பாதியில் கல்வியை கைவிடவே வழி வகுக்கும்.

 மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும்
                                                                                   என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதலில் மத்திய அரசின் இந்த முடிவைத் தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று அதிமுக அரசு கூறியது. பின்னர் அமைச்சரவை கூடி கொள்கை முடிவு எடுக்கும் என்றது.
இப்போது அமல்படுத்தப்போகிறோம் என்கிறது.

 தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட பொதுவிநியோக முறை சிறப்பாகச் செயல்படும் போது இலக்கோடு கூடிய பொதுவிநியோக முறையே தேவை யில்லை என்று  வீரவசனம் பேசிய அதிமுக ஆட்சியாளர்கள் மத்திய பாஜக அரசின் நிர்ப் பந்தத்திற்கு அடிபணிந்து “ஒரே நாடு ஒரே ரேசன்’’ திட்டத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

அதன் அடுத்தகட்டமாக 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வையும் அமல்படுத்தத் தயாராகி விட்டார்கள்.
ஒன்று முதல் 8 ஆம்வகுப்பு வரை  அனைவரை யும் கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டும் என்கிற முறை தற்போது அமலில் உள்ளது.
இதனால் மாணவர்கள் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக ஒரு தரப்பினர் புலம்புகின்றனர்.
மாணவர் தேர்ச்சி பெறவில்லை என்றால் சரியாகக் கற்றுக் கொடுக்கத் தவறிய ஆசிரியர்களும் இன்றைய கல்விக்கொள்கையும்தான் காரணமாக இருக்கமுடியுமே தவிர மாணவர்கள் அல்ல.

எனவே தோல்வியை மாணவர்கள் மீது திணிப் பதை ஏற்கமுடியாது.
 சமூக நீதியின் அடித்தளமே கல்விதான்.
கல்வி ஒரு காலத்தில் பலருக்கு மறுக்கப்பட்டது.
பலதடைகளைத் தாண்டி கடந்த நூற்றாண்டின் பாதியில் தான் அனைவருக்கும் கல்வி என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
 அப்படிப்பட்ட சமூக பின்னணியில் இருந்து வரும் குழந்தைகளை ஐந்தாம் வகுப்பிலேயே நிற்கவைத்துவிட்டால் அந்த குழந்தையின் எதிர்காலம் என்னவாகும்?


தேர்வில் தோல்வியடைந்தால் சக குழந்தை களின் கேலிக்கு  ஆளாகும்.
அப்போது மனதள வில்  மிகப்பெரிய பாதிப்பை அக்குழந்தை எதிர் கொள்ளவேண்டியிருக்கும்.
இதனால் அந்த  குழந்தையின் மனதில் பள்ளிக்கே செல்லவேண் டாம் என்ற எண்ணம்தான் மேலோங்கும். இப்படி குழந்தைகளைப் பள்ளியிலிருந்து ஓடவைக்கும் முயற்சியின் ஒருபகுதியாகத்தான் இந்த பொதுத்தேர்வைப் பார்க்கவேண்டியுள்ளது.

கல்வித்தரத்தை மேம்படுத்தவேண்டிய அவ சியம் இருக்கிறது.
ஆனால் பொதுத்தேர்வு நடத்தி னால் தான் தரம் உயரும் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது.
இப்போதும் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு மாணவரின் கல்வித்திறனை ஆசிரியர்கள் சோதித்துத்தான் அடுத்த கட்டத்திற்கு அனுப்புகிறார்கள்.

 அடுத்த வகுப்பிற்குச் செல்வதிலிருந்து தேக்கி வைப்பதால் மட்டும் ஒருகுழந்தை  படித்து விடும்  என்பதும் பயமிருந்தால் படித்துவிடும் என்பதும் சொத்தையான வாதமாகும்.
குழந்தைகளுக்கு  கற்றுக்கொள்ளத் தடையாக இருப்பது எது என்று ஆய்வு செய்து அதைக் களைவதில் அரசு கவனம் செலுத்தவேண்டும்.
 மாணவர்கள் மீது பொதுத்தேர்வு என்ற சுமையை ஏற்றுவதால் அது இடைநிற்றலுக்கே வழிவகுக்கும்.  --------------------------------------------------------------------------------------------------------------------------------------
 இந்துக்களுக்கு எதிரானதுதான் ஆர்.எஸ்.எஸ்.?
திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலின் நிலத்தை ஆர்,எஸ்,எஸ் அமைப்பு அபகரித்ததற்கு எதிராக கோயிலின் மேற்கு வாசல் அருகே உண்ணாவிரதம் மேற்கொண்ட புஷ்பாஞ்சலி சுவாமி பரமானந்த தீர்த்தர் மீது ஆர்எஸ்எஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.

 ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தையும் கட்டடத்தையும் மீட்க வலியுறுத்தி கடந்த ஆறு நாட்களாக புஷ்பாஞ்சலி சுவாமி பரமானந்த தீர்த்தர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

 சனியன்று உண்ணாவிரதப்பந்தலை சேதப்படுத்திய ஆர்.எஸ்.எஸ்.குண்டர்கள் பரமானந்த தீர்த்தர் மீது தாக்குதலும் நடத்தினர்.
50க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்  இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.

 காவல்துறையினர் தலையிட்டு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தனர்.
கோயில் நிலத்தையும் கட்டடத்தையும் கோயிலுக்கு சொந்தமாக்க வலியுறுத்தி நடக்கும் இப்போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலையிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் சேவா பாரதி மற்றும் பரமானந்த தீர்த்தரிடம் ஆட்சியர்  விசாரணை நடத்த உள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
"ரொம்ப,ரொம்ப மோசமான  அலுவலர்."
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையைச் சேர்ந்த 130 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
 இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏ.டி.எஸ்.பி இளங்கோ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது காவல்துறையில் அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது.

ஏ.டி.எஸ்.பி இளங்கோ கடந்த 2017-ம் ஆண்டு இறுதி முதல் 2019 ஆம் ஆண்டு தொடக்க காலம் வரை சுமார் ஒன்றரை ஆண்டு சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் ஏ.டி.எஸ்.பி-யாக பணியாற்றினார்.
இவர் மீது காவல்துறை அதிகாரிகளே புகார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கடந்த 2018 - 2019ம் ஆண்டுக் காலத்தில் இவர் எந்த ஒரு குற்றவழக்கையும் எடுத்து விசாரிக்காமல் மெத்தனப்போக்குடன் ஒழுங்கினமாக நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் அளிக்கவேண்டிய சொத்துப்பட்டியல் விபரங்களை எட்டு ஆண்டுகளாக தாக்கல் செய்யவில்லை குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவருக்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் சிலர் ஆண்டு இறுதி அறிக்கையில் அப்போதைய காவல்துறை டி.ஜி.பி ராஜேந்திரனிடம் வழங்கினார்கள்.

ஆனால் இளங்கோவிற்கு இருந்த செல்வாக்கு காரணமாக அவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றனர்.

அதே நேரம் அதிகாரி இளங்கோவும் சக போலிஸ் அதிகாரிகளை அழைத்துச் சென்று சிலை கடத்தல் பிரிவு தலைமை அதிகாரியான பொன்மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டு மனுவை டி.ஜி.பி-யிடம் வழங்கினார். இது காவல்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்த சிறிது நாளில் ஏ.டி.எஸ்.பி இளங்கோ கடலோர காவல்படைக்கு மற்றப்பட்டார்.

அதன்பிறகும் கூட எந்த ஒரு அதிரடி நடவடிக்கையோ அல்லது சிறப்பு விசாரணையோ மேற்கொள்ளாமல் இருப்பதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் அவருக்கு அண்ணா பதக்கம் அறிவித்திருப்பது மேலும் காவல்துறையினர் மத்தியில் எரிச்சலைக் கிளப்பியுள்ளது.

இதனால் எரிச்சல் அடைந்த போலிஸ் அதிகாரிகள் ஏ.சி.ஆர் என்னும் ஆண்டு பணி ஆய்வு அறிக்கை விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அதனைமறைத்து அவரின் பெயரை விருதுக்கு பரிந்துரை செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி காவல்துறை இயக்குனர் திரிபாதி மற்றும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கும் புகார் கடித்தத்தை அனுப்பியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து, சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் அளித்த ஆண்டறிக்கையில், “இளங்கோ திறமையற்ற அதிகாரி என்றும், தன்னுடைய பணி காலத்தில் ஒரே ஒரு கைதோ, குற்றப்பத்திரிகையோ கூட தாக்கல் செய்யாதவர் என்று குறிப்பிட்டதோடு, வழக்கு விசாரணை நடைமுறைகள் தெரியாதவராகவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்காதவராகவும் இருந்ததோடு, முன் அறிவிப்பு இன்றி பல நாட்கள் விடுப்பு எடுத்து சென்ற Very Very Poor Officer என குறிப்பிட்டு அந்த அறிக்கையை அனுப்பி இருக்கிறார்.


