2G இல்லாத இந்தியாவும்

 வஞ்சக எண்ணமும்

கடந்த சில நாட்களுக்கு முன்பு 

முகேஷ்அம்பானி டெலிகாம் துறை தொடங்கப்பட்ட 25வது வருட மாநாட்டில் முக்கியமான வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.

அதாவது 2G இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது தான் அது. வறுமை இல்லாத இந்தியா, போலியோ இல்லாத இந்தியா என்ற அரசியல் வாதிகளின் பொன்மொழி போன்று இது ஒரு புதிய பதம் தான்.


2G என்பது ஆரம்ப கட்டங்களில் NOKIA 1100 போன்ற Feature Phones வழியாக பேசும்  முறை தான். இன்னமும் இந்தியாவில் 35 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

அதனை தான் ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதால் கொஞ்சம் பின்புலத்தையும் பார்ப்போம்.

டெலிகாம் துறையில் ஜியோ என்பது மிக சமீபத்திய வருகை தான். அவர்களது இலக்கு என்பது புதிய இளைஞர் கூட்டம். அதனால் அவர்களுக்கு இணையம் பயன்படுத்த உதவும் டேட்டா நெட்ஒர்க் என்பதில் தான் அதிக முக்கியத்துவம் இருந்தது. 

முந்தைய 2G, 3G முறைகளில் போன் கால் பேசுவதற்கு ஒரு தொழில்நுட்ப வழியும், டேட்டா முறைக்கு இன்னொரு தொழில்நுட்ப வழியும் பயன்படுத்தப்படும். 

ஆனால் அண்மையில் VoLTE என்ற Voice Over LTE தொழில்நுட்பமும் பிரபலமாகி இருந்தது. அதாவது டேட்டா வழியாகவும் போன் கால்களையும் பேச முடியும்.  

அதனால் ஜியோவிற்கு 2G, 3G போன்ற முந்தைய தொழில் நுட்பங்கள் தேவை இல்லாமல் இருந்தது. அதன் தாக்கம் தான் கால் பேசுவதற்கு கட்டணமே தேவையில்லை என்ற ஜியோவின் அறிமுகம்.

அந்த வகையில் ஜியோ முந்திய டெலிகாம் நிறுவனங்களின் கொள்ளையை தடுத்தது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அவர்களது வியாபார உத்தி என்பதில் நாணயம் என்ற ஒன்று இருப்பதாக கருதவில்லை.

மோனோபோலி என்பது கிட்டத்தட்ட அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பது போல் தான். எந்த நேரத்தில் கட்டணங்கள் கூட்டினாலும் அதற்கு அடங்கி தான் போக வேண்டும். ஏனென்றால் வேறு வழி கிடையாது.

அந்த வகையில் Inter Call Charges போன்றவற்றில் மத்திய அரசும் ஜியோவிற்கு உதவி செய்தது. Airtel, Vodafone, Idea போன்றவற்றிற்கு பாதகமாகவும், ஜியோவிற்கு சாதகமாகவும் நிறையை டெலிகாம் துறை முடிவுகளே இருந்தன. 

அதன் தொடர்ச்சியாக தான் டெலிகாம் துறையில் 2G என்பதை ஒழிக்க வேண்டும் என்ற கோஷமும் இருக்கிறது. 

டெக்னாலஜி என்பது திணிக்கப்பட கூடாது. கால ஓட்டத்தில் OUTDATED என்று வரும் போது தானாகவே மறைந்து விடும். இன்று பல வீடுகளில் Land Line Phone என்பதே  கிடையாது. மொபைல் பரவலாக்கப்பட்ட சூழ்நிலையில் தரை வழி போன் என்பதும் தேவையில்லாமல் போனது. இது பலவற்றிற்கும் பொருந்தும்.

புதிய LED TVக்கள் வந்தாலும் பழைய CRT டிவி பயன்படுத்துபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.

இப்பொழுது புள்ளி விவரத்தை பார்ப்போம்.

