தேசீயக் கட்சியா? வேண்டாம்!

 எந்த ஊரு.நல்ல ஊரு?


இந்திய நகரங்கள் தொடர்பான வாழ்க்கை வசதிக் குறியீடு (Ease of Living Index), நகர நிர்வாக செயல்பாட்டுக் குறியீடு (Municipal Performance Index) ஆகியவற்றை இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற நிர்வாக அமைச்சகம் நேற்று (பிப்ரவரி 04, வியாழ்க்கிழமை) வெளியிட்டது.

குடிமக்கள் கருத்துக்கணிப்புக்கு 30 சதவீத மதிப்பு, வாழ்கைத் தரம், பொருளாதாரத் திறன், நிலைத்தன்மை, கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, பாதுகாப்பு, பொழுதுபோக்கு, பொருளாதார மேம்பாடு, பொருளாதார வாய்ப்புகள், சுற்றுசூழல், மின்சார நுகர்வு என மற்ற பல காரணிகளுக்கு 70 சதவீத மதிப்பு கொடுக்கப்பட்டு வாழ்க்கை வசதிக் குறியீடு கணக்கிடப்பட்டுள்ளது என மத்திய அரசின் பத்திரிகைத் தொடர்பு அலுவலகமான பி.ஐ.பி

கடந்த 2020 ஜனவரி 16 முதல் 2020 மார்ச் 20-ம் தேதி வரை குடிமக்கள் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. 111 நகரங்களைச் சேர்ந்த 32.2 லட்சம் பேர் இந்த கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டனர் என்கிறது பி.ஐ.பி.

வாழ்க்கை வசதிக் குறியீட்டுக்கு வலு சேர்க்கும் விதத்தில், முதல் முறையாக நகராட்சி செயல்பாட்டுக் குறியீட்டை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகார அமைச்சகம் அறிமுகப்படுத்தி இருப்பதாக பி.ஐ.பி குறிப்பிட்டிருக்கிறது. நகராட்சிகளின் செயல்பாட்டின் அடிப்படையின் இந்த மதிப்பீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

வாழ்க்கை வசதிக் குறியீட்டின் அடிப்படையில் நகரங்கள்

10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் மற்றும் 10 லட்சத்துக்குள் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் என இந்தக் குறியீட்டை இரண்டாகப் பிரித்து இருக்கிறார்கள்.

வாழ்கை வசதி குறியீட்டில் 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில் பெங்களூரு (66.7 மதிப்பெண்) முதலிடத்தையும், புனே (66.27) இரண்டாவது இடத்தையும், சென்னை (62.61) நான்காவது இடத்தையும், மதுரை (55.78) 22-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன.

10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில் சிம்லா (60.90 மதிப்பெண்) முதலிடத்தையும், புவனேஸ்வர் (59.85) இரண்டாமிடத்தையும், சேலம் (56.40) ஐந்தாவது இடத்தையும், வேலூர் (56.38) ஆறாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக, மக்கள் எளிதாக வாழும் சூழல் இருக்கும் நகரங்கள் பட்டியலில் சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய தமிழக நகரங்கள் இடம்பிடித்திருக்கின்றன.

நகர நிர்வாக செயல்பாட்டுக் குறியீடு

சென்னை சென்ட்ரல்

10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் நகராட்சிகளில் இந்தூர் (66.08 மதிப்பெண்) முதலிடத்தையும், சூரத் (60.82) இரண்டாவது இடத்தையும், கிரேட்டர் மும்பை (54.36) எட்டாவது இடத்தையும், கோவை (50.52) 12-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன. இப்பட்டியலில் சென்னை 18-வது இடத்தையும், மதுரை 22-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன.

நகர நிர்வாக செயல்பாட்டுக் குறியீடு பட்டியலில் 10 லட்சத்துக்குக் குறைவான மக்கள் தொகை கொண்ட நகராட்சிகளில் புது டெல்லி (52.92 மதிப்பெண்) முதலிடத்தையும், திருப்பதி (51.69) இரண்டாவது இடத்தையும், சேலம் (49.04) ஐந்தாவது இடத்தையும், திருப்பூர் (48.92) ஆறாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன. திருநெல்வேலி, ஈரோடு வேலூர், திருச்சி, தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய நகராட்சிகளும் இந்த பட்டியலின் டாப் 30 இடங்களில் இடம் பிடித்திருக்கின்றன.

