ஓநாயின் அமைதி வேடம் ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற  ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்று திரும்பும் வழியில், தென்கொரிய அரசின் மூலமாக திடீரென அழைப்பு விடுத்து, பன்முஞ்சம் எல்லை பகுதி யில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங்கை ஞாயி றன்று திடீரென சந்தித்து மகிழ்ந்திருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கிம்மை சந்தித்து ஒரு ‘ஹலோ’ சொல்லி விட்டு போகலாம் என்று வந்தேன் என வழக்கம் போல வேடிக்கையாக குறிப்பிட்டிருக்கிறார் டிரம்ப். ஆனால் இந்த சந்திப்பு வெறும் வேடிக்கை யல்ல. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சோசலிச வடகொரியாவுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்துவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை என்ற இடத்திற்கு வருவதும், அதில் பின்வாங்குவதும், மீண்டும் மிரட்டிப்பார்ப்பதும், பலனளிக்காமல் மீண்டும் வேறு வழியின்றி பேச்சுவார்த்தைக்கு வருவதுமாக இருக்கிறார் டொனால்டு டிரம்ப். சிங்கப்பூரில் இந்த இரு வருக்கும் இடையே நடந்த முதல் சந்திப்பில் நம்பிக்கை பூத்தது. தன்மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா சம்மதிக்குமானால் அணு ஆயுத திட்டங்களை முற்றாக கைவிட சம்மதிப்பதாக வடகொரியா கூறியது. சரியென்று சொல்லிவிட்டு சென்றார் டிரம்ப். ஆனால் வெள்ளை மாளிகைக்கு சென்று அமர்ந்தவுடன் மாற்றி பேசினார். கிம் மசிய வில்லை. மீண்டும் பேச்சுவார்த்தைக்கான சூழல் எழுந்து வியட்நாம் தலைநகர் ஹனோயில் சந்தித்தார்கள். வடகொரியா மீதான தடைகளை எந்த விதத்திலும் விலக்கிக் கொள்வதற்கு டிரம்ப் தயாராக இல்லை. பேச்சுவார்த்தை தோல்விய டைந்தது. இப்போது மீண்டும் டிரம்ப் தாமாக முன்வந்து சந்திப்பது போல் சந்தித்திருக்கிறார். வரலாற்றில் 60 ஆண்டுகளுக்கு மேலாக - சுதந்திரம் அடைந்த அந்த நிமிடத்திலிருந்து இன்று வரை பல்லாயிரக்கணக்கான துருப்புக் கள், அதிநவீன ஆயுதங்களோடு எந்த நேரமும் தாக்கக்கூடும் என்ற ஆக்கிரமிப்பு மிரட்டலின் பிடியிலேயே ஒரு நாடு இருக்கிறது என்று சொன்னால் அது சோசலிச வடகொரியா தான். எந்த நேரமும் தாக்குவதற்கு தனது படைகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டே, வட கொரியாவுடன் அமைதி பேச்சில் வெற்றி பெற நினைக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.  படைக்குவிப்பு மட்டுமல்ல, உலகிலேயே மிகக் கடுமையான, மிக நீண்டகால பொருளாதார தடை களை அமெரிக்க ஏகாதிபத்தியம், வடகொரியா மீது ஏவி விட்டுள்ளது.  2008 உலகப் பொருளாதார நெருக்கடி துவங்கிய பிறகு அதிலிருந்து மீள்வதுபோல தெரிந்தாலும் மீள முடியாமல் திணறித் தவிக்கிறது முதலாளித்துவம். மீளும் முயற்சியில் வெறிகொண்டு லாப வேட்டையில் இறங்குகிறது. ஆனால் சோசலிச சீனா, ரஷ்யா, ஈரான், வெனி சுலா உட்பட உலகின் பெருவாரியான நாடுகள், உலக முதலாளித்துவத்தின் லாப வேட்டைக்கு இரையாக முடியாது என எதிர்த்து மோது கின்றன. ஜி 20 மாநாட்டில் இந்த மோதல் வெளிப் படையாகவே நடந்துள்ளது. தானடித்த மூப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தான் விரும்பிய வேகத்தில் நகர முடியவில்லை. எனவே மீண்டும் அமைதி வேடம் தரிக்கிறார். கிம் ஜோங் உன்- னுக்கு இந்த வேடம் நன்றாகவே புரியும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இயற்கை வழியில் கொசுவை விரட்டுவோம்

