Go,Go கோகாய்.


நாடாளுமன்ற மாநிலங்களவையின் 250 இருக்கைகளில் ஒன்றில் போய் ரஞ்சன் கோகோய் அமர்வதற்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியை அவர் வகித்திருக்க வேண்டியதேயில்லை!
* உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த மெகர் சந்த் மகாஜன் டார்ஜிலிங் சுற்றுலா போனார். அங்கே அவர் கார் ஓட்டிச் சென்றபோது போக்குவரத்து விதியை மீறினார். தவற்றை ஏற்று அபராதம் கட்டுவதாகச் சொன்ன மகாஜன், மறுநாள் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போய் நின்றார். ``உங்கள் பெயர் என்ன?'' என்று மாஜிஸ்திரேட் கேட்க... ``மகாஜன்'' என்றார். '``என்ன வேலை பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டபோது, ``சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கிறேன்'' என்று தயங்காமல் சொன்னார். உடனே அந்த மாஜிஸ்திரேட் ``மை லார்டு'' எனப் பதறி எழுந்து மகாஜனை வணங்கினார். ``உட்காருங்கள். உங்கள் டூட்டியைச் செய்யுங்கள்'' என்றார் மகாஜன். ``முதல்முறை தவறு செய்கிறவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் எனக்கு உண்டு. அதனால், உங்களை விடுவிக்கிறேன்'' என்றார் அந்த மாஜிஸ்திரேட். மகாஜன் வெளியில் வந்தார்!
மெகர் சந்த் மகாஜன்
மெகர் சந்த் மகாஜன்
* சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.சத்தியதேவ் ஒரு நாள்கூட விடுமுறை எடுத்ததே இல்லை. அவர் மகனுக்கு வீட்டில் வைத்துத்தான் பதிவுத் திருமணம் நடத்தப்பட்டது. அந்தத் திருமணத்துக்காக வந்த, சக நீதிபதிகள் எல்லாம் அரை நாள் விடுமுறை போட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், சத்தியதேவ் தன் மகனின் திருமணம் முடிந்த கையோடு கோர்ட்டுக்குக் கிளம்பிப் போனார்.
அவருக்குத் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு வாய்க்கவில்லை. தலைமை நீதிபதி 6 வாரத்துக்கு மேல் விடுமுறை எடுத்தால் `பொறுப்பு தலைமை நீதிபதி’ நியமிக்கப்படுவது வழக்கம். அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ஆனந்த், பொறுப்பு தலைமை நீதிபதியாக சத்தியதேவ் சில காலம் இருக்க வேண்டும் என்பதற்காகவே 6 வாரம் விடுமுறை எடுத்தார். அந்த அளவுக்கு மதிக்கப்பட்டவர் சத்தியதேவ்!
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
* குரு பிரசன்ன சிங். மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர். ``பள்ளி ஆவணத்தில் சொல்லப்பட்ட வயதுக்கும் உண்மையான வயதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உண்மையான வயது அடிப்படையில் எனக்கு ரிட்டையர்மென்ட் தேதி வந்துவிட்டது. அதனால், ஓய்வு பெறுகிறேன்'' எனச் சொல்லிக் கிளம்பிவிட்டார். குரு பிரசன்ன சிங் உண்மையை மறைத்திருந்தால் கூடுதலாக ஒன்றரை ஆண்டு இருந்து, பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாகி இருப்பார். மனசாட்சிக்குப் பயந்து நேர்மையோடு நடந்துகொண்ட புண்ணியவான்!
குரு பிரசன்ன சிங்
குரு பிரசன்ன சிங்
* ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது ஆசிட் அடித்தது, நீதிபதி மருமகன் மீது கஞ்சா வழக்கு, வழக்குப் போட்ட வழக்கறிஞர்களுக்கு வெட்டு, நீதிபதி வீட்டுக்குக் குடிநீர் கட் என 1991-1996 ஜெயலலிதா ஆட்சியில் நடந்த திகில் விஷயங்கள் அனைத்தும் நீதிபதி குன்ஹாவுக்கு நன்றாகவே தெரியும். அப்படியான சூழலில் சுதந்திர இந்திய வரலாற்றில் பதவியில் இருக்கும் ஒரு முதல்வரை, ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்புகிறார் என்றால் குன்ஹா எவ்வளவு பெரிய நீதிமான்!
குன்ஹா
குன்ஹா
Vikatan
* நீதிபதி கே.பி.சுப்பிரமணியம் கவுண்டரின் தந்தை கே.எஸ்.பழனிசாமி கவுண்டர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். சென்னை சென்ட்ரல் அருகே அவர் ஓட்டி வந்த கார் சிக்னலைத் தாண்டி வந்துவிட்டது. அந்தக் காரை மடக்கி அருகில் இருந்த நடமாடும் நீதிமன்றத்தில் பழனிசாமியை நிறுத்தினார்கள். இவரைப் பார்த்ததும் மாஜிஸ்திரேட் அரண்டு போனார். ``அபராதம் கட்டத் தேவையில்லை'' என மாஜிஸ்திரேட் சொல்லியும் பத்து ரூபாய் அபராதத்தைக் கட்டிவிட்டுத்தான் போனார் நீதிபதி பழனிசாமி.
