தாடி வளர்த்த நேரத்தில

பேரிடரிலும்  கார்பரேட் நலன்.

எரிகிற வீட்டில் எடுத்தது லாபம் என்பதைப் போல - கொரோனா காலத்திலும் கொள்ளைகள் தொடர்கிறது. அதுவும் கொரோனாவை வைத்து அடிக்கும் கொள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகி வருகிறதே தவிர குறையவில்லை! கொரோனா தடுப்பூசியின் விலையின் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி தனது நண்பர்களுக்கு நன்மை செய்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு இந்தியா முழுமைக்கும் கேட்கிறது.

மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தாலும் அது அவரது நண்பர்களுக்கு நன்மை செய்வதாக இருக்கும். பொதுத்துறை நிறுவனங்களை விற்றாலும் அதனால் பலனடைபவர்கள் அவரது நண்பர்களாக இருப்பார்கள். ரயில் நிலையங்களை விற்றாலும் விமான நிலையங்களை விற்றாலும் அதனால் நன்மை அவரது நண்பர்களுக்கே. இதோ இப்போது கொரோனாவால் நன்மை அடைபவர்களும் மோடியின் நண்பர்களே! கோவிஷீல்டு தடுப்பூசியைத் தயாரிக்கும் சீரம் நிறுவனம், ஒரே ஊசிக்கு மூன்று விதமான விலையை நிர்ணயித்துள்ளது.

ஒரு டோஸ் மருந்தை மத்திய அரசு வாங்கினால் 150 ரூபாய். அதையே மாநில அரசு வாங்கினால் 400 ரூபாய். தனியார் மருத்துவமனைகள் வாங்கினால் 600 ரூபாய்க்கு மேல். இதுதான் சீரம் நிறுவனத்தின் மருந்துக் கொள்கை. கொள்கை அல்ல; இது கொள்ளை. மாநில அரசுகளே, தடுப்பூசியைக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று இப்போது அறிவித்துள்ளார்கள். எதற்காக இந்த அறிவிப்பு என்று இப்போது தெரிகிறதா?

மாநில அரசுகளே அதிகப் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளட்டும் என்பதற்காகத்தான். ஏற்கனவே மாநில அரசின் வரி வருவாயை ஜி.எஸ்.டி. கொள்கை மூலமாக மத்திய மோடி அரசு தனது கஜானாவுக்குக் கொண்டு போய்விட்டது. இதனால் பல்வேறு மாநிலங்கள் ‘வறுமைக் கோட்டுக்கு கீழே' வாடி வதங்கிக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் கொரோனா காரணமாக அனைத்தும் தடைப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து தடுப்பூசியையும் கொள்ளை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றால் எப்படி?

கொரோனா ஒழிப்பை விட‘மாநிலங்கள் ஒழிப்பு தான்' மோடி அரசின் மறைமுகத் திட்டமா? ஒரு தனியார் நிறுவனத்தை வாழ வைக்க மொத்த மாநிலங்களையும் சுரண்டத் திட்டமா? ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்படும் தடுப்பூசிக்கு மூன்று வெவ்வேறான விலைகள் எப்படி இருக்க முடியும்? அப்படி ஒரு நிறுவனம் விலையை நிர்ணயிக்குமானால் அதனை தடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்குத்தானே இருக்கிறது? மாறாக, மத்திய அரசே இதற்கு பச்சைக் கொடி காட்டுகிறது என்றால் இது பச்சைத் துரோகம் ஆகாதா?

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் சார்பில் எதையாவது செய்துள்ளார்களா இந்த ஓராண்டு காலத்தில் என்றால் இல்லை. ஆனால் சுரண்டலை மட்டும் நடத்துகிறார்கள். தடுப்பூசிக்குக் கூட பணம் வசூலிக்கும் கொடூர அரசு இது. அதுவும் அதிகப்படியான பணம் வசூலிக்கும் பஞ்ச மாபாதக பா.ஜ.க. அரசு இது. இந்த விலை நிர்ணயம் குறித்து வ இந்தியன் டிரக்ஸ் அண்ட் காஸ்மாட்டிக்ஸ் சட்டம், இந்திய காப்புரிமை சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் எல்லாம் என்ன ஆனது?" 

