மோடி எத்தனை பொய்களை சொல்லியிருக்கிறார் தெரியுமா?


மோடி

 ''நான் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதற்காக இங்கே வரவில்லை''

என சொல்லிக்கொண்டு அலையும்

மோடி எத்தனை பொய்களை சொல்லியிருக்கிறார் தெரியுமா?
``பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை எல்லாம் மீட்டு, ஒவ்வோர் இந்தியக் குடும்பத்தின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவோம்''. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் மோடி சொன்ன இந்த வாக்குறுதி இந்தியாவையே கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த தேர்தலில் மோடி இதுபோன்று சொன்ன பொய்கள் ஏராளம்.
2014 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார் நரேந்திர மோடி. சரியாக ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடந்த அந்தத் தேர்தல் களத்தில் மூன்று லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்து, 5,827 பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார் மோடி. அப்போது பேசிய வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் தோண்டி எடுத்தோம்.
``நாட்டை மீட்பதற்காகக் கடவுள் என்னைத் தேர்வு செய்துள்ளார். நான் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதற்காக இங்கே வரவில்லை. உங்கள் சேவகனான எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். 60 மாதங்களில் இந்தியாவை மாற்றிக் காண்பிக்கிறேன். 60 ஆண்டுகளில் அவர்கள் செய்யாததைச் செய்வேன் என வாக்குறுதி அளிக்கிறேன்'' என்று பிரசார மேடைதோறும் முழங்கினார்.
அப்போது சொன்ன பொய்களும் மெய்களும் இங்கே அணிவகுக்கின்றன.

1. ``பாகிஸ்தானின் ஆயுதங்களாக மூன்று ஏ.கே-க்கள் உள்ளன. அதில் ஒன்று ஏ.கே. 47 ரக துப்பாக்கி. இரண்டாவது, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி. மூன்றாவது, அரவிந்த் கெஜ்ரிவால். இவர்கள் பாகிஸ்தானின் ஏஜெண்டுகள். இந்தியாவின் எதிரிகள்'' - 2014 மார்ச் 26. ஜம்மு, ஹிராநகர்
ஏ.கே.அந்தோணி, அரவிந்த் கெஜ்ரிவால் மீது மோடி சுமத்திய குற்றச்சாட்டுகள், இன்று வரை நிரூபிக்கப்படவில்லை. டெல்லி சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி-யையும், காங்கிரஸையும் வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தார் கெஜ்ரிவால். அந்த ஆட்சிக்கு எதிராக துணை நிலை ஆளுநரை வைத்து, கொம்பு சீவினார்கள். அதிகாரிகள் நியமனம் தொடங்கி, அத்தனையிலும் துணை நிலை ஆளுநரின் தலையீடு, ஆம் ஆத்மியை உடைக்க முயற்சி, ஆம் ஆத்மி-யின் 20 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் என வாள்சுழற்ற முடிந்ததே தவிர, வேறு எதையும் பி.ஜே.பி. சாதிக்கவில்லை. ரஃபேல் விவகாரத்தில் அந்தோணியிடம் மல்லுக்கு நின்றார்கள். `பாகிஸ்தான் ஏஜென்டுகள்' என்பதற்கான எந்த ஆதாரத்தையும் ஐந்தாண்டுக் காலத்தில் மோடி தூக்கிப் போடவில்லை.

2. ``மன்மோகன் சிங் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்'' - 2014 மார்ச் 26. ஜம்மு, ஹிராநகர்.
மன்மோகன் சிங் ஆட்சியில் 2013-ம் ஆண்டு 11,772 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். மோடி ஆட்சிக்கு வந்தபின் 2014-ம் ஆண்டில் இது 12,360 ஆகவும், 2015-ம் ஆண்டில் 12,602 ஆகவும் கூடியது. அதற்குப் பிந்தைய ஆண்டு புள்ளிவிவரங்களை பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் கிடைக்காது.

3. `` `ஊழலை பொறுத்துக் கொள்ள முடியாது' எனச் சொல்லும் ராகுல் காந்தி, ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் கறைபடிந்திருக்கும் அசோக் சவானுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கியிருக்கிறார். மத்தியில் பொறுப்பேற்க உள்ள புதிய பி.ஜே.பி. அரசிடமிருந்து ஆதர்ஷ் ஊழல்வாதிகள் தப்ப முடியாது'' - 2014 மார்ச் 31. மகாராஷ்டிரா, அகோலா.
52 வழக்குகள் உள்ள பாபு ராவ் சோயம் என்பவருக்கு தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மக்களவைத் தொகுதியில் இந்தத் தேர்தலில் வாய்ப்பு வழங்கியிருக்கிறது பி.ஜே.பி. இப்போது பி.ஜே.பி. மீது கறை விழாதா? ஆதர்ஷ் ஊழல் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்கு 2017 செப்டம்பரில்தான் கவர்னர் அனுமதி அளித்திருக்கிறார். ஆட்சிக்கு வந்ததுமே நடவடிக்கை எடுத்திருக்கலாமே?

4. ``நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டில் உள்ள அனைத்துக் கறுப்புப் பணத்தையும் மீட்டு, அதை ஏழைகளின் முன்னேற்றம் மற்றும் நலனுக்காகப் பயன்படுத்துவோம்'' - 2014 ஏப்ரல் 6. உ.பி, அலிகார்.
எவ்வளவு கறுப்புப் பணத்தை மீட்டார்கள், அதை எந்த ஏழைகளின் நலனுக்குப் பயன்படுத்தினார்கள் என்பதைச் சொல்லும் ஒரு புள்ளிவிவரம்கூட மத்திய அரசிடம் இல்லை. ஒரு வெள்ளை அறிக்கைகூட வெளியிடவில்லை.

5. ``மேற்குவங்க மாநிலத்திலிருந்து கூர்காலாந்து பகுதியைப் பிரித்து, தனி மாநிலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களது எண்ணம்தான், என்னுடைய எண்ணமும்!'' - 2014 ஏப்ரல் 10. மேற்கு வங்காளம், சிலிகுரி.
கடந்த 2017-ம் ஆண்டு `கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா' சார்பில் காலவரையற்ற போராட்டம் பல வாரங்களாக நடைபெற்றது. அரை நூற்றாண்டாக எழுப்பப்பட்டு வரும் கூர்காலாந்து கோரிக்கையை மோடி நிறைவேற்றவில்லை.

6. ``அரசியலைக் குற்றவாளிகளின் பிடியிலிருந்து விடுவிப்பேன். பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால், குற்றம்புரிந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ -க்கள் ஓராண்டுக்குள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்'' - 2014 ஏப்ரல் 14. குஜராத், காந்தி நகர்.  
ஓராண்டல்ல... கடந்த ஐந்தாண்டில் எத்தனை `மக்கள் பிரதிநிதி'களை சிறைக்கு அனுப்பினீர்கள் எனச் சொல்லுங்கள் மோடி அவர்களே!

7. ``தமிழ்நாட்டில் மின்சாரம் கிடைக்காமல் போனதற்குக் காரணம் நிலக்கரி தட்டுப்பாடுதான். காங்கிரஸ் ஆட்சியில் நிலக்கரி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான வழக்கில் நிலக்கரி கோப்பும் மாயமாகிவிட்டது'' - 2014 ஏப்ரல் 16. கிருஷ்ணகிரி, கந்திக்குப்பம்.
மன்மோகன் சிங் ஆட்சியில் நிலக்கரி கோப்பு மாயமாகி விட்டது. மோடி ஆட்சியில் ரஃபேல் விமான ஆவணங்கள் ரகசியமாக வெளியே போய்விட்டது. `ரஃபேல் ஒப்பந்த ரகசிய ஆவணங்கள் கசிந்ததால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆவணங்களை ரகசியமாக நகல் எடுத்து வெளியே கசியக் காரணமாக இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரமே தாக்கல் செய்தது மோடி அரசு. தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு இல்லாததால் கூடுதல் நிலக்கரி பெறுவதற்காக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, 2018 செப்டம்பரில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்தார். நிலக்கரி பற்றி பேசிய மோடி, தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டபோது, உடனே உதவியிருக்கலாமே. பியூஷ் கோயல், கூட்டணி பேச்சுவார்த்தைக்குத்தான் தமிழகத்துக்கு ஓடிவந்தார்.

