குதிரை களவு போனபின் லாயத்தைப் பூட்டியவர்கள்.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் ஒன்றில், கடந்த 2 மாதங்களில் 15 லட்சம் பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளதாகவும், இதன்மூலம் கோவிட் 19 கண்காணிப்பு பணியில் குறைபாடு இருப்பது தெரியவருகிறது எனவும் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவ்பா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதில், இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கை பெரிய அளவில் பாதிக்கப்படும். இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் 90%வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் மற்றவர்கள் அவர்களுடன் தொடர்புள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------
சுகாதாரத் துறைக்கு 
ஒரு நுரையீரல் மருத்துவரின்
மனம் திறந்த மடல்.

சுகாதாரத்துறை வல்லுநர்களே, வணக்கம்.
நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசின் இந்த முயற்சிக்கு ஒவ்வொரு குடிமகனும் 100% ஆதரவு வழங்க வேண்டும்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) வியாழன் மதியம் நிலவரப்படி உலகம் முழுவதும் 4,75,170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இதுவரையில் மொத்தம் 21 ஆயிரத்து 358 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறியுள்ளது. உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் தீவிர சிகிச்சை பிரிவில்(ICU) அனுமதிக்கப்பட்டு இருந்தனர் என்பதையும் இந்நேரத்தில் நினைவுபடுத்த விழைகின்றேன். மதுரையில் கொரோனாவால் இறந்தவர் கூட தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர் தான். தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆயிரத்திற்கும் குறைவான தீவிர சிகிச்சை படுக்கைகளே (ICU Beds) உள்ளன.  அதிலும் செயற்கை சுவாசக் கருவி (VENTILATORS)வசதி 400 மட்டுமே உள்ளன. அவைகளில் பெரும்பாலானவை சென்னையில் மட்டுமே உள்ளன. இதர 37 மாவட்டங்களில் உள்ள அரசாங்க மருத்துவமனையில் 200க்கும் குறைவான செயற்கை சுவாச கருவிகளே உள்ளன. அவற்றில் எத்தனை கருவிகள் முழுமையாக செயல்படுகின்றது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
நான் அறிந்தவரையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் எம்.டி.  பொது மருத்துவர்களே  பணியமர்த்தப்பட்டுள்ளனர். சில அரசு மருத்துவமனைகளில் மயக்கவியல் துறை வல்லுநர்களும் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றுகின்றனர். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் முதுநிலை மாணவர்கள் (PG Residents)தான் தீவிர சிகிச்சைப் பிரிவில் முதுகெலும்பாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டாலும் கூட இந்நேரத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு சிறப்பு வல்லுநர்களின் (CRITICAL CARE SPECIALISTS/DM PULMONOLOGIST) வழிகாட்டுதல் நிச்சயம் தேவை . முன்னேறிய நாடுகள் அனைத்திலும்  அவர்களின் பங்கு போற்றத்தக்கதாக உள்ளது.  தமிழக அரசு மருத்துவமனைகளில்  தீவிர சிகிச்சைப் பிரிவு சிறப்பு வல்லுநர்கள் (CRITICAL CARE INTENSIVIST) ஒருவர் கூட இல்லை என்பது வேதனை அளிக்கிறது. 175 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை பொது மருத்துவமனையில் கூட அத்துறை வல்லுநர்கள் யாரும் இல்லை.
