'ஊழல்' ன்னா என்னவென்றே தெரியாது.

 சங்கிகளுக்கு

ஃபேல் விமானங்களை இந்தியா வாங்கியதில், இடைத்தரகு நிறுவனம் ஒன்றிற்கு பல கோடி ரூபாய் பணம் வழங்கியதாக ரஃபேல் விமானத் தயாரிப்பு நிறுவனமான டஸ்ஸால்ட் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டியிருக்கிறது பிரான்ஸ் நாட்டின் ஊழல் எதிர்ப்பு முகமை.

கடந்த 2016-ம் ஆண்டு மோடி அரசால் பல்வேறு விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் தாண்டி போடப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தை ஒட்டி, இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு இழப்பு என்பதை பல்வேறு ஆதாரங்களில் இருந்தும் தொழில்நுட்ப விவரங்களில் இருந்தும் பலரும் அம்பலப்படுத்தினர்.

இந்திய பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை முறித்துவிட்டு, அதை விட அதிகமான விலையில் தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிராத வகையில் அனில் அம்பானி நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டது.



இது தொடர்பாக போடப்பட்ட வழக்கில் ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் உள்ளிட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மோடி அரசை கேட்டுக் கொண்டது உச்சநீதிமன்றம். ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் தொலைந்து போய்விட்டதாக நீதிமன்றத்தில் அப்பட்டமாகப் பொய் சொன்னது மத்திய அரசு.

மத்திய அரசின் இந்த வாக்குமூலத்தை ‘அப்பாவி’யாக தன்னை பாவித்துக் கொண்டு கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்து விட்டது உச்சநீதிமன்றம். இது தொடர்பாக இந்து என். ராம் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் அம்பலப்படுத்தத் துவங்கினர். ரஃபேல் ஊழல் தொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு வெளியீட்டை உடனடியாக கைப்பற்றி அழிக்க அடிமை எடப்பாடி அரசு அச்சமயத்தில் மும்முரமாய் செயல்பட்டது நினைவில் இருக்கலாம்.

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் ஊழல் எதிர்ப்பு முகமை சமர்ப்பித்துள்ள அறிக்கையில், 2017-ம் ஆண்டு டஸ்ஸால்ட் நிறுவனம் இந்திய நிறுவனமான டெஃப்சிஸ் நிறுவனத்திற்கு ரஃபேல் விமானத்தின் 50 மாதிரிகளைச் (Model) செய்வதற்கு பணம் கொடுக்கப்பட்டதாக காட்டப்பட்ட கணக்கிற்கு உரிய ஆதாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

அதாவது கடந்த மார்ச் 30, 2017 தேதியிடப்பட்ட விற்பனை ஆவணத்தில் 8.8 கோடி மதிப்பிலான ரஃபேல் விமான மாதிரிகள் செய்வதற்கான ஆணையை வழங்கியிருக்கிறது. ஆனால் அந்த மாதிரிகள் உண்மையாக தயாரிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் எதையும் அந்த நிறுவனம் சமர்ப்பிக்க வில்லை. மேலும் இந்த செலவினத்தை வாடிக்கையாளருக்கான பரிசு என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளது ரஃபேல் நிறுவனம். இது குறித்து ஊழல் எதிர்ப்பு முகமையின் கண்காணிப்பாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முறையான ஆவணங்களை வழங்க முடியவில்லை.

இந்த மாதிரிகளை செய்வதற்கு பணியாணை பெற்ற நிறுவனமான டிஃப்சிஸ் சொலுசன்ஸ் (Defsys Solutions) நிறுவனமானது ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்தியாவில் ஒப்பந்தம் போடப்பட்ட டஸ்ஸால்ட் நிறுவனத்தின் துணைத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும்.