8. ``குற்றம்புரிந்த மக்கள் பிரதிநிதிகள் மீதான நடவடிக்கையில் எந்தப் பாகுபாடும் காட்டமாட்டேன். பி.ஜே.பி-யினராக இருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும்'' - 2014 ஏப்ரல் 14. குஜராத், காந்தி நகர்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று, மக்களவையில் நுழைந்த 543 பேரில் 184 எம்.பி-கள் மீது வழக்குகள் இருந்தன. இது மொத்த எம்.பி.க்களில் 34 சதவிகிதம். இதில் பி.ஜே.பி. எம்.பி-கள் மட்டும் 97 பேர். இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை.

9. ``சீனாவிலிருந்து பட்டாசுகள் வருவதால் சிவகாசியில் பட்டாசுத் தொழில் நலிவடைந்திருக்கிறது. பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் பட்டாசுத் தொழிற்சாலைகளையும், தொழிலாளர்களையும் பாதுகாப்போம்'' - 2014 ஏப்ரல் 17. ராமநாதபுரம்.
கடந்த நவம்பர் மாதத்திலிருந்து சிவகாசியில் 1,400-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடப்பட்டதையும் அங்கே கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டதையும் மோடியின் காதுகளுக்கு யார் கொண்டு போவார்கள்?

10. ``பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, அயோத்தி ராமர் கோயில் பிரச்னை, பொது சிவில் சட்ட விவகாரத்துக்குத் தீர்வு காணப்படும்'' - 2014 ஏப்ரல் 22. ஏ.பி.பி. டி.வி. பேட்டி.
இன்னும் தீர்க்கப்படாமல் தேர்தல் கால அஸ்திரமாக அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது வெளியிடப்பட்ட பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையிலும் இவை இடம்பெற்றிருக்கின்றன.

11. ``10 ஆண்டுகளாக சி.பி.ஐ., ஐ.பி, ரா, வருமானவரித் துறை அமைப்புகளை எனக்கு எதிராகப் பயன்படுத்திய போதிலும் காங்கிரஸ்காரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை'' - 2014 ஏப்ரல் 27. ஃபதேபூர்.
`இந்த அமைப்புகளை எதிர்க்கட்சிகள் மீது மோடி அரசு ஏவுகிறது' என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்படுகிறது.

12. ``மிகப்பெரிய புண்ணிய ஸ்தலமான `ராமேஸ்வரம் சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டு, உலகத்தினர் அனைவரும் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும்'' - 2014 ஏப்ரல் 17. ராமநாதபுரம்.
ராமேஸ்வரம் சுற்றுலாத் தலமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. 2016-ல் ராமேஸ்வரத்தை அம்ரூத் சிட்டி ஆக மாற்ற மத்திய அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தது. அந்தத் திட்டத்தில் ஐந்து சதவிகிதம்கூட பணிகள் தொடங்கப்படவில்லை.

13. ``பி.ஜே.பி. கூட்டணி ஆட்சிக்குவந்தால், 70 கோடிப் பேருக்கு வேலை கொடுப்போம்'' - 2014 ஏப்ரல் 16. கிருஷ்ணகிரி, கந்திக்குப்பம்
`இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது' எனத் தேசியப் புள்ளியியல் ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது. ``இதனால்தான் வேலைவாய்ப்பு பற்றி தேசிய கணக்கெடுப்பு அலுவலகத்தின் அறிக்கை வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது'' எனக் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் காரணமாக, தேசியப் புள்ளியியல் ஆணையத்தின் செயல் தலைவர் பி.சி.மோகனன் உட்பட இரண்டு பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
``காங்கிரஸின் 2009 தேர்தல் அறிக்கையில் 10 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்றீர்கள். எவ்வளவு இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்?'' எனக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் உத்தரபிரதேசம் சந்த் கபீரில் (2014 மே 3) மோடி கர்ஜித்தார். இப்போது மோடியின் ஆட்சியிலேயே வேலைவாய்ப்புக்கு ஆப்பு வைத்திருக்கிறார்கள்.

14. ``தமிழகத்தின் மின்தடைக்கும் அனைத்து மின்கட்டமைப்பு தடைபடுவதற்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணிதான் தடையாக இருக்கிறார்'' - 2014 ஏப்ரல் 16. ஈரோடு
மோடி குறிப்பிட்ட அந்தப் பெண்மணி ஜெயந்தி நடராஜன். அவரது அலுவலகங்கள், வீடுகளில் 2017-ல் சி.பி.ஐ. சோதனை போட்டது. அதன்பிறகு அந்த வழக்கு எதற்காகவோ அமுங்கிப் போனது.

15. ```குற்றம்புரிந்த அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கும் எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சிறப்பு நீதிமன்றங்களை ஓராண்டில் அமைப்பேன்'' - 2014 ஏப்ரல் 14. குஜராத், காந்தி நகர்.
`தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’ என வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் போட்டார். `குற்றப் பின்னணி கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ-க்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். 2018 மார்ச் 1-ம் தேதி முதல் அவை செயல்பட வேண்டும்' எனக் கடந்த 2017 டிசம்பரில் உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட். அதன் பிறகும் மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்காமல் 12 சிறப்பு நீதிமன்றங்களைக் கடந்த ஆண்டு செப்டம்பரில்தான் அமைத்தது. தன்னிச்சையாகச் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க முன்வராமல் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அதையும் காலம் தாழ்த்திதான் அமைத்தார் மோடி.
``குற்றப்பின்னணி எம்.பி-க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம்'' என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது சொன்ன மோடி, ஆட்சிக்கு வந்த பின்னர் அதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகவில்லை. அஸ்வினி குமார் என்பவர் போட்ட பொது நல வழக்கில்தான், மத்திய அரசு பதில் அளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

16. ``காங்கிரஸ் தலைவர்கள் ஏழைகளைப் பார்க்கப் போகும்போது கூடவே கேமராமேன்களையும் அழைத்துப் போகிறார்கள். சுற்றுலா சென்று தாஜ்மகாலைப் பார்ப்பது போலவே ஏழைகளை காங்கிரஸ்காரர்கள் பார்க்கின்றனர்'' - 2014 ஏப்ரல் 17. ராமநாதபுரம்.
எந்தவொரு விழாவிலோ, நிகழ்ச்சிகளிலோ பிரதமர் மோடி பங்கேற்கும்போது, அவரின் கண்கள், கேமிராக்கள் பக்கம்தான் திரும்பியிருந்தன என்பதை எத்தனை மீம்ஸ்கள் சொல்லியிருக்கும்.

17. ``சி.ஏ.ஜி., சி.பி.ஐ. உட்பட அனைத்து தன்னிச்சையான, ஜனநாயக அமைப்புகளையும் காங்கிரஸ் ஆட்சிதான் மட்டம்தட்டி அவமதித்தது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் தேவைப்பட்டபோதெல்லாம் கட்சிகளை மிரட்ட சி.பி.ஐ-யைப் பயன்படுத்தினீர்கள்'' - 2014 ஏப்ரல் 17. புதுடெல்லி.
இதே கோஷத்தை இன்றைக்கு எதிர்க்கட்சிகள் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. சி.பி.ஐ., ஆர்.பி.ஐ. சி.ஏ.ஜி., வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, நிதி ஆயோக், தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகள் மோடி ஆட்சியில் தடம் மாறிக் கொண்டிருக்கின்றன என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. விஜயபாஸ்கரின் குட்கா வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., ரஃபேல் விமான முறைகேடு பற்றிப் பேசாத சி.ஏ.ஜி. அமைப்பை எல்லாம் யார் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
``ஒரு நாட்டின் மத்திய வங்கியினைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள், பொருளாதாரப் பேரழிவுக்கு வித்திடும்'' என ஆர்.பி.ஐ. துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா கொதிக்கும் அளவுக்கு மத்திய அரசுக்கும் ஆர்.பி.ஐ-க்கும் இடையேயான மோதல் போக்கு வெட்டவெளிச்சமானது.

