பேய்கள் அரசாண்டால்......

இங்குள்ள பால் உற்பத்தியாளர் 
வயிற்றிலடிக்கும் அரசுகள்!
ஆவினில் மோசடிகளை நிரந்தரமாக தடுக்க தமிழகம் முழுவதும் நடவடிக்கை பாய வேண்டும்." என தமிழக முதல்வருக்கு பால் முகவர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
அதில், “தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் ஒன்றியங்களில் இருக்கும் மொத்த பால் குளிர்விப்பான் (BMC) நிலையங்களிலும், பால் குளிரூட்டும் நிலையங்களிலும் (Milk Cilling Centre) நீண்ட காலமாக பணியாற்றி வரும் பால் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் பால் குளிர்வு நிலைய பொறுப்பாளர்கள் இடைத்தரகர்களோடும், மோசடிப் பேர்வழிகளோடும் கூட்டு சேர்ந்து கூட்டுறவு சங்க உறுப்பினரிடம் பாலினை கொள்முதல் செய்யாமல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு ஆவினுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
எனவே ஆவினுக்கு இழப்பை ஏற்படுத்துபவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், முறைகேடுகள் நடக்காமல் தடுக்க அதிரடி பறக்கும் படை அமைத்திட வேண்டும் என எங்களது சங்கத்தின் சார்பில் கடந்த 13.06.2020அன்று தமிழக முதல்வர் அவர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பியிருந்த கடிதத்தின் அடிப்படையில் நேற்று முன்தினம் மதுரை மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் கொள்முதல் நிலையங்கள் சிலவற்றில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அங்கே பணியாற்றிய திருமங்கலம் ஆவின் மேலாளர் உட்பட நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



ஆவின் நிறுவன நலன் மீது அக்கறை கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வரும் எங்களது சங்கத்தின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பு நாடகமாக இல்லாமல் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
மேலும் தமிழகம் முழுவதும் 25 ஒன்றியங்களில் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற பாலில் விற்பனை போக உபரியாகும் பாலினை சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை மாவட்டங்களில் உள்ள ஆவின் பால் பண்ணைகளுக்கு அனுப்பி பவுடராக மாற்றி இருப்பு வைப்பது தான் வழக்கம்.
ஆனால் கடந்த ஆண்டு திருச்சி மாவட்ட ஆவினில் இருந்து நடைமுறைக்கு மாறாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பால் நிறுவனத்தின் தொழிற்சாலையில் பவுடராக மாற்றிட கோவையில் ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டு அந்த தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்ட பால் பவுடராக மாற்றிய பிறகு சுமார் இருநூறு டன் ஆவினுக்கு வந்து சேராமல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
எனவே ஆவின் பால் பண்ணைகளில் பால் பவுடராக மாற்றுவதற்கான போதிய வசதிகள் இருந்தும் விதிமுறைகளுக்கு மாறாக தனியார் பால் நிறுவனத்தின் தொழிற்சாலையில் பவுடராக மாற்றிட கோவையில் ரகசிய ஒப்பந்தம் போட்ட விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் யார்..? யார்..? என்பது குறித்தும், திருச்சி மாவட்ட ஆவினில் இருந்து மட்டுமின்றி வேறு எந்தெந்த மாவட்ட ஆவினில் இருந்து தனியார் பால் தொழிற்சாலைக்கு பால் அனுப்பப்பட்டது என்பது குறித்தும், அந்த தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்ட பாலினை பவுடராக மாற்றிய பிறகும் ஆவினுக்கு இன்னும் வந்து சேராமல் இருப்பது குறித்தும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.



அதுமட்டுமின்றி சென்னை பால் வளத்துறையில் பால் பத அலுவலராக இருந்த மருத்துவர் ஒருவர் தனியார் பால் பண்ணைகளோடு கைக்கோர்த்து கொண்டு நடத்திய தில்லுமுல்லுகள் காரணமாக அப்பதவியையும், மாதவரத்தில் அமைக்கப்பட்ட ஆய்வகத்தையும் மூடிடவும், அந்நபர் சென்னையிலேயே பணிபுரியக் கூடாதென்று வேலூர் மாவட்டத்துக்கு மாற்றிட உத்தரவிட்ட மேனாள் கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி அவர்கள், பால் வளத்துறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டுமென்று பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார்.
