யானைப் பசிக்கு சோளப்பொறி

கொரோனா வைரஸ் பாதிப்புக்கான மோதி அரசின் நிதி ஒதுக்கீடு 

 - ஓர் அலசல்

எது எவ்வாறாயினும், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இந்த நிதி உதவிகள், தற்போதைய சூழ்நிலைக்கு எதிர்பார்த்ததை விட மிக மிகக் குறைவு என்பதுடன், போதுமானதாகவும் இல்லை. வரவிருக்கும் மாதங்களில் நிதி உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்கு நிச்சயமாக இது போதுமானதாக இருக்காது. இந்த நிதித் தொகுப்பு ஒதுக்கீடு செய்வதில் அரசு கஞ்சத்தனம் காட்டியுள்ளது.
இந்த நேரத்தில் அரசாங்கத்தின் உதவி யாருக்கு தேவை என்பது முக்கியமானது.
நாட்டின் அமைப்புசாரா துறையில் 90 சதவீத இந்திய மக்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு சட்டரீதியான தீர்வு எதுவும் இல்லை. அவர்களின் வாழ்வாதாரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு எந்தவொரு சட்ட பாதுகாப்பும் கிடையாது என்பதும், கோடிக்கணக்கான நகர்ப்புற மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் அமைப்புசாராத் துறையில் பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.


சமூகத்தின் ஏழ்மையான இந்த மக்கள்தான் எந்தவொரு பொருளாதார ஏற்றத் தாழ்வுகளாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த மக்கள் தினசரி, வாராந்திர கூலி மற்றும் மாத ஊதியம் பெற்று, அதில் தான் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.
திடீரென்று வருமானம் நின்றுபோய்விட்டால், அதை சமாளிக்க அவர்களிடம் சேமிப்பு எதுவும் இருப்பதில்லை. அல்லது ஒரு சிறிய தொகை இருக்கலாம். நாடு தழுவிய ஊரடங்கின் காரணமாக நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பித்து நிற்கும் நிலையில், இந்திய சமுதாயத்தின் இந்தப் பிரிவினர்தான் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.
கொரோனா வைரஸின் தாக்குதலில் இருந்து நாட்டை பாதுகாக்க 21 நாள் லாக் டவுன் என்ற ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்னதாக, நாட்டின் பலவீனமான மக்களுக்கு உதவ பொருளாதார தொகுப்பு மற்றும் வளங்களை அரசு அறிவித்திருக்க வேண்டும். ஆனால், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு அவ்வாறு செய்யாமல் அலட்சியம் காட்டியது.
இந்த நீண்ட ஊரடங்கு அறிவிப்பானது, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை முடக்கிவிட்ட து. 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட 48 மணி நேரத்திலேயே, அதற்கான திட்டமிடல் போதுமானதாக இல்லை என்பது நிதர்சனமாக வெளிப்பட்டது. இன்னும் சில நாட்களில், நிலைமை மிகவும் மோசமாக மாறக்கூடும், மக்கள் பணப் பற்றாக்குறை மற்றும் பட்டினியால் பாதிக்கப்படுவார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமையன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்கப் போகிறார் என்ற செய்தி வந்ததும், மக்கள் துயரத்தை மத்திய அரசு புரிந்து கொண்டது என்ற நம்பிக்கை துளிர்விட்டது. ஆனால், மக்களின் பிரச்சனைகளை அகற்ற அரசு தயாராக உள்ளது என்று மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற நிர்மலா சீதாராமன் தவறிவிட்டார்.


