மீனாட்சிபுரம்.

 அத்திப்பட்டி' என்ற ஒரு கிராமமே இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போயிருக்கும். அது படக்கதை. 

ஆனால் உண்மையிலும் இந்திய வரைபடத்திலிருந்து காணாமல்போகும் விளிம்பில் இருக்கிறது ஒரு கிராமம்.- அதுதான் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் மீனாட்சிப்புரம்..!

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி பஞ்சாயத்தில் அமைந்து உள்ளது மீனாட்சிபுரம் என்ற கிராமம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269. தற்போதைய மக்கள்தொகை எண்ணிக்கை ஒன்றே ஒன்று. மற்றவர்கள் எல்லாம் எங்கு சென்றார்கள்? ஏன் ஊரை காலி செய்தார்கள்? தனியாக வசிக்கும் அந்த ஒற்றை மனிதர் யார்? கள நிலவரம் அறிய மீனாட்சிபுரம் கிராமத்துக்கு சென்றோம்.


நெல்லை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மீனாட்சிபுரம். மீனாட்சிபுரத்துக்கு முன்னதாக இருக்கும் ஊர் செக்காரக்குடி. அங்குகூட மக்கள் கணிசமாக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள். செக்காரக்குடியில் இருந்து மேல செக்காரக்குடி சென்று அங்கிருந்து மானாவாரி பயிர்களுக்கு இடையே பயணிக்கிறது மீனாட்சிபுரத்தின் சாலை. ஆள் அரவமற்ற தனித்த சாலையில் சென்றால் வந்துவிடுகிறது மீனாட்சிபுரம். இதற்கு அடுத்து எந்த ஊருக்கும் செல்வதற்கும் பாதை கிடையாது.




Meenakshipuram : ’ஒரு கிராமம், ஒரே மனிதர்’ மீனாட்சிபுரத்தின் கதை..!

உச்சி வெயில் மண்டையைப் பிளக்கிறது கிராமம் முழுவதும் மயான அமைதி, திரும்பும் திசையெங்கும் கைவிடப்பட்ட வீடுகள், ஆட்கள் இல்லாததால் வீட்டிற்குள்ளும், வாசலிலும் முட்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. பல வீடுகள் அந்தரத்தில் தொங்கி இடியும் நிலையில் உள்ளன, ஒருசில வீடுகள் இடிந்து நொறுங்கிக் கிடக்கின்றன; சில வீடுகளில் மேற்கூரையே இல்லை. மக்கள் பொதுவாக பயன்படுத்திய ஒரு பெரிய ஆட்டு உரல் மட்டும் அநாதையாக கிராமத்தின் மையப்பகுதியில் கேட்பாரற்றுக் கிடக்கிறது.


குழந்தைகள் துள்ளித்திரிந்து கல்விப் பயின்ற ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தான் நம்மை கிராமத்திற்குள் வரவேற்கிறது. ஆள் அரவமற்ற வீட்டு கூரைகளில் அமர்ந்திருந்த மயில்கள் நமது வண்டி சத்தத்தை கேட்டவுடன் றெக்கை படபடக்க பறந்து போனது, மக்கள் கூடிக் கண்டுகளித்த பொது தொலைக்காட்சி ஒன்று வெறுமையை கப்பிக்கொண்டு காட்சியளித்தது. இப்படியாக, வாழ்ந்த மக்களின் நினைவுகளை மட்டுமே அசைப் போட்டபடி மவுனியாக நிற்கிறது அந்த மீனாட்சிபுரம்.



Meenakshipuram : ’ஒரு கிராமம், ஒரே மனிதர்’ மீனாட்சிபுரத்தின் கதை..!



ஆனாலும் எஞ்சியிருக்கும் ஒன்றை மனிதருக்காக இன்னமும் அந்த கிராமம் சுவாசித்துக் கொண்டிருக்கிறது. கிராமத்தின் கடைசியில் ஒரு வீடு மட்டும் மனிதர் வசிப்பதற்கான அடையாளங்களை கொண்டு இருக்கிறது. மீனாட்சிபுரம் கிராமம் தமிழ்நாடு அரசின் வரைப்படத்தில் இன்னமும் நிலைத்திருப்பதற்கு காரணகர்த்தாதான் அந்த வீட்டில் வசிக்கும் ஒன்றை மனிதர் கந்தசாமிதான். அவருக்கு வயது இப்போது 73.