    நாட்டில் மழைகாலம் வந்துவிட்டாலே கொசு தொல்லை அதிகரித்து விடுகிறது. கூடவே மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா போன்ற பல நோய்களும் மக்கள் மத்தியில் பரவ ஆரம்பிக்கின்றன.
ஆனால் இப்பொழுது மழைக்காலத்துக்கும் கொசுவுக்கும் சம்பந்தமில்லை. சென்னை, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களில் ஆண்டு முழுவதும் கொசுவின் ஆட்சிதான்.

ஆண்டுதோறும் தமிழகத்தில் கொசுக்களால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் அவலம் தொடர்கதையாகி வருகிறது.
கொசுக்களின் உற்பத்தியை தடுக்கவும் நோய் பாதிப்புகளை குறைக்கவும் தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்தது, எடுக்கிறது. ஆனால் முழுப் பலன் கிடைப்பது இல்லை. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொசுக்களால் மரணத்தை தழுவி வருவது வேதனை.
கொசுக்களின் உற்பத்தி 
கொசுக்கள் பொதுவாக சுத்தமான நீரில் அல்லது சுத்தமான நீர் இருக்கும் ஈரப்பதமான இடங்களில் முட்டையிடும். சில நேரங்களில் இலைகளில் தேங்கியிருக்கும் நீரிலும் இரண்டு துளி மழை நீரில் கூட முட்டையிடும்.

ஒரு பெண் கொசு 100 முதல் 200 முட்டைகளை இடும். இவ்வாறு இடப்படும் முட்டைகளில் இருந்து வெளியே வரும் புழுக்கள் 5 முதல் 17 நாட்களிலேயே முழுமையான வளர்ச்சி பெற்ற கொசுக்களாக மாறி மனிதர்களின் ரத்தத்தை குடிக்க துவங்கிவிடும்.மேலும் வளர்ச்சி அடைந்த சில நாட்களிலேயே அவை இனப்பெருக்கத்தை துவங்கிவிடும். இவ்வாறு சில வாரங்களிலேயே கொசுக்கள் அதிகளவில் பெருகிவிடும்.

இந்த கொசுக்கள் மூலமாக பலவகை நுண்கிருமிகள் மனிதர்கள் மற்றும் மிருகங்களிடையே பரப்பப்படுகின்றன.
உதாரணமாக பிளாஸ்மோடியம் மலேரியா, பிளாஸ்மோடியம் வைவாக்ஸ், பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் ஆகிய கிருமிகள் மூலம் மலேரியா ஜுரம் தாக்குகிறது.
டி.இ.என்.வி (DENV) என்ற வைரஸ் டெங்கு காய்ச்சலையும் சி.எச்.ஐ.கே.வி (CHIKV) என்ற சிக்கன்குனியா வைரஸ் சிக்கன்குனியா காய்ச்சலையும் மனிதர்கள் உடலில் ஏற்படுத்துகின்றன.
இந்த வைரஸ்கள் அனைத்தும் ஒரு நோயாளியிடம் இருந்து மற்றொரு நோயாளிக்கு அல்லது நோயாளிகளுக்கு கொசுக்கள் மூலமாக பரவுகிறது.
நோயால் பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தை குடிக்கும்போது அவரின் உடலில் உள்ள வைரஸ்கள் கொசுக்களின் உடம்பிற்குள் செல்கின்றன.
அந்த கொசுக்கள் மற்றொருவரின் ரத்தத்தை குடிக்கும் போது தன் உடலில் உள்ள வைரஸை அவரின் உடலில் செலுத்தும். இவ்வாறு தான் கொசுக்கள் மூலம் சிக்கன்குனியா, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் வேகமாக பரவுகின்றன.
கொசுவின் உடலில் இருக்கும் இந்த ஆபத்தான வைரஸ்கள் கொசுக்களை எதுவும் செய்வதில்லை ஆனாலும் மனிதர்களையும் சில விலங்குகளையும் காவு கொள்கின்றன.
நோய் தாக்கம் 
கொசுக்களால் பரவும் நோய்கள் உலகளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாத இடங்களில் அதிகளவில் உயிர் இழப்பும் ஏற்படுகிறது.