2G நெட்ஒர்க்க்கை தற்போது 35 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். அதில் 11 கோடி பேர் ஏர்டெல்லில் இருக்கிறார்கள். மீதி உள்ளவர்கள் BSNL, Vodadfone போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். ஜியோவிற்கு ஒருவர் கூட இல்லை.

அப்படி 2G அழிக்கப்பட்டால் யாருக்கு லாபம்? முழுக்க ஜியோவிற்கு தான். 

இன்னொன்று ஜியோ அண்மைய டீல்களில் கூகுள், Facebook என்று பெரிய நிறுவனங்கள் வழியாக இரண்டு லட்சம் கோடி அளவு ரூபாய் பணத்தை முதலீட்டாக திரட்டி உள்ளது.

எப்படி என்றால் , ஜியோ என்பது டெலிகாம் நிறுவனம் என்பதல்ல. டிஜிட்டல் நிறுவனம். அதாவது Flipkart, Amazon போன்று சேவைகளில் வருமானத்தை பெறுவோம் என்று சொல்லி தான் பெற்றார்கள்.

அதற்கு இடைஞ்சலாக இருப்பது. டேட்டா சேவையை பயன்படுத்தாத இந்த 35 கோடி மக்கள் தான். கிராமப்புறங்களில் ஜியோவின் திட்டங்களுக்கு இவர்கள் சரியான முட்டுக்கட்டை தான்.

இவர்களை  2G பயன்படுத்த முடியாமல் செய்து விட்டால் அதில் 30% அல்லது 40% பேராவது ஜியோவிற்கு வருவார்கள். அவர்களை வைத்து வருமானம் பார்க்க முடியும். அதே நேரத்தில் போட்டியாளர்களுக்கும் நஷ்டம் வரும்.

2Gயை ஒழித்து விட்டால் வோடபோன் போன்ற நிறுவனங்களின் பாடு என்பது மிக கஷ்டம். இப்பொழுது தள்ளாடிக் கொண்டிருக்கும் நிறுவனம் உடனடியாக மூடி விட்டு செல்ல வேண்டியது தான்.


இன்னும் BSNL மட்டுமே சேவை செய்து வரும் பல கிராமங்கள் உள்ளன. நமது முந்தைய தலைமுறைக்கு இப்பொழுது இருக்கும் பல டேட்டா வசதிகள் தேவையில்லை. இன்னும் பல பேருக்கு Smart Phones வாங்கும் வசதி இல்லை.

Smart Phonesல் Anti Virus என்ற ஒன்று கட்டாயம் வேண்டும் என்று சொல்லும் காலக்கட்டமும் இருக்கிறது. அந்த அளவிற்கு தகவல் திருட்டு இருக்கிறது.

புதிய தலைமுறையில் கூட தனி நபர் பாதுகாப்பு, தேவையில்லாத பிரச்சினைகள் போன்றவற்றை கருதி Features Phone பயன்படுத்துவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். 

அப்படி இருக்கும் போது இவர்களை எல்லாம் சட்டம் போட்டோ, திட்டம் போட்டோ மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
------------------------------------+++++-------------------------------

அவதார 

(மனி த)ர்கள்.

அமெரிக்கா 1945 ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி அன்று ஹிரோஷிமா மீதும் பின்னர் 9ஆம் தேதியன்று நாகசாகிமீது அணுகுண்டு போடுவது என்னும் அமெரிக்க எடுத்த முடிவு பற்றி சோவியத் யூனியனுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை; இது ஸ்டாலினுக்கு உள்ளூர வருத்தத்தையே அளித்தது.