பள்ளிக்கூடத்தில் இருந்து மேக்கால போகும் சாலையில் மேல்பக்கம் வசித்து வருகிறார் கந்தசாமி, வீட்டின் வாசலில் தண்ணீர் நிரப்பப்பட்ட வாலி, தலையணையுடன் கூடிய திண்ணை படுக்கை என இருந்தது அந்த தனியொரு ராசகுமாரனின் வீடு.அங்கேபோய் அமர்ந்தோம். ஆள் இல்லை. சற்று நேரத்தில் பக்கத்து ஊருக்கு போய் தட்டுமுட்டு சாமான் வாங்கிட்டு வருவதாக கூறி தனது இருச்சக்கர வாகனத்தில் வந்தார் கந்தசாமி, வாசலில் அமைந்துள்ள தூணில் இருந்த கயிற்றை கொண்டு வண்டியை கட்டிய அவர், தாக்கோளை கொண்டு வீட்டை திறந்ததும் அவருக்காக காத்திருந்த குட்டி நாய் நம்மை வாலாட்டி வரவேற்றது.


Meenakshipuram : ’ஒரு கிராமம், ஒரே மனிதர்’ மீனாட்சிபுரத்தின் கதை..!


அவரிடம் பேச்சை கொடுத்தோம், கிராமத்தின் நினைவுகளை ஏக்கம் கலந்த புன்முறுவலுடன் அசைப்போட்டு பேசத் தொடங்கினார்.


சொந்தபந்தங்களோட, சொத்து சுகங்களோட, குழந்தைங்க சிரிப்பு சத்தத்தோட, தினந்தினம் நிறைஞ்ச பண்டிகையோட இருந்த கிராமம்தான் தம்பி இந்த மீனாட்சிபுரம். சுமார் ஐநூறு வருஷமா மக்கள் வாழ்ந்து வந்துருக்காங்க இங்க. என் தாத்தா, அப்பா, நான் எல்லோருமே இந்த கிராமத்துல பிறந்து வளர்ந்தவங்கதான். சுத்தி இருக்கிற ஏழு கிராமங்களுக்கு மீனாட்சிபுரம் தான், தாய் கிராமம். சுமார் 300 குடும்பங்களுக்கு மேல் வாழ்ந்த கிராமம். ஆறேழு வருஷத்துக்கு முன்னாடிவரை கூட, இங்க 150 குடும்பங்கள் இருந்தது.


பொங்கல் பண்டிகை சமயம் எங்க கிராமமே களைகட்டும். பானைகள்ல பொங்கலிட்டு, விளையாட்டு போட்டி, ஆட்டம், பாட்டம் கொண்ட்டாட்டம்னு... அந்த மகிழ்ச்சி குரல் இன்னமும் என் காதுகள்ல எதிரொலிக்குது. தீபாவளி பண்டிகைக்கு சொந்தகாரங்க இங்க உள்ளவங்க வீட்டுக்கு வந்து பட்டாசு வெடித்து கொண்டாடிட்டு போவாங்க. சண்டை, சந்தோஷம், துக்கம், விழா காட்சிகள்.. என சகலத்தையும் பார்த்த என் கிராமம், இப்ப தனித்தீவா மாறிக்கிடக்குது என சொல்லி அமைதியானர்.


Meenakshipuram : ’ஒரு கிராமம், ஒரே மனிதர்’ மீனாட்சிபுரத்தின் கதை..!


பின்னர் மீண்டும் மெல்ல பேசத் தொடங்கிய அவர், மக்கள் எல்லோரும் ஊரை காலி பண்ணதுக்கு காரணம் தண்ணீர் பஞ்சமும், வேலைவாய்ப்பு இல்லாததும்தான். எங்க கிராமம் வானம் பார்த்த பூமி. மழையை நம்பிதான் மக்கள் வாழ்ந்து வந்தாங்க. விவசாயத்தையும், குடிநீரையும் மழை தண்ணீர்தான் பூர்த்தி செஞ்சது. மழை பெய்யலனா ஊர் பஞ்சமாயிடும்.