மேலும், இளங்கோ அளித்த சுயமதிப்பீட்டு அறிக்கை முழுக்க முழுக்க போலியானது என்றும் ஒட்டுமொத்தமாக தரப்படும் 10 மதிப்பெண்களில் இளங்கோவிற்கு பொன்.மாணிக்கவேல் 1.25 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கி அந்த ஆண்டறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

இதுமட்டுமன்றி, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பாக செயல்படும் அதிகாரிகள் உயர் போலீஸ் அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் ராஜராஜன் , கல்லிடைகுறிச்சி நடராஜர் சிலைகளை நாடுகள் கடந்து மீட்டு வந்த சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
 சில உயர் அதிகாரிகளின் நடவடிக்கையால் அரசுக்கு இழுக்கு ஏற்படும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஏ.டி.எஸ்.பி இளங்கோ,“தன்மீதுள்ள புகாருக்கு டிஜிபியிடம் தக்க விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டதாகவும், 8 ஆண்டுகள் சொத்துவிவர அறிக்கை மட்டுமே தான் தாக்கல் செய்யவில்லை , அதையும் விரைவில் தாக்கல் செய்து விடுவேன்.
என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கிலேயே பொன்.மாணிக்கவேல் எனக்கு விருது கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் என்றும், அவர் மீது நான் கொடுத்த புகார்களை மனதில் வைத்து இதுபோன்று உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் காவல்துறை மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

மோடி-2 அரசு தன்னுடைய 100 நாட்களை
 நிறைவு செய்திருக்கிறது. 

 இது மிகவும் குறுகிய நாட்களே என்றபோதிலும், இந்த அரசின் திசைவழி  எப்படி இருக்கும் என்பதை, அதாவது கார்ப்பரேட் மூலதனம் மற்றும் இந்துத்துவா பிணைந்த ஒரு கூட்டுக்கலவையுடன் ஓர் எதேச்சதிகார ஆட்சியாக இருந்திடும் என்பதை, தெளிவாகவே வெளிப்படுத்தி இருக்கிறது.
கடந்த நூறு நாட்களில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஜனநாயகத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதை, நாடாளுமன்றம் சிறுமைப்படுத்தப்பட்டதை, நீதித்துறை உட்பட அனைத்து அரசமைப்புச் சட்ட அமைப்புகளும் சிதைக்கப்பட்டு வருவதை, எதிர்க்கட்சி மற்றும் தங்கள் கொள்கைகளுக்கு ஆட்சேபணை சொல்கிற அனைத்துத் தரப்பினர் மீதும் எதேச்சதிகாரமுறையில் தாக்குதல் தொடுக்கப்படுவதை  பார்த்தோம்.


ரப்பர் ஸ்டாம்ப்பாக...
ஜம்மு-காஷ்மீர் மாநிலம்  தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தில் சொற்புரட்டு மற்றும் சதி ஆகியவற்றின் மூலமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு அதன் சிறப்பு அந்தஸ்தைப் பறித்து, அம்மாநிலத்தையே சிதைத்திருப்பதன் மூலம் ஜனநாயகத்தின் மீதும் கூட்டாட்சித் தத்துவத்தின்மீதும் மிகப்பெரிய அளவில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது.

 காஷ்மீர் பள்ளத்தாக்கு அங்கே வாழும் 80 லட்சம் மக்களுடன் ஒரு மாபெரும் சிறைக்கூடமாக மாற்றப்பட்டிருக்கிறது.
அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற கடுமையான நடவடிக்கைகள் இன்றளவும் தொடர்வதால் அம்மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கின்றன.

மக்களவைத் தேர்தல் முடிந்தபின் கூடிய முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, பல்வேறு சட்டமுன்வடிவுகள், நுணுகி ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படாமலும், விவாதங்கள் இல்லாமலும் நிறைவேற்றப்பட்டதைப் பார்த்தோம்.