மேலே எழுதிய பத்திதான் “சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் மார்ஷல் ஜோசப் ஸ்டாலின்”
என்ற புத்தகத்தை முழுவதும் வாசிக்க தூண்டியது.
ஸ்டாலின் பற்றிய பல்வேறு கருத்துக்கள் அவதூறுகள் நம்மிடையே பரப்பி வந்தாலும் ஒரு மகத்தான தலைவர் ஸ்டாலின் என்பது மிகையல்ல. ‘இரும்பு மனிதர்’என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் ஜோசப் ஸ்டாலின் மட்டுமே. டம்மி பட்டாசுகள் எல்லாம் தற்காலத்தில் இரும்பு மனிதர் என்று புகழாரம் சூட்டுகின்றன இத்தருணத்தில் ஜோசப் ஸ்டாலின் பற்றிய வாசிப்பது மிகவும் இன்றியமையாத காரியங்களில் ஒன்று.

‘சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் மார்ஷல் ஜோசப் ஸ்டாலின்’ என்ற புத்தகத்தை எழுதியவர் ‘பட்டத்தி மைந்தன் ‘;ராமையா பதிப்பகம்; விலை 70.

எளிமையாக அனைவரும் வாசிக்கக்கூடிய மொழிநடையில் எழுத்தாளர் எழுதிருக்கிறார். புத்தகத்தின் உள்ளே பத்து அத்தியாயங்கள் இருக்கிறது புத்தகத்தின் பக்கங்கள் மொத்தம் 105. புத்தகம் பற்றிய கருத்துக்களையும், வாசிப்பு அனுபவமும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

“மாமேதை என்றும் மாவீரன் என்றும் போற்றப்பட்டும் புகழப்பட்டும் வந்த ஒப்பற்ற மாமனிதர் லெனினுக்கு உற்ற துணையாகவும்,அவருடைய வலது கரமாகவும் இறுதிவரை இருந்து வந்தவர்தான் ‘இரும்பு மனிதர்’என்று பெருமையுடன் கூறப்பட்டுவந்த மார்ஷல் ஸ்டாலின் ஆவார்”. என்று முதல் அத்தியாயத்தில் எழுதுகிறார் மேலும்,
“மார்ஷல் ஸ்டாலினை நினைக்கும் போது அனைத்து வகை எண்ணங்களும் நமது மனதில் நிழலாடுகின்றன. கடந்த காலத்தில்- அதாவது 35 ஆண்டு காலத்தில் அவர் ஒரு நாளைக்கூட வீணாக்கவில்லை.

ஒவ்வொரு நாளும் அவரால் சிறப்புற்றது.
35 ஆண்டுகால வரலாற்றை மார்ஷல் ஸ்டாலின் உருவாக்கியது போலவோ, செல்வாக்கு செலுத்தியது போலவோ, வேறு யாருமே செய்ததில்லை.
மார்ஷல் ஸ்டாலின் மறைந்தாலும் அவருடைய தீரமிகு செயல்கள் அனைத்தும் மங்காத ஒளியை வீசிய வண்ணம் தானுள்ளன. அவருடைய நினைவும் தாக்கமும் மக்களின் மனங்களில் நீடித்து நிற்கும்” என்று இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு குறிப்பிட்டிருக்கிறார்.

ஜார்ஜியாவைச் சேர்ந்த கோரி என்ற நகரத்தில் 1878 ஆம் ஆண்டு டிசம்பர் 18ம் நாள் ஸ்டாலின் பிறந்தார். அவரது இயற்பெயர் ‘ஜோசப் விஸ்ஸாரி யோனோ தவிச் ஜீகா ஷிவிலி’.
‘ஸ்டாலின்’ என்ற பெயரை மாமேதை லெனின் அவர்கள் வைத்தார்.