இது குறித்து பிரான்சின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியா பார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், டிஃப்சிஸ் நிறுவனமானது மூன்று தலைமுறையாக வானூர்தி மற்றும் இராணுவ தளவாடங்கள் விற்பனையில் தரகு வேலை பார்க்கும் குடும்பத்தைச் சேர்ந்த குப்தா என்பவருக்குச் சொந்தமானது என்றும், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், கோப்ரா போஸ்ட் மற்றும் எக்கனாமிக் டைம்ஸ் ஆகிய இரண்டு செய்தி நிறுவனங்களும் குப்தா குடும்ப உறுப்பினரான சுசேன் குப்தா டஸ்ஸால்ட் நிறுவனத்துடனான ரஃபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாகவும், ரஃபேல் ஒப்பந்தத்தை முடிப்பதற்கு இந்திய பாதுகாப்புத் துறையின் பல இரகசிய ஆவணங்களையும் இந்நிறுவனம் பெற்றதாக்வும் செய்தி வெளியிட்டன என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதற்கு அப்படியே பொருந்தும்படி தற்போது இந்த தரகு நிறுவனம் அளித்த 8.8 கோடி ரூபாய் மதிப்பிலான பில் அம்பலமாகியிருக்கிறது. இந்த சுஷென் குப்தா கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமலாக்கத்துறையால், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் நடைபெற்ற பண மோசடிக்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த குப்தா விவகாரம் ரஃபேல் ஒப்பந்த விவகாரத்திலும் அம்பலமாகிவிட்டது. செய்திகளில் இந்த முறைகேடு அம்பலப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறையில் நடந்திருக்கும் மிகப்பெரிய முறைகேட்டின் ஒரு சிறு பங்கு அம்பலமான நிலையில், இதனை தாமாக முன் வந்து விசாரித்திருக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை.

ஆவணங்கள் தொலைந்து போனதையே ‘அப்பாவியாக’ ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், உண்மையிலேயே ரஃபேலின் மாடல் தயாரித்துத் தந்ததாக சுஷென் குப்தா, சாமி மேல் சத்தியம் செய்து கூறினால் ஏற்றுக் கொள்ளாதா என்ன ?




--------------------------------------------------------------------------

வே.ஆனைமுத்து

 (பிறப்பு : ஜூன் 21, 1925) 

பகுத்தறிவு தந்தை பெரியாரின் அடியொற்றி, சுயமரியாதைப் பாதையில், பெரியாரிய நெறியில் தனது இயக்கத்தைக் கட்டமைத்து ஆண்டுதோறும் சுயமரியாதை உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தி இளைஞர்களை பெரியாரிய நெறியோடு மார்க்சிய, அம்பேத்காரிய நெறிகளையும் போதித்தவர்.

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளான கருவறை தீண்டாமையை ஒழிப்பதற்காகப் போராடி இறுதி வரை உறுதியாக நின்ற மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் அய்யா வே.ஆனைமுத்து அவர்கள் தனது 96-வது வயதில் பகுத்தறிவுப் பணியை  நிறுத்திக் கொண்டுள்ளார்.

1957-ல் பெரியாரால் அறிவிக்கப்பட்ட அரசியல் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு 18 மாதங்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் உயிரோடு இருந்த காலகட்டத்திலேயே அவரது உரைகள், எழுத்துகள் ஆகியவற்றைத் தொகுக்க ஆரம்பித்த அய்யா ஆனைமுத்து, அவற்றை ‘பெரியார் – ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ என்ற பெயரில் 2170 பக்கங்கள் கொண்ட பிரம்மாண்ட தொகுப்பாக வெளியிட்டார். பின் விரிவாக்கம் செய்யப்பட்டு, 20 பாகங்களாக வெளியாயின. பெரியார் சிந்தனைகள் குறித்த ஆய்வில், ஆனைமுத்துவின் இந்தத் தொகுப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இவை தவிர, “சிந்தனையாளர்களுக்கு சீரிய விருந்து”, “தீண்டாமை நால்வருணம் ஒழிப்போம்”,  “பெரியார் கொள்கைகள் வெற்றிபெற பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன?”, “விகிதாச்சார இடஒதுக்கீடு செய்” ஆகிய புத்தகங்களையும் அவர் எழுதி வெளியிட்டு இருக்கிறார்.


--------------------------------------------------------------------

பா(சிச)ஐ.க. பிடி...