பத்து வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் மழை ஓரளவு கைகொடுத்து எங்க வாழ்வாதாரம் பரவாயில்லாம இருந்தது. பிறகு ஆண்டுக்கு ஆண்டு மழை கம்மியானது. அதனால விவசாயம் பொய்த்துப் போச்சு. குடிதண்ணீருக்கு அலைஞ்சு திரிஞ்சோம். இங்க இருந்து 5 கி.மீ. நடந்து தண்ணீய சுமந்து கொண்டு வருவோம். பஸ் வசதியும் கிடையாது.


மக்கள் பஞ்சம், பட்டினின்னு ரொம்பவே கஷ்டப்பட்டுப் போனாங்க. அதுல இருந்து ஒருத்தர் ஒருத்தரா ஊரை காலி பண்ண ஆரம்பிச்சாங்க. சொந்த வீடு வாசல், விவசாய நிலம் எல்லாத்தையும் அப்படி அப்படியே விட்டுட்டு போனவங்கதான். திரும்ப வரவே இல்லை. மழை பெய்ஞ்சு ஊர் செழிப்பானா திரும்ப வந்துரலாம்ன்னு என்ற நம்பிக்கையில் போனவங்ககூட இன்னமும் திரும்பவே இல்லை.


எட்டு வருசத்துக்கு முன்னாடி என்னைத் தவிர எல்லோரும் காலி பண்ணிட்டு போயிட்டாங்க. போனவங்க யாரும் திரும்பி எட்டிகூட பார்க்கல. ஒருசிலர் மட்டும் வாரத்துல இருநாள் இங்க இருக்கிற அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வருவாங்க. இப்போ அதுக்கூட இல்லாமல் வைகாசி திருவிழாவிற்கு வந்து செல்கின்றனர், திருவிழாவின் போது தற்காலிக பந்தல் போட்டு வைப்போம், வந்து இருந்து திருவிழா கொண்டாடிட்டு போனா, அடுத்த வைகாசிக்கு தான் வருவாக என ஆட்களை தனது நினைவுகளில் அசைபோடுகிறார் கந்தசாமி.


மக்கள் போன வரைக்கும் அரசாங்கம் குடிதண்ணீர், சாலை வசதி எதுவும் செய்துத்தரல. இப்ப போன மக்கள் திரும்ப வரணும் என்கிறதுக்காக தண்ணீர் தொட்டி, அடிபம்பு, தெருவிளக்கு வசதிகள் செஞ்சு கொடுத்துருக்காங்க. இதை முன்னாடியே செஞ்சிருந்தா மக்கள் யாரும் ஊரை விட்டு போயிருக்க மாட்டாங்க என கூறும்போதே கண் கலங்குகிறது அவருக்கு. இப்ப எல்லாரும் அங்கயும் இங்கயுமா செட்டிலான பிறகு மறுபடியும் எப்படி வருவாங்க? நிறைய வீடுகள் இடிஞ்சு போயிருச்சு. எஞ்சியிருக்கிற கொஞ்ச வீடுகளும் இடிந்து விழுற நிலையில்தான் இருக்குது.


அடிப்படை வசதிகள் செஞ்சு கொடுத்திருந்தாலும் வாழ்வாதரத்துக்கு வழி வேணுமே. அதுக்கு என்ன பண்ணுவாங்க மக்கள்? என் மனைவி வீரலட்சுமி 16 வருஷத்துக்கு முன்னாடி இறந்து போயிட்டாங்க. ரெண்டு மகன்கள், ரெண்டு மகள்கள். அதுல ஒரு மகன் மட்டும் அப்பப்போ செலவுக்கு பணம் கொடுத்து உதவுறான்.



Meenakshipuram : ’ஒரு கிராமம், ஒரே மனிதர்’ மீனாட்சிபுரத்தின் கதை..!


வீட்டில் பின்புறத்தில் ரேக்ளா வண்டியை நிறுத்தி இருக்கிறார், வித்துடலாம்னு சொன்னேன், மவன் தான் வேண்டாம்னு சொல்லிட்டான் என ஆசையோயோடு பேசும் அவர், ரேசன் கார்டு, வோட்டு அட்டை எல்லாம் எனக்கு இருக்கு, ஆனா இங்க தான் யாருமிமில்லை என்று சொல்லிவ்ட்டு ஊர் கோடியை பார்த்து வெறித்து நிற்கிறார்.


