வெற்றிட அரசியல்

தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறதா?

 தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். “தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக கூறிய ரஜினியின் கருத்தை வழிமொழிகிறேன்: அதை வழிமொழிவதைத் தவிர வேறு வழியில்லை” என்று நடிகர் கமலஹாசன் வழிமொழிந்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் ஆளுமை மிக்க தலைவர்களுக்கு வெற்றிடம் இருப்பதாக  கூறியுள்ளார்கள்.

தமிழகத்தில் அடுத்தடுத்து இரு தலைவர்கள் மறைந்த நிலையில், முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் போன்றோர் இருந்தபோதும், ஆளுமைமிக்க தலைவர்களுக்கு வெற்றிடம் இருந்து கொண்டே உள்ளது என்று பாஜக செயலாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

வெற்றிடம் எதுவும் இல்லை என்று ஆளுங்கட்சியான அதிமுக அவ்வப்போது கூறிவருகிறது. எதிர்க்கட்சியான திமுகவும் தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்று மறுத்துள்ளது.
இருந்தாலும், ‘வெற்றிடம்’ குறித்த விவாதம் அவ்வப்போது முன்னுக்கு வருகிறது.

இப்படி ஒரு கருத்தியலை பாஜக ஊக்குவித்து வருகிறது.
எவ்வளவோ முயன்றபோதும், பாஜகவினால் தமிழ்நாட்டில் ஒரு இடத்தைக் கூட பெற முடியவில்லை.

 ஆகவே தங்களுக்கு கிடைக்காத இடத்தை வெற்றிடம் என்று அவர்கள் கூறிவருகின்றனர்.

 கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் திரைத்துறையிலும் மிகப் பெரிய ஆளுமைகளாக இருந்தவர்கள் என்பது உண்மை.

அவர்கள் தங்களுக்கு இருந்த செல்வாக்கினால் அரசியலிலும் மிகப்பெரிய ஆளுமையை செலுத்தினார்கள். அந்தக் கட்சிகளில் அவர்களை மீறி தலைவர்கள் உருவாக வாய்ப்பு இல்லை.
எனினும், அரசியலில் இவர்களுக்குப் பிறகு வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாகவும் அதை பூர்த்தி செய்ய இப்போது இருப்பவர்களால் முடியாது என்றும் எனவே, புதிதாக வருபவர்களால்தான் அந்த இடத்தை நிரப்ப முடியும் என்றும் ஒரு கருத்து திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.
திமுக மற்றும் அதிமுக ஆட்சிக்காலத்தில் குறைகள் தென்பட்டபோது, அதை சுட்டிக் காட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயங்கியது இல்லை. அவர்களது ஆட்சிக் காலத்தில் பல்வேறு பிரச்சனைகள் இல்லாமலும் இல்லை.  போராட்டங்கள் மூலமாகவும் தலைவர்களுடனான நேரடி சந்திப்புகள் மூலமும் இப்பிரச்சனைகள் குறித்து தீர்வு காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு முயற்சிகளை எடுக்கிறது.

அரசியல் விஞ்ஞானத்தில் ‘வெற்றிடம்’ என்பது சூனியத்திலிருந்து துவங்குகிறது. ஆனால், தொடர்ந்து சூனியமாக இருக்க முடியாது.
அடுத்தடுத்து, அந்த வெற்றிடம் நிரப்பப்பட்டே தீரும். அரசு நிர்வாக எந்திரம் என்பது தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்.
ஆட்சிகள் மாறினாலும் அந்த எந்திரம் சுழன்று கொண்டேதான் இருக்கும்.
 தலைமைச் செயலாளர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரை பல்வேறு படிநிலைகளில் செயல்படக் கூடிய அந்த எந்திரம் ஒருபோதும் நின்று விடுவதில்லை.
ஆட்சிகள் மாறலாம். அந்தந்தக் கட்சிகளின் தலைவர்கள் மாறலாம்.
 அது தவிர்க்க முடியாதது.
 தமிழகத்தில் கலைஞர் மற்றும் எம்ஜிஆர் அரசுகள் மத்திய அரசினால் கலைக்கப்பட்ட காலங்களில் உடனடியாக ஆளுநர் ஆட்சி கொண்டு வரப்பட்டு, அரசு எந்திரம் சுழன்று கொண்டுதான் இருந்தது.