--------------------------------+-----------------------------

தேசீயக் கட்சியா?

வேண்டாம்!

தமிழ்நாட்டின் தனித்தன்மை!

அகில இந்திய கட்சிகள் தனித்து தேர்தலில் போட்டியிட முடியாதபடி விளிம்பு நிலையில் வைத்திருக்கும் மாநிலம் ஒன்று இந்தியாவில் இருக்கும் என்றால் அது தமிழ்நாடுதான்.



தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான ஆந்திர பிரதேசம், தெலங்கானாவில் கூட மாநிலக் கட்சிகள் உண்டு. ஆனால், அரசியல் என்பது அங்கெல்லாம் முற்றிலும் மாநிலக் கட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடவில்லை.

தனி நாடு கேட்டு ஆயுதப் போராட்டம் நடந்த காஷ்மீர், பஞ்சாப், அசாம் போன்றவற்றிலும் கூட மாநில கட்சிகளே முழுமையாக அரசியலைக் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படவில்லை.

மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய இரண்டு மாநிலக் கட்சிகள் ஜம்மு காஷ்மீரில் இரண்டு துருவங்களில் இருந்தாலும், பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகள் இன்னும் குறிப்பிடத்தகுந்த செல்வாக்கோடு விளங்குகின்றன.

மாணவர் இயக்கத்தின் மூலம் உதயமான, தேசிய இன உரிமைகளை அடிப்படையாக கொண்ட அசாம் கண பரிஷத் கிட்டத்தட்ட அசாமின் அரசியல் வானில் இருந்து தேய்ந்து சிறுத்துவிட்டது.

பஞ்சாபில் காங்கிரஸ் ஆளும் கட்சியாகவே இருக்கிறது.

இந்திரா எம்ஜிஆர்

காமராஜர் போன்ற வலுவான தலைவர்கள் இருந்த காங்கிரசை வீழ்த்திவிட்டு 1967ல் திமுக ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு 53 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், தமிழ்நாட்டின் அரசியலில் காங்கிரஸ் தனித்து பயணிப்பதற்கான பாதை ஏதும் இன்னும் தெரியவில்லை.

இந்தியா முழுவதும், எதிர்பாராத மாநிலங்களில் எல்லாம் அதிர்வுகளை ஏற்படுத்தும் பாஜக, தமிழ்நாட்டில் தனித்து தேர்தலை எதிர்கொள்ளும் சாத்தியம் தென்படவில்லை. நோட்டாவுடன் ஒப்பிட்டு கேலி செய்யப்படும் நிலையிலேயே அது இருக்கிறது.

ஏன் காங்கிரஸ் இங்கே மீண்டெழ முடியவில்லை? ஏன் இங்கே ஏன் இங்கே பாஜக காலூன்ற முடியவில்லை?

விடுதலை பெற்ற போது சென்னை மாகாண சட்டமன்றத்தில் கணிசமான எம்.எல்.ஏ.க்களைப் பெற்று கௌரவமான எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்டுகளால் ஏன் அதற்கு மேல் முன்னேற முடிவில்லை?

பகுஜன் சமாஜ், குடியரசு கட்சி போன்ற அகில இந்திய தலித் கட்சிகளும் இங்கே வேரூன்ற முடியவில்லையே ஏன்?

காங்கிரஸ் பிளவு

காமராஜ் திராவிட கட்சிகள்

1967ல் திமுக ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் அதன் தலைவர் சி.என்.அண்ணாதுரை இறந்தது அந்தக் கட்சிக்கு பெரிய சோதனை ஆனது. ஆனால், அதன் பிறகான தலைமைப் போட்டியில் மு.கருணாநிதி வெற்றிகரமாக கட்சித் தலைமையையும், ஆட்சித் தலைமையையும் தன்வசப்படுத்தினார்.

