்குப் பின், இந்த இழப்பு இன்னும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டதாக பி.எஸ்.என்.எல். தலைவர் அறிக்கை அளித்துள்ள நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூடுவது குறித்த திறனாய்வை செய்யும்படி அவரிடம் செயலர் வலியுறுத்தியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் சொல்கிறது.

பெரும் நட்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தனியாரின் தலையீட்டை தடுக்காமல், பணியாளர்களின் சம்பளம்தான் பிரச்சினை எனவும் பணி ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 58-ஆக குறைக்க வேண்டும் எனவும் இதனால் ரூ. 3000 கோடி நட்டம் தவிர்க்கப்படும் எனவும் ஆலோசனைகள் பி.எஸ்.என். எல். அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

 இதன் மூலம் 50% சதவீத பணியாளர்கள் அதாவது 33,846 பேர் விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.

தொலைத்தொடர்பு பணிகளை விட்டுவிட்டு, பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு சொந்தமான கட்டடங்களை வாடகைக்கு விட்டு அதன் மூலம் ரூ. 15,000 கோடி வருமானம் ஈட்டலாம் எனவும் யோசனை சொல்லப்பட்டிருக்கிறது பி.எஸ்.என்.எல். தரப்பிலிருந்து.

மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என். எல். மூடுவிழா காணும் செய்தி கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில், ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நாட்டின் 98.8% சதவிகித இடங்களில் ‘சிறப்பாக’ செயல்படுவதாகவும் செய்தி வெளியாகிறது!

ரஃபேல் விமான ஒப்பந்தத்திலிருந்து பொதுத்துறை நிறுவனமாக ஹெச் ஏ எல்லை அனில் அம்பானிக்காக கழட்டி விட்ட மோடி அரசு, அண்ணன் முகேஷ் அம்பானிக்காக பிஎஸ்என்எல்-ஐ கழட்டி விடுகிறது.

பிரதமர் மோடியின் விருப்பத்துக்குரிய முகேஷ் அம்பானி, மேற்கு வங்க பெண் சிங்கம் மம்தாவுடன் கை குலுக்கிறார். (மேற்கு வங்க தொலைதொடர்பு நெட்வொர்க்கில் அதிக முதலீடுகளை செய்துள்ளது ரிலையன்ஸ்)

தமிழகத்தின் ஆட்சியில் பிடிக்கலாம் என கருதப்படும் திமுக தலைவர் ஸ்டாலினை மட்டும் சென்னைக்கு வந்து திருமணத்துக்கு அழைக்கிறார்.

ஆக மொத்தத்தில் அதிகாரத்தை அண்டி பிழைப்பதில் முகேஷ் அம்பானி ஒரு ‘கார்ப்பரேட் மான்ஸ்டர்’.  அரசு நிறுவனத்தை அழித்து, அம்பானிகளை வளர்க்கும் அரசியல்வாதிகளுக்கு என்ன பெயர் வைப்பது?
                                                                                                                                                        கலைமதி
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?