இது தமிழகத்தில் மட்டுமல்ல, உலக அரசியல் வரலாற்றை உற்று நோக்கினாலும் அரசியல் விஞ்ஞானம் தருகிற செய்தி இதுதான். ஒரு வெற்றிடம் உருவாகுமானால் அது இயல்பாகவே நிரப்பப்பட்டு விடும்.
பிரிட்டனில் மன்னர் இறந்துவிட்டால், ‘மன்னர் இறந்துவிட்டார், மன்னர் நீடூழி வாழ்க’ என்றுதான் சொல்வார்களாம்.
 ஏனென்றால், அந்த மன்னர் இறந்தாலும், இன்னொருவர் மூலம் மன்னராட்சி தொடரும் என்பதுதான். இடைவெளி ஏற்படாது. மன்னராட்சியில் மட்டுமல்ல, மக்களாட்சியிலும் வெற்றிடம் நிரப்பப்பட்டுக் கொண்டே தான் இருக்கும். கிரேக்கத்தில் அலெக்சாண்டர் மறைந்த போது, அவரால் உருவாக்கப்பட்ட சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டது.
ஆனால், அடுத்தடுத்து அரசுகள் உருவாகவே செய்தன.

 மத்தியக் கிழக்கு மற்றும் பிரான்சின் வரலாற்றை உற்றுக் கவனித்தாலும், இதைப் புரிந்து கொள்ள முடியும்.
2003-ல் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை இராக்கை கைப்பற்றி, சதாம் உசேனை மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் அழித்தது. ஆட்சிப் பொறுப்பில் இருந்த சதாம் உசேனின் பாத் கட்சியும் அழிக்கப்பட்டது.
அன்று, ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்ட நிலையில், அப்போது இடைக்காலமாக நிர்வாகத்தை கவனிக்க, பால்மர் தலைமையிலான ஆட்சியை அமெரிக்கா உருவாக்கியது.
1999-ல் கொசாவோ, 2011-ல் லிபியா என ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின்பு இடைக்கால ஏற்பாடாக அதிகார மையங்கள் உருவாக்கப்பட்டன.
சர்வாதிகார நாடுகளிலும் கூட அடுத்தடுத்து வெற்றிடம் நிரப்பப்பட்டு விடும். ஜனநாயக அரசியலிலும் வெற்றிடம் என்பது இயல்பாகவே நிரப்பப்பட்டு விடும்.

 தமிழகத்தைப் பொறுத்த வரை பாஜகவின் விரக்தியிலிருந்தே வெற்றிடம் என்கிற கோட்பாடு உருவாக்கப்பட்டு, பரப்பப்படுகிறது.
 பாஜகவின் தயவில் மாநில ஆட்சி நடந்து கொண்டிருப்பதால், அவர்களால் இதை உறுதிபட மறுத்துப் பேச முடியவில்லை.
பல்வேறு மக்கள் பிரச்சனைகளில் பாஜகவை எதிர்த்துப் பேசாவிட்டாலும் கூட வெற்றிடப் பிரச்சனையில் அவ்வப்போது முணுமுணுப்பு காட்டுகின்றனர். திமுகவைப் பொறுத்த வரை, கலைஞருக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் கட்சித் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். கழகம் இல்லாத தமிழ்நாடு என்று பாஜக கூறியது.
கலகம் செய்யும் இவர்களை ஏற்க, தமிழகம் தயாராக இல்லாத நிலையில், வெற்றிடம் என்று கூறி அதை வெளிக்காற்றை கொண்டு நிரப்ப முயல்கிறார்கள். இது விஞ்ஞானத்துக்கு மட்டுமல்ல, அரசியல் விஞ்ஞானத்துக்கும் எதிரானது.
தமிழக மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் ஏராளம்.
 அதுகுறித்தெல்லாம், ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காகவே வெற்றிடம் என்ற கருத்தியல் அவ்வப்போது, கிளப்பி விடப்பட்டு அதுவே மையப் பிரச்சனையாகவும் மாற்றப்படுகிறது.
-டி.கே.ரங்கராஜன்
 -------------------------------------------------------------------------------------------------------------------------------
ஈயடிச்சான் காப்பி.


காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாரின் ஜாமீனுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவில், தில்லுமுல்லு செய்து,அமலாக்கத்துறை அவமானப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் டி.கே. சிவக்குமாரை, அண்மையில் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு சில நாட்களுக்கு முன்புதான் அவருக்கு நீதிமன்றம்ஜாமீன் வழங்கியது.
 ஆனால், டி.கே. சிவகுமாரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று, உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது.நீதிபதிகள் ரோகிண்டன் நாரிமன், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வும், அந்த மனுவை ஏற்று, வெள்ளிக்கிழமையன்று விசாரணை செய்தது.

அப்போது, டி.கே. சிவக்குமார் சம்பந் தப்பட்ட வழக்கின் ஆவணங்களில் அவரை, ‘மத்திய முன்னாள் நிதியமைச்சர்’, ‘மத்திய முன்னாள் உள்துறை அமைச்சர்’ என்று குறிப்பிட்டிருப்பதை பார்த்து, நீதிபதி ரோகிண்டன் நாரிமன் அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், ப. சிதம்பரத்திற்கு எதிராகதாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, அப்படியே காப்பியடித்து, பெயரை மட்டும் டி.கே. சிவகுமார் என்று மாற்றி, அவசர அவசரமாக அப் பீல் மனு தாக்கல் செய்திருப்பதையும் கண்டுபிடித்தார்.
அதுமட்டுமல்ல, ப. சிதம்பரத்திற்கு எதிரான வழக்கில், என்னென்ன வாதங்களை அமலாக்கத்துறை வைத்ததோ, அவை மாறுதல் இல்லாமல் அப்படியே காப்பி பேஸ்ட் (நகல்)செய்யப்பட்டிருப்பதையும் அறிந்த நீதிபதி நாரிமன், “டி.கே. சிவகுமார் எப்போது மத்திய நிதியமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந் தார்?” என்று அமலாக்கத்துறையை மிகக் கடுமையாக சாடினார்.
 “நாட்டின் குடிமகன் ஒருவரை இப்படி நடத்துவது சரியன்று,” என்றும் அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 என்னாச்சி?
மூணு மாசத்துக்கு முன்னாடிதான்  ஆரம்பித்த கர்நாடகா 17 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தீர்ப்பு வந்தாச்சி.

 மூணு வருஷத்துக்கு முன்னாடியே ஆரம்பித்த தமிழக 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தீர்ப்பு என்னாச்சி?
------------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில்,
முன்னால்.

எக்குவேடார்,வெனிசுவேலா கொலம்பியாவில் இருந்து பிரிந்தன(1831)
எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது(1869)
புடாபெஸ்ட் நகரம், ஹங்கேரியின் தலைநகராக்கப்பட்டது(1873)
டக்லஸ் யங்கெல்பர்ட் முதலாவது கணினி மவுஸ்க்கான காப்புரிமம் பெற்றார்(1970)
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகம் முழுவதும் பரவும் தமிழ் மொழி
- ஐவி.நாகராஜன்