*மருந்து தயாரிப்புத் துறை என்பது அரசு வசம்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் ஆரோக்கியத்தை சாத்தியப்படுத்த முடியும். அது ஒரு போதும் தனியார்கள் கோலோச்சும் நிலைக்கு சென்றுவிடக் கூடாது என்பது என் உறுதியான நிலைப்பாடு என்றார் பிரதமர் ஜவகர்லால் நேரு!

இந்தியன் டிரக்ஸ் அண்ட் பார்மசூட்டிக்கல்ஸ் என்ற அரசுத்துறை நிறுவனத்தை 1961 ஆம் ஆண்டு திறந்த போது அவர் பேசியதுதான் மேற்படி வாசகம்! இந்த நிறுவனத்திற்கு தலைமை இடம் தவிர்த்து நான்கு கிளைகள் உருவாக்கப்பட்டது. அந்த நிறுவனங்களில் நான்கை மோடி அரசு இழுத்து மூடிவிட்டது!

*உயிர் காக்கும் மருந்துப் பொருள் தயாரிப்பில் இந்தியா சுய சார்பு நிலையை எட்ட வேண்டும். தனியார்களையோ, வெளி நாடுகளையோ நம்பி இருக்கக்கூடாது என்பதற்காக ஐ.டி.பி.எல்.-ஐ சோவியத் யூனியனின் ஒத்துழைப்போடு உருவாக்கினார் நேரு.

இதன் முதலாவது ஆலை ஹைதராபாதில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டம், காலரா ஒழிப்பு, தொழுநோய் ஒழிப்பு, காச நோய் ஒழிப்பு ஆகியவற்றில் ஐ.டி.பி.எல்.-லின் பங்களிப்போடுதான் நாம் இமாலய சாதனைகளை நிகழ்த்தினோம்.

* இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பில் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சினுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இது தவிர ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தும் கொரோனா வைரஸ் தடுப்பூசியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு முன் பணமாக தற்போது ரூ.4,500 கோடி தரப்போவதாக பிரதமர் கூறியுள்ளார்.

* இந்திய மருந்து சந்தை என்பது தனியார் நிறுவனங்களின் வேட்டைக் காடாக உள்ளது. இந்தியாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன! இவர்களின் ஆண்டு சந்தை ரூபாய் 4,50,000 கோடிகளாகும். அரசின் பொதுத்துறை நிறுவனமான ஐ.டி.பி.எல்.லையும், மற்ற எட்டு அரசு நிறுவனங்களில் ஆறையும் செயல் இழக்க வைத்துவிட்டு, தனியாரிடமிருந்து அனைத்தையும் கொள்முதல் செய்யும் துர்பாக்கிய நிலைக்கு அரசாங்கம் வந்துவிட்டது.

* இந்தக் காரணங்களால்தான் அரசு நிர்பந்திக்கும் தடுப்பூசி மருந்துகளின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது. இதுவே அரசு தயாரிப்பு என்றால் மக்களுக்கு மகத்தான நம்பிக்கை ஏற்பட்டிருக்குமல்லவா? என்று அவர் பல்வேறு ஆதாரப்பூர்வ தகவல்களைக் கொடுத்து பல்வேறு கேள்விகளை முன் வைக்கிறார்.