எனக்கு இந்த கிராமத்தை விட்டு பிரிய மனமில்லை. வேற எங்கேயும் போக வழியும் இல்லை. நான் சாகுறதுக்குள்ள போன மக்களில் கொஞ்சம் பேராவது இங்க மீண்டும் குடிபெயர்றத பார்க்கணும். அத மட்டும் பாத்துட்டா போதும். அதைதான் சாமிக்கிட்ட தினந்தினம் வேண்டியிட்டு இருக்கேன். காரு, பைக் சத்தம் கேட்டா சின்னப்புள்ள மாதிரி ஓடிப்போய், போன யாரோ திரும்பி வந்துட்டாங்க என்ற ஆவலில் பார்ப்பேன். இந்த கட்டை இந்த ஊர விட்டு எங்கயும் போகாது. என் உயிர் இங்கதான் போகனும் என கண்கள் மின்ன சொல்லும் கந்தசாமியின் கதையை கேட்கும் நமக்கே கண்கள் கலங்குகின்றன.


மீனாட்சிபுரம் கிராமத்தை விட்டுச்சென்ற கந்தசாமியின் மகன் பாலாவிடம் கேட்டபோது, இப்ப நான் காசிலிங்கபுரத்துல மனைவி, குழந்தைகோடு வசித்து வாரேன், கிராமத்துல தான் அஞ்சாம் கிளாஸ் படிச்சன், எல்லோரும் போன பிறகு எங்க ஐயாவையும் வாங்க அங்கிட்டு போயிடுவோம்னு கூப்பிட்டேன், அவுக இங்கயே இருக்க போவதாக சொல்லிட்டாக, அப்பப்போ மக்கள்மாரை கூப்பிட்டு வந்து அப்பாவ பார்த்துட்டு தேவையானத வாங்கி கொடுத்துட்டு போவேன் என்கிறார்.


இது மீனாட்சிபுரத்தின் கண்ணீர் கதை மட்டுமல்ல, கடைசி கதையும்கூட. கந்தசாமி இருக்கும்வரை மீனாட்சிபுரம் இருக்கும். மீனாட்சிபுரம் எப்போது வரை இருக்கும் என்பது அரசின் கையில்தான் உள்ளது. நகர்ப்புற கட்டமைப்புக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை கிராமப்புறத்துக்கும் அரசு கொடுக்க வேண்டும். தவறினால் இப்படி பல மீனாட்சிபுரங்கள் உருவாகும்.

-------------------------------------------------------------

49 லட்சம் மக்கள் ஆதார் விபரங்கள்

இணையத்தில் கசிவு.

தமிழ்நாடு அரசின் பொதுவிநியோகம் தொடர்பான விவரங்கள் விற்பனைக்கு உள்ளதாக வெளியான தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. `இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை' என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்ன நடந்தது?

கேரள மாநிலம், கொச்சியில் டெக்னிசாங்க்ட் என்ற தனியார் சைபர் குற்றத் தடுப்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் முதன்மை செயல் அலுவலர் நந்தகிஷோர் ஹரிகுமார் வெளியிட்ட தகவல், தமிழ்நாடு உணவுத்துறை அதிகாரிகள் தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, `1945VN' என்ற ஹேக்கர் மூலம் தமிழ்நாடு அரசின் பொதுவிநியோகத் திட்ட இணையத்தளத்தில் (tnpds.gov.in) இருந்த பயனாளர்களின் விவரங்கள் திருடப்பட்டதாகவும், அதில் இருந்த 49,19,668 பயனாளர்களின் ஆதார் எண்கள் இணையத்தில் வெளியாகி உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதன்மூலம், தனி நபர்களின் ஆதார் எண்கள், செல்போன் எண்கள், முகவரி என அனைத்தும் தகவல்களும் கசிந்துவிட்டதாகவும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். இதையடுத்து, தமிழ்நாடு அரசின் உணவுத் துறை அதிகாரிகள், `எந்தவகையில் தகவல்கள் கசிந்திருக்கும்?' என்பது தொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