மக்களின் நம்பிக்கைகளையும், அரசின் அறிவிப்புகளையும் அலசி ஆராய்ந்து பார்க்கலாம்.
1.7 லட்சம் கோடி நிவாரணத் தொகுப்பை அறிவித்துள்ளதாக மத்திய அரசு கூறியது. இந்தத் தொகை 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.83 சதவீதம் மட்டுமே. கொரோனா வைரஸிலிருந்து எழும் பொருளாதார நெருக்கடிக்கு மற்ற நாடுகள் தங்கள் பொருளாதாரங்களின் அளவிற்கு ஏற்ப மிகப் பெரிய பொருளாதார நிதியுதவியை அறிவித்துள்ளன. அதை பார்க்கும்போது, இந்திய அரசின் நிதி ஒதுக்கீடு மிக மிகக் குறைவு.
அதுமட்டுமல்ல, அறிவிக்கப்பட்ட இந்த நிதித் தொகுப்பும் உண்மைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.
நிதியமைச்சர் அறிவித்த தொகுப்பை சற்று கூர்ந்து கவனித்தால், அரசாங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் அடிப்படை தவறுகளை செய்துள்ளது. நிர்மலா சீதாராமன் நிதித் தொகுப்பை அறிவித்தபோது, ஒவ்வொரு பகுதிக்கும் உள்ள தொகையை தனித்தனியாக குறிப்பிட்டார். அவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், மொத்த நிதித் தொகுப்பின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய் தான் வருகிறது. எடுத்துக்காட்டாக, மன்ரேகா திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிக்கும் நிதித் தொகுப்பைப் பார்ப்போம். இது குறித்து சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டபோது, அரசாங்கம் திருத்தப்பட்ட அறிக்கையை வெளியிட்டது. தொகுப்பின் வெவ்வேறு பகுதிகள் தொடர்பான நிதித் தகவல்கள் காணவில்லை.
அறிவிப்பு எண் -1: மன்ரேகா திட்டத்தின் கீழ், வேலை செய்பவர்களின் ஊதியம் நாளொன்றுக்கு 20 ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்படும். அதற்காக நிதித்தொகுப்பில் 5,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, மன்ரேகாவில் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையாவாய்ப்பு உறுதியளிப்பு சட்டம்) தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டது. இது ஆண்டுதோறும் செய்யப்படுவதுதான். ஆனால், இப்படி அதிகரிக்கப்பட்ட ஊதியமும், ஊரடங்கால் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு பயனற்றது. ஏனென்றால் இவர்கள் அனைவரும் சமுதாய விலகலை பின்பற்ற வேண்டும்.
மன்ரேகா என்பது ஒரு லாப நோக்கமின்றி செயல்படும் பணிகள் என்பதால், இங்கு வேலை இல்லை என்றால் கூலி இல்லை என்று தான் பொருள். கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு மன்ரேகாவில் 6 முதல் 8 கோடி நாட்கள் வேலைவாய்ப்பு குறைந்திருப்பதைக் காண முடிகிறது. (அதன் இறுதி புள்ளிவிவரங்கள் மார்ச் இறுதிக்குப் பிறகு வெளிப்படும்). நிலைமை மோசமடையப் போவதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன.