ஆர்.டி.பி.எல். எனப்படும் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளை சப்ளை செய்யும் ராஜஸ்தான் டிரக்ஸ் அண்ட் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம், பி.சி.பி.எல். எனப்படும் பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம், தமிழ்நாடு பார்மசூட்டிக்கல்ஸ், இந்துஸ்தான் ஆன்டிபயாடிக் நிறுவனம், ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் (ஹெச்.ஏ.எல்.) நிறுவனம் இவை அனைத்தும் மத்திய அரசின் மாற்றாந்தாய் கொள்கையால் முன்னேற்றம் காண முடியாமல் போய்விட்டன என்கிறார் அவர். மக்களுக்கு மாபெரும் வஞ்சகத்தைச் செய்து வருகிறது மோடி அரசு. மக்கள் திரும்பினால் காணாமல் போய்விடுவீர்கள்!

------------------------------------

தாடி வளர்த்த நேரத்தில

செய்திருக்கலாமே மோடி.?

இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தடுப்பு மருந்துகள், ஆக்சிஜன் ஆகியவற்றிற்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி நிறுவனம் மத்திய அரசு, மாநில அரசு, தனியார் நிறுவனங்கள் என மூன்று மாதிரியான விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்கு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கொரோனா தொற்று நாட்டையே சூறையாடி வரும் நிலையில், மக்களுக்கு தடுப்பூசி அளித்துக் காக்கும் கடமையை மறந்து கார்ப்பரேட்களுக்கு லாபம் குவித்துக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது மோடி அரசு.

நாடு முழுவதும் இலவச தடுப்பூசி வழங்க முன்வராத பிரதமர் மோடி, மேற்கு வங்கத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அங்கு இலவச தடுப்பூசி வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக, அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிவித்த பா.ஜ.க அரசு, தற்போது வரை இலவச தடுப்பூசி அளிக்காமல் மக்களை ஏமாற்றி வருகிறது.

அதேபோல, தற்போதும் தேர்தலைக் குறிவைத்து, கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவோம் என மேற்கு வங்க மக்களை பா.ஜ.க ஏமாற்ற முயல்வது கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

------

"-என் தாயை யாராவது பார்த்துக்கோங்க’ என உள்ளே நுழைய முடியாமல் கதறும் ஒரு மகன். விக்கலை போல் மூச்சுக்காக ஏங்கித் திணறி சரியும் கணவனை கண்டு கதறி எழும் மனைவி, ‘அப்பாவை யாராவது பாருங்க...’ என கதறும் மகனை கேட்டு ஆம்புலன்ஸ்ஸுக்குள் சென்று பார்க்கும் ஒருவர், ‘கெட்ட சேதி’ என சொல்லி இறங்குகிறார், அசையாமல் கிடக்கும் மகனை பார்த்து கோபத்துடன், ‘எழுந்திரிடா, எழுந்திரிடா’ என திட்டிக் கொண்டிருக்கும் தாய்! மோடி கட்டமைத்திருக்கும் இந்தியாவின் லட்சணம் இதுதான்!

கோவிட் பரவலின் முதல் அலை கடந்த வருடம் நேர்ந்தது. உலகமே விமான போக்குவரத்தை நிறுத்தி வைத்திருந்த சமயம் மோடி மட்டும் விமானம் வைத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அழைத்து வந்து அகமதாபாத்தில் பெரிய கூட்டம் நடத்தி குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தையும் ஒடுக்கிக் கொண்டிருந்தார். பிறகொரு நன்னாளில் ‘அனைவரும் கரகோஷம்’ எழுப்புங்கள் என தொலைக்காட்சியில் தோன்றி பொறுப்பில்லாமல் அறிவிக்க, ஊருக்குள் கூட்டம் கூட்டமாக பாத்திரம் தட்டும் சம்பவங்களும் நடந்தேறின. பிறகொரு நன்னாளில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, சில மணி நேரங்களே இடைவெளி இருக்கும் நிலையில் பொது முடக்கம் அறிவித்தார். வெவ்வேறு ஊர்களிலும் மாநிலங்களிலும் சென்று வேலை பார்க்கும் மக்கள் விழுந்தடித்துக் கொண்டு பேருந்து நிலையங்களில் குவிந்தனர். கோவிட்டுக்கான குவிமையங்கள் வெற்றிகரமாக உருவாகின.

