பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

 கொரோனாவிலிருந்து மீண்ட சிலருக்கு அடுத்த பாதிப்பாக வந்து வதைக்கிறது Mucormycosis எனப்படும் கறுப்புப்பூஞ்சை நோய். இப்போது கொரோனாவைவிட அதிக அச்சத்துடன் இதுபற்றி விவாதிக்கிறார்கள். கண்களை பாதிப்பதுடன், மரணத்தையும் ஏற்படுத்துகிறது என்பதுதான் பயத்துக்குக் காரணம். வட மாநிலங்களில் சிலர் கறுப்புப் பூஞ்சையால் இறந்திருக்கிறார்கள். தமிழகத்தில் தூத்துக்குடியில் ஒருவர் இறந்ததாகச் செய்தி வெளியானாலும், அதை அரசு மறுத்திருக்கிறது.


இதைக் கொள்ளை நோயாக அறிவித்தது மத்திய அரசு. ‘மாநிலங்களும் இப்படி அறிவிக்க வேண்டும்’ என்று மத்திய அரசு அறிவுறுத்தியதை அடுத்து தமிழக அரசும் இதேபோல செய்துள்ளது. இதன்படி, எந்த ஒரு மருத்துவமனையிலும் ஒருவருக்குக் கறுப்புப் பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், உடனே அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

கறுப்புப் பூஞ்சை நோய் பற்றிச் சில அடிப்படைத் தகவல்கள்:

இது கொரோனா போல புது நோயா?

இல்லை. இது ஏற்கெனவே இருக்கும் நோய்தான். மூக்கின் உட்புறத்தில் உள்ள சைனஸ் பகுதி, கண்கள் மற்றும் மூளையில் ஒருவித பூஞ்சைத் தொற்று ஏற்படுவதே இந்த நோய். கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோயாளிகள், ஸ்டீராய்டு சிகிச்சை பெறுவோர், நீண்ட நாள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போர் ஆகியவர்களுக்கு இது ஏற்படும். இப்போது புதிதாக கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கும் ஏற்படுகிறது. அதனால்தான் இப்போது அதிகம் விவாதிக்கப்படுகிறது. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், இதை முழுமையாக குணப்படுத்த முடியும்.

நமது நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே கறுப்புப் பூஞ்சையை வரவிடாமல் செய்யும் வல்லமை பெற்றது. ஆனால், ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள், நோய்த்தொற்று காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது வேதனை.

யாருக்கு அபாயம் அதிகம்?

 கொரோனாத் தொற்றுக்கு ஸ்டீராய்டு சிகிச்சை பெற்ற சர்க்கரை நோயாளிகள்.

 நீண்ட காலம் ஸ்டீராய்டு சிகிச்சை எடுக்க நேரிட்டவர்கள்.

 கொரோனா தீவிரத் தொற்று ஏற்பட்டு, நீண்ட காலம் ஆக்சிஜன் தேவையில் இருந்தவர்கள்.

 தீவிர கொரோனா நோயாளிகள்.

இவர்கள் எல்லோருக்குமே கறுப்புப் பூஞ்சை கட்டாயம் வரும் என்பதில்லை. இவர்களில் அரிதாக சிலருக்கே பாதிப்பு ஏற்படுகிறது.

கறுப்புப் பூஞ்சை... வெள்ளைப் பூஞ்சை... தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

இதைத் தடுப்பதற்குக் கண்காணிப்பு தேவையா?

ஆமாம். அதிக ஆபத்துள்ள இதுபோன்ற நோயாளிகளைக் கண் மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும் என நெறிமுறை வகுக்கப்பட்டுள்ளது. கொரோனா குணமாகி வீடு சென்றபிறகும், மூன்று மாதங்களுக்கு பரிசோதனைகளும் கண்காணிப்பும் தேவைப்படும்.

அறிகுறிகள் என்னென்ன?

 தலைவலி மற்றும் கண்வலி.

 மூக்கடைப்பு மற்றும் மூக்கின் உட்புறம் சைனஸ் பகுதியில் வலி.