தற்போது அவையனைத்தும் களையப்பட்டு, மீண்டும் தவறுகள் தலைதூக்கும் அவலத்தை களைந்திடவும், பால் கூட்டுறவு சங்கங்களின் தணிக்கைத் துறை இயக்குனர் அரசுக்கு அனுப்பியுள்ள சிறப்பு தணிக்கைத் தடை அறிக்கைகளை நிதித் துறைச்செயலாளர் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தினால் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றியங்களில் அரங்கேறியுள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு கிட்ட வேண்டிய தொகை எப்படியெல்லாம் வீணடிக்கப் பட்டுள்ளதென்ற உண்மைகளை முதல்வர் உணர முடியும் என்பதையும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
மேலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவர்கள் பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாத்திட அயல்நாடுகளில் இருந்து பால் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதித்தார். ஆனால் கொரோனா பேரிடர் காலமான தற்போது ஊரடங்கு 5வது மாதத்தை நெருங்கியுள்ள நேரத்தில் வணிகம் சார்ந்த பால் விற்பனை என்பது வெகுவாக குறைந்து பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு பால் பவுடர் இறக்குமதிக்கான தடையை நீக்கி சுமார் 10ஆயிரம் டன் பால் பவுடர் இறக்குமதி செய்ய அனுமதியளித்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.



இந்தியா முழுவதும் ஊரடங்கு அமுலில் இருக்கும் காரணத்தால் தமிழகத்தில் பால் விற்பனை கடுமையான வீழ்ச்சியை சந்திருக்கிறது. அதனால் பால் கொள்முதல் விலையும் கடும் சரிவை கண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைக்காமல் கறவை மாடுகளை பராமரிக்க முடியாமலும், மாட்டுத்தீவனம் வாங்கிட முடியாமல் அல்லல்படும் சூழலும் நிலவி வருகிறது.
இந்நிலையில் அயல்நாடுகளில் இருந்து சுமார் 10ஆயிரம் டன் பால் பவுடர் இறக்குமதி செய்ய அனுமதித்தால் தற்போதுள்ள சூழலில் நமது பால் உற்பத்தியாளர்கள் இன்னும் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். அதனால் மாடுகளை பராமரிக்க முடியாமல் இறைச்சிக்காக விற்பனை செய்யும் நிலைக்கு பால் உற்பத்தியாளர்கள் தள்ளப்படுவார்கள். எனவே பால் உற்பத்தியாளர்களை பாதிக்கும் பால் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதிக்கான அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்திட வேண்டுகிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------
கொரோனா பேரிடரில் 
இந்தியாவை கொள்ளையடிக்கும் பா.ஜ.க ஆட்சி.
நாடாளுமன்றம் கூடாத “சுகாதார பேரிடர்” கால நெருக்கடியைப் பயன்படுத்தி - பல்வேறு அவசரச் சட்டங்களைப் பிறப்பித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கைகுலுக்கி, புதிய “சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை - 2020”-யை வெளியிட்டிருப்பதற்குக் கடும் எதிர்ப்பு உள்ளது.
ஏற்கனவே இருக்கும் 2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு மற்றும் சுற்றுப்புறச்சூழல் தாக்கம் இல்லாத திட்டங்களை நிறைவேற்றவும் கை கொடுக்கவில்லை என்று சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் எல்லாம் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்ற வேளையில், இந்த புதிய வரைவு அறிக்கை கொண்டு வந்திருப்பது சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ஐ ரத்து செய்வதற்குச் சமமான அநீதியாக உள்ளது.
1972-ம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் “மனித சூழல் குறித்த ஸ்டாக்ஹோம் மாநாடு பிரகடனத்தின்” அடிப்படையில், “சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் அடிப்படைக் கடமை” (Fundamental Duty) என்பது 1976-ல் கொண்டு வரப்பட்ட 42-வது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில்தான் “போபால்” துயரத்திற்குப் பிறகு - “சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986” நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது.



ஆனால், “இருக்கிற சட்டங்களையும் மதிப்பதில்லை; மக்களைப் பாதுகாக்கும் சட்டங்களையும் கொண்டு வருவதில்லை” என்பதில் தீர்மானமாக இருக்கும் மத்திய பா.ஜ.க.அரசு, சுற்றுப்புறச்சூழலுக்கு ஆபத்தாக உள்ள பல்வேறு திட்டங்களை “மறுவகைப்படுத்தி”- அதுபோன்று ஆபத்து விளைவிக்கும் திட்டங்களுக்கு எல்லாம் “சுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை” என்று அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
“பொதுமக்கள் கருத்துக் கேட்பு” என்பது வெறும் காகிதப்புலியாக்கப்பட்டு - தங்களின் இயற்கை வளத்தை - வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் உரிமை மக்களிடமிருந்து அடியோடு பறிக்கப்பட்டுள்ளது.
மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மளமளவென பெருகவும் - விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றி சாலை அமைக்கும் திட்டங்களை நிறைவேற்றவும் - மாநில உரிமையைப் பறித்து நவீன நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றவும், “திட்டம் துவங்கும் முன்பே” பெற வேண்டிய “சுற்றுப்புறச்சூழல் முன் அனுமதி தேவையில்லை” என்று புதிய அறிவிக்கை “கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு” ‘கார்ப்பெட்’ விரித்துள்ளது.
பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் சுகாதாரம் - நலன் இரண்டும் காற்றில் பறக்கவிடப்பட்டு - அவசர கதியில் இந்தச் சுற்றுப்புறச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கையை உறுதி செய்ய - கொரோனா காலத்தில் - குறிப்பாக நாடு முழுவதும் தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நேரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு கருத்துக் கேட்கிறது என்றால் எத்தகைய கொடுமையான நிர்வாக நடவடிக்கை இது?
கொரோனா காலத்தில் கூட மத்திய பா.ஜ.க. அரசின் கவனம் முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவுவதிலும் - அவர்களுக்கு செவ்வனே கடமையாற்றுவதிலுமே இருக்கிறது என்பது மிகுந்த கவலைக்குரியது.



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் திருமதி. பிருந்தா காரத் அவர்கள், “இந்தச் சுற்றுப்புறச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை ஜனநாயக விரோதமானது, அநியாயமானது” என்று மத்திய சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். முன்னாள் மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சரும் தற்போது அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைகளுக்கான நாடாளுமன்றக்குழுத் தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் அவர்கள், “இந்த அறிவிக்கை சுற்றுப்புறச் சூழல் விதிகளே ஒரு தேவையற்ற சுமை என்று இந்த அரசு நினைப்பதை வெளிப்படுத்துகிறது. பின் தேதியிட்டு திட்டங்களுக்கு அனுமதியளிப்பது என்பது மக்களின் சுகாதாரம் மற்றும் நலனில் அக்கறையற்ற செயல்” என்று விமர்சித்து விட்டு, “மாநில சுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தலைவரையும், உறுப்பினர்களையும் மத்திய அரசே நியமிப்பது கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தைச் சவப்பெட்டியில் தள்ளி அடிக்கும் கடைசி ஆணி” என்று கடுமையாகவே சாடியிருக்கிறார்.
அந்த அளவிற்கு மத்திய - மாநில உறவுகளைக் கொச்சைப்படுத்தும் விதத்திலும் - சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பில் மாநிலங்களைப் புறக்கணிக்கும் விதத்திலும் இந்த புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள்- இந்த அறிவிக்கை திரும்பப் பெற வேண்டும் என்று போர்க்குரல் எழுப்பியுள்ள நேரத்தில், “இந்த அறிவிக்கை மீதான கருத்துக் கேட்பிற்குக் கால அவகாசம் வழங்கி, அறிவிக்கையை அனைத்து பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும்” என்று டெல்லி உயர்நீதிமன்றமே மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. ஆகவே நாடே கொந்தளிக்கும் “சுற்றுப்புறச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை - 2020 மக்களுக்கு எந்த வகையிலும் ஏற்புடையதல்ல” என்ற குரல் எங்கும் இன்றைக்கு எதிரொலிக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் சேலம் பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக மக்களும், விவசாயிகளும் போராடி வரும் நிலையில் - காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டக் கூடாது என்று தமிழகமே ஓங்கிக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. காவிரி டெல்டா பகுதியை சகாரா பாலைவனமாக்க அ.தி.மு.க. அரசின் ஒத்திசைவுடன் மத்திய அரசு ஒவ்வொரு திட்டமாக அனுமதித்து வருகிறது. இந்நிலையில், சுற்றுப்புறச்சூழல் முன் அனுமதி பெற வேண்டிய எண்ணற்ற திட்டங்களை “மறுவகைப்படுத்தி” – அவற்றை எல்லாம் “சுற்றுப்புறச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லாத” பட்டியலில் சேர்த்திருப்பது, “மெஜாரிட்டி” இருக்கிறது என்பதற்காக - அதைத் துஷ்பிரயோகம் செய்யும் முறையில் மத்திய பா.ஜ.க. அரசு வெளியிட்டுள்ள - மக்கள் விரோத சுற்றுப்புறச்சூழல் தாக்க அறிவிக்கையாகவே இருக்கிறது.