மக்களின் வாழ்வாதாரத்துக்கான எந்தவித பொருளாதார கவசமும் அறிவிக்கப்படவில்லை. நிதி அமைச்சர் மட்டும் திடுமென ஒருநாள் ஞாபகம் வந்து திரையில் தோன்றி ஏற்கனவே வழக்கில் இருக்கும் நலத்திட்டங்களை புதிதாக அறிவிப்பது போல் அறிவித்தார். மோடியும் தாடி வளர்க்கையில் கிடைத்த இடைவெளிகளில் அவ்வப்போது தோன்றி விளக்கு ஏற்றவும் மீண்டும் கைதட்டவும் விமானங்களில் மருத்துவமனைகள் மீது பூக்கள் கொட்டவுமென கார்ப்பரெட் நிறுவன HR போல புதுப்புது டாஸ்க்குகளை கொடுத்துக் கொண்டிருந்தார்.

இவற்றுக்கு இடையே இந்தியாவை இந்தியாவாக கட்டமைத்த பெரும் தொழிலாளர் கூட்டம் தங்களின் ஊர்களுக்குத் திரும்ப முடிவெடுத்தது. மொத்த நாட்டிலும் முடங்கிப் போய் வெறித்துப்போன சாலைகளில் குறுக்கும் மறுக்குமாக நடக்கத் தொடங்கியது. பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டதால் அவர்களுக்கு வேலை தந்த முதலாளிகளுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க முடியவில்லை. அவர்களுக்கு தொடர்ந்து ஊதியம் கொடுக்கவும் அவர்களுக்கு எந்தக் காரணமும் இல்லை. அவர்களுக்கு பொருளாதார உதவி செய்யும் அக்கறையும் மோடியின் அரசுக்கு இருக்கவில்லை. உணவுமின்றி வேலையுமின்றி என்ன செய்வதென தெரியாமல் ஊர்களுக்கு திரும்ப அவர்கள் முடிவெடுத்தபோது பேருந்துகள் இல்லை. ரயில்கள் இல்லை. நடக்கத் தொடங்கினர்.

ஜம்லோ என்கிற 12 வயது பெண் தெலங்கானாவிலிருந்து சொந்த ஊரான சட்டீஸ்கரின் பிஜாப்பூருக்கு 150 கிலோமீட்டர் பயணத்தை தொடங்கி ஊருக்கு ஐம்பது கிலோமீட்டர் இருக்கும்போது சாலையில் விழுந்து இறந்தாள். மத்திய பிரதேசத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்கள், ‘பொது முடக்கம் என்கிறார்களே.. ரயிலும் முடக்கப்பட்டுதானே இருக்கும்’ என நினைத்து ரயில் பாதையில் இளைப்பாறினார்கள். ஆனால் மோடி இந்தியாவில் மக்களுக்குதான் முடக்கம், முதலாளிகளுக்கு அல்ல என்பதை அவர்கள் தெரிந்திருக்கவில்லை. சரக்கு ரயில் ஓடி வந்து அவர்கள் மீது ஏறி அரசின் உண்மையான அக்கறை யாரின் மீது என்பதை புரிய வைத்து ஓடியது. 16 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாயினர். இன்னொரு பக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டத்தை அரசதிகாரிகள் பிடித்து உட்கார வைத்து கிருமிநாசினியை பீய்ச்சி அடித்தனர்.