உதாரணமாக கொசுவால் அதிகளவில் பரவும் நோயான மலேரியாவால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். வருடந்தோறும் மலேரியாவால் 6,60,000 மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
பெரும்பாலும் வெப்ப மண்டல பகுதியில் உள்ள ஆப்பரிக்கா, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதன் பாதிப்பு அதிகம். அதிலும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மலேரியாவால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
மலேரியா பாதிப்பு தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், உலகிளவில் மலேரியாவால் பாதிக்கப்படுவோரில் 80 சதவீதம் பேர் இந்தியா மற்றும் 15 ஆப்பரிக்க நாடுகளில் உள்ளனர். அதில் இந்தியாவில் 4 சதவீதம் பேர் மலேரியாவால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்தியாவில் மட்டுமே கடந்த 2016ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2017ம் ஆண்டில் மலேரியாவின் தாக்கம் 26 மடங்கு குறைந்துள்ளது. என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
கொசுவை தடுக்கும் வழிமுறைகள் 
கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தங்கள் வீடுகளில் எங்கும் சுத்தமான தண்ணீர் தேங்காமல் பார்த்துகொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டிகள், குடங்கள், பக்கெட்டுகள், வீணாக கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்களில் மழைநீர் அல்லது குடிநீர் தேங்காமல் தடுக்க வேண்டும். தண்ணீர் தொட்டிகள், பக்கெட்டுகளை மூடி வைக்க வேண்டும்.


கொசுக்கள் தங்கும் வகையில் வீட்டில் தேவையற்ற பொருட்களை அடைச்சலாக சேர்த்து வைக்க கூடாது.
ஒருவேளை தேங்கியிருக்கும் தண்ணீரில் கொசு புழுக்கள் இருந்தால் அதை வெயில் படும் இடத்தில் தரையில் ஊற்ற வேண்டும். வெயில் இல்லாத பட்சத்தில் கொதிக்கும் நீர் அல்லது சிறிது கெரோசினை அந்த தண்ணீரில் ஊற்றினால் கொசு புழுக்கள் இறந்துவிடும்.
வீட்டில் கொசு வராமல் தடுக்க கொசு விரட்டி மருந்துகளை பயன்படுத்தலாம். கொசு அண்டாமல் தடுக்கும் செடிவகைகளை வீட்டில் வளார்க்கலாம். மேலும் கொசுக்கள் வீட்டில் நுழையாத வகையில் கதவு மற்றும் ஜன்னல்களில் கொசுவலை அடிக்கலாம்.
கொசுவிரட்டி மருந்துகள்
கொசுக்களை கட்டுப்படுத்த இன்று வீடுவீடாக கொசு மருந்து அடிக்கப்படுகிறது. மக்களும் தங்கள் வீடுகளில் கொசு தொல்லையில் இருந்து தப்பிக்க கொசுவர்த்தி சுருள், மின்சாரத்தில் இயங்கும் கொசு விரட்டும் சாதனங்கள், உடலில் பூசிகொள்ளும் ஆயின்மெண்டுகள், ஸ்பிரேக்கள் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள்.

வெப்பமண்டல நாடான இந்தியாவில் கொசுக்கள் தொல்லை பரவலாக காணப்படுவதால் இங்கு பல நிறுவனங்கள் பல வகையான கொசுவிரட்டிகளை விற்பனை செய்து கோடிக்கணக்கில் லாபத்தை ஈட்டுகின்றன.
இந்தியாவில் ஆல் அவுட், மார்டின், குட்நைட், ஓடோமாஸ் போன்ற நிறுவனங்களின் கொசுவிரட்டிகளை மக்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றனர்.
ஆபத்தான ரசாயனங்கள் 
நம் நாட்டில் விற்பனையாகும் அனைத்து கொசு மருந்துகளிலும் பல வகையான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இவை கொசுக்களுக்கு மட்டும் நஞ்சாவதில்லை; மனிதர்களுக்கும் நஞ்சாகி விடுகின்றன.
அதிலும் கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகை 75 முதல் 130 சிகரெட்டுகளுக்கு சமம் என ஆய்வுகள் கூறுகின்றன.