அறிவிப்பு எண்-2: 80 கோடி மக்களுக்கு மூன்று மாதங்களுக்கு கூடுதல் ரேஷன் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் ஒரு கிலோ பருப்பு வகைகள் வழங்கப்படும். இதற்கான பட்ஜெட் 40 ஆயிரம் கோடி.
இது மிகக் குறைவான நிவாரணம் என்பது வெளிப்படையாக தெரிகிறது. மொத்த சந்தைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில், சில்லறை விற்பனையில் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், உப்பு, எண்ணெய் மற்றும் சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஏழைகளுக்கு பணம் தேவைப்படும். கோதுமை மற்றும் அரிசியின் கூடுதல் ரேஷன் போன்றவை இதுபோன்ற கடினமான காலங்களில் ஏழைகளுக்கு நிவாரணம் அளிக்கும். ஆனால், பொருட்களின் விநியோக சங்கிலி உடைபடும்போது, ஏழை மக்களுக்கு சிக்கல்கள் அதிகரிக்குமே அன்றி குறையாது. பொதுமக்கள், அதிலும், குறிப்பாக வெளியூரில் இருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அரசாங்க ரேஷன் கடைகளுக்கு செல்வதும் கடினமாகிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களின் நிலைமை எப்படி இருக்கும்?
இரண்டாவதாக, இந்த ஆண்டின் முழு ரேஷனுக்கும் மானியம் வழங்குவதற்கான சுமை அரசுக்கு ஏற்கனவே அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது பங்கின் நிதிச் சுமையை தாங்குமாறு இந்திய உணவுக் கழகத்தை அரசாங்கம் ஆண்டுதோறும் கட்டாயப்படுத்துகிறது. இதனால், இந்த நிதிச் சுமை அரசாங்கத்தின் சொந்த பதிவுகளிலிருந்து இல்லாமல் போகலாம். ஆனால், கணக்குப் போட்டால் உண்மை நிலை என்ன? இது, புதிய நிதியாண்டிற்கான கணக்கில் மேலும் அதிக சுமையை ஏற்படுத்தும்.
அறிவிப்பு எண்-3: சுய உதவிக்குழுக்களுக்கான கடன் தொகையை 10 லட்சத்திலிருந்து இருபது லட்சமாக உயர்த்த வேண்டும்.
பணம் ஒதுக்கீடு செய்வது மட்டும் மிக முக்கியமான விஷயம் அல்ல. அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு இதுவரை சுய உதவி குழுக்களுக்கு 1500 கோடி ரூபாய் நிதி கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று லட்சம் ரூபாய் வரையிலான கடன் மட்டுமே, சலுகை வட்டியில் கிடைக்கிறது. மூன்று லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கியின் சாதாரண வட்டி விகிதத்தையே செலுத்த வேண்டும் என்பதால் இந்த அறிவிப்பால் அவர்களுக்கு பெரிய அளவில் பயனில்லை. திடீரென வருமானத்தை இழந்தவர்கள் தங்கள் குடும்பத்தை நடத்துவதற்கே உடனடியாக பணம் தேவைப்படும் நிலையில் இருப்பார்கள். கடன்களை வாங்கும்போது, இடைத்தரகர்கள் மற்றும் வங்கிகளையும் சுய உதவிக்குழுக்கள் சமாளிக்க வேண்டும். கடனுக்கு விண்ணப்பிப்பதற்கும் அதைப் பெறுவதற்கும் இடையிலான காலமும் அதிகமாகவே உள்ளது.
அறிவிப்பு எண் 4: மூன்று மாதங்களில் 20.40 கோடி பெண்களின் ஜன்-தன் கணக்குகளில் 1,500 ரூபாய் போடப்படும். பட்ஜெட்- 30,000 கோடி
அரசாங்கம் விரும்பினால், அதை பெண்களுக்கு மட்டுமல்ல, அனைத்து ஜன்-தன் கணக்குகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தலாம். மாதத்திற்கு ஐநூறு ரூபாய் என்பது மிகக் குறைந்த தொகை. ஒரு திறமையான தொழிலாளி இதை விட அதிகமாக ஒரு நாளிலேயே சம்பாதித்துவிடுகிறார். திறன் குறைந்த தொழிலாளி இரண்டு நாட்களில் இந்த பணத்தை எளிதாக சம்பாதிக்கிறார். அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ஏற்கனவே பன்மடங்கு அதிகரித்துள்ளன. நாட்டின் பல பகுதிகளிலும் பொருட்களின் விலைகள் இனி குறையாது. எனவே, வேலைவாய்ப்பு இல்லாதபோது, பல பகுதிகளிலும் வசிக்கும் மக்களின் தினசரி வாழ்க்கைக்கான செலவு அதிகரிக்கப் போகிறது