உத்தர பிரதேச யோகி அரசுக்கு வேறொரு முக்கியமான கவலை இருந்தது. முதலாளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் லாபத்தை எப்படி மீட்டுக் கொடுப்பது என்கிற கவலை. இனி வரும் வருடத்தில் எல்லா நிறுவனங்களும் 12 மணி நேரங்களுக்கு மேல் தொழிலாளர்களை வேலை வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தது. தொழிலாளர் உரிமை சட்டங்கள் பலவற்றை ரத்து செய்தது. அதிக நேரம் வேலை பார்த்தாலும் ‘ஓவர் டைம்’ ஊதியம் கிடைக்காது என்கிற நிலை. மத்திய அரசும் நிறுவனங்களிடம் செல்லக் கோபத்துடன், ‘தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டாம், பாவம் அவர்கள்’ என யோசனை கூறியது. உடனே பல நிறுவனங்களில் சம்பளம் வெட்டியெறியப்பட்டது. நான்காண்டுகளுக்கு முன் வாங்கிய சம்பளங்களுக்கு சரேலென தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர். பல நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் பணியாளர்களின் வேலைகளை பிடுங்கி தூக்கி எறிந்தது.

மோடி மயிலுக்கு உணவு போடும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

உலக நாடுகள் கோவிட் பரவலை குறைப்பதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கும் மும்முரத்தில் இருந்தன. ‘என் புருஷனும் கல்யாணத்துக்கு போனான்’ என மோடியும் தடுப்பூசி ஆராய்ச்சியை அறிவித்தார். இந்திய சுதந்திர தினத்தன்று தடுப்பூசி வந்துவிட வேண்டிய வகையில் வேலை பார்க்க ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆய்வாளர்களோ ‘ஆஸ்ட்ரிச் பார்த்திருக்கீங்களா ஆஸ்ட்ரிச்’ என மோடியை கேட்டதும் வேறு வழியின்றி அந்த திட்டத்தை மக்களுக்காக தியாகம் செய்துவிட்டு தாடியில் கவனம் செலுத்தினார் மோடி. மோடிக்கு எந்தவிதத்திலும் சளைத்தவரல்ல என ஒருநாள் நிர்மலா சீதாராமன் தோன்றி ‘கூறு பத்து ரூபாய்’ என பொதுத்துறை நிறுவனங்களை விற்றார்.

இதற்கு மேலும் இவர்களுக்கு அறிவு வரப் போவதில்லை என வெறுத்துப் போய் கோவிட்டே சில நாட்களுக்கு ஓய்வு எடுக்கச் சென்றுவிட்டது. ‘ஹைய்யா ஜாலி’ என அம்பானிக்கு விவசாயி வேடம் கட்டுவதற்கான மேக்கப் டெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார் மோடி. விவசாயிகள் அதை எதிர்த்து தங்களுக்கான துயரத்தை கேட்கச் சொல்லி தில்லி எல்லைகளுக்கு சென்றனர். மோடி கேட்கவில்லை. எந்த பேச்சுவார்த்தைக்கும் அமித்ஷா அசைந்து கொடுக்கவில்லை. விவசாயிகளுக்கு எதிராக காவலர்கள் களமிறக்கப்பட்டனர். விவசாயிகள் வரும் வழியில் ஆணிகளை அறையச் சொன்னார் மோடி. பள்ளம் தோண்டி விவசாயிகளை அதற்குள் ‘தொபுக்கடீர்’ என விழ வைத்து இந்தியாவின் விவசாயப் பிரச்சினையை தீர்த்து வைக்க முயன்றார்.

அடுத்தகட்டமாக ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மோடிக்கான டெலிப்ராம்ப்டரே கதறியழும் வகையில் பொய்கள் எழுதிக் கொடுக்கப்பட்டன. ஐந்து மாநில தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தாமல் தேர்தல் ஆணையம் தன்னுடைய விசுவாசத்தை காட்டியது. கோவிட் இரண்டாம் அலையை பற்றி உலக நாடுகள் எச்சரித்துக் கொண்டிருந்த வேளையிலும் மேற்கு வங்கத்துக்கு எட்டு கட்ட தேர்தலை அறிவித்து நல்ல பெயரை வாங்கிக் கொண்டது தேர்தல் ஆணையம். பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டன. இவற்றுக்கு நடுவே கடவுளை நாம் மறந்துவிடக் கூடாது என 31 லட்சம் பேர் கும்பமேளாவில் அரசின் உதவியுடன் கூட்டப்பட்டனர்.