பல வீடுகளில் கதவு சன்னல்களை அடைத்துவிட்டு கொசுவிரட்டும் சுருள்களை பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. இதன் காரணமாக மக்கள் அதிகளவு ரசாயன புகையை உட்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. அதனால் பலருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
கொசு விரட்டும் உபகரணங்களில் பலவித ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக டீட் (DEET) என்ற ரசாயனம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் டீட் ரசாயனம் குறித்து ஆராய்ச்சி செய்த பல வல்லுநர்கள் இந்த ரசாயனத்தை பூச்சிகளை விரட்டுவதற்கான இறுதி முயற்சியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிலும் பூச்சி விரட்டி கலவையில் வெறும் 30 சதவீதம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.
அதிகளவு டீட் ரசாயனம் பயன்படுத்தப்பட்டால் அதனால் மக்களுக்கு சரும பிரச்சனைகள் நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரபலமான மார்டின் கொசுவிரட்டும் ஸ்பிரேக்களில் அலெத்ரின் (Allerthin) ரெஸ்மெத்ரின் (Resmethrin) போன்ற நச்சுதன்மை கொண்ட ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை நரம்பு மண்டலங்களை தாக்கும் ரசாயனங்கள் ஆகும்.
அதேப்போல் கொசுவிரட்டி சுருளில் பயன்படுத்தப்படும் பைரிதிரின் (Pyrithrin) என்ற பூச்சி கொல்லி ரசாயனம் உடல்நலனுக்கு அதிக ஆபத்தானது என்று கூறப்படுகிறது.
இயற்கை கொசுவிரட்டிகள் 
கொசுக்களை விரட்ட ரசாயனங்களை தவிர்த்து விட்டு இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும். ரசாயன பூச்சி கொல்லிகளால் உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் இயற்கையான பூச்சி விரட்டிகளை பயன்படுத்துவதில் பொதுவான ஆர்வம் தோன்றியுள்ளது.
வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், புகையிலை, துளசி, ஆடாதோடை, பூண்டு போன்றவை கொசுவை விரட்டும் தன்மை கொண்டவை
குறிப்பாக சமீபத்தில் அமெரிக்காவில் நடத்திய ஆய்வு ஒன்றில் தேங்காய் எண்ணெய்யில் இருந்து எடுக்கப்படும் சில அமிலக் கலவைகள் கொசு, மூட்டை பூச்சி, போன்ற பல்வேறு வகை பூச்சியினங்களை தடுக்கும் திறன் கொண்டவை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் வேளாண் துறை ஆராய்ச்சியாளர்கள் சிலர் தேங்காய் எண்ணெய்யில் இருந்து பூச்சிகளை விரட்டும் கலவையை உருவாக்கியுள்ளனர்.
தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் லாரிக் ஆசிட், காப்பிரிக் ஆசிட் மற்றும் காப்பிரிலிக் ஆசிட் ஆகிய கொழுப்பு அமிலங்கள் கொண்ட கலவை கொசு, மூட்டை பூச்சி, ஈக்கள், உண்ணி போன்ற பல பூச்சிகளை விரட்டும் திறன் கொண்டுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
மேலும் இவை வழக்கமாக பயன்படுத்தும் டீட் (DEET) போன்ற ரசாயன கலவைகளை விட நீண்ட நாள் வீரியத்துடன் செயல்படுவதும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
உதாரணமாக டீட் ரசாயனம் ஈக்களை 50 சதவீதம் கொல்லக்கூடும். ஆனால் தேங்காய் எண்ணெய் அமிலக் கலவை 95 சதவீத கொன்றுவிடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜிகா வைரஸ், சிக்கன்குனியா வைரஸ்களை பரப்பும் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes, aegypti) கொசுக்கள் உள்ளிட்ட அனைத்து வகை கொசுக்கள் மீதும் தேங்காய் எண்ணெய் அமிலக் கலவை 90 சதவீதம் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தேங்காய் எண்ணெய் தவிர வேம்பு, புகையிலை, மஞ்சள், இஞ்சி சாற்றுக் கலவை கொசு புழுக்களை அழிக்கும் திறன் கொண்டுள்ளதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டு மேலும் பல பரிசோதனைகளை மேற்கொண்டு உடல்நலனுக்கு ஆபத்தில்லாத இயற்கையான கொசுவிரட்டி மருந்துகளை தயாரிக்கலாம்.
கொசு விரட்டும் செடிகள்
சில செடி வகைகள் கொசுவை விரட்டும் தன்மை கொண்டவை. உதாரணமாக துளசி, புதினா, சாமந்தி ஆகியவற்றின் வாசனை கொசுவை விரட்டும்.