 மூக்கிலிருந்து ரத்தக்கசிவோ, கறுப்பான திரவமோ வெளியாதல்.

 கண்களைச் சுற்றி வீக்கம், கண்கள் சிவந்திருத்தல், பார்வைக் குறைபாடு, கண்களை மூடுவதிலும் திறப்பதிலும் சிரமம் ஏற்படுதல்.

 முகத்தில் அரிப்பு அல்லது மரத்துப் போனது போன்ற உணர்வு ஏற்படுதல்.

 வாயைத் திறப்பதிலும் உணவை மெல்லுவதிலும் சிரமம் ஏற்படுதல்.

 வாய் அல்லது மூக்கைச் சுற்றி கறுப்புத் திட்டுகள் ஏற்படுதல்.

எப்படிக் கண்டறிவது?

கறுப்புப் பூஞ்சை அபாயம் உள்ளவர்கள், தினமும் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நல்ல வெளிச்சத்தில் முகத்தைக் கண்ணாடியில் பார்க்க வேண்டும். கண்கள், மூக்கு, தாடை போன்ற இடங்களில் வீக்கம் உள்ளதா எனக் கவனிக்க வேண்டும். எங்காவது கறுப்பாக நிறம் மாறியுள்ளதா, தொட்டால் வலிக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். மூக்கின் உள்ளேயும், வாயிலும் வீக்கம் மற்றும் நிறமாற்றம் உள்ளதா என்று டார்ச் அடித்துப் பார்க்க வேண்டும்.

எப்படித் தடுப்பது?

 ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

 கொரோனா சிகிச்சையின்போது ஸ்டீராய்டு மருந்துகளைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது.

 தேவையின்றி ஆவி பிடிப்பதைத் தவிர்க்கவும். ஆவி பிடிப்பதற்குத் தூய்மையான நீரைப் பயன்படுத்தவும்.

 விண்டோ ஏ.சி-யிலிருந்து காற்று முகத்தில் அடிப்பது போல அருகே இருக்கக்கூடாது.

 கொரோனாவிலிருந்து நலம் பெற்ற பிறகு தூய்மையான இடத்தில் இருக்க வேண்டும். விருந்தினர்களைச் சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சிகிச்சைகள் என்னென்ன?

கறுப்புப் பூஞ்சை நோய் அறிகுறிகள் இருந்தால், அறிகுறியைப் பொறுத்து கண் மருத்துவரையோ, காது, மூக்கு, தொண்டை நிபுணரையோ அணுக வேண்டும். தேவையைப் பொறுத்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பரிசோதனை செய்வார்கள். அதன்பின் சிகிச்சையை முடிவு செய்வார்கள். Amphotericin B என்ற மருந்தைக் கறுப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம். பலரும் விஷயம் தெரிந்து இந்த மருந்தைப் பதுக்கிவிட்டதால், இப்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வெள்ளைப் பூஞ்சை என்பது என்ன?

மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பீகார் மாநிலங்களில் சிலருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது. கறுப்புப் பூஞ்சையைவிட இது தீவிரமான நோயாகக் கருதப்படுகிறது. இது நுரையீரல், நகங்கள், சருமம், வயிறு, சிறுநீரகம், மூளை உள்ளிட்ட உறுப்புகளை பாதிக்கிறது. கறுப்புப் பூஞ்சை யாரையெல்லாம் பாதிக்குமோ, அவர்களையே வெள்ளைப் பூஞ்சையும் பாதிக்கிறது.

மூச்சுத் திணறல், நெஞ்சு வலி ஆகியவை இதன் அறிகுறிகள். சி.டி ஸ்கேன் மூலம் தொற்றைக் கண்டறிய முடியும். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், பூஞ்சைத் தொற்றை குணப்படுத்தும் மருந்துகள் மூலமே இதையும் குணப்படுத்த முடியும் என்பது ஆறுதல் தரும் செய்தி.

-------------------------------------------------------------------------------------------------------------

தடுப்பூசி தமிழகமே தயாரிக்கும்.