18. ``ஜவுளிகளின் சொர்க்கமான ஈரோட்டில் ஜவுளித் தொழிலுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். ஈரோட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உறுதியான நடவடிக்கை எடுப்போம்'' - 2014 ஏப்ரல் 17. ஈரோடு.
இந்த அறிவிப்புகள் என்ன ஆனது எனத் தெரியவில்லை.

19. ``சிவகங்கை தொகுதி வாக்காளர்களுக்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கை சின்னம் பொறிக்கப்பட்ட கைக்கடிகாரத்தை வழங்குகிறார். தேர்தல் ஆணையம் அவர் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும்'' - 2014 ஏப்ரல் 17. ராமநாதபுரம்.

``தேர்தல் ஆணையமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது'' என விமர்சனம் வைக்கப்படும் நிலையில், இந்தப் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுத்திருக்கலாமே. ஐந்தாண்டுகளுக்கு முன்பு சொன்ன இந்தக் குற்றச்சாட்டை நிரூபித்து ப.சிதம்பரத்துக்கு தண்டனை பெற்றுக் கொடுத்திருக்கலாம்.

20. ``எம்.பி., எம்.எல்.ஏ-க்களைத் தொடர்ந்து, உள்ளாட்சி பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க, ஊராட்சி அடிப்படையில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்'' - 2014 ஏப்ரல் 14. குஜராத், காந்தி நகர்.
இதுவும் பொய்களோடு கடந்து போனது.

21. ``தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கும் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. இரண்டு கட்சிகளிடமிருந்து மக்கள் விடுபடாவிட்டால் தமிழகத்துக்கு விமோசனம் கிடையாது'' - 2014 ஏப்ரல் 17. கன்னியாகுமரி.
`கழகங்கள் இல்லா தமிழகம், கவலையில்லா தமிழகம்' என கோஷம் எழுப்பிய பி.ஜே.பி. இப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துதான் விமோசனம் தேடிக் கொண்டிருக்கிறது.

22. ``பி.ஜே.பி. ஆட்சி அமைந்தால் ஊழலை ஒழிப்பதற்கான அனைத்து வழிகளையும் மேற்கொள்வோம். இந்த நடவடிக்கையில் அரசியல் குறுக்கீடு இருந்தால், அதையும் முறியடிப்போம்'' - 2014 ஏப்ரல் 18. சி.என்.பி.சி., டிவி 18 பேட்டி.
ஊழலை ஒழிப்பதற்கு மோடி காட்டிய வேகத்துக்கு லோக்பால் ஒன்றே சாட்சி. ஊழலை எல்லா மட்டத்திலும் ஒழிக்க... ஊழல் இல்லா இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்காக, மன்மோகன் சிங் ஆட்சியின் கடைசிக் காலத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆட்சியில் இருக்கும் வரையில் இந்த அமைப்பை உருவாக்குவது பற்றி மோடி கவலைப்படாமல் இருந்துவிட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் லோக்பால் அமைப்புக்கு சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பினாகி சந்திரகோஷை தலைவராக நியமித்திருக்கிறார்.

23. ``பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் கங்கை - காவிரி நதிநீர் இணைப்புத் தி்ட்டம் செயல்படுத்தப்பட்டு, தமிழக விவசாயிகளின் பாசன நீர்ப் பிரச்னையைத் தீர்ப்போம்'' - 2014 ஏப்ரல் 17. தமிழ்நாடு, ராமநாதபுரம்.
`காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எப்படியெல்லாம் தண்ணி காட்டியது. கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்காக தமிழகத்தை வஞ்சித்தது' எனக் கடுமையான குற்றச்சாட்டுகள் பி.ஜே.பி. மீது சுமத்தப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் பெரும் போராட்டம் எல்லாம் நடைபெற்றது. `கோபேக் மோடி' ஹேஷ்டேக் போட்டு எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். காவிரிக்கே இப்படிக் கைவிரித்தவர்கள், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன கங்கை - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தயைச் செயல்படுத்தப்போகிறார்கள். `கங்கையும் தெற்கே பாயாதா காவிரியோடு சேராதா பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா' என இன்னும் எத்தனை வருடங்களுக்கு விவசாயிகள் பாடிக் கொண்டிருக்கப் போகிறார்களோ!

24. ``மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் நதிகள் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்'' - 2014 ஏப்ரல் 16. சேலம்.
எடப்பாடி - பன்னீர் அணிகள் இணைப்புதான் நடைபெற்றது.

25. ``காங்கிரஸ் ஏமாற்றுக் கட்சி; 2009-ல் வெளியிட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஒரு ஏமாற்றுப் பத்திரம். அதில் 100 நாள்களுக்குள் விலைவாசியைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள். இது ஏமாற்று வேலை இல்லையா? தவறுகளை மக்கள் மன்னித்து விடுவார்கள். ஆனால், ஏமாற்றுவதை மன்னிக்க மாட்டார்கள்'' - 2014 ஏப்ரல் 29. இமாசலப் பிரதேசம், பாலம்பூர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2014 ஏப்ரல் 7-ம் தேதி அத்வானி, ராஜ்நாத் சிங் ஆகியோருடன் இணைந்து மோடி வெளியிட்ட பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையை இப்போதாவது புரட்டிப் பாருங்கள்.
* சட்டப் பிரிவு 370-ஐ திரும்பப்பெற நடவடிக்கை எடுப்போம்.
* கறுப்புப் பண பரிவர்த்தனைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்போம்.
* நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்யச் சட்டம் இயற்றுவோம்.
* மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறைக்கு முடிவு கட்டப்படும்.
* வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணத்தைத் திரும்பக் கொண்டு வருவோம்.
இதெல்லாம் மோடி கொடுத்த வாக்குறுதிகள்தானே. இது ஏமாற்று வேலை இல்லையா? ''ஏமாற்றுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்'' என்றீர்களே அது உங்களுக்கும் பொருந்தும்தானே!

26. ``காங்கிரஸ் ஆட்சியில் பத்திரிகை சுதந்திரமில்லை. பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் தூணாகும். அது எழுத்திலும்  செயலிலும் பேணி பாதுகாக்கப்பட வேண்டும்'' - 2014 மே 3. உலகப் பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவு.
இந்த ஐந்தாண்டுக் காலத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பையே மோடி நடத்தவில்லை.

27. ``ஏழையாகவே பிறந்து ஏழையாகவே வளர்ந்தவன். ஏழ்மையின் வலியை நன்கு உணர்ந்தவன் என்பதால், ஏழ்மையைப் போக்குவதே எனது முதல் கடமையாக நினைத்து பணியாற்றுவேன்'' - 2014 ஏப்ரல் 17. ராமநாதபுரம்.
கஜா புயல் பாதிக்கப்பட்டபோது, தமிழகத்தை எட்டிக்கூடப் பார்க்காத இறந்தவர்களுக்கு ஓர் இரங்கல்கூட தெரிவிக்காத மோடி, ஏழ்மையின் வலியை எப்படி உணர்ந்தார்?

28. ``ஆட்சிக்கு வந்தால் மாற்றுக் கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநில அரசுகளைப் பழிவாங்க மாட்டேன்'' - 2014 ஏப்ரல் 18. மேற்கு வங்க பத்திரிகை பேட்டி.
தமிழகத்திலும் மேற்கு வங்காளத்திலும் புதுச்சேரி, டெல்லி மற்றும் கேரளா மாநிலங்களில் என்ன நடந்தது என்பதை இந்த நாடறியும்.