தமிழகமும் கேரளாவும் புதுச்சேரியும் ஒரே கட்டத்தில் தேர்தலை எதிர்கொண்டு முடித்த நேரத்தில் கோவிட் இரண்டாம் அலை தலைவிரித்தாடத் தொடங்கியது. மோடி எந்த கவலையுமின்றி மேற்கு வங்கத்தில் கூட்டம் கூட்டமாக மக்களைக் கூட்டி பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தார்.

கோவிட் தடுப்பூசிகளை உலகம் அறிவித்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்தியா மட்டும் இரண்டே இரண்டு நிறுவனங்களுக்கு மொத்த தடுப்பூசி தயாரிப்பையும் ஒதுக்கியது. மூன்றாம் கட்ட பரிசோதனை செய்யாமலேயே தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு அறிவுறுத்தப்பட்டது. 70% விகித செயல்திறன் கொண்ட தடுப்பூசியின் மிச்ச 30% சதவிகிதத்துக்கு அரச பாதுகாப்பு எதுவும் உருவாக்கப்படவில்லை. தடுப்பூசி கொடுக்கும் பக்கவிளைவு பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவில்லை. பக்கவிளைவுகளுக்கான மருத்துவச் செலவுக்கும் அரசு பொறுப்பெடுத்துக் கொள்ளவில்லை. இத்தகைய சூழலில்தான் இன்று நாம் காணும் எல்லா காட்சிகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ஆக்சிஜன் பற்றாக்குறையை மாநில அரசுகள் மத்திய அரசுக்கு முன்வைத்துக் கொண்டே இருந்தன. தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டவர்களுக்கு இரண்டாம் டோஸ் கிடைக்கவில்லை. என்ன செய்வதெனவும் மக்களுக்கு தெரியவில்லை. கோவிட் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சையளிக்க போதுமான வசதிகள் இல்லை. கோவிட் மரணங்களுக்கான இறுதிச் சடங்குகளுக்கு இடமில்லை. படுக்கை, தடுப்பூசி, ஆக்சிஜன், சுடுகாடு என எதற்கும் பதிலின்றி மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கையில்தான் மோடி மீண்டும் ஊடகங்களிடம் அல்ல, தொலைக்காட்சியில் தோன்றினார்.

நீளமாக தாடி வளர்த்திருந்தார். தலையின் பின்பக்கத்தில் முடி பிறைநிலா போல் தோற்றமளிக்கும் வகையில் அற்புதமாக வாரியிருந்தார். கோவிட்டை எதிர்த்து இரண்டாம் போர் நடப்பதாக அறிவித்தார். அப்போரில் இந்தியாவின் உச்ச அதிகாரம் படைத்த பிரதமர் எதிரியான கோவிட்டை எப்படி கையாளப் போகிறாரென எதையும் தெரிவிக்கவில்லை. மாறாக மக்களுக்கு துணையாக ஓர் ஓரத்தில் நிற்பதாக உறுதியளித்தார். நம்புங்கள், இவரே இந்திய நாட்டுக்கு பிரதமர்.

அற்புதமான நிர்வாக மாடல் என கொண்டாடப்பட்ட குஜராத்தில் கோவிட் பாதிப்பு கொண்டோருக்கு சிகிச்சை படுக்கைகள் கிடைக்காத நிலை. ஒரே படுக்கையில் மூவர் படுத்து சிகிச்சை பெற வேண்டிய கோரம். இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக மாநில அரசுகள் ஆக்சிஜன் கேட்டு நீதிமன்ற படி ஏறியிருக்கின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்காக தொடர்பு கொள்ளப்படுகையில் பிரதமர் பதிலளிக்கவில்லை என்கின்றன. பிச்சை எடுத்தாவது, கொள்ளை அடித்தாவது ஆக்சிஜனை மக்களுக்கு கொடுக்க சொன்னது நீதிமன்றம். அடடே.. நீதிமன்றமே கொள்ளை அடிக்க அனுமதி கொடுத்துவிட்டதே என ஆனந்தத்தில் திளைத்தார் பிரதமர்.

அவசரமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். ‘மக்கள் நலனா... என்ன ஆச்சரியம்’ என நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அறிவிப்பு வெளியாகிறது. தடுப்பூசிகள் இனி தனியார் சந்தையிலும் கிடைக்கும் என்றும் அவற்றை மாநில அரசுகளே வாங்கிக் கொள்ள வேண்டும் என்றது அறிவிப்பு. ‘நீட்’ முதலிய நுழைவு தேர்வுகளை நடத்தி ‘சுகாதாரம்’ மத்திய அரசுக்குதான் என அடம்பிடித்து நம் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருந்த மோடி தற்போது தடுப்பூசிகளை மாநில அரசுகளே வாங்கிக் கொள்ளட்டும் என கைவிரித்திருக்கிறார்.

இவற்றுக்கு பிறகு ஒரு முக்கியமான விஷயமும் வெளியானது. கோவிஷீல்ட் என்கிற தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் அதிபரான அதார் பூனாவாலா, ‘அரசுகளுக்கு 400 ரூபாய்யும் தனியாருக்கு 600 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்படும் என்றார். இதற்கு முன் தனியாரில் தடுப்பூசி இல்லை. அரசுக்கு விற்கப்பட்ட தடுப்பூசியும் 150 ரூபாய் கட்டணத்தில்தான் விற்கப்பட்டது. ‘பற்றியெரியும் வீட்டில் ஏன் இந்த கொள்ளையடிக்கும் வேலை’ என நாம் கதறுவதற்கு அதார் பூனாவாலா சொல்லும் பதில் இதுதான்:

“முதலில் தடுப்பூசி எந்தளவுக்கு வேலை பார்க்கும் என்பது எங்களுக்கு தெரியாது. எனவேதான் 150 ரூபாய்க்கு கொடுத்தோம். தற்போது அது பலனளிப்பது தெரிவதால் நாங்கள் விலை ஏற்றுகிறோம். எங்களுக்கு லாபம் மட்டுமே முக்கியம்”. சீரம் நிறுவனத்துக்கு தயாரிப்பு அனுமதியை கொடுத்தது மத்திய அரசுதான். அதுவும் ஜனவரி மாதத்திலேயே அதார் பூனாவாலா கொடுத்த ஒரு பேட்டியில், “பத்து கோடி டோஸ்களுக்கு மட்டும்தான் நாங்கள் மத்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். அதற்குப் பிறகு தனியாரில் 1,000 ரூபாய் வரை விலை வைத்து விற்கவிருக்கிறோம்’ எனக் கூறியிருக்கிறார்.

அதாவது 130 கோடி பேர் வாழும் நாட்டில், இரண்டு டோஸ்கள் கொடுக்க வேண்டிய தடுப்பூசியில் 10 கோடி டோஸ்களுக்கு மட்டுமே மத்திய அரசு ஒப்பந்தம் போட்டிருக்கிறது என்றால், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிச்சயம் ஏற்படும் என்பது மத்திய அரசுக்கு தெரிந்திருக்கும். அந்த ஒப்பந்தத்துக்கு பிறகும் புதிய தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவென வேறெந்த நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அரசு உற்பத்தி நிறுவனங்களே பல இருக்கும்போதும் அவை எதுவும் அரசால் சீண்டப்படக்கூட இல்லை. பதிலாக ‘போட்டோஷூட்’, ‘டெலிப்ராம்ப்டர் ரீடிங்’, ‘டாஸ்க் கேம்’, ‘சாலையில் ஆணி அடித்தல்’ முதலிய அத்தியாவசிய வேலைகளில் ஈடுபட்டிருந்திருக்கிறார் மோடி.