செங்கல்பட்டில் உள்ள HLL Biotech தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழகத்துக்கு குத்தகைக்கு தருமாறு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் வருமாறு :

“கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஆதரவுக்கரம் நீட்டித்திருப்பதற்கு நன்றி. பெருந்திரளாக தடுப்பூசி செலுத்தப்படுவதே இந்தப் போரில் நமக்கு வாய்த்த பலம்பொருந்திய ஆயுதமாகும். எனவே, பிரதமரின் நோக்கமான 'தற்சார்பு இந்தியா'-வை அடைய உள்நாட்டில் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வதை வேகப்படுத்த வேண்டும்.

சென்னைக்கு அருகே செங்கல்பட்டில் மத்திய சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள நவீன மற்றும் அதிக உற்பத்தித்திறன் கொண்ட தடுப்பூசி உற்பத்தி மையமான HLL பயோடெக் லிமிடெட் நிறுவனம், பயன்படுத்தப்படாமல் உள்ளதை தாங்கள் அறிவீர்கள்.



இந்த உற்பத்தி மையத்திற்கு மத்திய அரசு ஏற்கெனவே ரூ.700 கோடி அளவில் செலவு செய்துள்ளது, இது கிட்டத்தட்ட முடிவுற்ற திட்டமாகும். எனினும், கூடுதல் நிதி இல்லாததால் இது பயன்படுத்தப்படாமல் உள்ளது. யாரும் ஒப்பந்தம் எடுக்க முன்வராததால், தனியார் மூலம் இதனை இயங்க வைப்பதற்கான முயற்சியும் தோல்வியிதெரிவித்துள்ளார்.


இந்த நவீன தடுப்பூசி உற்பத்தி மையம் தமிழகத்தின் நலனுக்காகவும், நம் நாட்டின் நலனுக்காகவும் விரைவில் இயங்கவேண்டும் என்பது என் எண்ணம். இதனால், நாட்டின் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கும். இதனால், நம் நாட்டின் குறிப்பாக, தமிழகத்தின் தடுப்பூசி தேவையை நாம் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

எனவே, இந்தத் தடுப்பூசி உற்பத்தி மையத்தை கடந்த கால கடன்கள் எதனையும் கருத்தில்கொள்ளாமல், மாநில அரசுக்கு குத்தகைக்கு தருமாறும், அதனை இயக்க முழு சுதந்திரம் வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

அதனை இயக்க தகுதியான தனியார் ஒப்பந்ததாரரை மாநில அரசு உடனடியாக அடையாளம் கண்டு, மிக விரைவில் அம்மையத்தில் தடுப்பூசி உற்பத்தி ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

இம்மையத்தில் மத்திய அரசு முதலீடு செய்த பணம், மத்திய அரசுக்கு திரும்பி கிடைப்பதற்கான நடவடிக்கைகள், தடுப்பூசி மையத்தில் உற்பத்தி தொடங்கிய பின்னர் தொடங்கப்படும். எனவே, ஹெச்.எல்.எல் தடுப்பூசி மையத்தை உடனடியாக தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

------------------------------------+-------------------------------------

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

எச்ச.ராசா.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களை மீட்டு இந்துகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடங்கி இந்து விரோத அரசு என்பது வரை தி.மு.க அரசு மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா. அதன் உச்சபட்சமாக சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஹெச். ராஜா “ஜெயிலர் ஜெயபிரகாஷை கொலை செய்தது இன்றைய பாபநாசம் எம்.எல்.ஏ. அவருடைய மகன் இன்று பிரபல சினிமா நட்சத்திரம் சிவகார்த்திகேயன்” என்றார்.

சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் ஜி. தாஸ். அப்படி இருக்கும்போது ஹெச். ராஜா சிவகார்த்திகேயன் அப்பாவின் மரணம் குறித்து தவறான கருத்தை கூறியது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அப்போதே தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பற்றியும் பேசினார் ஹெச். ராஜா. அது குறித்து பழனிவேல் தியாகராஜனிடம் கேட்டதற்கு, “வெறி பிடித்த நாய் குரைப்பதற்கு எல்லாம் என்னால் பதில் அளிக்க முடியாது” என்றார். மேலும், பாபநாசம் தொகுதியின் எம்.எல்.ஏ., மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தி.மு.க-வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் “சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்து ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்” என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

”சிவகார்த்திகேயன் தந்தையும் காவல்துறையில் இருந்தவர். அதனால் தவறுதலாக அவர் பெயரைக் கூறி விட்டேன், அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு கிடையாது” என எச்.ராஜா தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.