ஸ்டாலினுடைய பெற்றோர்கள் ஜோசப்பை ஒரு ஆலய குருவாக பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் 1888 ஆம் ஆண்டு ‘இறைமை இயல்’பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்கள். ஆனால்,ஜோசப் ஸ்டாலின் இளமைப் பருவத்தில் டார்வின் நூல்களையும் மார்க்சிய நூல்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டினார். பின்னர் மார்க்சிய வாசகர் வட்டத்திற்கு ஜோசப் தான் தலைமை தாங்கினார் இவ்வாறு செயல்பட்டு வந்த ஜோசப் 1889-ல் அவர் பயின்ற கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியை துவக்கும் முயற்சியில் இறங்கிய நேரத்தில் லெனினை நோக்கி அப்போதைய சூழ்நிலை ஸ்டாலினை ஈர்க்கச் செய்தன.
1898 மார்ச் மாதத்தில் ரஷ்ய ஜனநாயக தொழிலாளர் கட்சியின் முதல் மாநாடு மின்ஸ்க் நகரில் கூடியது. அப்போது லெனின் நாடு கடத்தப்பட்டு சைபீரியாவில் இருந்தார். லெனினால் ஆரம்பிக்கப்பட்ட ‘இஸ்கரா’ என்ற பத்திரிக்கையின் முதல் இதழ் 1900 ஆண்டில் வெளிவந்தது.
‘மே தினம்’ மிகவும் சிறப்பான முறையில் கண்டிப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணமுடன் மார்க்சியவாதிகள் தீவிரமாக ஏற்பாடு செய்தார்கள். 1901 ஏப்ரல் 22ம் தேதியன்று டிஃப்ளிஸ் நகரத்தின் மையப் பகுதியான ‘அலெக்ஸ்சாண்ட் ரோவ்ஸ்கி’ தோட்டத்தின் பக்கத்திலுள்ள ‘சோல்டாட்ஸ் கி’ என்ற இடத்தில் புரட்சியாளர் ஸ்டாலின் தலைமையில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் பேரார்வமுடன் திரண்டெழுந்தனர்.”

இப்படித்தான் ஸ்டாலினின் அரசியல் களம் உதயமாகியது. பின்னர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு 1902 ஏப்ரல் 7ஆம் தேதி கைது செய்யப்பட்டு முதல் சிறைவாசம் அனுபவித்தார்.
ஜாரின் எதேச்சதிகாரத்தை வீழ்த்துவது, ஜனநாயகக் குடியரசை நிறுவுவது, அடிமைத்தனத்தை ஒழிப்பது, நிலச்சுவான்தார்கள் ஏழை விவசாயிகளிடமிருந்து எடுத்துக்கொண்ட நிலங்களை அவர்களிடமே திருப்பி கொடுப்பது ஆகிய குறைந்த பட்ச திட்டத்தின் கீழ் செயல்பட ஆரம்பித்தார்.

1905ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லெனினும் ஸ்டாலினும் சந்தித்துக்கொண்டனர். அப்போது லெனின்..
“ஒரு பெரிய புரட்சிகர இயக்கத்தை திறம்பட நடத்தி செல்வதற்குரிய ஆற்றலையும் தலைமைப் பண்பும் கொண்டவர் தான் ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டினார்.”
முதல் உலகப்போர் 1914ம் ஆண்டு துவக்கப்பட்டது எதிர்த்துக் குரல் கொடுத்தவர்கள் போல்ஷ்விக்குகள் தான் என்றும் உலகப்போரை உள்நாட்டுப் போராக மாற்றி ரஷ்யாவில் புரட்சி ஏற்பட காரணமாக இருந்தவர்களில் முதன்மையானவர்கள் லெனினும் ஸ்டாலினும் என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்.ஸ்டாலின் ‘பிராவ்தா’ இதழில் எழுதிய கட்டுரைகள் தீப்பிழம்பாக இருந்தன. ஒவ்வொரு தலையங்கமும் உணர்ச்சிப் பெருக்கை உண்டு பண்ணியது. தொழிலாளர்கள் அனைவரும் மிகவும் வலுவான ஒரு போராட்டத்திற்கு தயாராகுமாறு இந்தக் கட்டுரைகள் அந்த மக்களை தூண்டின. மறுபுறம் ராணுவ வீரர்களையும் உழைக்கும் வர்க்கத்தினரின் விவசாயிகளையும் போல்ஷ்விக் கட்சியின் கீழ் கொண்டு வருவதற்கு ஸ்டாலின் தீவிரமாக பாடுபட்டு வந்தார் இதன் விளைவாக1917ஆம் ஆண்டு மாபெரும் புரட்சி நடந்தேறியது ரஷ்ய மக்கள் விடுதலை ஆனார்கள்.