அறிவிப்பு எண் -5: 8.7 கோடி விவசாயிகளுக்கு ஏப்ரல் மாதம் பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும். பட்ஜெட் - 16 ஆயிரம் கோடி
நில உரிமை இருந்த வைத்திருந்த விவசாயிகளுக்கு இந்த தொகையை ஏப்ரல் மாதத்தில் வழங்க ஏற்கனவே திட்டமிடப்பட்ட்டிருந்தது. இது ஒரு தனிப்பட்ட உதவித்தொகை அல்ல. நிலமில்லாத அல்லது பிறருடைய வயல்களில் பணிபுரியும் மற்றும் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகளில் பெரும்பாலானோர் இந்த திட்டத்தால் எந்த நன்மையும் பெற மாட்டார்கள்.
அறிவிப்பு எண் 6: அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் விதவைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவி கிடைக்கும். பட்ஜெட் - மூவாயிரம் கோடி
இந்த சட்டத்தின் கீழ், கைம்பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு இருநூறு முதல் ஐநூறு ரூபாய் வரை ஓய்வூதியம் வழங்குவதற்காக மத்திய அரசு ஏற்கனவே மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்குகிறது. பல சந்தர்ப்பங்களில், மாநிலங்கள் தங்கள் சார்பாக இன்னும் சில பணத்தைச் சேர்த்து, இந்த தொகையை ஓரளவு அதிகரித்து வழங்குகின்றன. இந்த நிலையில், மாதத்திற்கு 333 ரூபாய் என்ற குறைவான தொகையை மத்திய அரசு கொடுத்தால், அதனால் பெரிய அளவு பயன் ஏதும் இல்லை.


அறிவிப்பு எண் -7: உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள். பட்ஜெட் - 13 ஆயிரம் கோடி
2019-20 விலையில் அரசாங்கம் இலவச சிலிண்டர்களை விநியோகித்தால், சிலிண்டர் ஒன்றின் விலை சுமார் 681 ரூபாயாக இருக்கும். வாடிக்கையாளர்கள் இந்த சிலிண்டர்களை 500 ரூபாய்க்கு பெறுகின்றனர். அப்படியிருந்தும், ஆண்டுக்கு சராசரியாக நான்கு சிலிண்டர்களுக்கு மேல் எந்தவொரு குடும்பமும் பயன்படுத்தவில்லை. அதிக வருமானம் உள்ள வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு சராசரியாக ஏழு சிலிண்டர்களைப் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் இப்போது அரசாங்கம் இந்த சிலிண்டர்களை ஏழைகளுக்கு இலவசமாக்குவதால், ஒவ்வொரு குடும்பமும் மேலும் அதிகமாக இரண்டு சிலிண்டர்களை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். இந்த அதிகபட்ச பயன்பாடு இருந்தாலும்கூட, பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவாகவே செலவாகும்.
அறிவிப்பு எண் 8: 100க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனத்தின் இ.பி.எஃப். பங்களிப்பில், ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் பங்கை அரசாங்கம் செலுத்தும். இதில் அந்த நிறுவனத்தின் 90 சதவீத ஊழியர்கள் 15 ஆயிரம் அல்லது அதற்கும் குறைவான சம்பளத்தைப் பெறுபவர்களாக இருக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக நிதியமைச்சரின் அறிவிப்பிற்கும், அரசாங்கம் பத்திரிகைகளுக்கு கொடுத்துள்ள அறிக்கையிலும் ஒரு குழப்பம் இருக்கிறது. 100க்கும் குறைவான ஊழியர்கள் வேலை செய்யும், மற்றும் ஊழியர்களின் மாத ஊதியம் 15,000க்கும் குறைவாக இருக்கும் ஒவ்வொரு நிறுவனமும் இதன் மூலம் பயனடைய முடியும் என்று பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், பிசினஸ் ஸ்டாண்டர்டின் சோமேஷ் ஜா எழுதியது போல, அரசாங்கத்தின் இந்த பொறுப்பை நாம் நம்பினால், இதன் பொருள் -
சமூக பாதுகாப்பு முறையின் ஒரு பகுதியாக இருக்கும் இ.பி.எஃப்பின் பயனாளிகளில் பெரும்பாலானோருக்கு இது பயனளிக்காது. யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் இந்த முயற்சியால் நாட்டின் மொத்தம் 47 கோடி இ.பி.எஃ.ப். கணக்கு வைத்திருப்பவர்களில் 16 சதவீத பேருக்கு மட்டுமே பயன் கிடைக்கும்.