29. ``நான் அரசியலையும் நாடாளுமன்றத்தையும் தூய்மைப்படுத்த வந்துள்ளேன். கட்சி வேறுபாடின்றி எம்.பி.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காகக் குழு ஒன்றை அமைப்பேன். இந்தக் குழுவினர், வெற்றி பெற்ற எம்.பி-க்கள், தங்கள் வேட்புமனுக்களில் குறிப்பிட்ட வழக்குகளின் விவரங்களைச் சேகரிப்பார்கள். குற்றம் செய்தவர்கள் இருந்தால் அவர்கள் தண்டனை பெற்று, சிறைக்குச் செல்வார்கள். அவர்களின் தொகுதியில் மறுதேர்தல் நடைபெறும். அதில், குற்ற வழக்குகள் இல்லாத வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்'' - 2014 ஏப்ரல் 21. உ.பி. ஹர்தோய்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் நிறுத்தப்பட்ட 428 வேட்பாளர்களில் 143 பேர் மீது குற்ற வழக்குகள் இருந்தன. அரசியலைத் தூய்மைப்படுத்துவதை வேட்பாளர்களிலிருந்தே ஆரம்பித்திருக்கலாம். ஆனால், அவர்கள் ஜெயித்து வந்த பிறகு, `சிறைக்கு அனுப்புவோம்' என்பது எல்லாம் எந்த மாதிரியான டிசைன். மோடி சொன்ன அந்தக் குழு அமைக்கப்படவே இல்லை.
குற்றப் பின்னணி மக்கள் பிரதிநிதிகளைப் பாதுகாப்பவர்கள் சவுக்கிதார் அல்ல.

30. ``தேர்தல் ஆணையம் பாரபட்சமாகச் செயல்படுகிறது. வன்முறைகளையும், கள்ள வாக்களிப்பதையும் தடுக்கத் தவறிவிட்டது. இப்படிச் சொல்வதற்காக என் மீது வழக்கு போடட்டும். நீங்கள் ஏன் செயல்படவில்லை? உங்கள் உள்நோக்கம் என்ன?'' - 2014 மே 5. மேற்கு வங்காளம், அசன்சோல்.
`மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும்' எனச் சொன்ன சையது சுஜா உள்ளிட்டோர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு... 50 சதவிகித ஒப்புகைச் சீட்டை எண்ண முடியாது எனப் பிடிவாதம், ``குக்கர் சின்னத்தை தினகரனுக்குக் கொடுக்க முடியாது'' என நீதிமன்றத்தில் வாதம். மோடியின் விண்வெளி சாதனை பேச்சு விதிமீறல் இல்லை எனச் சப்பைக்கட்டு... அறிவிப்புகள், திட்டங்களை மத்திய அரசு வெளியிடுவதற்கு வசதியாகத் தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம், எனத் தேர்தல் கமிஷன் செயல்பாடுகள் சந்தி சிரித்தன. தேர்தல் ஆணையம் இப்போது பாரபட்சமாகச் செயல்படுகிறது என இப்போதும் மோடியால் சொல்ல முடியுமா?

31. ``மீன்கள் அதிகம் இருக்கும் இடத்தை சேட்டிலைட் மூலம் கண்டறிந்து அது தொடர்பான தகவல் மீனவர்களின் செல்போன்களுக்குத் தெரிவிக்கப்படும். இதனால் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று மீன்களை அதிக அளவில் பிடிக்கலாம். குஜராத்தில் உள்ள இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும். விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் மீனவர்களைப் பாதுகாப்போம்'' - 2014 ஏப்ரல் 17. தமிழ்நாடு, ராமநாதபுரம்
கன்னியாகுமரியில் ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்கும் நவீனக் கருவிகள்கூட நம்மிடம் இல்லை. `குகையில் சிக்கிய மாணவனை மீட்டது தாய்லாந்து. ஒகியில் சிக்கிய தமிழக மீனவனை மீட்கவில்லை. 'தாய்நாடு' என்கிற குரல்கள் மத்திய அரசின் செவிகளில் விழவில்லை.

32. ``நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்காள முதல்வர் தனது பணியைச் செய்கிறாரா என்பதை உறுதி செய்வோம். பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததும் மம்தா தன் நாடகத்தை நிறுத்திவிட்டு, அரசைத் தீவிரமாக நடத்துவார்'' - 2014 மே 5. மேற்கு வங்காளம் அசன்சோல்.
மம்தாவின் பணியை எப்படியெல்லாம் மோடி உறுதி செய்தார் என்பதை மத்திய அரசுக்கும் மேற்கு வங்காளத்துக்கும் இடையே நடந்த அறிக்கைப் போர் உறுதிசெய்யும். மேற்கு வங்காள அரசின் அனுமதியைப் பெறாமல் விசாரணை செய்ய வந்த சி.பி.ஐ அதிகாரிகளைக் கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தி போர்பரணி பாடினார். ஐந்தாண்டுகள் சும்மா இருந்துவிட்டு, தேர்தல் நேரத்தில் மம்தாவுக்கு எதிராக வாள் சுழற்றியது மத்திய அரசு.

33. ``பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தனது ஆட்சியில் `ஜெய் ஜவான், ஜெய் கிஸான்' (ராணுவ வீரர் வாழ்க, விவசாயிகள் வாழ்க) என்றார். மன்மோகன் சிங் ஆட்சியில், `மர் ஜவான், மர் கிஸான்' (ராணுவ வீரர் ஒழிக, விவசாயிகள் ஒழிக) என்ற கோஷத்தை எழுப்பியுள்ளனர். பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் ராணுவ வீரர்களின் உயிர் பாதுகாக்கப்படும். விவசாயிகள் தற்கொலை முற்றிலும் தடுக்கப்படும்'' - 2014 மே 11. உ.பி, ராபர்ட்ஸ்கஞ்ச்.
புல்வாமா தாக்குதலில் இறந்த 40-க்கும் மேற்பட்ட. சி.ஆர்.பி.எஃப் வீரர்களும், டெல்லியில் பிரதமர் அலுவலகம் முன்பு நிர்வாணமாக ஓடிய விவசாயிகளும் நம் கண்முன் வந்து போகிறார்கள்.

34. ``காங்கிரஸ் தலைவர்கள் ஊழல்வாதிகளாக இல்லாவிட்டால், அவர்கள் ஏன் கறுப்புப் பணம் குறித்து கவலைப்படுகிறார்கள்? வெளிநாட்டு வங்கிகளில் குவித்த அந்தப் பணத்தை நாங்கள் திரும்பக் கொண்டு வருவோம்'' - 2014 பிப்ரவரி 16. இமாச்சல பிரதேசம், சுஜன்பூர்.

கறுப்புப் பணம் வரவில்லை. கறுப்புப் பணத்தை கொண்டு வருவோம் என்பதைத்தான் இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட கறுப்புப் பணத்தின் மதிப்பு எவ்வளவு என்பதை மோடிதான் சொல்ல வேண்டும்.

35. ``ஈரோட்டு மஞ்சளை இந்தியாவே நேசிக்கிறது. ஈரோடு விவசாயிகளுக்கு இந்தியா நன்றிக் கடன்பட்டுள்ளது. பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததும் மஞ்சளை ஆயுர்வேதம் மட்டுமன்றி, அழகுசாதனப் பொருளாகவும் மாற்ற நடவடிக்கை எடுப்போம்'' - 2014 ஏப்ரல் 17. ஈரோடு
இந்த அறிவிப்பும் புஸ்வாணம்தான். மஞ்சளுக்கு புவிசார் குறியீடே போன மாதம்தான் அளித்திருக்கிறார்கள்.

36. ``2009 தேர்தலில் ஆந்திராவில் பெற்ற வெற்றிதான் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உதவியது. ஆனால், இன்று ஆந்திர மக்கள் துயரத்தில் உள்ளனர்'' - 2014 பிப்ரவரி.18. கர்நாடகா, தாவணகெரே
ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஆந்திர மக்களுக்காகக் கவலைப்பட்ட மோடி அந்த மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்தைக் கடைசி வரையில் வழங்கவில்லை.

37. ``மத்திய அரசின் செயல்பாடுகளில் சோனியா காந்தி தலையிட்டு ஆட்சியைச் சீர்குலைத்துவிட்டார். காங்கிரஸை இந்த முறை சி.பி.ஐ-யால்கூட காப்பாற்ற முடியாது'' - 2014 ஏப்ரல் 6. உ.பி., பிஜ்னோர்.
ரஃபேல் ஊழல், அமைச்சர் விஜயபாஸ்கரின் குட்கா உள்ளிட்ட வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும் நிலையில், சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மாவை அதிரடியாக மாற்றிவிட்டு புகார்களுக்கு உள்ளான ராகேஷ் அஸ்தனாவை திணித்தது மத்திய அரசு. அலோக் வர்மாவுக்கும், ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே நடந்த பனிப்போர் அப்பட்டமாக வெளிப்பட்டது. புதிய இயக்குநராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவை, `பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் மன்னிப்பு வழங்க முடியாது. மூலையில் போய் அமருங்கள்' என உச்ச நீதிமன்றம் விநோத தண்டனை கொடுத்தது எல்லாம் சி.பி.ஐ-க்குக் கிடைத்த சர்டிஃபிகேட்.