1956-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் தமிழ் ஆட்சிமொழி மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது இந்நாள் ஒரு நன்னாள் என்று வரவேற்று பேசியவர் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பி.ராமமூர்த்தி ஆவார். அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தில் தமிழே ஆட்சிமொழியாக வேண்டுமென்று பேசியவரும் அவரே.
இந்தி மொழியா, ஆங்கில மொழியா?
 என்ற விவாதம் முன்னுக்கு வந்தபோது தமிழுக்கே முன்னுரிமை வேண்டுமென கேட்டு தமிழகத்தில் தமிழே தலைமை தாங்க வேண்டுமென சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் முழங்கியவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் பி.ராமமூர்த்தி, ஜீவானந்தம், எம்.ஆர்.வெங்கட்ரான், ஏ.பாலசுப்பிரமணியம், என்.சங்கரய்யா போன்ற தலைவர்கள் ஆவார்கள்.
 நாடாளுமன்றத்தில் வாதாடி தமிழில் தந்தி தருவதை நடைமுறை சாத்தியமாக்கிவயவர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த ஏ.நல்லசிவன் ஆவார்.
அதன் தொடர்ச்சிதான் இன்று கண்டம் விட்டு கண்டம் தமிழ் மொழி பரவி வருவதை நம்மால் பார்க்கமுடிகிறது. உலகில் எங்கெங்கு நிலப்பரப்பு உண்டோ அங்கெல்லாம் தமிழ் உச்சரிப்பு கேட்டுக்கொண்டுதான் இருக்கும். இது ஒரு தமிழ் ஆர்வலர் சொன்ன வாசகம்.
அது உண்மை என்பதை நிரூபிக்கும்படியான செய்தி ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும். அதாவது ஆஸ்திரேலிய பள்ளிக்கூடங்களில் அன்மையில் தமிழை இரண்டாம் மொழியாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இது சாதாரண விஷயமல்ல. தமிழ் பேசும் மக்கள் மற்றும் மொழியியல் அறிஞர்களுக்கு பெரும் பெருமை சேர்த்துள்ளது.

உலக அளவில் தமிழ் மொழியின் சிறப்பு கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல. தென்னிந்திய மாநிலங்களில் பெரும் பான்மையினரின் தாய்மொழியாகவும் தமிழ் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். மேலும் இந்தியாவின் பிற மாநிலங்களான கர்நாடகம், கேரளம், மற்றும் மகராஷ்டிராவிலும் பெருமளவில் நம் தமிழ் பேசப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் உலகமுழுவதுமே பல கண்டங்களில் தாய்த் தமிழ்மொழி வழக்கில் உள்ளது. அதில் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழ் பேசும் மக்களும் உள்ளனர்.
 தமிழ் மொழிக் கல்வியும் உள்ளது.
 அரசு மொழிகளில் ஒரு மொழியாகவும் தமிழ் விளங்குகிறது.
ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ் மொழி விருப்பப்பாடமாக உள்ளது.
 மலேசியாவில் தொடக்க, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்விடாமல் கற்பிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ் மொழியும் ஒரு பாடமாக கற்றுத்தரப்படும் என்று நியூ சவுத் மாகாண அரசு அன்மையில் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மேலும் இதுதொடர்பான தமிழ் மொழி பாடம் உள்ளடங்கிய புதிய பாடத்திட்டத்தையும் அம்மாகாண அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
நீயூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்  1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலும் இரண்டாவது மொழி பாடமாக தமிழ் மொழிப்பாடம் பயிற்றுவிக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவி உள்ள நம்முடைய தாய் தமிழ் மொழியின் சிறப்பை சொல்ல வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
 நுகர்வோர் செலவினம்
மோடி ஆட்சியில், 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் நுகர்வோர் செலவினம் குறைந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் மற்றும் பணமதிப்பு நீக்கம், தெளிவில்லாத ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால், இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
 ஜிடிபி 5.6 சதவிகிதமாக குறைந்து விட்டது.
ஏற்றுமதி குறைந்ததால், வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

சிறு-குறு தொழில்கள் முடங்கிக் கிடப்பதால், கடந்த 5 ஆண்டுகளில் வேலையின்மை 8 சதவிகிதமாக அதிகரித்து விட்டது. நாட்டில் பணப்புழக்கமும் வெகுவாக குறைந்து விட்டது
இந்நிலையில், இந்தியாவில் நுகர்வோர் செலவினமும் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் 2017-18-ம் ஆண்டில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதாக, பிசினஸ் ஸ்டாண்டர்ட் (Business Standard) ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியக் குடும்பங்கள் செய்யும் செலவுகள் குறித்த கள ஆய்வு அறிக்கையை மத்திய புள்ளியியல் அலுவலகம் தயாரித்துள்ளது.

இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகாத நிலையில், அது தொடர்பான முக்கிய புள்ளி விவரங்களை மட்டும் ‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 2011-12ஆம் ஆண்டில் நுகர்வோர் ஒருவரின் மாதாந்திர செலவினம் ரூ. 1,501 ஆக இருந்த நிலையில்,
 அது 2017-18ஆம் ஆண்டில் ரூ.1,446 ஆகக் குறைந்துள்ளதாகவும்; இது, 3.7 சதவிகிதம் வீழ்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கிராமப்புறங்களில், நுகர்வோர் செலவினமானது 8.8 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

“2011-12ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் தனிநபர் உணவிற்காக செலவிடும் தொகை ரூ. 643 ஆக இருந்தது,
தற்போது 2017-18ஆம் ஆண்டில் மாதம் ஒன்றுக்கு ரூ. 580 ஆக குறைந்துள்ளது”கடைசியாக, 1972-73ஆம் ஆண்டில்தான் நுகர்வோர் செலவினம் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது.
அதன்பின்னர் தற்போது மோடி ஆட்சியில்தான் நுகர்வோர் செலவினம் மோசமான நிலைக்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கிராமப்புற நுகர்வு அதிவேகமாக சரிந்திருப்பதாக ‘நீல்சன்’ நிறுவனமும் அண்மையில் தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

  வேலை வாய்ப்புகள் 


 “Border Roads Organisation” 
ராணுவத்தின் கீழ் செயல்படும் -ல் உள்ள 540 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Multi Skilled Worker (Driver Engine Static)
காலியிடங்கள்: 540 (UR-221, SC-81, ST-40, OBC-145, EWS-53)
சம்பளவிகிதம்: ரூ.18,000
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும், PWD, EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic Motor/ Vehicles/ Tractors தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு நடைபெறும் இடம்: GREF Centre, Dighi Camp, Alandi Road, Pune - 411015.
உடற்தகுதி: உயரம் 157 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 75 செ.மீட்டரும், 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.bro.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: Commandant, GREF Center, Dighi Camp, Pune - 411015.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 20.11.2019. மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் பாதுகாப்பு அதிகாரி, டேட்டா அனாலிஸ்ட் உள்ளிட்ட 13 வகையான பிரிவுகளில் மொத்தம் 105 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப அதிகாரி (ஐ.டி.,), பாதுகாப்பு அதிகாரி, ரிஸ்க் மேனேஜர், டேட்டா அனாலிஸ்ட், கிரெடிட் ஆபிசர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன.

வயது
: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம்- 45, ஒவ்வொரு பணிகளுக்கும் மாறுபாடு உள்ளன. இடஒதுக்கீடு அடிப்படையில், வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:
தொழில்நுட்ப அதிகாரி பணிக்கு கம்ப்யூட்டர் சயின்சில் 4 ஆண்டு இன்ஜினியரிங் படிப்பு, ஐ.டி., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ரிஸ்க் மேனேஜர் பணிக்கு எம்.பி.ஏ.. (நிதி), எம்.எஸ்சி., (கணிதம்/புள்ளியியல்) உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
தமிழகத்தில் தேர்வு மையம் சென்னையில் மட்டுமே உள்ளது. இதில் மாற்றம் ஏற்படலாம்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி தேதி
: 21.11.2019

விபரங்களுக்கு: https://www.centralbankofindia.co.in/pdf
 -------------------------------------------------------------------------------------------------------------------------------
 தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்  
மற்றும் வங்கிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்:  300
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ PWD/ EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட சலுகைகள் வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி:  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tncoopsrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.11.2019
மேலும் கூட்டுறவு நிறுவனத்தின் வகை, காலியிடங்கள், சம்பளம், பணியின் பெயர், காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.  ----------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய எண்ணைக் கழகத்தில் (indian oil corporation) வேலை

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 380 'டெக்னீசியின் அப்ரென்டிஸ்' பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள் : மண்டல பைப்லைன்ஸ் வாரியாக மேற்கு 115, கிழக்கு 100, தென் கிழக்கு 50, வடக்கு 90, தெற்கு 25 என மொத்தம் 380 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு டிகிரி, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.10.2019 அடிப்படையில் 18 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கடைசிநாள் : 22.11.2019

விபரங்களுக்கு:www.iocl.com/download/Website%20Notification%20App%20final.pdf
--------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?