மக்களின் நலனோ - சுற்றுப்புறச்சூழல் பற்றிய கவலையோ இந்த அரசுக்கு துளியும் இருப்பதாகத் தெரியவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை காட்டினால் போதும் - அதுவும் வரம்புகளை - எல்லைகளை மீறி நாம் சலுகை காட்டினாலும் யார் கேட்க முடியும்? என்ற “சர்வாதிகார” மனப்பான்மையுடன் தங்களுக்குக் கிடைத்த பெரும்பான்மையை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது; வாக்களித்த பெருமக்கள் இந்த அணுகுமுறையைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
ஆகவே சுற்றுப்புறச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை - 2020-ஐ ஏற்கனவே உள்ள 2006, அறிவிக்கையை விடக் கடுமையாக்கி - நாட்டில் உள்ள இயற்கை வளங்களையும், மக்களின் சுகாதாரத்தையும் பாதுகாத்திட மத்திய பா.ஜ.க. அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தும் அதேவேளையில் - இந்த அறிவிக்கையைத் தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட்டு - மாவட்ட வாரியாக கருத்துக் கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அந்த ஜனநாயக நடைமுறை இயலாது என்று பா.ஜ.க. அரசு கருதுமேயானால் - கொரோனா காலத்தில் இந்த அறிவிக்கையை வெளியிட்டு கருத்துக் கேட்கும் முடிவினை உடனடியாகக் கைவிட்டு - அறிவிக்கையைத் திரும்பப் பெற்று - நாடாளுமன்றம் கூடியவுடன் இரு அவைகளிலும் முழு விவாதம் நடத்தி - சாதக பாதக அம்சங்களை நன்கு ஆராய்ந்து சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவசரப் படாமல் முடிவு எடுக்க வேண்டும்.
“நீடித்து நிலைக்கத்தக்க வளர்ச்சி வேண்டும்” – ஆனால் அதே நேரத்தில், “ஆரோக்கியமான சுற்றுப்புறச்சூழல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வாழ்வுரிமை” என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் மனதில் கொண்டு, மத்திய பா.ஜ.க. அரசு ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும்.
----------------------------------------------------------------
"பேய் அரசாண்டால்" 

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 60 குழந்தைகள் இறந்தபோது, அலைந்து திரிந்து குழந்தைகளுக்கு ஆக்சிஜன் ஏற்பாடு செய்து பல உயிர்களைக் காப்பாற்றியவர் என கூறப்பட்ட டாக்டர் கஃபீல் கான் 6 மாதங்களாகச் சிறையில் உள்ளார்.
வெறுப்பைத் தூண்டும் விதமாகப் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவ செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு மாவட்டத் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீனும் வழங்கியது. ஆனால் விடுதலையாவதற்கு முன்பு, அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டு, அவர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டதையும், தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையையும் எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என்று மருத்துவர் கஃபீலின் சகோதரர் ஆதில் அகமது கூறுகிறார்.
உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் விசாரணை இதுவரை 11 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் இப்போது ஜூலை 27 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என்றும் ஆதில் அகமது கூறுகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், டாக்டர் கஃபீல் கான் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ)எதிராக வெறுப்பைத் தூண்டும் விதமாக உரையாற்றியதாக அலிகர் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜனவரி 29 அன்று, உத்தரப்பிரதேச அரசின் சிறப்புப் நடவடிக்கைப் படை (எஸ்.டி.எஃப்) அவரை மும்பையில் கைது செய்தது.
மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த டாக்டர் கஃபீலுக்கு, பிப்ரவரி 10 ம் தேதி ஜாமீன் கிடைத்தது, ஆனால் மூன்று நாட்கள் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்படவில்லை. அதற்குள், அலிகார் மாவட்ட நிர்வாகம் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகித்தது.
டாக்டர் கஃபீலை இதுவரை இரண்டு முறை உத்தரப்பிரதேச சிறப்புக் காவல் படை கைது செய்துள்ளது. உத்தரப்பிரதேச சிறப்புக் காவல் படையின் ஐ ஜி அமிதாப் யஷ், பி பி சி-யிடம் பேசியபோது, "அலிகரில் கபீல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, நாங்கள் அவரை மும்பையில் கைது செய்து அலிகார் போலீசில் ஒப்படைத்தோம். இதற்கு முன்னர், கோரக்பூரின் பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி வழக்கிலும் எஸ்.டி.எஃப் அவரைக் கைது செய்தது." என்று கூறினார்.
நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெற்ற போதிலும், கஃபீல் கான் மூன்று நாட்கள் வரை விடுதலை செய்யப்படாதது ஏன் மற்றும் ஜாமீன் வழங்கப்பட்ட பிறகும், அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது ஏன் என்ற கேள்விகள் எழுகின்றன.
மாநில அரசின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கஃபீலின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர், காரணம், ஜாமீன் பெற்ற பிறகு தேசியப் பாதுகாப்புச் சட்டம் விதிக்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கால அளவு மூன்று மாதங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டது.
கபீலின் சகோதரர் ஆதில் கான் இது பற்றிக் கூறும்போது "பிப்ரவரி 10 ஆம் தேதி மாலை நான்கு மணியளவில் நீதிமன்றம் கஃபீல் கானை உடனடியாக விடுவிக்குமாறு அறிவுறுத்தியது, ஆனால் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் அவர் விடுவிக்கப்படவில்லை. ஜாமீன் வழங்கிய பிறகு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்பது உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு."
"டாக்டர் கஃபீல் மீதான அனைத்து வழக்குகளிலும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் எப்படி பாய்ந்தது என்பது தான் புரியவில்லை" என்றார்.
"அவர் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது உயர் நீதிமன்றம்தான் சரி எது தவறு எது என்று முடிவு செய்யும்" என்று கூறுகிறது அலிகர் மாவட்ட நிர்வாகம்.


கஃபீல் கான்
பிபிசியிடம் பேசிய அரசாங்க வழக்கறிஞர் மணீஷ் கோயல் "என்எஸ்ஏ காவல் காலத்தை அதிகரிப்பது குறித்த வழிமுறைகளை ஆலோசனைக் குழு பரிந்துரைக்கிறது, அரசாங்கம் மட்டும் அதை முடிவு செய்யவில்லை. ஆலோசனைக் குழுவில் உள்ள மூத்த உறுப்பினர்கள், சட்ட வல்லுநர்கள் உள்ளனர். தேசியப் பாதுகாப்புச் சட்டம் மூன்று மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு இது மும்மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இதை நீட்டிக்கும் முடிவு ஆலோசனைக் குழுவின் ஒப்புதலுடன் மட்டுமே செய்யப்படுகிறது. கஃபீல் கான் விஷயத்தில், தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஒரு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் குற்றச்சாட்டு மிகத் தீவிரமானது என்பதுதான். அதனால் தான் இது நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
ரசுகாவில் டாக்டர் கபீல் கான் கைது செய்யப்பட்ட காலம் ஏப்ரல் 13 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது, ஆனால் ஏப்ரல் 1 ஆம் தேதி, தேசியப் பாதுகாப்புச் சட்டக் காவல் காலத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க ஆலோசனைக் குழு பரிந்துரைத்தது. டாக்டர் கபீலின் குடும்பத்தினர் அவரை கைது செய்வதற்கும் என்எஸ்ஏவின் நடவடிக்கைக்கும் எதிராக ஹேபியாஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர், ஆனால் உச்சநீதிமன்றம் அந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது.
"பேய் அரசாண்டால் பிணம் தின்னுவதே சட்டமாகும்."
என முன்னோர் சரியாகத்தான் கூறிச்சென்றுள்ளனர்.
----------------------------------+-----------------------------
2021 பொதுத்தேர்தல்.
தி.மு.க போடும் கணக்கு.
“தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. திமுக வரும் தேர்தலில் தனியாக நின்றாலே ஜெயித்துவிட முடியும் என்று பிரசாந்த் கிஷோர் திமுக தலைமைக்கு ஏற்கனவே ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பு கொடுத்திருக்கிறார். ஆனாலும் ஸ்டாலின் இதில் தீவிரமாக யோசித்து வருகிறார். வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான காரணிகளில் ஒன்றைக்கூட திமுக தவற விட்டுவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார். வரும் தேர்தலில் திமுகவின் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய காரணிகளில் கூட்டணியும் ஒன்று. எனவே நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே அமைக்கப்பட்ட இந்தக் கூட்டணித் தேரிலேயே சட்டமன்றத் தேர்தலுக்கும் பவனிவர வேண்டும் என்ற எண்ணம் ஸ்டாலினிடம் இருக்கிறது.