ஸ்டாலின் செல்வாக்கு மேலும் மேலும் வளர்ந்து வந்தது 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொதுவுடமைக் கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது.பின்னர் 1972 ஏப்ரல் கட்சியின் மத்திய குழு நடைபெற்றது அந்தக் கூட்டத்தில்தான் பொதுச்செயலாளர் எனும் பதவி முதன் முதலில் உருவாக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் போல்ஷ்விக் கட்சி அதாவது கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவில் பொதுச்செயலாளராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1924-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி புரட்சியாளர் மாமேதை லெனின் உயிர் பிரிந்தது. லெனினுக்கு பிறகு யார் அந்த பொறுப்பை எடுப்பது என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது பிரச்சனைகள் ஒருபுறம் ஸ்டாலின் உறுதியாக சொன்னார் லெனினுக்கு பின்னர் யார் என்ற கேள்விக்கு பதில் கூறுவது சரியாக இருக்காது, எந்த ஒரு தனிநபரும் லெனினுக்கு ஈடாக வர முடியாது.அவரே நம் தலைவர் அவரின் வழிகாட்டுதலின்படி ஒரு குழுவாக இருந்து செயல்பட முடியும் என்றும் திட்டவட்டமாக தம்முடைய கருத்தை தெரிவித்தார்.

ஸ்டாலின் எதையும் எதிர்கொள்ளும் திறன் பெற்றவராக வளர்ந்து வந்தார். பல சந்தர்ப்பங்களை கடினமாக உணர்ந்தாலும் ரஷ்ய மக்களுக்காகவும் தன்னுடைய தலைவனுக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டார். தத்துவ ரீதியான போராட்டங்களை பல நடத்தி மக்களை ஒன்றுதிரட்டி ரஷ்யாவை முதன்மை நாடாக சோசலிஸ ரஷ்யாவாக மாற்றி பொருளாதாரத்தில் உயர்த்தி நிறுத்தினார். முதலாளித்துவ நாடுகளுக்கு சம அளவில் பொருளாதாரத்திலும்,உள்நாட்டு உற்பத்தியிலும்,மக்கள் சேவையிலும் உயர்ந்தவந்த சோவியத் ரஷ்யாவுக்கு பெரும் இடியாக 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் நாள் போர் பிரகடனத்தை அறிவித்தார் உடனடியாக உலக யுத்தம் தொடங்கிவிட்டது. ஹிட்லரின் பாசிச வெறி உலக நாடுகளை தன் காலடியில் கொண்டுவர எங்கும் போர் சூழல் உருவாகியது.
எந்தவித முன்னறிவிப்புமின்றி 1941 ஜூன் 22ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் ஜெர்மனி சோவியத் எல்லைக்குள் பிரவேசித்தது. திடீரென்று நடைபெற்ற தாக்குதலால் ஸ்டாலின் சிறிது நிலைகுலைந்தார்.

அப்போது ஸ்டாலின் ஆற்றிய உரை
பொன் எழுத்துக்களால் வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டியது.சோவியத்தின் ஒவ்வொரு சதுர அங்குல மண்ணையும் பாதுகாக்க வேண்டும். கடைசித்துளி இரத்தம் உள்ள வரையிலும் ரஷ்ய மக்கள் போராட வேண்டும் என்று வீரர்கள் மத்தியில் ஸ்டாலின் உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.மாஸ்கோவுக்கு வெளியே தொடர்ந்தாற்போல் 15 நாட்களுக்கும் மேலாக கடுமையான தாக்குதல் நடந்தது.1942 நவம்பர் மாதம் ஸ்டாலின் கட்டளைப்படி ஸ்டாலின் கிராடுக்கான பாதைகளில் நாஜிக்களின் எதிர் தாக்குதலை சோவியத் படைகள் ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல ஏறக்குறைய 200 நாட்கள் நடைபெற்றது 1942 நவம்பர் 19ஆம் தேதி முதல் 1943 பிப்ரவரி 2ம் தேதி வரை தொடர்ந்தார் போல விட்டு விட்டு இரவு பகலாக யுத்தம் நடந்தது.