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
* மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதியின் தியாகம் இது! ஒரு வழக்குக்குத் தீர்ப்பு தேதி குறித்துவிட்டார் அந்த நீதிபதி. அன்றைய தினம் கோர்ட்டுக்கு வந்த நீதிபதியின் முன் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தயாராக நின்று கொண்டிருந்தார்கள். ``என்ன விவரம்?'' என்று அவர் கேட்க... ``இன்று எங்களது வழக்குக்குத் தீர்ப்புச் சொல்வதாகச் சொல்லி இருந்தீர்கள்'' என்று வழக்கறிஞர்கள் சொன்னார்கள். உடனே கேஸ் கட்டை எடுத்துப் பார்த்தவர். ``இதோ வருகிறேன்'' எனச் சொல்லி அறைக்குப் போனார். தன் மறதிக்கான தண்டனையாக, ராஜினாமா கடிதத்தை எழுதித் தந்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டார்.
இந்த நீதிமான்கள் செய்ததையும் ரஞ்சன் கோகோய் செய்ததையும் நீங்களே ஒப்பிட்டுப் பாருங்கள்! #MustRead
* சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் சுப்பிரமணிய ஐயர். அவர் முன்பு வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கின் ஆவணங்களை அவரிடம் நீட்டியபோது அதைப் படிக்கச் சிரமப்பட்டார் சுப்பிரமணிய ஐயர். இன்னொரு கண்ணாடியை மாற்றிப் போட்டுப் படிக்க முயன்றும் முடியவில்லை. பெஞ்ச் கிளார்க்கிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். படித்துக் காட்டப்பட்டது. வழக்கறிஞரும் அதைப் படித்தார். என்ன நினைத்தாரோ உடனே சேம்பருக்குப் போன சுப்பிரமணிய ஐயர், ஆளுநருக்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டார். ஆம். `கண் பார்வை மங்கிய பிறகு பணியில் இருப்பதில் அர்த்தம் இல்லை’ எனப் பதவியை உதறியவர் சுப்பிரமணிய ஐயர்.
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
- இப்படி தியாக வாழ்க்கை வாழ்ந்த நீதிமான்கள் நிறைய பேர் நீதித்துறையில் நிரம்பியிருக்கிறார்கள். அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். ஆனால், மாநிலங்களவை உறுப்பினராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருக்கும் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது படிந்திருக்கும் விமர்சனம் விதிவிலக்கானது. இதே போன்ற விமர்சனம்தான் முன்பு சதாசிவம் மீதும் விழுந்தது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சுப்பாராவ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். அசாம் நீதிபதி பகருல் இஸ்லாமும் ஒரிஸ்ஸா நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவும் ராஜ்யசபா எம்.பி. ஆனார்கள். மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.சி.சாக்லா, இந்திரா அமைச்சரவையில் கல்வி அமைச்சரானார். இவையெல்லாம் அவர்களின் ஓய்வுக்கு மிகமிகப் பின்னால் நடைபெற்றவை.
ரஞ்சன் கோகோய்
ரஞ்சன் கோகோய்
இவர்கள் அரசியலில் கால்பதித்தபோது அவர்கள் காலத்தில் எழுதப்பட்ட தீர்ப்புகளை வைத்து விமர்சனங்கள் எழுந்ததில்லை. சதாசிவம் மீது அமித் ஷா வழக்கும், ரஞ்சன் கோகோய் மீது அயோத்தி, சபரிமலை, ரஃபேல், சி.பி.ஐ. இயக்குநர் டிஸ்மிஸ் வழக்குகளும் விமர்சனங்களாக எழுப்பப்படுகின்றன. நீதித்துறையின் மாண்பும் நேர்மையும் இப்போது கேள்விக்குறிகளாக நிற்கின்றன.
உச்ச நீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் இம்ப்பீச்மென்ட் கொண்டு வந்து மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால் மட்டுமே நீக்க முடியும். ஆனால், உள்துறைச் செயலாளர் போன் செய்தாலே கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போக வேண்டியதுதான். ஜனாதிபதிக்கே பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டிய பதவியில் இருந்துவிட்டு, கவர்னர் பதவியில் போய் சதாசிவம் ஏன் அமர்ந்தார்? சபாநாயகர் நினைத்தால் நாடாளுமன்ற உறுப்பினரின் பதவியைப் பறித்துவிட முடியும். அப்படியான பதவியில் போய் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் அமர்ந்திருக்கிறார்.
மோடியுடன் சதாசிவம்
மோடியுடன் சதாசிவம்
சதாசிவம் கவர்னராக போய் அமர்ந்தார். ரஞ்சன் கோகோயோ வெறும் எம்.பி-யாக பதவியேற்கப் போகிறார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் இருக்கிற 250 இருக்கைகளில் ஒரு இருக்கையில் போய் ரஞ்சன் கோகாய் அமர்வதற்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியை அவர் வகித்திருக்க வேண்டியதேயில்லை. அவர் இதைத் தவிர்த்திருந்தால் அந்தப் பதவி மட்டுமல்ல... நீதித்துறைக்கு இருக்கிற மாண்பும் காப்பாற்றப்பட்டிருக்கும்.
------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?