அரசாங்கத்தின் அனைத்து அறிவிப்புகளையும் ஒரே மாதிரியாக, சமநிலையில் இருந்து ஆராய்கிறோம். மக்களுக்கு உதவி என்ற பெயரில் அரசாங்கம் புளிப்பு மிட்டாய்களை விநியோகிப்பதாகவே தெரிகிறது. ஆனால், இது அரசாங்கம் தனது விசாலமான கருணையுள்ளத்தைக் காட்ட வேண்டிய நேரம்.
ஆனால், நேர்மையாக சொல்வதென்றால், உண்மையில், இது மக்களுக்கு பெரிய அளவில் உதவிகள் செய்வதாக சொல்லி, மூளைச்சலவை செய்வதே. உலகெங்கிலும் ஆபத்து மணிகள் ஒலித்தபோது கூட, அரசாங்கம் எச்சரிக்கை செய்யவில்லை, பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கான நிதித் தொகுப்பை உருவாக்கும் திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை.
ஆனால், இந்த திசையில் அரசின் இந்த நடவடிக்கை முதல் படியாக இருக்கும் என்று நாம் நம்பலாம். மேலும், பொருளாதாரத்திற்கு நிவாரணம் வழங்க, இனி எதிர்வரும் நாட்களில் அரசாங்கம் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கும். பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டியை அமல்படுத்திய கடைசி நாட்களில், அவற்றைத் திட்டமிட்டு செயல்படுத்துவதில் செய்த தவறை அரசாங்கம் உடனடியாக ஏற்றுக்கொண்டது. அதேபோல, இந்த முறை அரசாங்கம் தனது தவறை ஏற்றுக் கொள்ளும் என்றே நம்புகிறோம்.
அரசாங்கத்தின் முன் இருக்கும் சவால் மிகவும் தெளிவானது. சரியான உரிய திட்டமிடலின் மூலம் அரசாங்கம் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். அரசு கொடுக்கும் உதவிகளின் நன்மை மக்களைச் சென்றடைவதற்கான வழிகளில் உள்ள தடைகளை கண்டுபிடித்து, அவற்றை அகற்ற வேண்டும். அதுதான், அனைத்து அரசாங்கத் திட்டங்களின் பயன், தேவைப்படும் குடிமக்களுக்கு சென்று சேரும்.
புதிய நிதியாண்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அரசாங்கம் நிர்ணயிக்கும் போது மட்டுமே இந்த நிதித் தொகுப்புகள் போதுமானதாக இருக்கும். இதன் அடிப்படையில், பொருளாதாரத்தின் முன் ஒரு புதிய வகையான போர் உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வழங்கும் சாதனங்கள் இந்த நீண்ட கால ஊரடங்கு உத்தரவின் போது மக்களை சரியான முறையில் அடைய வேண்டும்.
கொரொனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது. ஏனெனில் இந்த தொற்றுநோயின் அபாயங்களை புரிந்து கொள்வதில் அரசாங்கம் காலதாமதம் செய்துவிட்டது. ஆனால் இப்போது கொரொனா அதிவேகத்தில் பரவும் இந்த நிலையில் அரசாங்கத்தால் தூங்க முடியாது. இந்த தொற்றுநோயின் மோசமான மற்றும் பேரழிவு விளைவுகளை மிகவும் அதிக அளவு அனுபவிப்பது வழமை போல் இந்தியநாட்டின் ஏழை மக்கள்தான்.
 நிதின் சேத்தி

+-------------------------------------+---------------------------------------------+

 கொரோனா இன்றைய முக்கிய நிகழ்வுகள்.