38. ``நாட்டுக்காக வாழ்வதும் உயிர் விடுவதும்தான் எங்கள் சித்தாந்தம்'' - 2014 மார்ச் 29. உத்தரப்பிரதேசம், பாக்பத்
எல்லையில் ராணுவ வீரர்களும் வங்கி வாசல்களில் குடிமகனும் உயிரை விட்டதுதான் மிச்சம்.

39. ``ராகுல் காந்தியின் காவலர்கள் யார்? ஆதர்ஷ் ஊழலில் சிக்கிய அசோக் சவான், மாட்டுத்தீவன ஊழலில் கைது செய்யப்பட்ட லாலு பிரசாத். இவர்கள் நாட்டின் காவலர்களா? இவர்களோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. பாலுக்குக் காவலாக இருக்கிற பூனையை நான் இன்னும் பார்க்கவில்லை'' - 2014 ஏப்ரல் 3. ஜார்கண்ட், ஜூமார்டாலியா.
சேகர் ரெட்டியின் கூட்டாளியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் யார்? குட்காவோடு கூட்டணி போட்ட விஜயபாஸ்கர் யார்? தனது உறவினர்கள், நெருக்கமானவர்கள் வீடுகளில் ரெய்டு நடந்தபோது அதுபற்றி வாய் திறக்காத எடப்பாடி யார்? எடப்பாடிக்கு உறவினரான ராமலிங்கத்தைச் சுற்றி நடந்த சோதனையில் புதியதாக வெளியிடப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கின. இப்படி பாலுக்குக் காவலாக இருக்கிற பூனைதான், இந்தத் தேர்தலில் கூட்டணி அமைத்திருக்கிறது.

40. ``நமது ராணுவத்துக்கு போதிய ஆயுதங்களோ, தளவாடங்களோ இல்லை. நீர்மூழ்கிக் கப்பல்கள் விபத்துக்குள்ளானதால், கடற்படை தளபதி பதவி விலகினார். பாதுகாப்புத் துறைக்கு மத்திய அரசு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை'' - 2014 ஏப்ரல் 9. கேரள, காசர்கோட்.
இந்தக் குற்றச்சாட்டுகளை சுமத்திய மோடி அரசின் மீதுதான் இன்றைக்கு ரஃபேல் விமான முறைகேடு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது.

41. ``சாரதா சிட்பண்ட் மோசடியில், தொடர்புடைய ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய கொள்ளையில் ஈடுபட்டவர்கள், அதிக நேரமும், வாய்ப்பும் கிடைத்தால், என்ன செய்வார்களோ?'' 2014 ஏப்ரல் 11. மேற்கு வங்காளம், சிலிகுரி.
ஐந்தாண்டுகளாக சும்மா இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் கோதாவில் குதித்த சி.பி.ஐ.-க்கு மம்தாவுக்கும் இடையேயான போராட்டத்தால் சிக்கல் எழுந்தது.

42. ``கடந்த 2009 தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது தொடர்பாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் காங்கிரஸ் கட்சி ஏமாற்றிவிட்டது. காங்கிரஸைத் தேர்தலில் இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும்'' - 2014 ஏப்ரல் 20. அஸ்ஸாம். ககோய்ஜன்.
இதே குற்றச்சாட்டை தற்போது மோடியைப் பார்த்து சொல்லிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

43. ``தேர்தல் நேரத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஏழைகள் நினைவு வருகிறது'' - 2014 ஏப்ரல் 11, ஒடிசா, பாலேஸ்வர்.
பி.ஜே.பி-யின் இப்போதைய தேர்தல் அறிக்கையில், `விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கும் திட்டம்', '60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம்' போன்ற அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். பி.ஜே.பி-க்கு தேர்தல் நேரத்தில்தான் விவசாயிகளின் நினைவு வந்துள்ளதா?

44. ``சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா, ராஜஸ்தான் மாநிலத்தில் நிலங்களை வாங்கிக் குவித்ததாகக் கூறப்படும் புகார் குறித்து பி.ஜே.பி. ஆட்சி அமைந்ததும் விசாரிப்போம்'' - 2014 ஏப்ரல், ராஜஸ்தான், பலோத்ரா.

ராபர்ட் வதேராவின் நில அபகரிப்பு புகார் தொடர்பாக எட்டு நிமிட வீடியோ ஒன்றை 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வெளியிட்டது பி.ஜே.பி. இதன் தொடர்ச்சியாகத்தான் மோடி அந்தக் கருத்தை வெளியிட்டார். இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரியங்கா, காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகுதான் ராபர்ட் வதேராவின் மீதான வழக்குகள் வேகமெடுக்க ஆரம்பித்தன.

45. ``2009-ம் ஆண்டு காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 100 நாள்களில் விலைவாசியைக் குறைப்பதாகவும், 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்கள். அது, தேர்தல் அறிக்கை அல்ல; மோசடி அறிக்கை'' - 2014 ஏப்ரல் 30, இமாசலப்பிரதேசம், பலம்பூர், மாண்டி, சோலன்.
``கறுப்புப் பணத்தை மீட்டு 15 லட்சம் ரூபாய் போடுவேன்'' என மோடி சொன்னதையும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவோம்... ராமர் கோயில் கட்டுவோம்... பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவோம் எனக் கடந்த தேர்தலில் மோடி சொன்ன வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதே கூட்டத்தில் இன்னொன்றையும் சொன்னார் மோடி. ``மக்களை ஏமாற்றினால் மன்னிக்கவே மாட்டார்கள். தவறை மன்னிப்பார்கள், ஆனால் ஏமாற்றுவதை மன்னிக்க மாட்டார்கள்'' என்றார். இப்போது அது மோடிக்கும் பொருந்துகிறது.

46. ``ராகுல் காந்திக்கு வறுமை என்றால் என்னவென்றே தெரியாது. அவர் தாஜ்மகாலுக்கு சுற்றுலா செல்வதுபோல ஏழைகளின் வீடுகளுக்குச் செல்கிறார்'' - 2014 ஏப்ரல் 30, இமாசலப்பிரதேசம் பலம்பூர், மாண்டி, சோலன்.
`சுற்றுலா செல்வதுபோல மோடி வெளிநாடுகளுக்குச் சென்றுவருகிறார்' என்கிற குற்றச்சாட்டை காங்கிரஸ் இப்போது முன்வைக்கிறது.

47. ``மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள நதிகளை இணைப்போம். அது ராயலசீமாவுக்கு பலன் தரும்'' - 2014 மே 1, ஆந்திரா, மதனப்பள்ளி. 
பி.ஜே.பி. இப்போது வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையிலும் நதிகள் இணைப்பு பற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பை நடிகர் ரஜினி வரவேற்றுள்ளார். 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் ``நதிகளை இணைப்போம்'' என்றார் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய். அப்போதும் ரஜினி அதனை வரவேற்று, ``என் ஓட்டு நதிகளை இணைக்கும் பா.ஜ.க-வுக்குதான்'' என்றார். தேர்தல்களும், நதிகளும் கடந்து போகின்றன. அறிவிப்பு என்னவோ அப்படியேதான் இருக்கிறது.

48. ``கிரிக்கெட்டைப் பற்றிப்பேச நேரமுள்ள வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவாருக்கு உயிரை மாய்த்துக்கொள்ளும் விவசாயிகளைக் காப்பாற்ற நேரமில்லை'' - 2014 ஏப்ரல். மகாராஷ்டிரா.
அந்த வார்த்தைகள், இப்போது மோடிக்கே பொருந்தும். பல நாடுகளுக்குச் சுற்றிக்கொண்டிருந்த மோடியால், விவசாயிகள் மரணத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் பல்வேறு போராட்டங்களை நடத்தியபோதும், மோடி அரசு அவர்களை கண்டுகொள்ளவில்லை. அரைநிர்வாணமாக அவர்கள் ஓடியபோதும் மோடி ஓடி வரவில்லை.