ஆனால், 1969ல் காங்கிரசும் ஒரு பெரிய சிக்கலை எதிர்கொண்டது. அந்த ஆண்டு காமராஜர், மொரார்ஜி தேசாய் போன்றோர் தலைமையிலான காங்கிரஸ் கோஷ்டி இந்திரா காந்தியை காங்கிரசில் இருந்து வெளியேற்றியது. இதையடுத்து காங்கிரஸ் பிளவுபட்டது.

1971ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்க விரும்பிய முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தைக் கலைத்தார். அவரது கட்சி, இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு தேர்தலை சந்தித்தது.

தமிழ்நாட்டில் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் வலுவாக இருந்தது.

சி.சுப்ரமணியம் தலைமையில் தமிழ்நாட்டில் இயங்கிய இந்திரா காங்கிரசுக்கு அவ்வளவு செல்வாக்கு இல்லை. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியும் கேட்பதில்லை என்ற உடன்பாட்டின் அடிப்படையில் இந்திரா காங்கிரசுக்கு 9 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கியது திமுக.

இந்தக் கூட்டணி தேர்தலில் அபார வெற்றி பெற்றது.

காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் 201 இடங்களில் போட்டியிட்டிருந்தாலும், பின்னாளில் இந்தக் கட்சி முக்கியத்துவம் இழந்து கரைந்தது. இந்திரா காங்கிரசே அதிகாரபூர்வமான இந்திய தேசிய காங்கிரசாக நிலை பெற்றது.

எனவே, 1971 தேர்தலில் சட்டமன்றத் தேர்தல் களத்தை முழுமையாக திமுக-வுக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்தது, மாநில அரசியலில் காங்கிரசுக்குப் பேரடியானது.

பின்னாளில் காமராஜர் தலைமையில் இயங்கியவர்கள் முழுதாக காங்கிரசுக்குத் திரும்பிவரவில்லை என்பதால், காங்கிரஸ் அடைந்த பலவீனம் நிரந்தரம் ஆனது.

திமுக - அதிமுக இருதுருவ அரசியல்

எம்ஜிஆர் - கருணாநிதி

இரண்டாவது முறை "1971" தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு கருணாநிதி - எம்.ஜி.ஆர் முரண்பாடு முற்றியது. திமுக-வை விட்டு வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர், 1972ம் ஆண்டு அண்ணா திமுக-வை தொடங்கினார்.

எம்.ஜி.ஆருக்கு இருந்த ஈடற்ற திரைப்புகழ், திமுக தலைவர்களில் ஒருவராக அவருக்கு இருந்த அரசியல் அனுபவம், அவரோடு வெளியேறிய திமுக தலைவர்களின் ஆதரவு ஆகியவை, எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக வலுவான கட்சியாக வேரூன்ற உதவியது.

அந்த காலகட்டத்தில் மத்தியில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவசரநிலையைப் பிரகடனம் செய்தார். அவருடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் கருணாநிதி, அந்த அவசர நிலைப் பிரகடனத்தை கடுமையாக எதிர்த்தார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு காங்கிரசுடன் நெருக்கத்தை வளர்த்துக்கொண்டார் எம்.ஜி.ஆர். எமர்ஜென்சியை ஏற்க மறுத்த திமுக-வின் ஆட்சி 1976ல் கலைக்கப்பட்டது.

"1977" தேர்தலில் நடந்த நான்கு முனைப் போட்டியில் அதிமுக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதல்வரானார். அதன் பிறகு, 1987ல் எம்.ஜி.ஆர். இறக்கும் வரை திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை. என்றாலும், முக்கிய எதிர்க்கட்சியாக திமுக-வே தம்மை நிலை நிறுத்திக்கொண்டது. காங்கிரசால் அந்த இடத்துக்கு வர முடியவில்லை. 1977ல் நடந்த நான்கு முனைப் போட்டியில் ஆட்சியை இழந்த திமுக 1989ல் நடந்த நான்கு முனைப் போட்டியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 26 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரசுக்கு மீண்டும் ஒரு ஒளி தெரிந்தது போலிருந்தது.