  1. இந்திய நேரப்படி செவ்வாய் காலை 07.57 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,85,709.
  2. இவர்களில் 37,686 பேர் இறந்துள்ளனர். 1,65,370 பேர் குணமடைந்துள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
  3. அதிகபட்சமாக இத்தாலியில் 11,591 பேரும், ஸ்பெயினில் 7,716 பேரும், சீனாவில் சுமார் 3,400 பேரும் கோவிட்-19 தொற்றுக்கு இறந்துள்ளனர்.
  4. அதிக மரணங்களைச் சந்தித்த நாடுகளில் இரான் நான்காம் இடத்தில் இருந்தது. இப்போது 3,000க்கும் மேலான மரணங்களுடன் பிரான்ஸ் நான்காம் இடத்தில் உள்ளது. அடுத்தபடியாக இரானில் 2,757 பேர் இறந்துள்ளனர்.
  5. சீனாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் ஸ்பெயினிலும் மரணங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
  6. உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் கோவிட்-19 நோய் தொற்றுக்கு இதுவரை 1,64,274 பேர் ஆளாகியுள்ளனர்.
  7. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,251ஆக உள்ளது. இவர்களில் 102 குணமடைந்துவிட்டனர். 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
  8. -------------------------+------------------------

கொரோனா வைரஸ் குறித்த முனைவர் பட்டம் பெற்றுள்ள பவித்ரா வேங்கடகோபாலன்.
சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட சமூக பரவல் (Limited Community transmission) என்ற நிலையை அடைந்துவிட்டது என்கிறார் கொரோனா வைரஸ் குறித்த முனைவர் பட்டம் பெற்றுள்ள பவித்ரா வேங்கடகோபாலன்.
கொரோனா வைரஸ் குடும்பம் குறித்து ஆய்வு செய்து, அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் பவித்ரா. சென்னையைச் சேர்ந்த பவித்ரா, கொரோனா வைரஸ் குறித்து உலகளவில் நடைபெறும் ஆராய்ச்சி தகவலைகளை கவனித்து வருபவர். பேட்டியிலிருந்து:
இந்தியாவில் 21 நாட்களில் கொரோனாவின் தாக்கம் குறைந்துவிடுமா?
வைரசின் தாக்கம் முழுமையாக குறைந்துவிடும் என கூறமுடியாது. ஆனால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு இந்த 21 நாட்கள் நிச்சயம் உதவும் என்பது உண்மை. கொரோனா வைரஸை பொறுத்தவரை ஒரு நபரிடம் இருந்து குறைந்தது 2.2 நபர்களுக்கு பரவும். தடுப்பு மருந்துகள் தற்போதுவரை இல்லை. நோய் பரவலை கட்டுப்படுத்துவது மட்டும்தான் தற்போது சாத்தியம் என்பதால், பரவலை குறைக்க இந்த 21 நாட்கள் அவசியம்.
இதுவரை நமக்கு தெரிந்த பாதிக்கப்பட்டவர்களிடம் தென்படும் அறிகுறிகளைப் பார்த்தால், கொரோனா தொற்று வைரஸ் 14 நாட்கள் வரை ஒரு நபரின் உடலிலிருந்து மற்ற நபருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது.
பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு, அவர்கள் தொடர்பில் இருந்த 14 நாட்களுக்குப் பின்னர் தொற்று ஏற்படுவதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை.
அதனால்,முதல் 14 நாட்கள் தனித்திருப்பது முக்கியம். பாதுகாப்பு கருதி மேலும் ஒரு வாரம் தேவை என முடிவு செய்து, 21 நாட்கள் தனிமைப்படுத்தல் தேவை என அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் இதுபோன்ற தனிமைப்படுத்தல் என்பது பரவலை பெருமளவு குறைக்கும்.
பவித்ரா வேங்கடகோபாலன்படத்தின் காப்புரிமைPAVITHRA
Image captionபவித்ரா வேங்கடகோபாலன்
கொரோனா வைரஸ் முதலில் மூச்சுக்குழாயை தாக்கும் என்பதால் சூப் குடிக்கவேண்டும், வெதுவெதுப்பான தண்ணீர், கசாயங்கள் குடிக்கவேண்டும் உள்ளிட்ட பல விதமான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவுகின்றன. இது உண்மையா?
இதுவரை கோவிட்-19 தொற்றுக்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. புதிதாக இதுபோல நோய்கள் வரும்போது, கூடவே பலர் இந்த நேரத்தில் பணம் ஈட்டப் பார்ப்பார்கள். லாபம் பார்க்க இதுபோல பரிந்துரைகளைச் செய்வார்கள்.
சூடான சூப், குடிநீர், இஞ்சி டீ குடிப்பதால் நீங்கள் ஓய்வாக உணரலாம். உங்கள் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருந்தால், நோய் தொற்றால் உங்களுக்கு பாதிப்பு இருக்காது.
இதுபோன்ற மருத்துவ முறைகள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. கைகளைக் கழுவுங்கள், தனித்து இருங்கள், கூட்டமாகக் கூடாதீர்கள் என்பாதைத்தான் நாம் ஆதாரபூர்வமாக சொல்லமுடியும்.
இந்த வைரஸ் விலங்குகளிலிருந்து வந்தாலும், ஏன் விலங்குகளுக்கு அதிகம் பரவவில்லை?