49. ``குற்றவாளிகள் மயமாக அரசியல் மாறுவது வருத்தத்தை அளிக்கிறது. இதற்கு காங்கிரஸ்தான் பொறுப்பு. ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான், குற்றவாளிகளைக் காங்கிரஸ்காரர்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள். குற்றப்பின்னணி கொண்ட மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்தப் பாகுபாடும் நான் காட்ட மாட்டேன்'' -  2014 ஏப்ரல் 14. குஜராத், காந்தி நகர்.
அரசியல் குற்றவாளிகள் மயமாவது பற்றியெல்லாம் அன்றைக்குப் பேசிய மோடிதான், இப்போது முதல்கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் குற்றப் பின்னணி கொண்ட 30 பேருக்கும், இரண்டாவதுகட்டத் தேர்தலில் 16 பேருக்கும் சீட் கொடுத்திருக்கிறார்.

50. ``அமிர்தசரஸ் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் வேட்பு மனுவில் வங்கிக் கணக்குகள் குறித்து எதையும் தெரிவிக்காமல் விட்டுள்ளார். அவரின் குடும்பத்துக்கு வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு இருப்பதாக புகார்கள் தேர்தல் கமிஷனிடம் கூறப்பட்டுள்ளன. இந்தப் புகார்களைத் தேர்தல் ஆணையம் விசாரிக்கவேண்டும். உண்மை நிலையை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்'' - 2014 ஏப்ரல் 13. பார்மர்.

அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிராகப் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2014 தேர்தல் வேட்பு மனுவில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். அப்போது தவறான தகவலைக் கூறுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அதே ஸ்மிருதி இரானி, இப்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் `பட்டப்படிப்பை முடிக்கவில்லை' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மோடி தன் திருமணம் தொடர்பான விவரத்தை ஏற்கெனவே பல தேர்தல்களில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் குறிப்பிடாமல், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் மனைவி யசோதா பென் எனக் குறிப்பிட்டிருந்தார். எனவே, அமரீந்தர் சிங் பற்றிப் பேசுவதற்கு பி.ஜே.பி. தகுதியை இழந்துவிட்டது.

மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக, மோடி தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், ``காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பொய்கள் நிறைந்தது'' என விமர்சித்திருந்தார்.

கடந்த 2014 ஏப்ரல் 26-ம் தேதி குஜராத் மாநிலம் சூரத் பிரசாரக் கூட்டத்தில் மோடி, ``தாய்க்கும், மகனுக்கும் (சோனியா, ராகுல்) இடையே பொய் சொல்வது குறித்த போட்டி நடைபெற்று வருகிறது. தாய் ஒரு பொய் சொன்னால், அவரது மகன் இரண்டு பொய்களைச் சொல்கிறார். போட்டிபோட்டு பொய் சொல்வதை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.

இதை சொல்லும் மோடிதான் இன்று இந்தியாவில் பொய்களை மட்டுமே மேடைகளில் ஆவேசமாக சொல்லும் தலைவராக இருக்கிறார்.
அந்தப்பொய்யர்தான் பிரதமர் என்பது மக்களுக்கு வேதனையான விடயம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
  இன்று சார்லி சாப்ளின் பிறந்த நாள்.
சினிமா இருக்கும் வரை சாப்ளின் இருப்பார்.
"சினிமாவைப் பொறுத்தவரை மக்களுக்கு என்ன வேண்டும் என்பது தெரியாது; என் கலை வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டது இதைத்தான்'
                                                                               - சார்லி சாப்ளின்
t1sj4tgo


சினிமா மாமேதை சார்லி சாப்லின் சொன்ன இந்த வாசகத்தில் எவ்வளவு பொருள் பொதிந்துள்ளது. ஊடகத் துறையில் `அஜெண்டா செட்டிங்' (Agenda Setting) என்கின்ற சொற்பதம் முன்வைக்கப்படும். இது ஒரு தியரி.
இந்த தியரியின்படி, மக்கள் எதைப் பேச வேண்டும், எதை சிந்திக்க வேண்டும், எதைத் தெரிந்துகொள்ள வேண்டும், என்பதை வெகுஜன ஊடகங்களே முடிவு செய்கின்றன என்பதுதான் இதன் மூலம்.
இதை சுலபமாக புரிந்துகொள்ள முடியும். மிகப் பிரபலமான நாளிதழோ, செய்திச் சேனலோ வெளியிடும் செய்தியைத் தான் பெரும்பான்மை மக்கள் பார்ப்பர். உண்மையா, இல்லையா என்பதைத் தவிர்த்து அந்தச் செய்தியில் என்ன சொல்லப்படுகிறதோ அதுவே பேசு பொருளாக மாறும்.
இதைத்தான் சார்லி சாப்லின், `மக்களுக்கு என்ன வேண்டும் என்பது தெரியாது' என்கிறார்.
d5oureq8


அவரின் மாஸ்டர் பீஸ் திரைப்படங்களில் ஒன்றான, `சிட்டி லைட்ஸ்' (City lights) அவரின் மேன்மைக்கு ஓர் சான்று.
 கிட்டத்தட்ட சாப்லினின் அனைத்துப் படங்களுமே சினிமா ரசிகர்களுக்குப் பொக்கிஷம்தான்.
ஆனால், இது சாப்லினின் பெஸ்ட்.
காரணம் அதன் க்ளைமாக்ஸ்.
luo4t71
பார்வையற்றத் தனது காதலிக்கு எப்படி சிகிச்சைப் பணம் கொடுப்பது என்று செய்வதறியாது தவிக்கிறான் அந்த சாமனியன்.
வசதிபெற்ற நண்பன் அந்த சாமனியனுக்கு வேண்டிய பணத்தைக் கொடுக்கிறான். அதை காதலியிடம் கொடுத்து, `இதுவரை நான் மட்டுமே உன்னைப் பார்த்தேன்.
இனி நீயும் என்னைப் பார்ப்பாய்' என்று சிகிச்சைக்கு வழியனுப்பி வைக்கிறான் சாமனியன். போதையில் இருந்தபோது பணத்தைக் கொடுக்கும் நண்பன், போதை தெளிந்தவுடன், `என்னிடமிருந்து பணத்தை அவன் திருடிச் சென்றுவிட்டான்' என்று போலீஸிடம் முறையிடுகிறான்.
 அந்த சாமனியன் கைது செய்யப்படுகிறான்.
k61b7tag
சில ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து விடுவிக்கப்படும் சாமனியன் வந்து சேரும் இடம் தன் காதலியை முதன்முதலாக பார்த்த தெரு. இப்போதும் அவளை அங்கே பார்க்கிறான்.
அவள் இன்னும் அழகாக, இன்னும் அன்பு கொப்பளிக்கும் புன்னகையுடன் இருக்கிறாள். பார்வை பெற்ற அவளுக்கு, இவன்தான் நம் காதலன் என்று தெரியவில்லை.
அவனை ஒரு கோமாளி என்று பார்த்து சிரிக்கிறாள். மனமுடையும் காதலன், `எங்கிருந்தாலும் வாழ்க…' என்பதைப் பார்வை வழியே சொல்லி நகர்கிறான்.
அப்போது, அந்தக் காதலி அவன் கைகளை ஏதேச்சையாக தொட நேர்கிறது. அந்த கணத்தில் அவள் முகத்தில் இருக்கும் கேலிப் புன்னகை மறைகிறது.
நம் காதலனைத்தான் எல்லோரையும் போல எள்ளி நகையாடினோமா என்று பதபதைக்கிறாள்.
அவனைப் பார்த்து, தலையை மட்டும் அசைத்து, `நீ தானே' என்று சைகையால் கேட்கிறாள்.
 அவனும் எதுவும் பேசாமல் கண்ணீர் கசிய, `ஆம்' என்று தலையாட்டுகிறான்.
 படம் முடிகிறது.
அந்த 10 நிமிட க்ளைமாக்ஸ் மேஜிக்கிலிருந்து நம்மால் மீண்டு வருவதற்கு முன்னரே படத்தின் டைட்டில் கார்டு முடிகிறது.