இந்திரா காந்தி - கருணாநிதி

இப்படி தனித்துப் போட்டியிடுவதை காங்கிரஸ் தொடர்ந்திருந்தால் அதன் அரசியல் வளர்ந்திருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், வலுவான எதிர்க்கட்சி அரசியலை மேற்கொண்டு மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய தலைவர் எவரும் அந்தக் கட்சியில் உருவாகவே இல்லை. தவிர, இரண்டே ஆண்டுகளில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதும், ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும், அப்படி ஓர் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவதற்கான வாய்ப்பையும் வரலாறு காங்கிரசுக்கு வழங்கவில்லை.

1984 முதல் 2011 வரையிலான தேர்தல்களில் திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்துகொண்டிருந்தன. ஒன்றின் மீதான அதிருப்திக்கு மற்றொன்றே மாற்றாக இருந்து வந்தன. இடையில் ஏற்பட்ட தலைமைச் சிக்கலை சமாளித்து அதிமுக ஜெயலலிதா தலைமையில் வலுப்பெற்று காலூன்றிவிட்டது.

இதனால், மாற்றுக்காக தேசியக் கட்சிகள் தேவை என்ற நிலை ஏற்படவே இல்லை. தவிர, எதிர்க்கட்சி அரசியல் மூலம் தன்னை நிலை நிறுத்தி அமைப்பை வலுவாக்கி கட்சியை தேர்தலுக்குத் தயார்படுத்தும் ஒரு மாநிலத் தலைமையை காங்கிரஸ் அகில இந்தியத் தலைமை உருவாக்கவும் இல்லை. உருவாக விடவும் இல்லை.

ஜெயலலிதா - வாஜ்பேயி

இதனால், திமுகவும் அதிமுக-வுமே ஒன்றுக்கு ஒன்று மாற்றாக விளங்கி வருகின்றன.

மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவது, பள்ளிக்கல்வியை விரிவாக்குவது, பொது மருத்துவத்தை விரிவுபடுத்துவது, பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துவது ஆகியவற்றில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் போட்டியே நிலவியது. வேலை நியமனத் தடைச் சட்டம், கோயில்களில் ஆடு, கோழி அறுக்கத் தடை, திருமண உதவித் திட்டத்தை நிறுத்துவது என்று ஜெயலலிதா தலைமையிலான அதிமுக இடையில் தனது பாதையை மாற்றிக் கொள்ள முயன்றாலும், திமுக மேற்கொண்ட இடைவிடாத, ஆவேசமான எதிர்கட்சி அரசியலால் அது மீண்டும், தன் பாதையை மாற்றிக்கொண்டது.

இந்த காலகட்டத்தில் இரண்டான திராவிடக் கட்சிகளும், வளர்ச்சி, சமூக மாற்றம் என்ற குறியீட்டில் மாநிலத்தை கிட்டத்தட்ட ஒரே பாதையிலேயே செலுத்தின.

அரசியல் பண்பாடு, நிர்வாகத்தின் தரம் ஆகியவற்றில் வேறுபாடுகள் காணப்பட்டாலும், பாதை ஒன்றாகவே நீடித்தது. இந்நிலையில், பெரிதும் சாதி சார்ந்த பிரதிநிதித்துவ சிக்கல்கள் காரணமாக புதிய சாதிக் கட்சிகள் தோன்றி பேர வலிமையோடு வளர்ந்தன. ஆனால், தங்கள் இழந்த அரசியல் முக்கியத்துவத்தை மீட்பதற்கு தேசிய கட்சிகளுக்கு வாய்ப்பே ஏற்படவில்லை.

1972ல் அதிமுக உருவாக்கத்தை அகில இந்திய அரசியல் ஆர்வத்தோடு ஊக்குவித்தது. தேசிய அரசியலுக்கு சவாலாக உருவான திமுக-வை கட்டுப்படுத்தும் நோக்கமே இதற்குக் காரணம். ஆனால், இப்படி முன்னிறுத்தப்பட்ட அதிமுக-வின் உருவாக்கமே, தேசியக் கட்சிகள் மீண்டும் தமிழ்நாட்டில் உள்ளே நுழைவதற்கான பாதையை முற்றும் முழுதாக அடைத்தது நகைமுரண்.