மோடி அரசின் நோக்கங்கள் மிகவும் தெளிவானவை. நாடாளுமன்றத்தை,  தங்கள் அரசின்  ரப்பர்ஸ்டாம்ப்பாகப் பயன்படுத்திடவே அது விரும்புகிறது.
அரசமைப்புச் சட்ட அமைப்புகளையும், நிறுவனங் களையும் சிதைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக் கின்றன. நீதித்துறையை மிரட்டிப் பணியவைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
நீதித்துறை நியமனங்களில் அரசாங்கம் எப்படியெல்லாம் தலையிடுகிறது என்பதற்கு, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி அகில் குரேஷியை நியமித்திட கொலிஜியம் அளித்திட்ட பரிந்துரையை ஏற்க மறுத்திருப்பது சமீபத்திய எடுத்துக்காட்டாகும்.

தலைகீழாக்கப்படும் நீதிபரிபாலனமுறை
எதிர்க்கட்சிகளை நசுக்குவதற்கான முயற்சிகளுக்கு  மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகமும், அமலாக்கத்துறை யும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டிப் பணியவைத்திட இவற்றை ஆயுதங்களாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிறுவனங்கள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான வழக்குகளைப் புலனாய்வு செய்வது கூர்மையான முறையில் அதிகரித்திருக்கின்றன.

இவ்வாறு அச்சுறுத்தப் பட்டு, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலர் பாஜகவிற்குத் தாவுவதற்குத் தூண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
நாட்டில் காவல்துறையினரின் புலனாய்வு விசாரணை கள் மற்றும் கிரிமினல் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் முதலானவை, நாட்டின் கிரிமினல் நீதி பரிபாலன  அமைப்பு முறையே, இந்துத்துவா மதவெறிக் கொள்கையின் அடிப்படையில் இயங்கும் விதத்தில் மிகவும் வேகமான முறையில் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

  பேலுகான் கொல்லப்பட்ட வழக்கில் எவரொருவரும் தண்டிக்கப்படவில்லை. கும்பல் குண்டர்களால் கொல்லப்பட்ட தப்ரேஷ் அன்சாரி வழக்கும் தற்போது நீர்த்துப்போகச் செய்யப்பட்டிருக்கிறது.
அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டிருக்கின்றன. பாதிப்புக்கு உள்ளானவர்களே, குற்றங்களுக்குப் பொறுப்பு என்கிற முறையில் கிரிமினல் நீதி பரிபாலன அமைப்பு தலைகீழாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

இவை  அனைத்தும் நாட்டில் மிகவும் ஆழமானமுறை யில் பொருளாதார மந்தம் ஏற்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் நடந்துகொண்டிருக்கின்றன.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி விகிதம், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான, முதல் காலாண்டில் வெறும் 5 சதவீதமேயாகும்.
இது கடந்த ஆறாண்டுகளில் மிகமிகக் குறைவான அளவாகும். இந்தப் புள்ளிவிவரம்கூட மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகும். கிராமப்புற விவசாய நெருக்கடி, அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பதன் விளைவாக, பொருள்கள் விற்பனையாகாமல் தேங்கியிருத்தல் ஆகி யவை தற்போதைய நெருக்கடிக்குக் காரணங்களாகும்.

 வேலையிழப்புகள் லட்சக் கணக்கில் ஏற்பட்டிருப்பது நாட்டின் பல்வேறு தொழில் துறைகளையும் பொருளாதாரத்தையும் பாதித்துக் கொண்டிருக்கிறது.

மூர்க்கத்தனமான முயற்சிகள்
பொருளாதார மந்தம் தன் கோர முகத்தை இவ்வளவு மோசமானமுறையில் காட்டியபோதிலும், மோடி அரசோ பெரும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அந்நிய கார்ப்ப ரேட்டுகளின் நலன்களைத் தூக்கிப்பிடிக்கும் விதத்திலான கொள்கைகளையே இன்னமும் விடாப்பிடியாகத் தொடர்ந்து பின்பற்றிக்கொண்டிருக்கிறது.