நாள் ஒன்றுக்கு ஐந்தே ஐந்து கருகிப் போன ரொட்டித் துண்டுகளையும் இரண்டே இரண்டு கோப்பை வெந்நீரிரையும் குடித்துக்கொண்டு சோவியத் ரஷ்ய மக்கள் போர் புரிந்தார்கள். எந்த ஆயுதம் என்று இல்லை கண்ணுக்கு கிடைத்த பொருட்களை எல்லாம் ஆயுதங்களாகக் கொண்டு போரிட்டார்கள். இவ்விதமாக 182 நாட்கள் தொடர்ந்து போர் புரிந்து ஆயிரக்கணக்கான ஜெர்மன் வெறியர்களை வீழ்த்தினார்கள் சோவியத்ரஷ்ய மக்கள்.
1941 ஜூன் மாதத்திலிருந்து 1944 மே மாதம் வரை 51 லட்சத்து 60 ஆயிரம் பேரை ஜெர்மனியர்கள் கைதிகளாக சிறை பிடித்தனர். இவர்களில் இறுதியாக விடுவிக்கப்பட்டவர்கள் 10 லட்சத்து 53 ஆயிரம் பேர்கள் தான் எஞ்சியுள்ளவர்களின் கதி என்ன ஆயிற்றோ தெரியவில்லை. அவர்கள் 500பேர்களா? 1000 பேர்களா??நாற்பத்தொரு லட்சத்து 7 ஆயிரம் பேர்கள் ஆயிற்றே.!

இந்த உலகம் வாழ்விக்க தங்களது உயிரை தியாகம் செய்த பெருமை உலக வரலாற்றில் சோவியத் மக்களுக்கு மட்டுமே உண்டு. வேறு எவரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஹிட்லர் என்ற கொடுங்கோலனிடமிருந்து உலக மக்களையும்,உலக நாடுகளையும் பாதுகாத்த பெருமை என்றுமே வரலாற்றில் சோவியத் ரஷ்யாவுக்கு மட்டுமே உண்டு.
இரண்டாம் உலக யுத்தத்தில் மட்டுமே 40 மில்லியன் மக்கள் இறந்து போனார்கள் என்றால் எவ்வளவு பெரிய இழப்பு சோவியத் ரஷ்யாவுக்கு எண்ணிப்பார்க்க உண்மையில் உடலும் உள்ளமும் நடுங்குகிறது.

ஆக,ஸ்டாலின் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதிகாரி மட்டுமே. ஏழை எளிய மக்களை உயிர்களை கொன்ற சர்வாதிகாரி அல்ல; தன் நாட்டிற்காகவும் இந்த உலகத்திற்காகவும் பல தியாகங்களைச் செய்த ஒப்பற்ற மாபெரும் தலைவன் தான் ஜோசப் ஸ்டாலின்.
தமிழ் சங்க இலக்கியங்களில் நாம் பார்த்திருப்போம் நீதிக்காக தன் மகனை கொன்ற மன்னர்களை; உண்மையிலேயே இரண்டாம் உலக யுத்தத்தில் தன் மகனின் உயிரை பணயம் வைத்து சோவியத் ரஷ்ய மக்களை காப்பாற்றிய ஒப்பற்ற தலைவன். இதை எழுதும் போது என் கண்கள் கலங்குகின்றன.அந்த மாபெரும் தலைவனுக்கு என் கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்.

ஒருமுறையேனும் ஸ்டாலினை வாசித்து விடுங்கள்.

  • அமுதன் தேவேந்திரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?