கொள்கை - இயக்கப் பின்னணி

பெரியார்: புனிதங்களைச் சுட்டுப் பொசுக்கியவர்

ஆனால், திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஒன்றுக்கொன்று மாற்றாக உருவாகி, தேசியக் கட்சிகள் கால் பதிக்கும் வாய்ப்பே இல்லாமல் போனது வெறும் வரலாற்று விபத்து அல்ல.

இரு கட்சிகளும், சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஒன்றுக்கொன்று போட்டியாக ஒரே பாதையில் பயணித்ததும் தற்செயல் அல்ல.

தனிப்பட்ட தலைமைகளுக்கு வேறு நோக்கங்கள் இருந்திருக்கலாம். குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்திருக்கலாம். ஆனால், மக்கள் மத்தியிலும், அரசியல் சிந்தனை மட்டத்திலும் வலுவான தாக்கம் செலுத்தும் திராவிட கோட்பாடு, தேர்தல் அரசியலை தனது ஈர்ப்புக்குள்ளேயே வைத்திருந்தது. இதுவும்கூட தேசிய கட்சிகள் கால் பதிப்பதற்கான அரசியல் தட்பவெட்ப நிலை உருவாகாமல் போனதற்குக் காரணமாக இருக்கிறது.

1882 முதல் "தத்துவ விவேசினி", "The Thinker" இதழ்களை நடத்தி வந்த சென்னை லௌகீக சங்கம், 1891ல் அயோத்தி தாசர் உருவாக்கிய "திராவிட மகாஜன சபை", 1912ல் உருவான "சென்னை மாகாண சங்கம்" போன்றவை, மாற்று அரசியலுக்கான பின்புலத்தை வெகு ஆரம்பத்திலேயே உருவாக்கியிருந்தன.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், தமிழக முதல்வர் பழனிசாமியும்

இந்நிலையில், 1916ம் ஆண்டு தொடங்கப்பட்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (நீதிக்கட்சி), சமூக நீதி, மொழி சார்ந்த தேசியம், மாநில சுயாட்சி ஆகியவற்றுக்கான வலுவான பாதையை உருவாக்கிப் பயணித்தது.

சுயமரியாதை இயக்கமும், அதன் வழியில் வந்த திராவிடர் கழகம் ஆகியவை இந்தப் பாதையிலேயே பயணித்தன.

இந்த அரசியலை உள்வாங்கிக்கொண்டே 1949ல் திமுகவும், அதில் இருந்து பிரிந்து 1972ல் அதிமுக-வும் உருவாயின.

சோனியா காந்திக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் ஸ்டாலின்

நடைமுறை அரசியல் சமரசங்களால், சீர்குலைவுகளால் திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் அலைகழிக்கப்பட்டிருந்தாலும், ஏற்கெனவே பல தலைமுறைகளாக பயணித்து பயணித்து உருவான பாதையில் இருந்து அவற்றால் முற்றிலும் விலகி நடக்க முடியவில்லை. இது அவற்றுக்கு ஒரு தொடர்ச்சியையும், ஸ்திரத்தன்மையையும் அளித்தன.

தேசிய கட்சிகளுக்கு இப்படி தொடர்பு அறுந்துபோகாத ஒரு அரசியல் சிந்தனைத் தொடர்ச்சி சாத்தியப்படவில்லை. இதனால், அவற்றால், வேரூன்ற முடியவில்லை.

சாதி ஒழிப்பை கோட்பாடாகக் கொண்டிருந்த திராவிட இயக்கம், சோஷலிசத்தின் பல கூறுகளை உள்வாங்கிக் கொண்டது. அம்பேத்கர் - பெரியார் இடையே நிலவிய நட்பு, ஒடுக்கப்பட்டோர் தொடர்பான திராவிட இயக்கத்தின் பார்வையை பிரதிபலிப்பதாக இருந்தது.