vt1b7h5
உண்மையில் ஒரு சராசரி மசாலா படமென்றால், இருவரும் கட்டியணைத்து, முத்தங்கள் பரிமாறி, கண்ணீர் மல்க எதாவது வசனங்கள் பேசி கொன்றெடுத்து இருப்பார்கள்.
ஆனால், சிட்டி லைட்ஸ் சராசரி படம் அல்ல. சாப்லின் சராசரி கலைஞன் அல்ல.
சினிமா என்றால் என்ன என்பதற்கான இலக்கணம் எழுதிய வெகு சிலரில் அவரும் ஒருவர்.
இன்றும் அவரின் முக்கியப் படங்களிலிருந்து காட்சிகள் உலகத்தின் ஏதோ ஒரு மூளையில் திரையிடப்பட்டுக் கொண்டே உள்ளன. அவரின் படங்களை சினிமா சார்ந்து படிக்கும் ஆய்வு மாணவர்கள், அதை கட்டுடைத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.
சராசரி சினிமா ரசிகன் சலிப்பில்லாமல் அவரின் படங்களை பார்த்துத் தீர்த்து வருகிறான்.
மவுனப் படங்கள் மூலம் புரட்சி ஏற்படுத்திய சாப்லினின் படங்கள்தான் இன்றும் சினிமா வகுப்புகளில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
dhusg7cg
அவர் படங்களின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் என்னவென்று அவரே சொல்கிறார்.
 `மக்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு, பிறகு அதற்கு முரணான ஒன்றைச் செய்வது மிகப் பெரிய மகிழ்ச்சிகளில் ஒன்று' என்று சாப்லின் ஒரு முறை சொல்லி இருக்கிறார்.
இதுதான் அவர் எடுத்தப் படங்களின் தொடர் வெற்றிக்குக் காரணம். ஏனென்றால் அவர் சினிமாவை எடுக்கவில்லை. உருவாக்கினார்.
 மற்றவர்கள் போட்ட சாலையில் பயணிக்காமல், புது பாதையைக் கண்டடைந்தார். மக்களை தன்பால் சுண்டி இழுத்தார். அந்தப் பாதையில் பயணிக்க நினைத்தவர்கள் பலர்.
 அதில் பயணப்பட முயன்று தடுக்கி விழுந்தவர்கள் பலர்.
 உலகம் இருக்கும் வரை சினிமா இருக்கும்.
 சினிமா இருக்கும் வரை சாப்ளின் இருப்பார். 
 59teke9g

 ஏன் தாமரை மலர வேண்டாம் ?

350 ரூபாய் கேஸ்சிலிண்டரை 900 ரூபாயாக உயர்த்திய அடாவடிக்கு

70 ரூபாய்க்கு பார்த்த கேபிள் டிவியை 250 முதல் 350 ரூபாய்க்கு உயர்த்தியதால் ஏற்படும் பாதிப்பிற்கு

500ரூ, 1000ரூ செல்லாதுனு சொல்லி பேங்க் வாசலில் நிற்க வைத்து 100க்கும் மேற்பட்ட மக்கள் சாவுக்கு காரணமாக இருந்த துரோகத்திற்கு

ஜிஎஸ்டியை கொடூரமான முறையில் அமலாக்கி சிறு குறு தொழில்களை அழித்த நடவடிக்கைக்காக

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பை வழங்குவேன் என்று சொல்லி பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் மட்டும் பல கோடி வேலைகளை ஒழித்து இளைஞர்களை நடுத்தெருவில் நிறுத்திய செயலுக்காக

ஜவுளித்தொழிலை நாசமாக்கி, கைத்தறி, விசைத்தறி, பஞ்சாலை, பனியன் உள்ளிட்ட தொழில்களை மூட வைத்த குற்றத்திற்காக

நீட் தேர்வைக் கொண்டு வந்து அனிதா, பிரதீபா மரணத்திற்கும், பல லட்சம் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுகளை குழி தோண்டி புதைத்த மன்னிக்க முடியாத செயலுக்காக

ராணுவத்திற்கான ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் செய்ததற்காக

புலனாய்வு துறை எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி புல்வாமா தாக்குதல் தீவிரவாதிகள் நடத்த காரணமாக இருந்ததற்கு

இந்தியாவின் அரசியல் சாசன மாண்புகளை குழி தோண்டி புதைத்து வருவதால்


100 நாட்கள் தில்லி வீதிகளில் போராடிய விவசாயிகளை சந்திக்க நேரம் கொடுக்கமாட்டேன் என்று அம்மணமாய் ஓடவிட்ட குற்றத்திற்காக

இந்தியாவிற்கான பிரதமராக இல்லாமல் வெளிநாட்டு கம்பெனிகளின் பிரதமராக அதிகம் அங்கேயே இருந்ததால்

வெற்றி பெற்றவுடன் நாடாளுமன்றப்படியை தொட்டு வணங்கி சென்று 5 ஆண்டுகள் முழுமையாக திரும்பிப்பார்க்காமல் ஊர் சுற்றியதற்காக

ரேசன் அரிசி, சர்க்கரை விலைகளை உயர்த்தி ஏழைகளை வதைத்த காரணத்திற்காக

ஏழைகளை வேலைதேடி இடம் பெயர துரத்திவிட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ரூ. 2200 கோடிகள் தினசரி லாபம் கிடைக்க சலுகை வழங்கியதற்காக

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களின் மீது கொடூர கொள்ளை நடத்தியதற்காக

வேளாண் விளை நில மண்டலங்களை ஒழித்துவிட்டு ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை கொண்டு வந்து மக்கள் வாழ்வாதாரங்களை சீரழிப்பதற்காக

பயிர்க் காப்பீடு என்ற பெயரில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 43 கோடி லாபமும், பணம் போட்ட விவசாயிகளுக்கு ஏமாற்றமும் ஏற்படுத்தியதற்காக

எட்டுவழிச்சாலை, உயர்மின்னழுத்த கோபுரம், கேஸ்பைப் லைன் என விவசாய விளைநிலங்களை அழிக்கும் திட்டங்களுக்கு முடிவு கட்ட

சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வேண்டும் என ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்களில் 13 பேரை குறி வைத்து சுட்டுக் கொன்றதற்கு நீதிகேட்டு

கஜாபுயல், இயற்கை பேரிடர் காலங்களில் எட்டிப்பார்க்காத மோடி தேர்தல் என்றவுடன் இத்தனை முறை படையெடுக்கும் சதிராட்டத்திற்கு முடிவு கட்ட

100 நாள் வேலைத்திட்டத்தில் வேலைநாட்களை
30 சதவீதம் குறைத்து கிராமப்புற தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை நசுக்கியதற்காக

மதவெறியை தூண்டி மதக்கலவரங்களை நடத்தி சிறுபான்மையினர், தலித்கள் மீது நடத்தி வரும் பித்தலாட்ட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க

ஜல்லிக்கட்டு என்ற தமிழக பண்பாட்டை பாதுகாக்க தனி சட்டம் கேட்டு அமைதியாக லட்சக்கணக்கில் திரண்டு போராடிய இளைஞர்கள் மீது காவல்துறை கொண்டு காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல் நடத்திய மோடி/ஒபிஎஸ், இபிஎஸ் ஆட்சிகள் துரத்தப்பட

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய ஆட்சியாளர்கள் வட மாநிலங்களில் பாலியல் வன்முறையை கும்பல் கலாச்சாரமாக மாற்றிய பிஜேபி ஆட்சியை அப்புறப்படுத்த

பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு ஒதுக்கிய நிதியை மோடியின் விளம்பரத்திற்காக பயன்படுத்திய குற்றத்திற்காக

வாழ்வாதார கோரிக்கை வைப்பவர்களை எல்லாம் தேசவிரோதி என முழங்கும் மோடிக்கு பாடம்புகட்ட

இறுதியாக சொல்ல ஓராயிரம் குற்றங்கள் இருந்தாலும் 15 லட்சம் வங்கியில் போடுவேன், 2 கோடி வேலை தருவேன், விவசாயிகளுக்கு ஒன்றரைமடங்கு விலை தருவேன் என பொய்களை மட்டுமே பேசி ரூ.500, 1000 செல்லாது, ஜிஎஸ்டிவரி என மக்களை தவிக்கவிட்டு பல நூறுபேர் சாவுக்கு காரணமாக இருந்துவிட்டு இன்று சும்மா சொன்னோம் என்று வாயில் வடை சுடும் ஒட்டுமொத்த குற்றத்திற்கு பாடம் புகட்ட நாடாளுமன்ற தேர்தலில் மோடியை தோற்கடிக்கவேண்டும், அதற்கு ஒத்து ஊதும் எடப்பாடி, ஒபிஎஸ் ஆட்சியையும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தோற்கடிக்க வேண்டும். அதற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் தமிழகத்தில் வெற்றிபெற வேண்டும்.