கொசுக்களுக்கு பூண்டு வாசனையும் ஆகாது. பூண்டு எண்ணெய் மற்றும் தண்ணீரை 1:5 என்ற அளவில் கலந்து அதில் துணியை நனைத்து சன்னல் கதவோரம் கட்டி தொங்கவிட்டால் கொசுக்கள் அண்டாது.
எலுமிச்சையை பாதியாக நறுக்கி அதில் சில லவங்கத்தை சொறுகி வைத்தால் அதன் மூலம் எழும் நெடி கொசுக்களை அண்ட விடாது.காயவைத்த யூகலிப்டஸ் இலைகளை எரித்தால் அதன் புகை கொசுக்களை விரட்டிவிடும். அதேப்போல் வேப்பமர குச்சிகளை சில வேப்ப இலைகளுடன் எரித்தால் கொசு பறந்துவிடும். இந்த வழிமுறையை தீவிபத்து ஏற்படாதவாறு பாதுகாப்பாக அதிக கவனத்துடன் கையாள வேண்டும்.

சிக்கன்குனியாவுக்கு மருந்து
ஏடிஸ் ஆல்போபிக்டஸ் மற்றும் ஏடிஸ் ஏஜிப்டி ஆகிய இரு வகை கொசுக்களால் பரப்பப்படும் வைரஸால் மக்களுக்கு சிக்கன்குனியா பாதிப்பு ஏற்படுகிறது.
கடுமையான காய்ச்சல் மற்றும் மூட்டுவலிகளை ஏற்படுத்தும் இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகளவில் அதற்கான ஆராய்ச்சியில் பல விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சுழ்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் ரூர்கி நகரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் புளியங்கொட்டையில் (Tamarind seeds) இருக்கும் ஒருவித புரதம் சிக்கன்குனியா வைரஸை அழிக்கும் தன்மை கொண்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.
புளியங்கொட்டையில் உள்ள டி.சி.எல்.எல் (TCLL) என்ற புரதம் சிக்கன்குனியா வைரஸுடன் இணைந்து அந்த வைரஸ் உடலில் உள்ள செல்களை பாதிக்காமல் தடுக்கிறது என்பதை ஷைலி தோமர் என்பவர் தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது.
சிக்கன்குனியா வைரஸில் இந்த டி.சி.எல்.எல் புரதம் செலுத்தப்பட்டப்போது 30 நிமிடத்தில் வைரஸின் நோய் தாக்குதல் திறன் 64 சதவீதம் குறைந்தது.
இந்த புரதம் தொடர்பான ஆய்வின் அடுத்தக்கட்டமாக மிருகங்களை வைத்து சோதனை நடத்த ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அரசு நடவடிக்கை தேவை
வருடந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற நோய்களால் பாதிக்கப்படுவது தமிழகத்தில் வாடிக்கையாகியுள்ளது.
இந்தக் கட்டத்தில்தான் நாம் இந்தியாவில் உள்ள தேசிய இனங்களிலேயே மிகவும் புத்திசாலிகள் என்று மார்தட்டிக் கொள்ளும் பெருமை உடையவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய் அமிலக் கலவை, புளியங்கொட்டை புரதம் ஆகியவை மூலப்பொருளுக்கென்று பெருஞ்செலவு செய்யத் தேவை இல்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?