பீமா கொரேகான் வழக்கை முகாந்திரமாக வைத்து வட இந்திய சமூகச் செயற்பாட்டாளர்களையும், அறிவுத் துறையினரையும் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக வழக்கு ஜோடித்துக் கைது செய்து இன்றளவும் விசாரணை என்னும் பெயரில் அவர்களுக்கு பிணை தராமல் இழுத்தடித்து வருகிறது மோடி அரசு. என்.ஐ.ஏ எனும் ஆள்தூக்கி போலீசு கும்பலை வைத்துக் கொண்டு ஊபா, தேசத் துரோக சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்கள் மூலம் சட்டவிரோதமான முறையில் செயற்பாட்டாளர்களை முடக்கி வருகிறது மோடி அரசு.

அந்த வகையில் வட இந்தியாவில் இருக்கும் சமூக செயற்பாட்டாளர்களை முடக்கிய பின்னர், தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கை வைத்திருக்கிறது மோடி அரசு. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தலித் பழங்குடியின மற்றும் பெண்கள் விடுதலை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டு மொத்தம் 25 பேரின் வீடுகளில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தேடுதல் நடத்தியிருக்கிறது என்.ஐ.ஏ.

செயற்பாட்டாளர்கள் 25 பேரின் வீடுகளில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்தத் தேடுதலில், செயற்பாட்டாளர்களின் தொலைபேசிகள், கணிணிகள், மடிக்கணிணிகள், புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை என்.ஐ.ஏ கைப்பற்றிச் சென்றதாக பி.யூ.சி.எல் அமைப்பு தெரிவிக்கிறது. மனித உரிமைகள் கூட்டமைப்பு, குடிமை உரிமைகள் அமைப்பு, ஆந்திரா குடிச் சுதந்திர கமிட்டி,  விரசம் (புரட்சிகர எழுத்தாளர்கள் கழகம்) உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டிருக்கிறது.

ஆந்திரப்பிரதேஷ் குடிச் சுதந்திர கமிட்டியைச் சேர்ந்த தெலுங்கானா உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரகுநாத் வெரோஸ், ஜன நாட்ய மண்டலி அமைப்பைச் சேர்ந்த டப்பு ரமேஷ், மனித உரிமைகள் கூட்டமைப்பைச் சேர்ந்த வி.எஸ்.கிருண்ணா, புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த பானி, வரலட்சுமி, அருண் உள்ளிட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நன்கு அறியப்பட்ட செயற்பாட்டாளர்களைக் கைது செய்துள்ளது.

இவர்களைத் தவிர, சைதன்யா மகளிர் சங்கத்தைச் சேர்ந்த  தேவேந்திரா, சில்பா, ஸ்வப்னா, ராஜேஸ்வரி, பத்மா, ஆந்திரப்பிரதேஷ் சிவில் சுதந்திர கமிட்டியைச் சேர்ந்த ரகுநாத், சிட்டிபாபு, சிலிகா சந்திரசேகர், அமருலா பந்து மிருதுளா சங்கத்தைச் சேர்ந்த அஞ்சம்மா, சிரிஷா மற்றும் வழக்கறிஞர் கே.எஸ். செல்லம் ஆகியோர் வீட்டிலும் தேடுதலை நடத்தியிருக்கிறது என்.ஐ.ஏ.

கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொலைக்காட்சி  ஊடகவியலாளரான பங்கி நாகண்ணாவை மாவோயிஸ்ட்டுகளுக்கு தகவல் தொடர்பு கொண்டு செல்பவராகக் கூறி விசாகப்பட்டிணம் போலீசு கைது செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை என்.ஐ.ஏ. கையாளத் துவங்கியது.

மாவோயிஸ்ட்டுகளுக்கு மருந்துகள், ஆவணங்கள் ஆகியவற்றை நாகண்ணா எடுத்துச் செல்லும்போது அவரைக் கைது செய்ததாக விசாகப்பட்டிணம் போலீசு தெரிவித்தது. விசாரணையின் போது பங்கி நாகண்ணா தாம் மாவோயிஸ்ட்டுகளுக்கும், சிவில் சமூகத்தவர்களுக்கு இடையிலான சந்திப்புகளை ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்ததாகவும் விசாகப்பட்டிணம் போலீசு கூறியது.