2019-20 மத்திய பட்ஜெட், அந்நிய மூலதனம் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு, எண்ணற்ற சலுகைகளை அளித்திருக்கிறது.
மேலும் அந்நிய நிதிமூலதனத்தின் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து, அந்நிய முதலீட்டாளர்களின் மூலதன ஆதாயங்கள் மீது விதித்திருந்த மிகைவரியையும் (சர்சார்ஜையும்) விலக்கிக் கொண்டிருக்கிறது.
மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்த்திட மூர்க்கத்தனமான முறையில் முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களின் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்பிலான பங்குகளைத் தனியாரிடம் தாரை வார்த்திடத் திட்டமிட்டிருக்கிறது.
   இவ்வாறு தனியாரிடம் தாரை வார்ப்பதற் கான துறைகளில் ரயில்வே, பாதுகாப்பு உற்பத்தி, வங்கி மற்றும் கனிமவளத்துறைகளும் அடங்கும்.
கிராமப்புற மக்களின் தேவைகளை ஓரளவுக்கு ஈடுசெய்வதற்கு உதவிடும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம் போன்ற சமூக நலத் திட்டங்களுக்கான பொதுச் செலவினங்களை அதிகரிப்பதற்குப் பதிலாக,  அந்நிய மூலதனத்தை முகத்துதி செய்வதற்குத் தான் மோடி அரசு முனைப்பாக இருக்கிறது.

நிலக்கரிச் சுரங்கத்துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டுக்கு, மோடியின் “தேசிய” அரசு அனுமதி அளித்திருப்பதன் மூலம், நாட்டின் நிலக்கரி வளங்களை பன்னாட்டு அந்நிய நிறுவனங்கள் கொள்ளையடித்துச் செல்லவும், பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனம் நலிவடைந்திடவும் வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

தேசிய ராணுவ அரசாக...
மோடி அரசு, மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதிலும் திட்டமிட்டமுறையில் இறங்கியிருக்கிறது. சென்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட பல சட்டங்கள் மாநிலங்களின் உரிமைகள் பலவற்றைப் பறித்துள்ளன.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக மோசமான ஒன்று, தற்போது நிதி ஆணையம், நாட்டின் ராணுவத்திற்கு ஆகும் செலவினங்களைக்கூட மத்திய அரசும், மாநில அரசுகளும் பகிர்ந்துகொள்வது குறித்துப் பரிசீலித்திட வேண்டும் என்று கேட்டிருப்பதாகும்.
   இது அமல்படுத்தப்பட்டால், மாநிலங்களின் வரிவருவாயில் கணிசமான அளவிற்குக் கடும் பாதிப்புகள் ஏற்படும்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்திலும், தேசியப் புலனாய்வு முகமை சம்பந்தமான சட்டத்திலும் கொண்டுவந்திருக்கின்ற திருத்தங்கள் இந்த அரசை, சேமநல அரசு என்ற நிலையிலிருந்து தடம் புரளச் செய்து, ஒரு  தேசிய ராணுவ அரசாக மாற்றியிருக்கின்றன.
அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறவர்கள் அனைவரும் இனிவருங்காலங்களில் மிக எளிதாக இந்தச் சட்டங்களின் வழியாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அரசமைப்புச்சட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள குடிமக்களுக்கான கருத்தாக்கமே அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது.
மோடி-அமித் ஷா இரட்டையர் தேசியக் குடிமக்கள் பதிவேட்டினை நாடு முழுதுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 இதற்காக, இவர்கள் ஏற்கனவே ஒவ்வொரு பகுதியிலும் குடியிருப்போர் அனைவர் குறித்தும், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் பதிவு செய்யப்படுவதற்காக அறிவிக்கை ஒன்றை வெளி யிட்டிருக்கிறார்கள். இது, தேசியக் குடிமக்கள் பதிவேட்டிற் கான அடிப்படையாக மாறிடும்.

இது, நாட்டிற்குள் நுழைந்துள்ள “ஊடுருவலாளர்களை” (முஸ்லிம்கள் என்று  திருத்தி வாசித்துக் கொள்க) களையெடுக்கப் பயன்படுத்தப் படும். அதே சமயத்தில், நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டமுன்வடிவு ஒன்று கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கிறது.

இது நிறைவேறிவிட்டால் நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள, புலம்பெயர்ந்துள்ள முஸ்லிம்கள் அல்லாதவர்கள் அனைவருக்கும் குடியுரிமை அளிக்க முடியும்.