சரியாகச் சொல்வதெனில் இரண்டு நிறுவனங்கள் லாபத்தில் கொழிப்பதற்காக வேண்டுமென்றே தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு, தனியாரில் மருந்துகளை இறக்கி, மக்களை சாகக் கொடுக்க திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. இத்திட்டத்துக்கு உயிர் கொடுத்திருப்பவர் பிரதமர் மோடி. இவர்தான் இப்போதும் மேற்கு வங்கத்தில் சென்று ‘எத்தகைய ஆட்சியை நாங்கள் தருவோம் தெரியுமா’ என 56 இஞ்ச் மார்பை விரித்து பஞ்ச் வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். கொத்துக்கொத்தாக மக்கள் செத்துவிழும் ஒரு பேரிடரை வணிகமாக்கும் அரசைப் பார்த்திருக்கிறீர்களா?

மோடி அரசுதான் அது.

--------------------------------------------------------------------------------------

இதுதான்

குஜராத் மாதிரி.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகியவற்றை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சுகாதாரத்துறையின் படுதோல்வியால், உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வருகின்றன.

பிற மாநிலங்களை விட பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பும், இறப்பும் அதிகரிப்பதற்கு மோசமான மருத்துவக் கட்டமைப்பே காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை மீட்டு வருவதாக பேசி வரும் பிரதமரின் சொந்த ஊரில் தான் கொரோனாவை கடுப்படுத்த முடியாமல் அம்மாநில அரசு திணறி வருகிறது.

மோடி முதன்முதலாக மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தேர்தல் பிரச்சாரங்களில், அனைத்து மாநிலங்களையும் குஜராத் போல மாற்றுவேன். இந்தியாவிற்கே குஜராத் ஒருமுன்மாதிரி மாநிலம் எனக் கூறி. ‘குஜராத் மாடல்’ என்ற வெற்று விளம்பரத்தை நாடுமுமுவதும் பரப்பி ஆட்சியைப் பிடித்தார்.

பிரதமர் மோடி பிறந்த குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க சுமார் 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தது. அதில் 13 வருடங்கள் நரேந்திர மோடி தான் முதல்வராக இருந்து வந்தார். அதன் விளைவே பிரதமராக மோடி இன்று இரண்டாவது முறையாக அரியணையில் அமர்ந்திருக்கிறார்.

நாட்டிலேயே அசுர வளர்ச்சி அடைந்த மாநிலம் என்றால் அது குஜராத்தான் என மேடைகளில் பேசிய பா.ஜ.க தலைவர்கள் இன்று பலரும் அந்த வார்த்தையை மீண்டும் சொல்லக் கூச்சப்படும் நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். அந்த அளவிற்கு அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை கட்டமைப்பு படுதோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் மோடி அரசின் வெற்று விளம்பரம் தான் ‘குஜராத் மாடல்’ என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ராஜீவ் சதவ் கூறுகையில், “குஜராத் நிலைமை படுமோசமாக மாறியுள்ளது. மோடி 2014ல் சொன்ன குஜராத் மாடல் நாட்டுமக்களுக்கு என்னவென்று புரியாமல் இருந்திருக்கும்.

ஆனால், இப்போது அனைவரும் குஜராத் மாடல் என்பது வெற்று விளம்பரம் எனப் புரிந்துகொண்டிருப்பார்கள். பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் மோடி 13 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார். பா.ஜ.க 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் அத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், ஒரு அரசு மருத்துவமனை கூட கட்டவில்லை.

இன்னும் கூட சுமார் 14 மாவட்டங்களில் சி.டி ஸ்கேன் எடுக்கும் வசதிகூட இல்லை. ஆனால் அதேவேளையில் குஜராத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சி தான் பெருகியிருக்கிறது. இதன் மூலம் மக்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

இந்த நிலையில் உள்ள குஜராததை வைத்துக்கொண்டு, பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர்கள் குஜராத் மாடல் என்று புராணம் பாடிக் கொண்டிருப்பதை நிறுத்தவேண்டும். ஏனென்றால் அது வேடிக்கையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

--------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?