 டெக்னிசாங்க்ட் நிறுவனத்தின் சி.இ.ஓவும் சைபர் தொழில்நுட்ப வல்லுநருமான நந்தகிஷோர் ஹரிகுமார் தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் பயனாளர் விவரங்கள் அனைத்தும் கடந்த 28 ஆம் தேதி டார்க் நெட்டில் இருந்தன. (டார்க் நெட் என்பது இணைய உலகின் மறுபக்கமாகப் பார்க்கப்படுகிறது. இங்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், போதை மருந்துகள், தரவுகள் (Data) என அனைத்தும் கிடைக்கும்).

இந்தத் தரவுகள் எப்படி வெளியே கசிந்திருக்கும் என எங்களுக்குத் தெரியாது. ஆனால், அதில் இடம்பெற்றிருந்த விவரங்கள் அனைத்தும் புத்தம் புதியவையாக இருந்தன. இது எப்படிக் கசிந்தது என்பது தொடர்பாக, தமிழ்நாடு அரசுதான் உரிய தடயவியல் சோதனையையோ தணிக்கையையோ மேற்கொள்ள வேண்டும்.

சைபர் தாக்குதல்

பட மூலாதாரம்,

குடிமக்களின் ஆதார் உள்ளிட்ட விவரங்கள் தேசிய தகவல் மையத்தில் மட்டுமே இருக்கும். நான் பார்த்தபோது, `1945 VN' என்ற பெயருள்ள சிலரால் இந்தத் தளம் ஹேக் செய்யப்பட்டிருந்தது. இது வியட்நாமை சேர்ந்த கிரிமினல் கூட்டமாக இருக்கலாம்.என்றார்.

இந்தக் கும்பலால் தொடர்ச்சியாக இணையத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்ட இணையத்தளத்தில் 6.8 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். அதில், 5.2 மில்லியன் பயனாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 49 லட்சம் ஆதார் எண்கள் பதிவாகியுள்ளன.

பொதுவிநியோகத் திட்ட இணையத்தளம் முடக்கப்பட்டது தொடர்பாகநாம் கவலைப்படுவதற்கோ பயப்படுவதற்கோ எதுவும் இல்லை. 

காரணம், இந்த விவரங்கள் அனைத்தும் பொதுத்தளத்தில் உள்ளன. சமூக வலைதளங்கள் வந்த பிறகு தனிப்பட்ட தகவல்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஆதார் எண்கள் வெளியில் சென்றிருக்கலாம். ஏனென்றால், ரேசன் அட்டைகளோடு ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் சிக்கல் வரும் என்பதாகவும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

தார் எண்களால் சிக்கல் ?

ஆதார் தகவல்கள்

பட மூலாதாரம்,

ஆதார் எடுக்கும்போது கைரேகையை பதிவு எடுத்தனர். இந்த பயோமெட்ரிக்ஸ் விவரங்கள் கிரிமினல்கள் பக்கம் செல்வதற்கு வாய்ப்பில்லை. இதற்கான இன்போசிஸ் நிறுவனத்தின் நந்தன் நிலகேனி மிகச் சிறப்பாகச் செய்தார்.

அந்தப் பதிவுகளை படங்களாக சேகரிக்காமல் ஹேஷ் வேல்யூவாக (Hash value) சேகரித்து வைத்தார். இதனை பப்ளிக் கீ, பிரைவேட் கீ என இரண்டு வகைகளாகப் பிரித்தனர். இது இரண்டும் ஒன்றாக சேர்ந்தால்தான் தகவல் வெளியே போகும். அதற்கும் வாய்ப்பில்லை.

எம்டி5 (MD5) ஹேஸிங் முறையில் ஆதார் எண்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இதனை ஹேக் செய்ததாக இதுவரையில் தகவல் இல்லை. அதாவது, உலகளவில் மேம்படுத்தப்பட்ட பாதுகாக்கப்பட்ட முறையாக இது உள்ளது.

ரேசன் அட்டைதாரர்களின் விவரங்கள் கசிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உணவுத் துறையின் அதிகாரிகளும், `இதற்காக பயப்படத் தேவையில்லை' எனக் கூறியுள்ளனர்.