வௌவால் மூலமாக கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த விலங்கு மூலமாக மனிதனுக்கு பரவியது என்று தற்போதுவரை உறுதியாகவில்லை. மனிதர்களுக்கு நோய்த் தொற்று உள்ளது என்பதை அவர்கள் உடல்நலக்குறைவால் கண்டறிகிறோம்.
கொரோனா வைரஸ்
வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு தொற்று வந்தால் தெரியவரும். ஆனால் பிற விலங்குகளுக்கு வந்தால், அவற்றை யாரும் கண்காணிப்பதில்லை என்பதால் நமக்கு தெரியவில்லை. ஒருவேளை விலங்குகளுக்கு தாக்கம் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாடு செல்லாதவர்கள், நோய்த் தொற்று ஏற்பட்டவர்களோடு தொடர்பில் இல்லாதவர்கள் பத்து நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்துள்ளது. இது எப்படி சாத்தியம்?
சீனா அல்லது நோய் தொற்று ஏற்பட்ட பிற நாடுகளில் இருந்து வந்தவர்கள், ஏற்கனவே நோய் தொற்று இருந்தவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரிடம் நோய் அறிகுறிகள் இருந்தன.
தற்போது இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்ட சமூக பரவல் (limited community transmission)தொடங்கிவிட்டது என்பதால், அதன் காரணமாக கூட கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம். வைரஸ் தொற்று இல்லாதவர்களிடம் தொடர்பில் இல்லை என்றாலும், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலமாகக் கூட பரவியிருக்கலாம்.
இந்த வைரஸ் தாக்கத்தின் இறப்பு விகிதம் என்ன?
கொரோனா பாதிக்கப்பட்ட 100 நபர்களில் 3.3 நபர்கள் மரணம் அடைவார்கள். அதாவது 97 சதவீதம் நபர்கள் குணமடைவார்கள். குறிப்பாக, சர்க்கரை நோய், ஆஸ்துமா உள்ளவர்களுக்கு கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
70 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு இதுபோன்ற வியாதிகள் இருந்தால், ஏற்கனவே நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதால், அவர்களுக்கு கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருக்கும்.
கொரோனாவின் வைரஸ் எளிதாக பரவும் என்பதால், இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும்,பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருப்பார்கள், தொடர் சிகிச்சை எல்லோருக்கும் அளிக்கப்படவேண்டும் என்பது ஒரு நாட்டுக்கு பெரும் சுமையாக அமைந்துவிடும்.
அதிக பாதிப்புக்கு ஆளானவர்களை வென்ட்டிலேட்டரில் (செயற்கை சுவாச கருவி) வைக்கவேண்டும். அதிக எண்ணிக்கையில் பாதிப்பு இருக்கும்போது, அனைவருக்கும் வென்டிலேட்டர்கள் கிடைப்பது கடினம் என்பதால், பரவலை குறைப்பதே சிறந்தது.
இந்தியா போன்ற நாட்டில் மூன்று சதவீதம் என்பது பெரிய எண்ணிக்கையாக இருக்கும். அதாவது 133 கோடி மக்களில் சுமார் மூன்று சதவீதம் பேர் என்பது பெரிய இழப்பாகிவிடும்.
கைகளை கழுவுவது முக்கியம் என்கிறார்கள். உடலில் மற்ற பாகங்களில் இந்த வைரஸ் தங்காதா?
கைகளால் நாம் நம் உடலை தொடுகிறோம். வீட்டில் உள்ள கதவு கைப்பிடி, வெளியிடங்களில் பிற நபர்களுக்கு கைகுலுக்குவது என கைகளால் பல செய்கைகளை செய்கிறோம் என்பதால் கைகளை தூய்மையாக வைத்திருக்கவேண்டும். நாம் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான விஷயம்- ஈரமான, ஈரப்பதமான இடத்தில் வைரஸ் தங்கியிருக்கும் என்பதால்,தூய்மையாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள்.
--------------------------------------------
கொரோனா வைரஸ் சீனாவில் ஓர் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற தகவல் உண்மையா?
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியது என்பதுதான் உண்மை. ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா என்பதை சொல்ல எந்த ஆதாரமும் இல்லை.
---------------------------------------------
கொரோனா வைரஸ் பெயர் காரணம் என்ன?
கொரோனா வைரஸ் ஒன்றை மைக்கிரோஸ்கோப்பில் வைத்துபார்த்தால், ஒரு பந்துபோன்ற வடிவத்திற்கு கிரீடம் வைத்தது போல தெரியும். லத்தீன் மொழியில் கொரோனா என்றால் 'கிரீடம்' என்று பொருள். இந்த பெயர்தான் கொரோனா வைரசுக்கு வைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இந்த வைரஸ் தாக்கம் குறைந்துவிட்டது என்பதால் அங்கு மீண்டும் வராது என கூறமுடியுமா? உலகளவில் இந்த தாக்கம் எப்போது குறையும்?