ஆனாலும் ஏற்கனவே திமுக பொருளாளர் துரைமுருகன் சொன்னதுபோல தேர்தல் நெருங்கும் நிலையில், சிலர் வரலாம், சிலர் போகலாம். அந்த வகையில் திமுகவின் தலைமை வட்டாரத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட் என்ற ஓர் உத்தேசக் கணக்கு திட்டமிடப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க கூட்டணிக்குத் தலைமை தாங்கும் திமுகவின் பார்வையில் இது உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், மமக, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இருந்த நிலையில் திமுக 174 தொகுதிகளில் போட்டியிட்டது.
ஆனால் திமுக கூட்டணியில் இப்போதைக்கு காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், சிபிஎம், இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மமக, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இருக்கின்றன. இவை தவிர பல தோழமைக் கட்சிகளும் இயக்கங்களும் இருக்கின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அணியில் காங்கிரஸுக்குக் கொடுக்கப்பட்ட 41 இடங்களில் 9 இடங்களே வெற்றிபெற்றது. பெரும்பாலான மீதி இடங்களில் அதிமுகவே வெற்றி பெற்றது. எனவே இம்முறை கூட்டணிக் கட்சிகளுக்கான இடம் மிகவும் கறாரான முறையில் கணக்கிடப்படுவதாகத் தெரிகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட எம்.பி தொகுதிகளின் அடிப்படையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் சீட்டுகளை திமுக கணக்கிடுகிறது. அதாவது ஓர் எம்.பி தொகுதியில் போட்டியிட்ட கட்சிக்கு மூன்று சட்டமன்றத் தொகுதிகள் என்ற விகிதத்தில் திமுக திட்டமிட்டு வைத்துள்ளது. அதன்படி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 10 எம்.பி தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு 30 சட்டமன்றத் தொகுதிகள் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் அடுத்த கட்சி மதிமுக கடந்த எம்.பி தேர்தலில் ஒரு மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா என இரு எம்.பி.க்களைப் பெற்றது. அதன் அடிப்படையில் மதிமுகவுக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள், அடுத்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா இரு எம்.பி தொகுதிகளில் போட்டியிட்டன. அவற்றுக்கு 6 + 6 = 12 சட்டமன்றத் தொகுதிகள். விடுதலைச் சிறுத்தைகள் இரு எம்.பி தொகுதிகளில் போட்டியிட்டதன் அடிப்படையில் அக்கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள். ஒரு தொகுதியில் நின்ற கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி கட்சிகளுக்கு தலா 3 சட்டமன்றத் தொகுதிகள். ஆக இந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 63 தொகுதிகள் போய்விடுகின்றன. 234 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 63 தொகுதிகள் போய்விட, மீதி 171 தொகுதிகளில் திமுக போட்டியிட வாய்ப்பிருக்கிறது.
இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் தவிர மீதியிருக்கும் கட்சிகளிடம், ‘நீங்கள் ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது போல உதயசூரியன் சின்னத்திலேயே நின்றால் உங்களது கட்சிக்கான தேர்தல் செலவை திமுக ஏற்றுக் கொள்ளும்’ என்றும் திமுக கூற வாய்ப்பிருக்கிறது. அப்படிப் பார்த்தால் ஏற்கனவே 171 இடங்கள் தவிர, மதிமுக 6, விடுதலைச் சிறுத்தைகள் 6, கொமதேக 3, ஐஜேகே 3 ஆகிய 18 இடங்களிலும் என மொத்தம் 189 சட்டமன்றத் தொகுதிகளிலும் உதயசூரியனே நிற்க வாய்ப்பிருக்கிறது. கடந்த எம்.பி தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்தும் போட்டியிடாத மனிதநேய மக்கள் கட்சிக்கும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம்.
இதுதான் இப்போதைய திமுக தலைமைக்குள் ஆலோசிக்கப்பட்டு வரும் பட்டியல். இது முழுக்க முழுக்க திமுகவின் பார்வையில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கும் உத்தேசப்பட்டியல். கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வருகிற சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு இவ்வளவு இடங்கள் தேவையென இப்போதே ஆலோசனைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கருத்தும், திமுகவின் கருத்தும் விவாதிக்கப்பட்டு பிறகே கூட்டணிக் கணக்கு இறுதி செய்யப்படும். வரும் தேர்தலில் அரசியல் சூழலைக்கொண்டு இந்தக் கூட்டணிக் கணக்கு மாறலாம் அல்லது இந்தக் கூட்டணிக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு கூட்டணிக் கட்சிகள் கூட மாறலாம்”
நன்றி: மின்னம்பலம்.
---------------------%----------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?