திமுக கருணாநிதி

அத்துடன் பொருளாதாரத்தில் தனியார் துறை தொடர்பாக கம்யூனிஸ்டுகளுக்கு இருந்த இறுக்கமான பார்வை திராவிட இயக்கத்துக்கு இல்லை. கிட்டத்தட்ட அது நேருவின் கலப்புப் பொருளாதாரக் கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்டதாகவே தோன்றியது. வங்கி - நிதிமூலதனத் துறை முழுவதும் வட இந்தியர்களால் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து 1946ல் வெளியான தமது பணத்தோட்டம் நூலில் அண்ணா கவலைப்பட்டிருப்பார். அதில், காந்தியப் பொருளாதாரம் ஒரு மயக்கம் என்ற கருத்தையும் அண்ணா வெளியிட்டிருப்பார்.

அரசியலில் அஹிம்சை என்ற காந்தியின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட திராவிட இயக்கம், அவரது பொருளாதாரக் கோட்பாட்டை நிராகரித்தது. சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி தங்கள் அரசுகள் பயணிப்பதற்குத் தேவையான, சமூக, அரசியல் பார்வைகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இப்படி திராவிடக் கட்சிகளுக்கு உருவாகியிருந்தன.

அத்துடன், பல பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பொது நலன்களை முன்னிறுத்தும் சமூக நீதி என்ற கோட்பாடு, அந்த சாதிகளை ஓர் அரசியலுக்குள் ஈர்த்துக்கொண்டன. எனவே, புதிய சாதிக் கட்சிகள் தோன்றினாலும், அவை தொடர்ந்து தனித்து இயங்குவதற்கான வெளி கிடைக்கவில்லை. தேசியக் கட்சிகள் செயல்படுவதற்கான இடைவெளியும் தோன்றவில்லை.

அகில இந்திய கட்சிகளால் தமிழ்நாட்டு அரசியலுக்குத் தருவதற்கு புதிதாக ஒன்றும் இருக்கவில்லை என்கிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவரான அருண்குமார். 

புரிபடாத களம்

நரேந்திர மோதி
படக்குறிப்பு,

நரேந்திரமோடி

அத்துடன், "நேரு, இந்திரா காந்திக்குப் பிறகு ஈர்ப்புள்ள அகில இந்திய தலைமை எதுவும் உருவாகவில்லை. பிறகு வந்த அனைத்திந்திய அரசியல் தலைமைகளால் மொழித் தடை காரணமாக நேரடியாக தமிழ்நாட்டு மக்களுடன் உரையாட முடியவில்லை.

சுயேச்சையான செயல்படக்கூடிய மாநில தலைவர்கள் அகில இந்திய கட்சிகளுக்கு வாய்க்கவில்லை. அகில இந்தியத் தலைவர்கள் ஆட்டுவிப்பவர்களாகவே தேசிய கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் இருந்தனர்.

சுயமாக முடிவெடுக்க முடியாத இந்த தலைவர்களை மக்கள் நம்பத் தயாராக இல்லை" என்கிறார் அருண்குமார்.

இப்படித் தலைமைகளே உருவாகாத தேசியக் கட்சிகளால் இங்கே வேரூன்றவும் முடியவில்லை என்னும்போது அவற்றுக்கு இங்கே ஏற்கெனவே உள்ள திராவிடக் கட்சிகளைப் பணியவைத்தோ, அவற்றிடம் பணிந்துபோயோ தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

"அதே நேரம், இந்த தேசிய கட்சிகளின் மூலம்தான் மத்திய ஆட்சியை அமைக்க முடியும் என்ற எதார்த்தத்தைப் புரிந்துள்ள தமிழ்நாட்டு வாக்காளர்கள், தேர்தலுக்குத் தேர்தல், எந்த தேசிய கட்சி தங்கள் அரசியல் அபிலாஷைகளுக்கு அதிகம் ஏற்புடையதாக இருக்குமோ அவற்றை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், சட்டமன்றத் தேர்தல் என்று வரும்போது, இந்த தேசியக் கட்சிகள் இங்கே ஒரு பொருட்டாக இருப்பதில்லை" என்கிறார் அருண்குமார்.

நன்றி: பி.பி.சி






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?