சீனாவில் நோய் பரவல் குறைந்துவிட்டது. தற்போது அங்கு புதிதாக பாதிக்கப்பட்ட நபர்கள் அரிதாக இருக்கிறார்கள் என்பதால், அங்கு பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது. தற்போதும்கூட, சீனா முழுவதும் முக்கியமான நகரங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. நோய் தாக்கம் இனி வராது என்று உறுதியாக கூறமுடியாது. உலகம் முழுவதும் பரவிவிட்டதால், இது எப்போது கட்டுக்குள் வரும் என்று சொல்லமுடியாது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ளதும், கொரோனா வைரஸ் தாகத்திற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டறிவதில் ஏன் இந்த தாமதம்?
அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி இருப்பதால்தான் நாம் தற்போது நோயை கண்டறிந்து, நோய் பரவலை கட்டுப்படுத்த முயற்சிகளை எடுக்கிறோம். இதுவரை ஏற்பட்ட நோய்த் தொற்றுகளைவிட கொரோனா தொற்றை கண்டறிவதில் ஓரளவு உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் அறிவியல் வளர்ச்சிதான்.
ஒரு நோய் தொற்றுக்குத் தடுப்பு மருந்து கண்டறிவது சுலபம் இல்லை. ஒரு வைரஸ் ஒரே மாதிரியான தாக்கத்தை பல நாடுகளில் ஏற்படுத்துகிறதா என்பதை உறுதிசெய்யவேண்டும். தடுப்பு மருந்தை உடனே தயாரித்து அளிக்கமுடியாது.
சோதனை செய்ய கால அவகாசம் தேவை. கொரோனாவுக்கு முன்னர் ஏற்பட்ட சார்ஸ் தொற்றுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நேரத்தில் அந்த கிருமி முழுமையாக குறைந்துவிட்டது. தடுப்பு மருந்து தயாரிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்கள். அதனால், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது என்பது செலவு பிடிக்கும் செயல் மட்டுமல்ல, எல்லா நேரத்திலும் இதனை பயன்படுத்த முடியுமா என சோதனை செய்யவேண்டும்.

கொரோனா விஷயத்தில் நாம் முன்கூட்டியே செயல்பட்டுள்ளோம் என்றுதான் சொல்லவேண்டும். நோய் பரவலை கட்டுப்படுத்திவிட்டால், பாதிப்பை குறைத்து நாம் வெற்றிபெறலாம்.
-------------------------------------------+-----------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?