ஆந்திர போலீசு பதிவு செய்துள்ள இரண்டு முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையிலேயே இந்தத் தேடுதலை என்.ஐ.ஏ. நடத்தியுள்ளதாக பி.யூ.சி.எல் அமைப்பு தெரிவித்திருக்கிறது. இரண்டு முதல் தகவல் அறிக்கைகளிலும் மொத்தமாக சேர்த்து 80 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அதில் 27 பேரின் பெயர்கள் இரண்டு முதல் தகவல் அறிக்கைகளிலும் இடம் பெற்றுள்ளன. இந்த வழக்கை கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி ஆந்திர போலீசிடம் இருந்து என்.ஐ.ஏ எடுத்துக் கொண்டது.

பீமா கொரேகான் வழக்கிலும் புனே போலீசு போலியாகத் தயாரித்த ஒரு கடிதத்தை முகாந்திரமாக வைத்துக் கொண்டு கடந்த ஆண்டு முதல் என்.ஐ.ஏ இந்த வழக்கை கையிலெடுத்தது. அதேபோல ஆந்திராவிலும் விசாகப்பட்டிணம் போலீசு போட்ட ஒரு வழக்கை இப்போது என்.ஐ.ஏ எடுத்துக் கொண்டு தேடுதல் வேட்டையைத் துவங்கியிருக்கிறது.

இந்த செயற்பாட்டாளர்கள் மீது குற்றவியல் சதி(120B), அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல் அல்லது தொடுக்க முயற்சித்தல் (121), பிரிவு 121-ன் கீழ் தண்டிக்கத்தக்க செயல்களைச் செய்வதற்கான சதியில் ஈடுபடுதல் (121A), சட்ட விரோதமாகக் கூடுதல் (143), மரணத்தை விளைவிக்கக் கூடிய ஆயுதங்களை ஏந்தியிருத்தல் (144), தேசத் துரோகச் சட்டம் (124A), சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA), ஆந்திரப்பிரதேஷ் பொதுப் பாதுகாப்புச் சட்டம், ஆயுதங்கள் சட்டப் பிரிவு 25 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஜனநாயக விரோத சட்டங்கள், சட்ட விரோதக் கைதுகள் மற்றும் இந்திய அரசின் ஜனநாயகமற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்த்துப் போராடியவர்கள். மேலும், ஆணாதிக்க ஒடுக்குமுறை, இந்துத்துவத் தாக்குதல்கள், மக்களின் நிலம் மற்றும் வனத்தின் மீதான உரிமைகள் பறிப்பு ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ந்துப் போராடியவர்கள் என்று பி.யூ.சி.எல் அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பீமா கொரேகான் வழக்கில் சமூக செயற்பாட்டாளர்களைச் சிக்க வைக்க இணைய மால்வேர்கள் மூலம் பல்வேறு கோப்புகள் அவர்களது கணிணிகளில் திருட்டுத்தனமாக உள்நுழைக்கப்பட்டன என்பது கணிணி சிறப்பு ஆய்வு நிறுவனத்தால் நிரூபிக்கப்பட்ட பின்னரும் அவர்களுக்கு பிணை வழங்க மறுக்கிறது இந்து ராஷ்டிரத்தின் நீதிமன்றம்.

தற்போது ஆந்திராவின் செயற்பாட்டாளர்களிடமும் தனது வேலையை ஆரம்பித்துவிட்டது பாசிசக் கும்பல். நேற்று வட இந்தியா, இன்று ஆந்திரா தெலுங்கானா, நாளை தமிழ்நாடு தான் ! புரட்சிகர ஜனநாயக சக்திகளின் ஐக்கியத்தின் மூலம் பாசிச ஒடுக்குமுறை அபாயத்தை எதிர் கொள்ளத் தயாராவோம் !!

                                                                      கட்டுரை- TheWire.

தமிழாக்கம்: கர்ணன்.

----------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?