தீவிர சிகிச்சைப் பிரிவு வல்லுநர்கள் இல்லை
உலகப் புகழ்பெற்ற சென்னை பொது மருத்துவமனையில், அத்துறை சிறப்பு வல்லுனர்கள் இருந்திருந்தால் நமது முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளித்திருக்க முடியும். நாட்டின் தலைநகரமான தில்லியில், குடியரசுத் தலைவர் முதல் பிரதமர் வரை அனைத்து அரசியல்  பிரமுகர்களும், அரசு மருத்துவமனையான எய்ம்ஸ்-இல் தான் சிகிச்சை பெறுகின்றனர்.  காரணம் என்னவென்றால் அங்கு தீவிர சிகிச்சை பிரிவு வல்லுநர்கள் அதிகம் உள்ளனர். இந்நிலை தமிழகத்தில் உள்ளதா என்றால் இல்லவே இல்லை என்றுதான் கூற வேண்டும்.  சாதாரண காய்ச்சல் முதல் சிறு அறுவை சிகிச்சை வரை இங்கு உள்ள ஆட்சியாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவருமே தனியார் மருத்துவமனையை நாடுகின்றனர். பொதுமக்களும் இதனால் அரசாங்க மருத்துவமனைகளில் மேல் உள்ள நம்பிக்கையை இழந்துவிட்டனர். 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டு, எதிர்மறை அழுத்தம் (Negative pressure Isolation Room) உள்ள அறைகளில் தங்க வேண்டும். குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளவர்கள் மற்றும் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டவர்கள் அனைவரும் எதிர்மறை அழுத்தம் (Negative pressure Isolation Room) உள்ள அறைகளில் இருந்தால்தான் நோய் பரவல் குறையும். அப்படிப்பட்ட வசதி எந்த அரசு மருத்துவமனைகளிலும் தற்போது இல்லை.  இதனால் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து அந்த நோய் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. ஸ்பெயின் நாட்டில் இதுதான் நடந்தது. அங்கு கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபர்களில் 15% மருத்துவப் பணியாளர்கள். நம் நாட்டில் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டால் 30 முதல் 40% மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாதிக்கப்படுவார்கள். 
எனவே உயர் சிகிச்சை தேவைப்படும் அனைத்து கொரோனா நோயாளிகளையும் எவ்வித  தாமதமும் இன்றி, அனைத்து வசதிகளையும் (ECMO உட்பட) கொண்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக மாற்ற வேண்டும். அவர்களுக்கு, 24 மணிநேர தீவிர சிகிச்சைப் பிரிவு வல்லுனர்களின் கண்காணிப்பில் முறையான சிகிச்சை அளித்திட வேண்டும். முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். தனியார் மருத்துவமனையின் செலவை அரசே ஏற்க வேண்டும்.
                                                   - மரு,பால.கலைக்கோவன்
-----------------------------------------------------------
கமல்ஹாசன் வீட்டில்கொரோனா  
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் ஹாசனின் வீட்டில் நேற்று இரவு கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டது. சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள வீட்டில் மாநகராட்சி ஊழியர்கள் இந்த நோட்டீசை ஒட்டியுள்ளனர். அதில், கொரோனாவில் இருந்து எங்களைக் காக்க, சென்னையைக் காக்க, எங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம் என கூறப்பட்டுள்ளது. 
இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மய்யத்தை ஓரம் கட்ட முயற்சி என கட்சியினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசை அகற்றினர்.
நோட்டீசை அகற்றிய அதிகாரி
கமல் வீட்டில் முன்பு அவருடன் இருந்த நடிகை கவுதமியின் பாஸ்போர்ட் முகவரியின் அடிப்படையில் அந்த வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கமலின் வீடு என்பது தெரியாமலும்,நடிகை கவுதமி அங்கு தற்போது இல்லை.பாஜக பாதுகாப்பில் உள்ளார் என தெரியாமலும்  நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது. முகவரியில் ஏற்பட்ட குழப்பத்தால் சிறிய தவறு நடந்திருப்பதாக மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்தார்.
----------------+------------------------------------------

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த  முடியாமல் உலக நாடுகள் திண்டாடி வருகிறது. சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று  உலகின் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 
இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 97 ஆயிரத்து 185 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 27 ஆயிரத்து 359 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் சுமார் 3000 பேர் பலியாகி உள்ளனர். 
மேலும், 4 லட்சத்து 36 ஆயிரத்து 466 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 23 ஆயிரத்து 523 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 360 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 
இன்றைய சூழல் கொரோனாவால் ஐரோப்பிய நாடான இத்தாலியில் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.  
இதுவரை இத்தாலியில் 9134 பேர் பலியாகி உள்ளனர். அதற்குஅடுத்தடுத்த  இடங்களில் ஸ்பெயினில் 5138 பேரும், சீனாவில் 3295 பலியாகி உள்ளனர்.
--------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?