இளைய பங்காளியாக...
இக்குறுகிய காலத்தில், மோடி அரசு, அமெரிக்காவின் இளைய பங்காளியாகத் தன்னை மாற்றிக் கொள்வதற்கான நடவடிக்கைகளிலும் வேகமாக இறங்கி இருக்கிறது.
இந்த அரசாங்கம் மேற்கொண்ட முதல் நடவடிக்கை என்பதே, ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்து வதற்கான முடிவுதான்.
இத்துடன் அமெரிக்காவிடமிருந்து அதிக அளவிலான ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் வாங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக் கின்றன.
அமெரிக்காவுடனான அடிப்படைப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (BECA-Basic Exchange and Cooperation Agreement) கையெழுத்திடுவதற்கான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளது.
இவ்வாறு, மோடி-2 அரசின் நூறு நாள் ஆட்சி என்பது இனிவருங்காலமும் எந்த அளவிற்குக் கொடூரமானதாக இருக்கும் என்பதற்கு ஒரு முன்னோடியாக இருக்கிறது.

இடது மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு முன்பாக, நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தையும், அரசமைப்புச்சட்ட விழுமியங்களையும் பாதுகாப்பதற் கான  பெருஞ்சுமையுடனான கடமைகள் காத்துக்கொண்டிரு க்கின்றன.
அவர்கள், மக்களைத் தங்கள் வாழ்வாதாரங்கள், வேலைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அணிதிரட்ட வேண்டியிருக்கிறது.
இக்கடமைகளை நிறைவேற்றக்கூடிய விதத்தில் மக்களை எந்த அளவிற்கு சாத்தியமோ அந்த அளவிற்கு விரிவான முறையில் அணிதிரட்டி ஒற்றுமைப்படுத்தி, போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும்.

 நாடும், நாட்டு மக்களும் எதிர்கொண்டிருக் கும் ஆழமான பிரச்சனைகளிலிருந்து அவர்களது கவனத்தைத் திசைதிருப்பும் விதத்தில், மோடி அரசு “தேசிய வாதம்” என்ற பெயரில்  கட்டவிழ்த்துவிடும் இந்துத்துவா பெரும்பான்மைவாதத்தை மக்கள் மத்தியில் அம்பலப் படுத்த வேண்டியிருக்கிறது.

                                                                                                                                         பீப்புள் டெமாக்ரசி 
தமிழில்: ச. வீரமணி
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------

முகநூலில் 
Prakash JP 

ஒரே நாடு.. ஒரே மொழி.. RSS ஹிந்துத்துவா கொக்கரிப்பு... ஹிந்தி தாய்மொழி இல்லாதவர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவது தான் இந்த கும்பலின் திட்டம்.. 

காலத்தால் தொன்மை மிக்க, இலக்கிய வளங்கள் மிக்க, நவீன காலத்துக்கும் ஏற்றவாறு மாற்றமடையும் செம்மொழியாம் தமிழ், வளமிகுந்த மொழிகளான கன்னடம் தெலுங்கு மலையாளம் வங்காளம் மராட்டியம் போன்ற எண்ணற்ற மொழிகளை அழிப்பத்துதான் RSS ஹிந்துத்துவா ஆதிக்க சக்திகளின் நீண்டநாள் திட்டம்..

இந்தி இல்லாத தென்மாநிலங்கள் தான் நாட்டின் எல்லா விதமான சமூக பொருளாதார குறியீடுகளில் நாட்டின் முன்னணி மாநிலங்களாக இருக்கின்றன.
. இந்தி பேசும் மாநிலங்கள் அனைத்தும் கீழான நிலையிலேயே இருக்கின்றன..
 இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து பெறப்படும் வருவாயைக் கொண்டுதான் இந்தி பேசும் மாநிலங்கள் காலம் தள்ளுகின்றன.. 
இந்தி பேசாதவர்களின் வரி வருவாயை கொண்டு இந்தி மொழியை மட்டுமே வளர்கிறது மத்திய அரசு.. 

இந்த அழகில் இந்தியாவில் இந்தி மொழி மட்டுமே இருக்க வேண்டும் என்று பேசுவது பிஜேபி கும்பலின் ஆதிக்க ஆணவத்தை காட்டுகிறது..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?