பழனிவேல் தியாகராஜன்

தொடர்ந்து அவதூறான கருத்துகளை ஹெச்.ராஜா பேசிவருகிறார். எனவே அவரைக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்பாக முகநூலில் பதிவிட்டதற்காகப் பத்திரிகையாளர் ஒருவர் மீது கடும் விமர்சனம் வைத்த தி.மு.க-வினர் அவர்மீது தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தி.மு.க-வை விமர்சனம் செய்யுங்கள் ஆனால், ஆதாரமற்ற விமர்சனங்களை வைத்தால் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடம் என்று கூறியுள்ளனர். ஆனால், ஹெ.ராஜா நேரடியாக தி.மு.க-வையும் தமிழக அரசு குறித்தும் பல்வேறு கருத்துகள் கூறிவரும் வேலையில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தி.மு.க மௌனமாக இருக்கிறது.

பா.ஜ.க ஹெச்.ராஜா-வின் தி.மு.க அரசு தொடர்பான கருத்துகளுக்கு அவர்களின் எதிர்வினை என்ன என்பது குறித்து தி.மு.க-வின் செய்தித்துறை இணைச்செயலாளர் ராஜீவ் காந்தியிடம் பேசினோம்.

“ஹெச்.ராஜா சமூகப் பதற்றத்தை உண்டு செய்யும் நோக்கத்துடன் எப்போதும் பொறுப்பற்ற வகையில்தான் பேசுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்து அறநிலையத்துறை கோவில்களை நிர்வகிக்கவில்லை. கோவில் நிலங்களைத்தான் நிர்வகித்து வருகின்றன. வக்போர்டு என்ற அமைப்பு தர்காவின் பொறுப்பில் இருக்கும் நிலங்களை பராமரிக்கும் அமைப்பு. இதுவும் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. ஆனால், ஜக்கி, ராஜா போன்றவர்கள் இந்து கோவில்களைத்தான் அரசு நிர்வகித்து வருகின்றது என்று தவறான கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். கோவில்களின் பூஜைகள், விழாக்கள் உள்ளிட்ட எது ஒன்றிலும் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படாத வரை அரசு இதுவரை தலையிட்டதில்லை. எல்லாம் அறங்காவல் குழுவினர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அவர்களைத்தான் அரசு நியமிக்கிறது. அதுவும் இந்துவாக இருக்கும் ஒருவரைத்தான் அரசு அறங்காவலராக நியமிக்கும். இவையெதுவும் தெரியாமல் இந்து சமய எதிராக இயங்குகிறது எனப் பேசி வருகிறார் ஹெச்.ராஜா. அவரைப் போலவே செயல்பட்டு சமூகப் பதற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, முறையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான சாத்தியத்துடன் தமிழக அரசு கவனமாக இயங்கி வருகிறது.

ராஜீவ் காந்தி

ஹெச்.ராஜா எப்போதும் தான் சார்ந்த கட்சிக்கோ தலைவர்களுக்கோ கட்டுப்பட்டவராக இல்லாமல்தான் செயல்பட்டு வருகிறார். இந்து விரோத அரசு என்று சொல்கிறாரே தவிர எதன் அடிப்படையில் அந்தக் குற்றச்சாட்டை அவர் வைத்தார் என்று இதுவரை சொன்னதில்லை. ஆனால், சட்டம் ஒழுங்கையும், தி.மு.க-வைக் களங்கப்படுத்தும் நோக்கில் பேசினால் உடனடியாக தி.மு.க சார்பிலும் அரசு சார்பிலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். அதுதான் அரசின் நோக்கம் என்பதால் இதுபோன்ற தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி நேரத்தை வீணடிக்க அரசு விரும்பவில்லை” என்றார்.

----------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?