நமது ரேசன் கடைகளின் பெயர்கள், பயனாளிகள் பெயர்கள் டார்க் நெட்டில் இருப்பதாகச் சொல்கின்றனர். டார்க் நெட்டில் ஹெராயின், துப்பாக்கிகளோடு டேட்டாக்களும் விற்பனையில் ஓர் அங்கமாக உள்ளன. அங்குள்ள தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் விவரங்கள் அனைத்தும் ஹேக் செய்து எடுக்கப்பட்டதா அல்லது வேறு எதாவது வகையில் பெறப்பட்டதா எனத் தெரியவில்லை.

அரசாங்கம் எதையும் நேரடியாகச் செய்வதில்லை. இதற்காக டெண்டர் விடப்பட்டு தனியார் நிறுவனங்கள் மூலமாகத்தான் தரவுகள் சேமிக்கப்படுகின்றன.

அதன்பிறகு தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கொடுக்கின்றனர். ஆதார் எடுப்பதையும் இதே போல்தான் டெண்டர் முறையில் அறிவித்தனர். இதனை நூற்றுக்கணக்கான நிறுவனங்களிடம் கொடுத்து ஆதார் பணிகளை நிறைவு செய்தனர். இதற்காக அரசாங்கமும் தனியார் நிறுவனமும் ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டன.

`அந்த டேட்டாக்களை பயன்படுத்தக் கூடாது, அதனை அப்புறப்படுத்திவிட வேண்டும்' என உறுதிமொழி வாங்கியதோடு நிறுத்திக் கொண்டனர். ஆனால், தனியார் நிறுவனங்கள் அதனை முழுமையாக அப்புறப்படுத்திவிட்டார்களா என்பதை ஆய்வு செய்யும் எந்த வசதிகளும் அரசிடம் கிடையாது என்பதுதான் உண்மை.

சைபர் தாக்குதல்

பட மூலாதாரம்,

தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்தில் உள்ள பயனாளர்களின் விவரங்களும் ஏதோ ஒரு நிறுவனம் மூலமாகச் சென்றிருக்கலாம். இது அரசின் சர்வரில் இருந்து தான் சென்றுள்ளது என்பதையும் உறுதியாகக் கூற முடியாது. இதனைச் செய்தவர்கள் `வியட்நாம்' எனக் குறிப்பிடுவதற்குக் காரணம், அதில் வி.எம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுதான்.

அதுவும் உண்மையானதா என்பதை உறுதிபடத் தெரிவிக்க முடியாது. இந்தியாவில் இருந்து கொண்டேகூட இதை செய்திருக்கலாம். பொதுவாக, கிரிமினல்கள் தங்களது அடையாளங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.

ஃபிஷிங் அட்டாக் நடப்பதற்கு  எல்லா வகையிலும் வாய்ப்புள்ளது. எந்த வங்கியில் கணக்கு இருந்தாலும் அதுதொடர்பான விவரங்கள் கிரிமினல்களிடம் இருக்கும். இதில் ஒரு டேட்டா 2 ரூபாய்க்கு என விற்றாலும் பெரியளவில் லாபம் வரும். இந்தத் தகவல்களை வைத்துத்தான் பல காலமாக மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

ஷாப்பிங் மால்களில் கிஃப்ட் கூப்பன் எனக் கூறி முகவரி, செல்போன் நம்பர் எழுதச் சொல்வார்கள். ஆனால், எந்தப் பரிசுகளும் வராது. இதுவும் ஒரு டேட்டா சேகரிப்புதான். பொது விநியோகத் திட்ட தரவுகள் கசிந்தது தொடர்பாக தமிழ்நாடு அரசு சில அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

பயனாளர்களின் செல்போன் எண்களுக்கு, `இந்த ஆப்பை கிளிக் செய்யுங்கள் என்றோ வேறு ஏதோ வகையிலோ விளம்பரம் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம்' எனவும் அறிவிப்பினை வெளியிட்டு எச்சரிக்க வேண்டும். மற்றபடி, பொது விநியோகத் திட்டத்தின் தகவல்கள் வெளியே சென்றதால் எந்தப் பாதிப்பும் வரப் போவதில்லை.

-----------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?