                                                                                                                  -செ.முத்துக்கண்ணன்

 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ம (ப)ணமிருந்தால் மார்க்கமுண்டு.
தேர்தலில் பண விநியோகத்தை தடுப்பதில் தேர்தல் ஆணையம் தோல்வியடைந்துவிட்டது என்றே கூறத் தோன்றுகிறது.
 மத்திய ஆளுங் கட்சியான பாஜக, மாநில ஆளுங்கட்சியான அதிமுகஇடம் பெற்றுள்ள கூட்டணியினர் தமிழகம் முழுவதும் பணத்தை வெள்ளமாக பாய விடுகின்றனர். வாக்காளர்களை விலை கொடுத்து வாங்க பலஇடங்களில் பண விநியோகம் தாராளமாக எவ்விதத்தடையுமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தேர்தல் அதிகாரிகளும் ஆங்காங்கே வாகனசோதனை என்ற பெயரில் வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது பணம் மற்றும் நகை கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.

ஆனால் ஆளுங்கட்சியினர் சர்வசாதாரணமாக பண விநியோகம் செய்து கொண்டிருக்கின்றனர்.

 குறிப்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகன் போட்டியிடும் தேனி மக்களவைத்தொகுதியில் ஒரே நாள் இரவில் கனகச்சிதமாக பண விநியோகம் நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழக எம்எல்ஏக்கள் விடுதியில் உள்ள இரண்டு அமைச்சர்கள் அறைகள் உட்பட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து எந்ததகவலும் வெளியிடப்படவில்லை. மாறாக எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத சிலரிடம் சோதனை நடத்தப்பட்டாலும் வருமான வரித்துறையே அதுகுறித்து பெருமளவு செய்திகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்கிறது.
ஆளுங்கட்சியினரின் பண விநியோகம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் செய்தால்பெயரளவுக்கு போலீசாரே அனுப்பி விசாரிக்கிறார்கள். அவர்கள் உடனடியாக பணத்தை இடமாற்றம் செய்து விடுகின்றனர்.

இதற்குதான் இந்தவிசாரணை நாடகம். மறுபுறத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் எதிர்க்கட்சியினரை பண விநியோகம் செய்ய முயன்றதாக பிடித்து காவல்நிலையத்தில் உட்கார வைக்கும் காரியங்களும் நடந்து கொண்டிருக்கிறது.

அடுத்த நாட்களும் பண விநியோகம் ஆளுங்கட்சியினரால் முழு வீச்சில் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது என்பதுதான் கேள்வி.
பல்வேறு நவீன உத்திகளை பயன்படுத்தி ஆளுங்கட்சியினர் பண விநியோகம் செய்யதிட்டமிட்ட நிலையில், காவல் துறை வாகனம், ஆம்புலன்ஸ் போன்றவையும் இதற்காக பயன்படுத்தப்படுவதுதான் கொடுமையிலும் கொடுமை.சாதாரண வியாபாரிகள், விவசாயிகளிடம் சோதனை என்ற பெயரில் ஆவணமில்லை என்றுகூறி பணத்தை பறிமுதல் செய்தவர்கள் தற்போது ஆளுங்கட்சியினரின் அத்துமீறலையும் அராஜகத்தையும் வேடிக்கை பார்ப்பதோடு துணை போவதும் தேர்தல் நடைமுறைகுறித்த நம்பகத்தன்மையையே பாதிப்படையச்செய்துள்ளது.
இனியாவது பண விநியோகத்தைதடுக்க தேர்தல் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைஎடுக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சிகளின் ஒரு பிரிவு என்றே புரிந்து கொள்ளப்படும்.
தேர்தல் ஆணையம் நினைத்தால் பணப்பட்டுவதாவை நிறுத்தி விடலாம்.

ஆளுங்கட்சிகளுக்கு ஆதரவாக பணப்பட்டுவாடாவை நடத்த தேர்தல் ஆணையமே துணை போகிறது.தேர்தல் பார்வையாளர்கள்,காவலர்கள் கண்டு கொள்ளாததாழும்,எதிர்க்கட்சிகள் மீது மட்டுமே பணம் கொண்டுபோகும் வழக்குகளைப்பதிவதாழும் தேர்தல் ஆணையமே அசிங்கப்பட்டு நிற்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
  இதுவும் பொய் தானா 
நாட்டுக்கு நாங்கள்தான் காவலாளி என்று கூறி, பிரதமர் மோடியில் இருந்து அவரது கட்சியினர்அனைவரும், பெயருக்கு முன்னதாக ‘சவுக்கிதார்’ (காவலாளி) என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், “பாஜக-வினர் காவலாளிகள் கிடையாது; அவர்கள்திருடர்கள்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.
 “பாஜகவினரால் நாட்டையும், ஏழை மக்களையும் காப்பாற்ற முடியவில்லை. பணக்காரர்களுக்குத்தான் மோடி காவலாளியாக இருக்கிறார்” என்றும் ராகுல் சாடி வருகிறார்.
இதனிடையே, பிரதமர் மோடி, நாட்டில் இருக்கும் 25 லட்சம் காவலாளிகளுடன் ஆடியோ மூலம் தொடர்பு கொண்டார் என்றும், இந்தக் கூட்டத்திற்கு பாஜகஎம்.பி., சின்ஹா ஏற்பாடு செய்திருந்தார் என்றும் ஒரு செய்தி, அண்மையில் ஊடகங்களில் பரப்பப்பட்டது.


அதாவது, கேப்சியில் (தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் மத்தியக் கழகம்) பதிவு செய்து, 22 ஆயிரம் நிறுவனங்களில் பணிபுரியும் 85 லட்சம் தனியார் காவலாளிகள் மோடியுடன் நடந்த ஆடியோ உரையாடலில் கலந்துகொண்டனர் என்று கூறியிருந்தனர்.

அவர்களுடன் உரையாடும் போது “நானும் ஒரு காவலாளி” என்று பிரதமர் மோடி கூறியதாகவும், அதைக்கேட்டு தனியார் நிறுவன காவலாளிகள் நெக்குருகி போய்விட்டதாகவும் கதை விட்டிருந்தனர்.
ஆனால் தற்போது அது உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது.

 இதை கேப்சி என்ற அந்த நிறுவனமே போட்டு உடைத்துள்ளது.

இதுதொடர்பாக கேப்சி கழகத்தின் தலைவர் குன்வர் விக்ரம்சிங், பிரதமருக்கே மார்ச் 29-ஆம்தேதி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில், “பிரதமரின் பேச்சைக்கேட்க தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் காவலர்கள் ஆர்வத் துடன் காத்திருந்தனர்; ஆனால், இறுதியில் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்; எங்களுக்கு தெரிவிக்கப்பட்டதுபோல், நீங்கள்ஆடியோ பிரிட்ஜில் தொடர்பு கொள்ளாமல், பேஸ்புக் வாயிலாக 500 காவலர்களுடன் மட்டும் தொடர்பு கொண்டது தெரிய வந்தது; இதனால், காவலர்கள் ஏமாற்றம் அடைந்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மோடியோடு உரையாடுவதற்கான “இணைப்பை ஆர்.கே. சின்ஹாவின் மகன் ரிதுராஜ் சின்ஹாவின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு சர்வீசுக்கு மாற்றியிருந்ததும் பின்னர்தான் தங்களுக்கு தெரியவந்தது” என்றும் குன்வர் விக்ரம் சிங், வருத் துத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், பிரதமர் மோடி 85 லட்சம் சவுகிதார்களை சந்தித்ததாக கூறப்பட்ட விஷயத்திலும் நடந்துள்ள மோசடி வெளிச்சத் திற்கு வந்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?